குறிஞ்சிக்கலி

விக்கிமூலம் இலிருந்து


இரண்டாவது குறிஞ்சிக்கலி[தொகு]

ஆசிரியர்: கபிலர்[தொகு]

பாடல்:37 (கயமலர்)[தொகு]

கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத், தொடை மாண்ட
கண்ணியன், வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்!
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன் வயின்,
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன் ஆயின்;
பெண் அன்று, உரைத்தல் நமக்கு ஆயின்; 'இன்னதூஉம்
காணான், கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன், நறு நுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூறத்,
'தையால்! நன்று' என்று அவன் ஊக்கக், கை நெகிழ்பு,
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில்; வாய்யாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன்; கொண்டான் மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென,
'ஒண் குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்!

38 இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல -
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை,
7 நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்;

ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்,
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தைக் காண்!

இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை,
அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக் காண்;

மறந்திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப்
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தைக் காண்;

என ஆங்கு,
நின் உறு விழுமம் கூறக் கேட்டு
வருமே, தோழி! நல் மலை நாடன் -
வேங்கை விரிவு இடம் நோக்கி,
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.

39 காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,
தாமரைக் கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம்,
வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;

அவனும் தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத்,
'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்;

சிறுகுடியீரே! சிறுகுடியீரே! -
வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;

காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இரும் சிலம்பின்
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர்
தாம் பிழையார்; கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்;

என ஆங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்;

அவரும், தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக், கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,
'இருவர் கண் குற்றமும் இல்லையால்' என்று,
தெருமந்து சாய்த்தார் தலை;

தெரி இழாய்! நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள்
கொண்டு நிலை பாடிக் காண்;

நல்லாய் -
நன்னாள் தலை வரும் எல்லை, நமர் மலைத்
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர் கொல்?

புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே,
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொல்லோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொல்லோ?

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்,
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ?
என்னைமன், நின் கண்ணால் காண்பென்மன், யான்;
நெய்தல் இதழ் உண் கண், நின் கண் ஆக, என் கண் மன;

என ஆங்கு,
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇத்,
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக,
வேய் புரை மென் தோள் பசலையும், அம்பலும்,
மாய புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்கச்,
சேய் உயர் வெற்பனும் வந்தனன்;
பூ எழில் உண் கணும் பொலிக மா இனியே!

40 அகவினம் பாடுவாம், தோழி! - அமர்க் கண்
நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ,
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சிப்,
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,
அகவினம் பாடுவாம், நாம்.

ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்
தேன் நாறு கதுப்பினாய்! - யானும் ஒன்று ஏத்துகு -
வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை;

கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள்
தொடுத்த தேன் சோரத், தயங்கும் - தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை;

கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து,
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே -
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லல் படுவான் மலை;

புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத்
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான்
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்;

விண் தோய் வரைப், பந்து எறிந்த அயா வீடத்,
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே -
பெண்டிர் நலம் வௌவித் தண் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை;

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ் சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் - 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை;

என நாம்,
தன் மலை பாட, நயவந்து கேட்டு அருளி,
மெய் மலி உவகையன் புகுதந்தான் - புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெறச்
செம்மலை ஆகிய மலை கிழவோனே!

41 பாடுகம், வா - வாழி, தோழி! வயக் களிற்றுக்
கோடு உலக்கை ஆக, நல் சேம்பின் இலை சுளகா
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்
பாடுகம், வா - வாழி, தோழ! நல் தோழி! - பாடுற்று;

இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள்,
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்துப்,
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்,
நெடு வரை ஆசினிப் பணவை ஏறிக்
கடு விசை கவணையில் கல் கை விடுதலின்,
இறு வரை வேங்கையின் ஒள் வீ சிதறி,
ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத் ,
தேன் செய் இறாஅல் துளைபடப் போகி,
நறு வடி மாவின் பை துணர் உழக்கிக்,
குலை உடை வாழைக் கொழு மடல் கிழியாப்,
பலவின் பழத்துள் தங்கும், மலை கெழு வெற்பனைப்
பாடுகம், வா - வாழி, தோழி! நல் தோழி! - பாடுற்று;

இலங்கும் அருவித்து, இலங்கும் அருவித்தே;
வானின் இலங்கும் அருவித்தே - தான் உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை;

பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?
'அஞ்சல் ஓம்பு' என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்
திங்களுள் தீத் தோன்றியற்று;

இள மழை ஆடும்; இள மழை ஆடும்;
இள மழை வைகலும் ஆடும் - என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று;

வாராது அமைவானோ? வாராது அமைவானோ?
வாராது அமைகுவான் அல்லன்; மலை நாடன்,
ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழல் கயத்து
நீருள் குவளை வெந்தற்று;

மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;
மண்ணா மணி போலத் தோன்றும் - என் மேனியைத்
துன்னான் துறந்தான் மலை;

துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்;
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் -
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று;

என ஆங்கு,
நன்று ஆகின்றால் -தோழி! நம் வள்ளையுள்
ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி,
மென் தோள் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,
மணம் நயந்தனன், அம் மலை கிழவோற்கே.

