உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

149


கோட்டுமா – களிறு; பன்றி, பச்சூன் – பசிய ஊன். பைதல் – வருத்தம்.

விளக்கம் : 'நயனின்மையின் இது பயன் என்னாது' என்றது, தலைவன் தலைவிக்கு ஏற்புடைத் தகுதியாளன் அல்லனாகாமையின், அவன் வருந்தி அழிதலே அவனது காமத்தின் பயனாகும் என்று சொல்லிப் போக்காது என்றதாம். நயன் – நன்மைப்பாடு.

'பூம்பொறிப் பொலிந்த அகன்பைப் பாம்பு அழல் உமிழ்ந்து உயிரணங்கி யாங்கு' என்றது, தோற்றத்தால் அழகும் மென்மையும் கொண்ட நின் வாயிடத்தினின்றும், கடுவனைய கடுஞ்சொற்களைக் கூறினது தகாது' என்றதாம். 'சிறிதான அம்பினைக் கொண்டேவிப் பெரிதான கோட்டு மாவைக் கொன்ற வேட்டுவனின் செயலைப்போல, தன் கண் பார்வையினாலே தன்னைத் தாக்கித் தளர்வித்தனள் தலைவி' என்கின்றான். சேயரி பரந்த ஆயிதழ் மழைக்கண் உறாஅ நோக்கம்' என்றது, அந்தக் கண்ணின் தன்மைக்கும் பொருந்தாத நோக்கம் அதுவென உரைத்து, 'அவளும் உள்ளத்தே தன்பாற் காதலுடையாளே' என்கின்றான். செவ்வி வாயாமையின் தன்னை வெறுத்து நோக்கினள் எனவும் கூறுகின்றான். உறா.அ நோக்கம் உயிரை வாட்டுதலால் அவன் கொண்ட தளர்ச்சியும் இதனாற் காணப்படும்.

ஒப்பு,

              'சிலைமாண் கடுவிசைக் கலைநிறத்து அழுத்திக்
               குருதியொடு பறித்த செங்கோல் வானி
               மாறுகொண்டன்ன உண்கண்' (குறு. 372)

எனக் கடைசிவந்த மகளிரது கண் குருதிக்கறை தோய்ந்த பகழி முனைக்குப் பிறரானும் உவமிக்கப்படும்.

76. மெல்லடி உய்தற்கு!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : பாலை.
துறை : புணர்ந்து உடன் போகாநின்ற தலைவன், இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.

(து–வி) தலைவியை உடன் போக்கிலே அழைத்தேகும் தலைவன், இடை வழியில், வழிக்கடுமை தோன்றாதபடி. இனியன பலவும் கூறியவனாகச் செல்லுதல் இது.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/150&oldid=1678231" இலிருந்து மீள்விக்கப்பட்டது