உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

51

கமழ்ந்து கொண்டிருந்தது. அவ்வறையில் இருந்த கட்டிலில், மல்லிகைப் பூக்களைத் தூவிய மெல்லிய பஞ்சணையின் மேலே யசோதரை அரசியார், தமது குழந்தையை வலது கையினால் அணைத்துக் கொண்டு கண்ணுறங்கிக் கொண்டிருந்தார்.

சித்தார்த்த குமாரன் அறைக்குள்ளே செல்ல வாயில் நிலையின் மேல் அடி வைத்தார். அப்போது அவர் உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது. “உள்ளேபோய்த் தேவியின் கையை விலக்கிக் குழந்தையைப் பார்ப்போமானால், தேவி விழித்துக் கொள்வாள். அதனால், என்னுடைய துறவுக்குத் தடை ஏற்படக்கூடும். ஆகவே, நான் சென்று புத்த நிலையை யடைந்த பிறகு என் மகனை வந்து காண்பேன்” என்று தமக்குள் எண்ணினார்.

சித்தார்த்தர் வெளியேறியது

உலகத்தின் நான்கு திசைகளிலும் காவல்பூண்ட சதுர் மகாராஜிக தேவர்கள், சித்தார்த்த குமாரன் இல்லறத்தை விட்டுப் போகிறதை யறிந்து, தமது பரிவாரங்களுடன் கபிலவத்து நகரத்துக்கு வந்து ஒருவரும் அறியாதபடி அரண்மனையை யடைந்தார்கள். கிழக்குத் திசைக்குக் காவல்பூண்ட திருதராஷ்டிரன் என்னும் தேவன், தன்னைச் சேர்ந்த கந்தர்வ பரிவாரங் களுடன் இன்னிசை பாடிக்கொண்டு ஆகாய வழியே வந்து மும்முறை அரண்மனையை வலம் வந்து தரையில் இறங்கிச் சித்தார்த்த குமாரன் இருந்த பக்கமாகத் தலை குனிந்து கை கூப்பி வணங்கினான். தெற்குத் திசைக்குக் காவல் பூண்ட விரூதாக்ஷன் என்னும் தேவன், தனது கும்பாண்டர் என்னும் பரிவாரங்களுடன் இனிய நறுமணப் பொருட்களை ஏந்திக்கொண்டு ஆகாய வழியே வந்து அரண்மனையை மும்முறைவலம் வந்து தரையில் இறங்கி அரச குமாரனை வணங்கி நின்றான். மேற்குத் திசைக்குக் காவல் பூண்ட விருளாக்ஷன் என்னும் தேவன், தனது பரிவாரங்களாகிய இயக்கருடன் தீவட்டி விளக்கு முதலியவைகளை ஏந்திக்கொண்டு ஆகாய வழியே வந்து அரண்மனையை வலமாகச்சுற்றித் தரையில்இறங்கி வணங்கி நின்றான். வடக்குத் திசைக்குக் காவல் பூண்ட வைசிரவணன் என்னும் தேவன், தனது பரிவாரங்களாகிய நாகர்களுடன் நவரத்தினங்களையும் அணி கலன்களையும் ஏந்திக்கொண்டு வந்து அரண்மனையை வலமாகச் சுற்றித் தரையில் இறங்கி வணங்கி நின்றான்.

பின்னர்த் தேவலோகத்திலிருந்து சக்கரன் (இந்திரன்), தேவர்கள் புடைசூழத் தேவலோகத்து மலர்களையும் நறுமணப் பொருள்