உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

163


அதனிடத்தே, முருகனைக் கூடியபின் செல்லுகின்ற வள்ளி நாயகியைப்போல நின் உருவம் கண்ணைப் பறிக்கும் பேரொளியுடன் விளங்குகின்றது. அதனால் நின்னைக்காண்பதற்கு விருப்பம் மேலெழுந்தாலும், காணும் ஆற்றலிலேனாய் நிற்கின்றேன். நீதான் என்னுடைய அந்த வருத்த மிகுதியினை அறிகின்றாயோ?

கருத்து : 'நின் மேனி வனப்பு என் கண்களையும். மழுங்கச் செய்கின்றது' என்பதாம்.

சொற்பொருள் : நோய் – காம நோய். நெகிழ்ச்சி – உடலின் தளர்ச்சி, வீட – விட்டகல. உயவு – பெருவருத்தம். கொடிச்சி – குறவர்மகள். முருகு – முருகவேள். கண் எறிப்ப – கண்ணினைத் தாக்கி மழுங்கச் செய்ய. நாகம் – நாகமரம்; நாவல்மரம். வெள்வசி – வெறும் பிளப்பு: இதனிடைப் படும் விலங்குகளின் கால்கள் இதன்கண் மாட்டிக் கொள்ளும். வள்பு – வார்; வலையின் வார். கோள் நாய் – பற்றிக் கொள்ளும் வேட்டை நாய். கொள்ளை – வேட்டைப் பொருளான பன்றித் தசை.

விளக்கம் : 'நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த தோளை' என்றான், தோள் முயக்கம் பெற்றுத்தான் உயிர் பிழைத்த களிப்பினைக் காட்டுவானாக. 'நல் நடை' என்றது, நல்லதான ஒழுக்கத்தையுமாம், அது காதலனை அடைந்து அவனது நலிவு தீர்ப்பதான களவற ஒழுக்கமும் ஆம். 'உருவு கண் எறிப்ப' என்றது, கலவியால் அவள் மேனியில் தோன்றிய புதுப்பொலிவினைப் பெரிதும் வியந்து பாராட்டியதாம். 'முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோவ' என்றது. குறவர் மகளான வள்ளி தன் காதலனான செவ்வேள் முருகைக் கூடியதும், தெய்வத் தன்மை பெற்றுத் தெய்வமேயாகிச் சிறந்தமைபோல' என்று பாராட்டியதாம்.

உள்ளுறை : சேறாடிப் புழுதிபடிந்த பன்றியேறு வலையிற் சிக்கியதும், வேட்டை நாய்கள் மொய்த்துப் பிடுங்குவதும், அவற்றை விலக்கிக் கானவர் பன்றி இறைச்சியைக் கொண்டுபோதலும் நிகழும்; அதனால் சிறுகட்பன்றியுடைய பன்றியின் துணையது துயரமும் மிகுதியாகும். அவ்வாறே, நின் ஊர் அலவற்பெண்டிர் அறியின் பழியுரை மிகுதிப்பட்டு வருத்துவதும், நின் ஐயன்மார் காணின் உயிரழிவே உண்டாவதும் கூடும்; அதுகண்டு நீயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/164&oldid=1681253" இலிருந்து மீள்விக்கப்பட்டது