உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

87

கூறினார்கள். அரசன் சமணரை அழைத்துத் தனக்கு ஒருத்தியை மனைவியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டான். தாழ்ந்த இனத்தானாகிய இவனுக்குச் சமணர் பெண் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், மூர்க்கனாகிய இவனிடம் மறுத்துக் கூறினால் துன்பம் செய்வான் என்று அஞ்சினார்கள். கடைசியாக அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். சமணப் பிரபு ஒருவரின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்கு குறிப்பிட்ட ஒரு நாளில் அரசர் வந்தால் பெண்ணை மணம் செய்துகொண்டு போகலாம் என்று தெரிவித்தார்கள். அரசனும் அவ்வாறே பரிவாரங்களுடன் அந்த வீட்டிற்குக் குறிப்பிட்ட நாளில் வந்தான். ஆனால், அவன் கண்ட தென்ன? அவ்வீட்டில் ஒருவரும் இலர். கலியாணப் பந்தல் மட்டும் இருந்தது. பந்தலின் ஒரு காலில் ஒரு பெட்டை நாய் கட்டப்பட்டிருந்தது.

பெண் கொடுப்பதாகத் தெரிவித்த சமணப் பிரபு அந்த ஊரை விட்டு வேறு நாட்டிற்குப் போய்விட்டார். செஞ்சி மன்னன் தன்னைச் சமணர் அவமானப்படுத்தியதைக்கண்டு கோபம் அடைந்தான். சமணரைக் கொல்லும்படி கட்டளை இட்டான். சேவகர் செஞ்சி நாட்டிலிருந்த சமணரைக் கொன்றனர். இதைச் சுமந்தான் தலைபத்து என்று கூறுவார்கள். இந்த அநியாயத்தைக் கண்ட சமணர் பலர் வேறு நாட்டிற்கு ஓடிவிட்டார்கள். பலர் பூணூாலை அறுத்துப்போட்டுச் சைவசமயத்தில் சேர்ந்து விபூதி பூசிக் கொண்டார்கள்; (இவர்கள் நீறுபூசி வேளாளர் என்று கூறப்பட்டனர்) பெண் கொடுப்பதாகச் சொல்லி வேறு நாட்டிற்குச் சென்ற சமணப் பிரபுவின் சந்ததியார் இப்போதும் சைவசமயத்தவ ராகவே இருக்கிறார்கள்.

இந்த அரசன் காலத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ள வேலூர் என்னும் ஊரில் வீரசேனாசாரியார் என்னும் பெயருள்ள சமணர் இருந்தார். அவர் அவ்வூர்க் குளத்தில் சமண சம்பிரதாயப்படி அனுஷ்டானம் செய்துகொண்டிருந்தார். இதனைக் கண்ட அரச சேவகர் அவரைப் பிடித்துக்கொண்டு போய் அரசனிடம் விட்டார்கள். அச்சமயம் அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்த படியால் அவன் மகிழ்ச்சியோடிருந்தான். ஆகவே, அவரைக் கொல்லாமல் விடுதலை செய்து விட்டான். தமது தலைபோவது உறுதியென்று நம்பியிருந்த வீரசேனாசாரியார் விடுதலை செய்யப்பட்டபோது மறுபிறப்புப் பிறந்தவர் போலானார். அவர் நேரே மைசூரிலுள்ள சிரவணபெளகொள என்னும் இடத்தில் உள்ள சமண மடத்திற்குச் சென்று அங்குச் சமண சமய நூல்களை நன்கு ஓதினார்.