உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

நற்றிணை தெளிவுரை


கருத்து : 'தலைவர் பொருள் செய்தற்கு நெடுநாட் பிரிந்து போயினராயின், அப் பிரிவைப் பொறுத்திருத்தல் நம் கடன்' என்பதாம்.

சொற்பொருள் : நகை – நகைத்தற்கு உரிய செய்தி. பொம்மல் ஓதி – பொலிவான கூந்தல்; பொலிவு – நீண்டடர்ந்து கருமையுடன் திகழ்தல். கேழ் – நிறம். உத்தி – பாம்புப் படம். தமியம் – தமியராயிருத்தற்கு நேர்ந்த யாம்.

விளக்கம் : 'பிரிந்தால் நாம் அவர் வரும்வரை உயிரைப் பொறுத்து ஆற்றியிருப்போம்' எனக் கருதினராயின் அவர் நினைப்பு நகைத்தற்கிடமாகும் என்கின்றனள். கூடிமுயங்கியிருப்பார்க்கும் அச்சம் விளைக்கும் மழைக்காலத்து இடியோசையைத் தனித்திருந்து கேட்பின் உயிர்துறப்போம் அல்லேமோ என்கின்றனள். தம் நிலைமை இஃதாயினும் அவர் பிரிவர் என்றும், தாம் வாழ்வோம் என்றும் கூறும் ஊரவரது பேச்சு நகைத்தற்கு உரியதாகும் என்றும் கூறுகின்றாள். இதனால் தெளிவுற்றுத் திரும்பும தலைவியை மெல்ல மெல்ல ஆடவர்க்குரிய கடமைப்பாட்டினை எடுத்துக் கூறுதல் மூலம், பிரிவைப் பொறுத்தற்குரிய நிலைக்குப் பக்குவப் படுத்துதலே தோழியின் கருத்தாகும்.

ஆடவர் வினைவயிற் பிரியும் காலத்து மனைவியரும் உடன்போகும் வழக்கம் அக்காலத்தே நிலவவில்லை: அவர் மனைக்கண் இருந்து ஆற்றியிருப்பதே கடமையாகக் கருதி வாழ்ந்தனர்; இதனை 'நம் மனை வாழ்தும்' என்ற சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

130. உயவுத் துணை!

பாடியவர் : நெய்தல் தத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது.

[(து–வி.) 'தலைவனது பிரிவினாலே மெலிவுற்ற தலைவி, தன்னைப் பொறுத்திருக்க' எனக்கூறி வற்புறுத்திய தோழிக்குத் தன் துயரநிலைமையை விளக்குவாளாக இவ்வாறு கூறுகின்றாள்.]

வடுவின்று நிறைந்த மான்தேர்த் தெண்கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பக்
கோலின் எறிந்து காலைத் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/253&oldid=1692339" இலிருந்து மீள்விக்கப்பட்டது