பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அகத்திணைக் கொள்கைகள் எடுத்துக்காட்டாக, குறிஞ்சி ஒழுக்கம் நிகழும் இடம் குறிஞ்சி நிலம்: இம்மாதிரியே பிறவற்றிற்கும் கூறப்படும்.அந்தந்த நிலத்தில் அந்தந்தச் சூழ்நிலைகளில் அந்தந்த ஒழுக்கந்தான் நடைபெறுதல் வேண்டும் என்று வரையறை செய்த கருத்துதான் யாதென்பதை ஆராய்வோம். மலை சார்ந்த இடம் (குறிஞ்சி) மலையையும் மலை சார்ந்த இடத்தையும் பண்டையோர் புணர்ச்சிக்குரிய இடமாகத் தேர்ந் தெடுத்தனர். குறிஞ்சி இயற்கை வளம் செறிந்தது. மஞ்சு சூழ் மலையில் ஆசினியும் அசோகும் மலையை அழகு செய்யும்; தேமாவும் தீம்பலவும் மலைக்குத் தெய்விகக் காட்சியை நல்கும். சந்தனமும் சண்பகமும் மலையை மாண்புறுத்தும். கோங்கும் வேங்கையும் மலைக்கு வனப்பூட்டும். மற்றும் பல மரங்கள் விண்ணைத் தழுவி முத்தமிடும். குறிஞ்சி, கோங்கு, மாதவி, மல்லிகை, முல்லை போன்ற மலர்கள் எம் மருங்கும் மலர்ந்து மணம் பரப்பி மனத்தை ஈர்க்கும். மற்றும், மலைப் பகுதிகளில் தேமாங்கனி பழுத்துக் கொத்துக் கொத்தாகக் காட்சியளிக்கும்; வருக்கைப் பலா கொம்புகளில் பழுத்துத் தொங்கும்; வாழைக் கனிகள் குலை குலையாகப் பழுத்துத் தொங்குவதை அங்குக் காணலாம். கேரளம், கொடைக் கானல், உதகை போன்ற பகுதிகளில் இச்சூழ்நிலையை இன்றும் காணலாம். ஆண் குரங்குகள் வெடித்த பலாவின் தீஞ்சுளை களைக் கடித்துக் கடித்துத் தம் பெண் குரங்குகளுக்கு ஊட்டும். பைங்கிளிகள் தம் செம்பவள வாயால் தேமாங்கனிகளைக் கொத்திக் கொத்தித் தம் துணை கட்குக் கொடுக்கும். பொன்னிற வண்டுகள் மலரினை ஊதிக் கொடுத்துப் பெண் வண்டைத் தேன் உறிஞ்சத் தூண்டும். ஆண் யானை மூங்கில் களை ஒடித்துப் பெண்யானைக்குக் கவுள் நிறையக் கொடுக்கும். இத்தகைய குறிஞ்சி நிலச்சோலை பசுமை நிறத்தால், திந் தேனால், நறுமணத்தால், வண்டொலியால், பசுமையான புல் தரையினால் ஐம்புலன்கட்கும் இன்பம் அளிக்க வல்லதாக விளங்கும். இச்சோலையை இன்பம் அளிக்க ஏற்ற சூழ்நிலை யாகக் கவிஞன் கற்பனை செய்தல் இயற்கைக்கு ஒத்துள்ள தல்லவா? ஆகவே, பண்டைய ஆசிரியர்கள் இத்தகைய இடத்தைக் காதலர்கள் சந்தித்து இன்பம் அநுபவிக்கும் இடமாகத் தேர்ந்

தெடுத்தனர். கூதிர் காலம் என்ற பெரும் பொழுதையும் யாமம்