உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடும் தீபம்/நாட்டுக்குத் தேவையான கூட்டுறவு முறை

விக்கிமூலம் இலிருந்து

நாட்டுக்குத் தேவையான
கூட்டுறவு முறை


“பன்னிரண்டு பேர் சேர்ந்து, தொடர்ந்து ஒரு நாவலை எழுதுவதாவது? சுவாரசியப்படுமா? நடை மாறுபாடுகளும், கருத்து வேற்றுமைகளும் குறுக்கிட்டு, நாவலின் சுவையைக் குறைத்து விடாவா?” என்று என்னிடம் சிலர் ‘ஆடும் தீபம்’ பற்றி ஐய வினா எழுப்பினார்கள். மழுப்பினாற் போல் பதில் சொன்னேன். எனக்குள்ளேயே இந்த ஐயம் இருந்ததுதான் மழுப்பலுக்குக் காரணம்.

ஆனால்—

இது வரை வளர்ந்து வந்திருக்கிற கதைப் பகுதி, அந்த ஐயம் வீண் என்பதை மெய்ப்பித்து விட்டது.

கதாநாயகி அல்லியின் நிலை—அதாவது அவளுடைய அந்தஸ்து சிறுகச் சிறுக, மறைமுகமாக, வெகு அழகாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. இப்போது, அவளிடம் கிலி இல்லை. மருட்சி இல்லை. தன்னைப் பற்றி, தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி, ஊரைப் பற்றி, உலகத்தைப் பற்றி, அவள் நன்றாகத் தெரிந்து கொண்டவள் ஆகி விட்டாள். பள்ளிக்கூடத்திலே படிக்காததையும், அந்தப் படிப்பிலே அறிந்து கொள்ள முடியாததையுங் கூட, வாழ்க்கையில், உலக அனுபவத்தில், நேரில், கண்டு அறிந்து கொண்டு விட்டாள். இனி எந்தச் சக்தியும் அவளை எதுவுமே செய்ய முடியாது. கதையின் முடிவிலே, அவள் வீராங்கனையாக நின்று, நம்மை நோக்கி வெற்றிப் புன்முறுவல் செய்யப்
போகிறாள். ‘ஆடும் தீப’த்தைப் படித்த அனைவர் உள்ளங்களிலும் அழியாச் சித்திரமாக ஒளி வீசப் போகிறாள்.

கதையும், அதன் வளர்ச்சியும், கதாநாயகியும், மற்ற பாத்திரங்களும், அவர்களின் இன்ப, துன்ப அனுபவங்களும் ஆகிய எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் படைப்பைத் திட்டமிட்டபடி வெற்றிகரமாகத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திக் கொண்டு போகும் உமாவின் துணை ஆசிரியர், திரு பூவை எஸ். ஆறுமுகத்தின் பணியாற்றும் திறன் அல்லவா இவ்வளவுக்கும் காரணம்? முதற் பாராட்டு அவருக்குத்தான்!

கூட்டுறவு முறை சரியாக இயக்கப் பெற்றால், எந்தத் துறையிலும் நல்ல பயனை அளிக்கும் என்பதற்கு இந்த ‘ஆடும் தீபம்’ தொடர்கதையே ஓர் அத்தாட்சி!

எல்லார்வி’