உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/சந்திரோதயம்

விக்கிமூலம் இலிருந்து
40. சந்திரோதயம்

சுந்தரி ஆரத்தியுடன் நின்று கொண்டிருந்தாள். அன்றுதான், பட்டணத்திலிருந்து பாகவதர், எல்லோரும் சுவாமிமலைக்கு வருகிறார்கள். வீடெல்லாம் பெருக்கி, மெழுகி, மாக்கோலம் போட்டு; இத்தனை நாள் குடியில்லாத சோடே இல்லாமல், கல்யாணம் அங்கேதான் நடந்தது போல் அத்தனை அழகாக இருந்தது.

பளிச்சென்று காரிலிருந்து இறங்கி கீழே வந்த கணவரைப் பார்த்துச் சுந்தரி அதிசயித்து நின்றாள். பாகவதர் சிரித்துக் கொண்டே கேட்டார்: “என்ன விழிக்கிறாய், சுந்தரி? பட்டணத்துக்குப் போய், பொய்க் கால் வைத்துக் கொண்டு வந்துவிட்டேனா, என்றா?”

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சுந்தரி, சுசீலாவை மெதுவாகக் கையைப் பிடித்து, மெல்ல உள்ளே அழைத்துச் சென்றாள்.

“சித்தி, நமஸ்காரம் பண்ணுகிறோம்.”

ஹரியும், சுசீலாவும் சேர்ந்து, சுந்தரியின் பாதங்களைத் தொட்டு வணங்கினர். அவள் மனப்பூர்வமாக அவர்களை வாழ்த்தினாள். ஆயினும், துக்கம் அவளையும் மீறி உள்ளத்தில் கிட்டி கட்டியது, இதே காட்சியை வசந்தியும், ஹரியுமாய்க் காண எத்தனையோ நாட்களாகக் கனவு கண்டு வந்தவள்; அந்தக் காட்சியைச் சற்றே மாறு பாத்திரங்களோடு கண் முன் கண்ட போது, அவளையும் மீறி, இப்போதும் உள்ளத்தினுள்ளேயே கலங்கத்தான் செய்தது. இமைக்காமல், சிறிது நேரம் சுசீலா எழுந்து செல்வதையே சுந்தரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாரி இறைத்தது போல், அழகு சுசீலாவின் அங்கமெல்லாம் வழிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு புதிய உலகத்தைக் கண்டு விட்டவள் போலவும், உலகத்திலுள்ள இன்பங்கள், தன்னையே தேடி அடைய விரும்பிச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பது போலவும், அவள் முகம் பிரகாசமாக இருந்தது. அவளுடைய நடையில், நடையின் அசைவில், பார்வையில், பார்க்கும் விழிகளில், ஒவ்வொன்றிலும் அழகும், பாவமும் மிளிர்ந்தன. மஞ்சள் நிற மேனி, மேலும் பொன்னிறம் கூட்டியது. கருநாகப் பாம்பு போன்று, சுருண்டு நீண்ட கூந்தல், காரில் உட்கார்ந்து வந்ததில், அடிபட்ட பாம்பு போல், நசுங்கியபடி காட்சியளித்தது.

காயத்திரி அடுப்பை மூட்டி, அவசர, அவசரமாக ஆக வேண்டிய காரியங்களில் மூழ்கிப் போயிருந்தாள்.

“என்னால் பத்து நாளைக்கு இனி மேல் ஒன்றுமே முடியாதம்மா” என்று லட்சுமியம்மாள், கூடத்தில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். அதற்கு வெகு நேரத்துக்கு முன்பே, சுசீலா மணைப் பலகையைத் தலைக்கு வைத்துக் கொண்டு அரைத் தூக்கம் போட்டு விட்டாள். விலைக்கு வாங்கி வந்த பாலை, ஹரி அடுக்களையில் கொண்டு போய்க் கொடுத்தான். கால் முளைத்ததும் பாகவதர் வீடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

எல்லாரும் குளித்து விட்டுச் சுவாமிநாத சுவாமியைத் தரிசனம் செய்யக் கிளம்பினர். தரிசனம் முடிந்து, மத்தியான்னச் சாப்பாட்டிற்குப் பிறகு, சுந்தரி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.

