உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை இன்பம்

27


கானத் தினைப்புனத்தில் - குறமகள்
     காவலிற் கொள்ளையிடல்
ஈனச் செயல் அல்லவோ? - குலத்துக்கு
     இழுக்கமும் வந்திடாதோ? 12

செம்பவழ வாயைத் - திறந்து நீ
     செப்பு மொழிகேட்கில்,
உம்பர் அமுதமெல்லாம் - செவியகத்து
     ஓடி யொழுகும், அடி! 13

கொம்பிற் கொலுவிருந்து - களித்து நீ
     கூவுங் குரல்வருமேல்,
பம்பி யெழுஞ்சோலை - எனக்குப்
    பரம பதம், அடியோ! 13

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
    உள்ளம் களிகொளவே,
பண்ணிற் கலந்திடநீ - தெரிந்துசெய்
    பக்குவம் ஏதடியோ? 14

பேசும் மரகதமே! உனைத் தினம்
    பேணி வளர்த்திடுவேன்;
ஆசை யமுதமொழி - அளிக்க நீ
    அண்டையில் வந்திடாயோ? 16

பண்ணுக் கிசைந்ததம்மா! - பழத்தொடு
    பாலுங் கலந்ததம்மா!
மண்ணுக் கமுதமம்மா! - உனது செவ்
    வாய்மொழி, தத்தையம்மா 17