பரமேச்வரத்தின் மனது ஒரு கொந்தளிக்கும் கடல்போல் தறிகெட்டுப் புரண்டது.
வெளிக் காம்பௌண்டில் உலாவ வருகிறார்.
தம்மையறியாமல் அந்தச் சிறு காகிதக் கட்டு அவர் பைக்குள் செல்லுகிறது. அதை அழிப்பதா? வைத்துக் கொண்டால் என்ன?
நல்ல இருட்டுத்தான்.
காம்பௌண்ட் சுவரிலிருந்து ஒரு கறுத்த உருவம் குதிக்கிறது.
கடமை! வார்டர்களைக் காணோம். அந்தப் பக்கம் சற்று ஒரு மாதிரித்தான்.
ஒரே பாய்ச்சலில் எட்டிப் பிடித்துக் கொள்ளுகிறார்.
சல்லடம் தரித்த பெண்.
அவன் சிநேகிதை.
"நீ..." என்கிறார்.
"ஆம்! அவரைப் பார்க்க வேண்டும். அனுமதி இல்லாவிட்டால் வழியுண்டு."
"பார்க்கக் கூடாது! வீணாக நீயும் அகப்பட்டுக் கொள்ளாதே! போய்விடு! நீ சிறுமி!"
"நான் பெண்ணுமல்ல, சிறுமியுமல்ல. எங்கள் சமுதாயத்தின் அடிமை; தொண்டர்."
"நம்முடைய சமுதாயமில்லையா?" என்று சிரித்தார்.
"நீ ஒரு துரோகி. உனக்கு அங்கு இடம் கிடையாது!" என்றாள்.
அவள் கையில் தொங்கிக் கொண்டிருந்த பையில் என்னமோ சிறிய கட்டு பொத்தென்று விழுந்தது.
இருவரும் மௌனமாக நிற்கின்றனர்.
"நீ!..." என்றாள்.
"போ! போ!"
அவளை ஒரே துக்காகத் தூக்கி, காம்பௌண்ட் மதில் மேல் வைத்தார். அடுத்த நிமிஷம் அந்த உருவம் மறைந்தது.
"பறிமுதல் செய்யப்பட்ட சிறு காகிதக் குப்பை, கைதி 43-ம் நெம்பரின் பைத்தியக்கார உளறல்களாக இருந்ததால் அழிக்கப்பட்டது" என்று எழுதிவிட்டு நாற்காலியில் சாய்ந்தார்.
எது பறிமுதலானது?
மணிக்கொடி, 19.8.1934
128
பறிமுதல்