சுவாமிமலைக்குப் போய் வந்த அம்மாவின் மூலம், எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்ட வசந்தியின் உதடுகளில், ஓர் அலட்கியப் புள்னகை தோன்றி மறைந்தது. தாய் தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

—எப்படி இருந்த பெண் எப்படி ஆகி விட்டாள்: வெளிக்கு ஒன்றுமே நடவாதது போல், அவள் காண்பித்துக் கொண்டாலும், ‘ஹரியை இழந்து விட்டோம்’ என்ற அதிர்ச்சி, அவள் உள்ளத்தை பூச்சி மாதிரி உள்ளூர அரித்து தின்று கொண்டேதான் இருக்கிறது என்பதை அவளால் மறைக்க முடியவில்லையே!

‘இந்த அசட்டுப் பெண் ஏன் இப்படி இல்லாததை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறாள்: ஹரியை நம்பித்தானா இவள் பிறந்தாள்!’ என்று வசந்தியின் மீது சுந்தரிக்குக் கோபங்கூட வந்தது. ஆனால் யாருடைய கோபதாபங்களையும் மதியாமல், காலம் இறக்கை கட்டி, அதன் பாட்டில் பறந்து கொண்டிருந்தது.

ன்று வெள்ளிக் கிழமை. துளசி மாடத்துக்கு விளக்கேற்றிக் கொண்டிருந்த சுந்தரியிடம், சுவாமி மலையிலிருந்து ஓர் ஆள் வந்து, “அம்மா, உங்களைக் கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்” என்று கூறினான்.

“என்ன விஷயம்? ஏதாவது தெரியுமா?” என்று, ஒன்றும் புரியாத பரபரப்புடன் கேட்டாள் சுந்தரி.

“சின்னம்மாவுக்கு வலி எடுத்து விட்டதாம். மருத்துவச்சிக் கூட வந்தாயிற்று. வீட்டிலேயேதான் இருக்கிறாள்.”

“இது மாசம் இல்லையே! அதற்குள்ளாகவா?” என்று முனகிக் கொண்டே உள்ளே சென்ற சுந்தரி பெண்ணிடம், “நீயும் என்னுடன் வருகிறாயா? பிரசவமானால், உடனே நான் திரும்பி வர முடியாது” என்றாள்.

“நீ ஒரு வழியாக அங்கேயே இருந்து, குழந்தையையும் படிக்க வைத்து விட்டு வேண்டுமானாலும் வா! என்னை எதற்காகக் கூப்பிடுகிறாய்?”

“வரா விட்டால் போ! அதற்காக எரிந்து விழ வேண்டுமா? உன் கோபத்துக்கெல்லாம் நான்தானா அகப்பட்டேன்? கல்யாணத்துக்குத்தான் போகவில்லை ஊருக்கு வந்த பிறகு கூட சுசீலாவைப் போய்ப் பார்க்கா விட்டால், அது உனக்கே நன்றாக இருக்கிறதா?”

“நான் நன்றாக இருப்பதற்காகவா, இவ்வளவும் நடந்திருக்கிறது? வெண்ணையும், சுண்ணாம்புமாகப் பழகுகிறவர்களிடம் மரியாதை என்ன வேண்டிக் கிடக்கிறது? என்றும் நான் தனி தனிதான்.”

“சரி, போதும் உன் வேதாந்தம்: எனக்கு நேரமாகிறது. ஹரி கூட ஊரில் இல்லையாம்” என்று புறப்பட்ட சுந்தரி, பக்கத்து வீட்டுப் பாட்டியை வசந்திக்குத் துணையாக வைத்து விட்டுப் புறப்பட்டாள்.

