உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தம் போக்கு

ன்று ஆபீஸிலிருந்து வரும்பொழுது ரொம்பக் களைப்பு.

அச்சு யந்திரத்தின் கவந்த உபாசனைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

வெளியிலே வந்தேன்.

தெருவிலே கூட்டம்.

குப்பைத் தொட்டியில் ஒரு இறந்த குழந்தை.

எந்தத் தாயோ? அவள் யாராயிருந்தாலென்ன? சமூக ஒப்பந்தத்திற்குப் பயந்து செய்துவிட்டாள். அதற்கென்ன? கூடியிருந்த பெண்கள் அந்தக் குற்றவாளியை - அவள் அப்படித்தான்; சீர்திருத்தவாதிகள் என்ன கத்தினாலும் தானென்ன? - அடிவயிற்றிலிருந்துதான் திட்டினார்கள். அவர்கள் உணர்ச்சியும் சரிதான். அவர்களுக்குத்தான் தெரியும் அந்த சிருஷ்டியின் உத்ஸாகம், மேதை, துன்பத்தின் இன்பம்.

அவள் உணர்ச்சிகள்? அதற்கென்ன?

அங்கிருந்து திரும்பினேன். ஒரு பால்காரன் ஒரு வீட்டின் முன்பு கறந்து கொண்டிருக்கிறான். அவன் வழி வெகு சுருக்கமானது; லேசானது.

அவனுக்கு அந்தப் பசுவின் கன்றைப் பற்றிக் கவலையில்லை.

பசுவின் பாலைப் பெற்றுக்கொள்வதற்கு அந்தப் பசுவின் கன்று இறந்து போனாலென்ன? அதன் தோல் எங்கு ஓடிப்போய் விடுகிறது? அதைப் பசுவின் காலில் கட்டிவைத்துவிட்டால் பசு சாந்தியடைந்து விடுகிறது. பசுவும் உள்ளன்புடன் பால் கொடுக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்?

செத்த குழந்தை; தோல் கன்றுக்குட்டி!

போதும்! போதும்!

நாம் கெட்டிக்காரர்கள்தாம்.


புதுமைப்பித்தன் கதைகள்

141