நற்றிணை தெளிவுரை
393
நற்றிணை 1—200 செய்யுட்களைப்
பாடிய சான்றோர்கள்
[எண் — செய்யுள் எண்]
அகம்பன் மாலாதனார் 81
'ஆதன்' என்னும் பெயரினர்; 'அகம்பல்' என்னும் ஊரினர்; ஆதலின் 'அகம்பன் மாலாதனார்" எனப் பெற்றனர். 'மால்' தலைமையைக் குறிப்பது; அகம்பலூர்க்குத் தலைவராகவும் இருந்திருக்கலாம். வேந்தனின் ஏவலைக்கொண்டு வினைமேற் சென்றோனாகிய ஒரு தலைவன், அவ்வினையது முடிவின்கண் தன்னுடைய காதற்குரியாளை நோக்கிச் செலுத்தும் மனத்தினனாகத் தேர்ப்பாகனிடத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும். இந்நிகழ்ச்சியை இவரது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகவும் கொள்ளலாம். 'என்னைப் பிரிந்திருத்தலாகிய பிரிவுப் பெருநோயினாலே அழுதபடியிருக்கின்றாளான அவள்பாற் சென்று, என்னைக் கண்டவுடனே அவள் முகத்திடத்தே தோன்றுகின்ற இளநகையைக் காண்போ'மெனச் சொல்லுந் திறம், மிக்க காதற் சுவையுடையதாகும்; உளவியல் விளக்கமும் ஆகும். சேரமன்னர் பரம்பரையினர் பலர் 'ஆதன்' என்ற பெயர் முடிவு பெற்றிருப்பதும் நினைக்க.
அஞ்சில் அஞ்சியார் 90
'அஞ்சி' என்பது இவருடைய இயற் பெயராகும்; இவரூரின் பெயராகவும் 'அஞ்சில்' என்பதனைக் கொள்ளலாம். இவரைப் பெண்பாலராகக் கருதுவர். அதியமான் நெடுமான் அஞ்சியென்னும் தகடூர்க் கோமானின் பெயரினைக் கொண்டவராகவும். அந்நாட்டுப் பகுதியைச் சார்ந்தவராகவும் இவரைக் சுருதலாம். 'தலைவியை மறந்து பரத்தையுறவு பூண்டோனாக விளங்கும் தலைவனுக்கு அறிவுறுத்தும் வகையாகத், தூதுவந்த பாணனுக்குத் தோழி வாயின் மறுப்பதாக அமைந்துள்ள செய்யுள் இது'வாகும். இதன்கண் விளங்கும் ஊசற்காட்சி மிகமிகச்சுவை பயப்பதாகும்.
ந.—25