சுந்தரி வண்டியிலிருந்து கீழே இறங்கி உள்ளே நுழைவதற்குள், உள்ளேயிருத்து பெரிதாகக் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

சுந்தரியைக் கண்டதுமே காயத்திரி, “நீங்கள் பாட்டியாகி விட்டீர்கள்; உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கிறான், சித்தி!” என்று மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே, கை நிறையச் சர்க்கரையை அள்ளி வாயில் போட்டாள்.

“முன்னாலேயே சொல்லி அனுப்பக் கூடாதா, அக்கா?” என்று லட்சுமியம்மாளிடம், சுந்தரி மிகவும் குறைபட்டுக் கொண்டாள்.

“எனக்கு எப்படித் தெரியும், சுந்தரி? மருத்துவச்சிக்கே தெரியவில்லை. இன்னும் இரண்டு நாள் ஆகும். இது ஊமை வலி, குருட்டு வலி, என்று சொல்லிக் கொண்டே இருந்து விட்டாள். அதிசயமாகத்தான் இருக்கிறது. அரை மணி நேரத்தில் பிறந்து விட்டான்” என்று சுந்தரியை அழைத்துச் சென்று காட்டினாள்.

குழந்தையின் அழகைப் பார்த்து விட்டு, “அப்படியே சுசீலாவைத்தான் உரித்து வைத்திருக்கிறது” என்று எல்லாரும் பேசிக் கொண்டிருந்தனர். பாகவதர் பிள்ளைக் குழந்தையைப் பார்த்துப் பூரித்துப் போனார். எல்லாரும் ஹரியின் வரவையே மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஹரி மறுநாள் விடியற்காலை வந்து சேர்ந்தான். சுசீலாவுக்குப் பேறு காலம் என்பது அவனுக்குச் சிக்கல் கச்சேரிக்குப் புறப்படும் போதே தெரியும். முருகன் சந்நிதியில் அவன் கச்சேரி நடந்தது. சிங்காரவேலனே அவன் கண் முன் வந்து நிற்பது போல் இருந்தது. இதுவரை, கச்சேரியை ஒரு தொழிலாகவும், அந்தத் தொழிலை மிகவும் உயர்ந்ததாகவும், திறமையுள்ளதாகவும் செய்ய வேண்டும் என்பதுதான் அவன் உள்ளத்தில் இருந்தது பிறகு ஞானம் ஏற ஏற, அவன் அந்த வித்தையைப் பணத்துக்கும், வெளிப்புகழ்ச்சிக்கும் மேற்பட்டதாக உருவாக்கி வந்தான்.

சுசீலாவுக்கு அது முதற் பிரசவம். முதற் பிரசவத்தின் கடுமை அவனுக்கு ஓரளவு புரிந்திருந்தது; மிகவும் அதைரியமாகவும் இருந்தது.

சிக்கல் கச்சேரியில்—அவன் பாடினான் என்பதை விட; இசையினால் இறைவன் பாதங்களைத் தொட்டுக் கதறினான் என்பதே பொருந்தும். பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் பிடிலையும், மிருதங்கத்தையும் கீழே வைத்து விட்டனர். எங்கோ இருக்கிற இறைவனின் திருவடி மலர் கதை, எங்கோ இருக்கிற மனித உயிர் தேடிப் பிடித்து விடத் துடிக்கிற பிரார்த்தனைகளாகவே, பாசுரங்களாகவே ஹரியினுடைய அன்றைய இசை முழங்கியது.

சுசீலாவையும், குழந்தையையும் காப்பாற்றித் தரும்படி அவன் வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுகோளுக்கு, முருகன் மனம் இறங்கிக் கருணை செய்து விட்டாற் போல், வீட்டுக்குள் நுழைந்ததுமே, மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.