42 மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்திக்
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன்
மறந்தான்; மறக்க; இனி, எல்லா! நமக்குச்
சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம்; ஆயின், அவன் திறம்
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்.
வள்ளை அகவுவம் வா, இகுளை! நாம்
வள்ளை அகவுவம், வா;

காணிய வா - வாழி தோழி! - வரைத் தாழ்பு -
வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா
நாண் இலி நாட்டு மலை;

ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ -
ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்?
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே - நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை;

கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? - தன் மலை
நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண் கையவன்;

வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் - இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று;

எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி -
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்!

என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்;
தாழ் இரும் கூந்தல் என் தோழியைக் கை கவியாச்,
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர,
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆய் இழை மேனிப் பசப்பு.

43 வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால்,
ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,
ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற
மை படு சென்னிப் பய மலை நாடனைத்
தையலாய்! பாடுவாம் நாம்;

தகையவர் கைச் செறித்த தாள் போலக் காந்தள்
முகையின் மேல் தும்பி இருக்கும் - பகை எனின்,
கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத்
தோற்றலை நாணாதோன் குன்று;

வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,
இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
வருடைமான் குழவிய வள மலை நாடனைத்
தெருளத் தெரி இழாய்! - நீ ஒன்று பாடித்தை;

நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக்
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே -
மாறு கொண்டு ஆற்றார் எனினும், பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று;

புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை -
மணம் நாறு கதுப்பினாய்! - மறுத்து ஒன்று பாடித்தை;

கடும் கண் உழுவை அடி போல வாழைக்
கொடும் காய் குலை தொறூஉம் தூங்கும் - இடும்பையால்
இன்மை உரைத்தார்க்கு, அது நிறைக்கல் ஆற்றாக்கால்,
தன் மெய் துறப்பான் மலை;

என ஆங்கு,
கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு
வாடிய மென் தோளும் வீங்கின -
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே!

44 கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்
எதிர் எதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத் தாள் எரி வேங்கை,
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்,
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தித்
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!

தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை
என்னையும் மறைத்தாள், என் தோழி - அது கேட்டு
நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி;

கூரும் நோய் சிறப்புவும், நீ செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள், என் தோழி -அது கேட்டாங்கு,
'ஓரும் நீ நிலையலை' எனக் கூறல் தான் நாணி;

நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை
ஆயமும் மறைத்தாள், என் தோழி - அது கேட்டு
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி;

என ஆங்கு,
இனையன தீமை நினைவனள் காத்தாங்கு,
அனை அரு பண்பினான், நின் தீமை காத்தவள்
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும்
மருந்து ஆகி செல்கம், பெரும! நாம் விரைந்தே!

45 விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறைக்,
கடி சுனைக் கவினிய காந்தள் அம் குலையினை,
அரு மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்துப்,
பெரு மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைப் பெயல்
உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி,
நறு வீய நனம் சாரல் சிலம்பலின், கதுமெனச்,
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!

கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ -
புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி
பல் இதழ் மலர் உண் கண் பசப்ப! நீ சிதைத்ததை?

புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ -
கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாடச் சிதைத்ததை?

சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ -
யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாடச் சிதைத்ததை?

என ஆங்கு,
தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்
பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்
உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே.

46 வீ அகம் புலம்ப, வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த, வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
'வேங்கை அம் சினை' என விறல் புலி முற்றியும்
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!

ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்,
மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப -
கூடுதல் வேட்கையான், குறி பார்த்துக் குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக;

அரும் செலவு ஆர் இடை அருளி வந்து, அளி பெறாஅன்
வருந்தினென் என பல வாய்விடூஉம், தான் என்ப -
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு தன் மாட்டுப்
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக;

கனை பெயல் நடுநாள் யான் கண் மாறக், குறி பெறாஅன்,
புனை இழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப -
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன்
அளி நசை ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக;

என ஆங்கு,
கலந்த நோய் கைம்மிகக் கண் படா என் வயின்
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை -
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச்
சிலம்பு போல், கூறுவ கூறும்
இலங்கு ஏர் எல் வளை, இவள் உடை நோயே.

