கடிதம்
27
இந்தப் பயல்கள் சாவகாசமே வேண்டாம். தொலைந்தால்தான் இந்தப் பீடை ஒழியும். உண்மைப் பற்றுதலைக் காண்பிக்கத் தைரியமில்லாத கோழைகள். கடிதம் எழுதினானே கடிதம். ‘என்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டானோ? சீச்சீ! முட்டாள்! அவனை என்ன சொல்ல? பெற்று வளர்த்த சமூகம் இப்படிப்பட்டது. இதற்காக எழுதாமலும் இருக்கிறதில்லை…’
காகிதம் எரியும் நாற்றம் அறை முழுவதும் பரந்தது.
விளக்கும் கரிப் பிடித்து எரிந்து, எண்ணையற்றுச் சோர்ந்து மங்கிக் கொண்டே வந்தது. வெற்றிலைப் பெட்டியை எடுக்கும் சப்தம். சிங்காரம் வெற்றிலை போட்டுக் கொண்டார்.
விளக்கு அணைந்தது.
அவர் மனதில் புழுங்கிய தணலும் அவிந்தது.
அன்று அவர் வெகு நேரம் தூங்கவில்லை.
இந்த மாதிரி அசட்டுத் தனமான சமூகத்தை எப்படித் தூக்குவது?
கோழைத்தனம் பிறப்புரிமையாக இருக்கிற இந்தப் புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி?
இருள் இருந்தால்தானே ஒளி. ஒளி வராமல் போய் விடுமா?
அது வரை காத்திருக்க வேண்டியதுதான். எத்தனை காலமோ?
ஒளி வரும் பொழுது, நான் இருக்க வேண்டும் என்ற அவசியமுண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும்.