அவன் சுசீலாவின் அறைக்குள் நுழைந்தான். கொடியொன்று மலரைத் தழுவிக் கொண்டிருப்பது போல், சுசீலா குழந்தையை அணைத்துக் கொண்டிருந்தாள்.

கணவனைக் கண்டதும், எழுந்திருக்கப் போனவளைக் கையமர்த்திய ஹரி, அவள் அருகில் அமர்ந்து கொண்டான். அதுவரை அவன் பார்த்திராத கோலத்தில், அகத்தாலும், புறத்தாலும் சுசீலா புதியதோர் அழகிய உருவில் காட்சியளித்தாள். அவன் விழிகளை இமைக்கவே இல்லை.

“நன்றாய்த்தான் இருக்கிறது! குழந்தையைப் பார்ப்பீர்களா; என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!”

“குழந்தையைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறேன்; நீயும் ஒரு குழந்தைதானே?”

“போதும், சங்கீதத்தில்தான் பெரிய வித்துவான்; பேசினால், அசடு வழிகிறது. இந்தாருங்கள், குழந்தையைப் பாருங்கள்” என்று சுசீலா குழந்தையை மெல்ல எடுத்து, இரு கைகளாலும் நீட்டிக் கொண்டிருந்தாள்.

ஹரி தயங்கினான். “எனக்குக் குழந்தையை வாங்கத் தெரியாதே”

“எனக்கு மட்டும் குழந்தையைப் பெறத் தெரிந்தா, பெற்றேன்? இம், பிடியுங்கள்! எல்லாம் பழக வேண்டாமா? உங்கள் பாஷையில் வேண்டுமானால், கூறுகிறேன்; குழந்தையைத் தூக்க, இப்போதே சாதகம் செய்யத் துவங்கி விடுங்கள்.” சுசீலா மெல்லச் சிரித்தாள்.

சிரிப்பா அது? அமுதத்தின் மணமாக மணத்தது ஹரிக்கு.

“குழந்தை அழகாயில்லே?”

“பாரிஜாத மரந்தில் பறங்கிப் பூவா பூக்கும்? உன்னையே உரித்துக் கொண்டு பிறந்திருக்கிறான்.”

சுசீலா பூரித்துப் போனாள்.

“அப்போது, குழந்தை என்னைக் கொண்டா பிறந்திருக்கிறது என்கிறீர்கள்? இது வரைப் பார்த்தவர்கள் எல்லாரும் அப்பாவை போல் அழகு என்று சொன்னார்களே; எல்லாம் பொய்தானா? கடைசியில் மக்கு என்று சொல்லி விட்டீர்களே1”

“நீ மக்கா?”

“ஆமாம். இல்லாவிட்டால், உங்களைப் புரிந்து கொள்ள இத்தனை வருஷங்கள் வேண்டி வந்திருக்குமா? பாருங்கள், இவன் கூட ‘ஆமாம், ஆமாம்’ என்று கையையும், காலையும் ஆட்டுகிறதை!” என்று சுசீலா குழந்தையைக் காட்டினாள். ஹரி அதன் கன்னத்தில் முத்தமிட்டான்; உச்சியில் முத்தமிட்டான்.

“இன்னும் வேறு எங்கேயாவது கச்சேரிக்கு ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா?”

“ஏன்?”

“நேற்று நீங்கள் இல்லாமற் போய் விட்டீர்களே!”

“ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனாயோ?”

“அதெல்லாம் துளிக் கூட இல்லை . எல்லாரும் அதிசயப் பட்டார்கள்; முதற் பிரசவம் மாதிரியே இல்லையே என்று.”

ஹரி மெல்லச் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?”

“நான் நேற்று முருகன் சந்நிதியில் வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை.”

“என்ன வேண்டிக் கொண்டீர்கள்?”

“முருகா! இது சுசீலாவுக்கு முதற் பிரசவம். முதற் பிரசவம் என்றாலே, எல்லாரும் பயப்படுகிறார்கள்; பயமுறுத்துகிறார்கள். நீதான் என் சுசீயைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.”

