உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

311


விளக்கம் : பிரிவுத் துயரத்தால் மனம் வருந்தினும், அவள் ஆற்றியிருக்கும் திறனுடையாளாய் விளங்குவாள் என்பதனைக் 'காதல் கெழுமிய நலத்தள், ஏதின் புதல்வற் காட்டிப் பொய்க்கும், திதலை அல்குல் தேமொழியாள்' என்றனன். 'பொய்க்கும்' என்றது, 'தந்தை வருவார்; அதோ காக்கை கரைவது காண்' என்றாற்போலச் சொல்லுதல். தன் ஆர்வத்தைப் புதல்வன்பால் ஏற்றிக் காட்டிப் பொய்த்ததும் ஆம். முற்படச் சென்று அறிவிக்குமாறு விடுத்த இளையர் நடுவழியில் களைப்பாறியபடி தங்கியிருக்கத், தான் அவர்கட்கு முன்பாகவே வந்தடைந்த தலைவன், தேரினை அத்துணை விரைவாகச் செலுத்திய பாகனை இப்படிக் கூறிப் பாராட்டுகின்றனன் காந்தட் பூக்கள் உடைந்த சங்குகளைப் போலத் தோற்றுவனவாம்; இதனை 'உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்' எனவரும் (புறம்.90) ஔவையார் பாட்டானும் அறியலாம்.

162. வல்லை அல்லை!

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : உடன் போதுவலென்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.

[(து–வி.) தலைவனுடன் தானும் உடன் வருவதாகத் தலைவி கூறுகின்றாள். அவளுக்கு வழியின் கடுமையைக் கூறியவனாகத் தலைவன் சமாதானம் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

'மனையுறை புறவின் செங்காற் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேரப்
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன்' என்றுநின்
பனிவார் உண்கண் பைதல கலுழ 5
'நும்மொடு வருவல்' என்றி; எம்மோடு
பெரும்பெயர்த் தந்தை நீடுபுகழ் நெடுநகர்
யாயொடு நனிமிக மடவை! முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடுவீழ்
வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் 10
துஞ்சுபிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/312&oldid=1696078" இலிருந்து மீள்விக்கப்பட்டது