உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழெழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?

21

பேரா. தி. வை. சொக்கப்பனாரும், பேரா.பெரியசாமியும் எனக்குச் சிறப்புச் செய்ய ஏற்படுத்தியிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார், தம் கையினால் எனக்கு வழங்கிய வெள்ளிப் பட்டயத்திற் பொறிக்கப்பட்டுள்ள பாராட்டு வாசகம் மரபெழுத்திலேயே உள்ளது.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலை நீங்கிக் காட்டுப்பாடி விரிவிலிருந்தபோது, நான் வருமானமின்றி யிருந்த நிலைமையறிந்து பெரியார் தாமே என் உறையுள் தேடிவந்து இருநூறு உருபா வழங்கினார். அன்றும், தமிழெழுத்து மாற்றம்பற்றி என்னிடம் ஒன்றும் சொன்னதில்லை. பெரியாருக்கு என்றும் தன்மான இயக்கத்திலன்றித் தமிழ் வளர்ச்சியில் ஈடுபாடு இருந்ததே யில்லை. நான், ஒருகால், அரைக்கால் உருபாக் காசில் இந்தியெழுத்தும் தெலுங்கெழுத்தும் இருந்தபோது தமிழெழுத் தில்லாமை பற்றிக் கிளர்ச்சி செய்யவேண்டுமென்று பெரியாருக் கெழுதினபோது, அவர், “நான் உங்களைப் போற் பண்டிதனல்லேன். பொதுமக்களிடம் தொண்டு செய்து அவர் மூடப் பழக்கவழக்கங்களைப் போக்குபவன், நீங்களும் உங்களைப்போன்ற பண்டிதருமே சேர்ந்து அக் கிளர்ச்சி செய்யுங்கள்” என்று மறுமொழி விடுத்துவிட்டார். இதிலிருந்து, தமிழ்மொழியோ எழுத்தோ பற்றி அவருக்குக் கடுகளவும் கவலையிருந்ததில்லை யென்பது வெட்ட வெளிச்சமாகின்றது. அவர் இந்தியை யெதிர்த்ததெல்லாம், பேராயக் கட்சியை யெதிர்ப்பதும் ஆரியச் சூழ்ச்சியைக் கண்டிப்பதும் தமிழ திரவிடர் நல்வாழ்விற்கு வழிவகுப்பதும் குறிக்கோளாகக் கொண்டதே யன்றி வேறன்று. இதை அவர் பல பொதுக் கூட்டங்களிலும் வெளியிட்டுச் சொல்லியிருக்கின்றார். 'விடுதலை', ‘குடியரசு' ஆகிய இதழ்களில் சில எழுத்து வடிவங்களை அவர் மாற்றியது, முற்றும் சிக்கனம் பற்றியதே. பெரியார் சிக்கன வாழ்வு நாடறிந்தது; உலகறிந்தது.

தமிழெழுத்து மாற்றம் என்பது தேவையில்லாத ஒரு சிறு செயல். பெரியார் செயற்கரிய பெருஞ்செயல்களைச் செய்தவர். அவர்மீது ஒரு சிறு புன்செயலையேற்றுவது, அவர் பெயருக்கு இழுக்கே யாகும்.

பெரியாரைப் பின்பற்றல்

பெரியார் செய்த பெருஞ்செயல்களும் கொண்டிருந்த அருங் குணங்களும் வருமாறு:

1. பிறவிக்குல வொழிப்பு

தமிழ திரவிடர் விடுதலையடைந்து முன்னேற முடியாவாறு, இந்தியக் குலங்கள் தொழில்பற்றாது மொழியும் பெற்றோர் அல்லது முன்னோரும் பற்றியே ஆரியச் சூழ்ச்சியால் வகுக்கப்பட்டுள்ளன. கன்னடியரான நாய்க்கர் தமிழ வெள்ளாளப் பெண்ணை மணந்தது இருமடிப் பிறவிக்குல வொழிப்பாகும்.