“நிஜமாகவா? கச்சேரிக்குப் புறப்பட்டால், உங்களுக்கு அதைத் தவிர வேறு நினைவே இருக்காதே?”

“அப்படித்தான் இருந்தேன், சுசீலா. ஆனால் வர வர, இப்போது உன்னைத் தவிரக் கச்சேரி நினைவே இல்லை. பாட உட்கார்ந்தால், உன் ஞாபகந்தான் வருகிறது.”

“அப்படியானால், நான் உங்களுக்கு இடைஞ்சல் என்கிறீர்களா? உங்கள் சங்கீதத்துக்குக் குறுக்கே நிற்கிறேன் என்கிறீர்களா?”

“நீ எனக்கு இடைஞ்சலா? நீ இல்லாமல் என்னால் இனிப் பாட முடியுமா? பட்டணத்தில், உன்னைக் கூடவே அழைத்துப் போய்ப் பழக்கமாகி விட்டதா? கச்சேரியில், கண் உன்னைத் தேடுகிறது. அந்த இடம் இனிச் சூனியமாக இருக்க வேண்டியதுதானே?”—எப்படியோ அவனுக்கே தெரியாமல்—அவன் குரலில் அபசுவரம் தட்டி விட்டது.

“ஏன் சூனியமாக இருக்க வேண்டும்?” — சுசீலா பளிச்சென்று கேட்டாள்; “குழந்தை பிறந்து விட்டால், நான் உங்களுடன் கச்சேரிக்கு வரக் கூடாதா? நீங்கள் பாடுகிற இடத்தில், நானும் இருப்பேன்.” இதைக் கூறும் போது, சுசீலாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“எல்லாரையும் ஏமாற்றி, நான் உங்களை அடைந்து விட்டேன். வசந்திக்கு அந்தக் கோபம் இந்த நிமிஷம் வரையில் தீரவில்லை. கல்யாணத்திற்குத்தான் அத்தனை அழைத்தும் வரவில்லை, போகட்டும். குழந்தை பிறந்த செய்தி தெரிந்த பிறகாவது, பார்க்க வந்தாளா? நான் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு முள்ளைப் போல் குறுக்கிட்டேன். ஆனால், அதுதான் எவ்வளவு பெரிய உண்மை. பாவம் வசந்தி! உங்களிடம் அவள் எத்தனை ஆசை வைத்திருந்தாள் என்பதை என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. நியாயமாக உங்களுடன் வாழ எனக்கு அருகதையே இல்லை; துளிக் கூட இல்லை…” என்று கூறிக் கொண்டே வந்தவள், திடீரென்று சிறு குழந்தையைப் போல், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

ஹரி சட்டென்று அவள் வாயைப் பொத்தி, “சுசீ! இதெல்லாம் என்ன அசட்டுத்தனமான பேச்சு! உன்னிடம் யாருக்கும் கோபம் கிடையாது” என்றான்.

“நிஜமாகவா?”

“சத்தியமாக”.

சுசீலா சிரித்து விட்டாள். “எனக்காகப் பொய் சத்தியம் கூடப் பண்ணத் துணிந்து விட்டீர்கள்…”

ஏதோ பேச வாயெடுத்தான். அதற்குள் “ஹரி, போதும், வா” என்று குரல் கொடுத்தாள் காயத்திரி.

ஹரி வெளியே வந்ததும், “பச்சை உடம்புக்காரியிடம் இப்படித் தொண தொணக்கலாமா, ஹரி?” என்று மெல்லச் சிரித்தாள் காயத்திரி. ஹரி வெட்கத்தினால், தலை குனிந்தான்.

