தென்பாண்டிச் சிங்கம் 435 இரவு நேரத்தில் தடுக்கப்பட்ட அந்தக் தாக்குதலை ஆதப்பன் கதிரவன் தோன்றிய சிறிது நேரத்திற்கெல்லாம் செய்து முடித்துவிடத் தன் படை வீரர்களுடன் அந்தப் பாசறைகளை நோக்கிக் கிளம்பினான். ஆயுதபாணியாகப் பாசறையின் கூடாரத்தில் அவசர அவசரமாக மடல் எழுதிக் கொண்டிருந்த வைரமுத்தன். அதனை எழுதி முடித்து உறையிலிட்டு மூடி, அரக்கு முத்திரையும் வைத்து, தனது மெய்க் காப்பாளனிடம் கொடுத்து, 'உடனடியாகக் கொண்டுபோய் எப்படி யாவது கல்யாணி நாச்சியாரிடம் சேர்த்துவிடு!" எனக் கேட்டுக் கொண்டான். மெய்க்காப்பாளன், அந்த மடலுடன் அந்த இடத்தை விட்டு அகன்றதும், வைரமுத்தன் தனது புரவியில் ஏறிப் போர்க்களம் நோக்கித் தட்டி விட்டான். அதற்குள் பாசறைக் கூடாரங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கி விட்டன. அமைதியாகவே போருக்குப் புறப்பட்ட வைரமுத்தனின் கண் எதிரே அவனது பாசறைக் கூடாரங்கள் எரிவது கண்டு வீராவேசங் கொண்டான். பாசறைக் கூடாரங்களில் இருந்து பட்ட மங்கலத்து வீரர்கள் தங்கள் போர்க் கருவிகளைத் தூக்கிக் கொண்டு குருதிவழிப் பொட்டல் நோக்கித் தாவினர். அந்த அலங்கோலத்திலும் வைரமுத்தன், தனது மெய்க் காப்பாளர்களிடம், "சவப்பெட்டிகள் பத்திரம்! வேறு எங்காவது கொண்டு போய் ஒளித்து வையுங்கள்! தீக்கிரையாக்கி விடாதீர்கள்!" என அறிவித்துவிட்டு வாளைச் சுழற்றியவாறு களம் புகுந்தான். பாசறைக் கூடாரங்கள் வரிசையாக எரிவதைப் பார்தது, வாளுக்குவேலி தனது புரவியில் இருந்தபடியே கலகலவெனச் சிரித்தான்.
பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/460
Appearance