அன்றிரவெல்லாம், அடுக்கடுக்கான இன்பக் கனவுகளில் சுழன்று கொண்டிருந்த ஹரி, திடீரென்று தன் எண்ணப் படகு ஏதோ ஒரு சுழலில் சிக்கிக் கொண்டது போல், பாதித் தூக்கத்தில் துணுக்குற்று எழுந்தான்.

“ஹரி!” என்று பெரிதாக அலறினாள் காயத்திரி.

“ஓடிப் போய் டாக்டரை உடனே அழைத்து வாயேன். சுசீலாவுக்கு ஜன்னி கண்டு விட்டது. ஒரேயடியாகப் பிதற்றுகிறாள்... ஓடேன்!”

“ஐயோ!” என்று அலற வேண்டும் போல் இருந்தது ஹரிக்கு. பைத்தியம் பிடித்தவன் போல் ஓடினான்.

அவன் டாக்டருடன் வீட்டுக்குள் நுழைந்த போது, அழுகுரல்கள் வாசலில் அவனை வரவேற்றன.

காலம் மனிதனை முன் நோக்கித்தான் கட்டி இழுக்கிறதே தவிர, பின்னே செல்ல அநுமதிப்பதில்லை! சாவுதான் மனிதனின் உள்ளத்தில் எத்தனை அற்புதங்களை நிகழ்த்தி விடுகிறது! மரணம் சிலரைப் பிரித்தாலும், பலரைக் கூட்டுகிற விந்தை என்னே! சுசீலாவின் திருமணத்துக்குப் போகாமல் இருந்த வசந்தியை—சுசீலா ஊருக்கு வந்து அம்மா அழைத்த போது கூட, வீம்புக்கு வராமல் இருந்த வசந்தியை—குழந்தை பிறந்ததற்குக் கூட வராமல் இருந்த வசந்தியை—சுசீலாவின் மரணம் கட்டி இழுத்துக் கொண்டு வந்து விட்டதே!

‘இனி என் வருகை யாருக்கு வேண்டும்? நான் வராமையால், யாருக்கு நஷ்டம்?’ என்று வசந்திக்கு அழுகை ஒன்றுதான் ஆறுதல் அளிக்கும் மருந்தாக இருந்தது. ஹரியின் கால்களில் விழுந்து கதறினாள்.

சுருதி கலைந்தாலும்; யாழே உடைந்தாலும் கூட சரி செய்து விடலாம்; ஆனால், அதை மீட்டுகிறவன் உருக் குலைந்து விட்டால்; இனிய இசை எங்கிருந்து பிறக்கும்?

சுசீலாவின் பிரிவு, ஹரியின் நெஞ்சில் பெரிய அடியாக விழுந்தது. அதன் பிறகு, அவனால் பாடவே முடியவில்லை. பாகவதரின் மனமோ, பெருவெள்ளத்தில் சாய்ந்த ஆற்றங்கரை மரம் போல் சாய்ந்து விட்டது.

வாடிய மலர்கள் போல், நாட்களும், வாரங்களும், மாதமும் வருடமுமாக காலச் செடியிலிருந்து உதிர்ந்து கொண்டே இருந்தன. எவ்வளவு பெரிய புண்ணானால் என்ன? காலம் என்னும் வைத்தியன் கை பட்டு ஆற வேண்டியதுதானே?

ஆம்! காரண காரியங்களுடனேயே ஒவ்வொரு உயிரையும் படைக்கும் இறைவன், தன்னுடைய அந்த விசையினின்றும் பிறழவோ, பிறர் அதில் குறுக்கிடவோ அநுமதிப்பானா? அதற்கு ஹரியும் விலக்கல்லவே!

இசைக்காகப் பிறந்த ஹரியால், இசையை எப்படி மறக்க முடியும்? உலகத்துத் துன்பங்களை எல்லாம் துடைக்க வல்லது இசை என்றால், அந்த இசைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஹரியின், உள்ளத் துயரைத் துடைப்பதா இசைக்குக் கஷ்டம்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த வீட்டில் இசை முழங்கிற்று.

காயத்திரி, கையில் சுசீலாவின் குழந்தையை வைத்துக் கொண்டு, வெள்ளிக் கும்பாவில் இருக்கும் பாலுஞ் சாதத்தை, அம்புலி மாமாவைக் காட்டிக் காட்டி ஊட்டிக் கொண்டிருந்தாள்.

பாகவதருடைய அறையில், அவருடைய கால் மாட்டில் லட்சுமியம்மாள் உட்கார்ந்திருந்தாள். சுந்தரி கூடத்தில் தூணில் சாய்ந்து கொண்டிருந்தாள்.

ஹரியின் எதிரில், வசந்தி தம்பூராவை எடுத்து வைத்துக் கொண்டு மீட்டிக் கொண்டிருந்தாள்.

இனிப் பாடவே போவதில்லை என்றவன்; பாட்டாகவே மாறி விட்டான். இசை, இசை; ஒரே இசை. வசந்தியும், ஹரியுடனே சேர்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.

“புல்லாய்ப் பிறவி தர வேணும், கண்ணா புனிதமான பலகோடி பிறவி தந்தாலும் - பிருந்தாவன மீதிலொரு புல்லாய்ப் பிறவி தர வேணும், கண்ணா” என்று திரும்பத் திரும்ப ஹரி பாடிய போது, சுசீலாவும் வசந்தியின் அருகில் அமர்ந்து புளகிப்பது போல் ஹரிக்குத் தோன்றியது.

‘இசைக்காகவே வாழப் போகிறேன்’ என்று வாழ்நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது வாழ்க்கை, இசைக்காகவே காத்திருந்தது. குருவுக்காக இல்லறம் ஏற்றவன், அவருக்குக் காணிக்கையாக ஒரு குலக் கொழுந்தை அளித்து விட்டுத் தன் உழைப்பு, ஞானம், திறமை அனைத்தையும் இசைக்கே அர்ப்பித்து அமைதியும், ஆனந்தமும் கொண்டான்.

சந்தனத்தில் பதிந்த விரல்களைப் போல் - இந்த நூலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் முழுக்க முழுக்க இசையின் நறுமணங் கமழும் வண்ணம் இந்த ஒப்பற்ற நாவலை உருவாக்கியுள்ள இந்நூலாசிரியர் – குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும்; தமிழ் வளர்ச்சி இயக்கப் பரிசையும் பெற்றுள்ளவர்.


இசைக் கலைக்கென்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு விட்ட இந்நாவலின் கதாபாத்திரங்களின் வாழ்வில் குறுக்கிடும் அன்பு, பாசம், காதல், சோகம், ஏமாற்றம், இன்பம் என்னும் பல தரப்பட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு—படிப்பவர்களின் உள்ளத்தை நெகிழச் செய்யும்.


எமது பிற வெளியீடுகள்

★ பாரதியாரின் புதிய ஆத்திசூடி —
திருமதி லலிதா பரமேஸ்வரன் பி.ஏ., எல். டி.
ரூ.  5-00
★ புகையும் புற்று நோயும்-வி. என். சாமி
ரூ.  5-25
★ Modern Heroes of Indian Cricket—
V. Venkata Ramana
ரூ. 10-00
★ கடலைத் தேடாத நதி (நாவல்) —
ஜானகி நீலமணி
ரூ. 30-00
★ ஜேம்ஸ்பாண்ட் சங்கர் (சிறுவர் நாவல்) —
நீலமணி
ரூ. 12-00
★ காப்டன் குமார் (சிறுவர் நாவல்)— "
ரூ. 10-00
★ கப்பு கான்வென்ட்டுக்குப் போகிறாள் "
அச்சில்

காயத்ரி
பப்ளிகேஷன்

26-B, வேதாசல கார்டன்ஸ்
மந்தவெளி, சென்னை-600 028.


Wrapper Printed at Eskay Art Printers, Madras-5.