47 ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும், உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,
நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
இல்லோர் புன்கண், ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்;
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச்
சொல்லும் சொல், கேட்டீ - சுடர் இழாய்! பல் மாணும்;

'நின் இன்றி அமையலேன், யான்' என்னும் அவன் ஆயின்,
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின்,
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள கொல்லோ? - நறு நுதால்!

'அறியாய் நீ, வருந்துவல் யான்' என்னும் அவன் ஆயின்,
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின்,
அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்?

'வாழலேன், யான்' என்னும் 'நீ நீப்பின்' அவன் ஆயின்,
ஏழையர் எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின்,
சூழும்கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்;
சூழும்கால், நறு நுதால்! நம் உளே சூழ்குவம்.

அவனை,
நாண் அடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது;
'பேணினர்' எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன்
'வௌவினன் முயங்கும் மாத்திரம் வா' எனக்
கூறுவென் போலக் காட்டி
மற்று அவன் மேஎவழி மேவாய் நெஞ்சே!

48 ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போலத்,
தே மூசு, நனை கவுள், திசை காவல் கொளற்கு ஒத்த
வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகம்
படு மழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய
கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும்
பெரு களிற்று இனத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட!

வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்,
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ -
தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர், நின் சாரல்
ஊழுறு கோடல் போல், எல் வளை உகுபவால்?

இனை இருள் இது என ஏங்கி, நின் வரல் நசைஇ,
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ -
'இனையள்' என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர், நின் சுனைக்
கனை பெயல் நீலம் போல், கண் பனி கலுழ்பவால்?

பல் நாளும் படர் அடப், பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன, மாமைக் கண் பழி உண்டோ -
இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள், நின் சோலை -
மின் உகு தளிர் அன்ன, மெலிவு வந்து உரைப்பதால்?

என ஆங்கு,
பின் ஈதல் வேண்டும், நீ பிரிந்தோள் நட்பு - என நீவிப்
பூங் கண் படுதலும் அஞ்சுவல்; தாங்கிய
அரும் துயர் அவலம் தூக்கின்,
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே!

49 கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு, கதுமென வெரீஇப்
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை
'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கிப்
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!

போது எழில் மலர் உண் கண் இவள் மாட்டு நீ இன்ன
காதலை என்பதோ இனிது - மற்று இன்னாதே,
மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய்,
இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;

இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன
அன்பினை என்பதோ இனிது - மற்று இன்னாதே,
மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து,
அணங்கு உடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;

இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது - மற்று இன்னாதே,
ஒளிறு வேல் வலன் ஏந்தி, 'ஒருவன் யான்' என்னாது,
களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;

அதனால்,
இரவின் வாரல்; ஐய! விரவு வீ
அகல் அறை வரிக்கும் சாரல்,
பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே.
 

50 வாங்கு கோல் நெல்லொடு வாங்கி, வரு வைகல்,
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி,
தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும்
இருள் தூங்கு சோலை, இலங்கு நீர் வெற்ப!

அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில் மேல் அசைத்த கையை, ஓராங்கு
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கிப்,
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின், இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி
நல்கூர்ந்தார் செல்வ மகள்.

நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும்
தளியின் சிறந்தனை - வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை;

அதனால்,
கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும்
கொடுமை இலை ஆவது அறிந்தும், அடுப்பல் -
வழை வளர் சாரல் வருடை நல் மான்
குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி,
உழையின் பிரியின், பிரியும்,
இழை அணி அல்குல் என் தோழியது கவினே!

== ==

51 சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி ,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!

52 முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,
மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண்,
கல் உயர் நனம் சாரல், கலந்து இயலும் நாட! கேள்;

தாமரைக் கண்ணியைத், தண் நறும் சாந்தினை,
நேர் இதழ்க் கோதையாள் செய் குறி நீ வரின்,
'மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்
அணங்கு' என அஞ்சுவர், சிறுகுடியோரே;

ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை,
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின்,
ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்,
'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே;

ஆர மார்பினை, அண்ணலை, அளியை
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின்,
'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே;

என ஆங்கு,
விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள், இவள் அன்றிப்
புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்;
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறை கூறி,
வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்குப்
புதுவை போலும் நின் வரவும், இவள்
வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல் யானே.

53 வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா
மறம் மிகு வேழம், தன் மாறு கொள் மைந்தினான்,
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல
உயர் முகை நறும் காந்தள் நாள் தோறும் புதிது ஈன,
அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!

மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்த பின்
இறை வளை நெகிழ்பு ஓட, ஏற்பவும் ஒல்லும்மன் -
அயல் அலர் தூற்றலின், ஆய் நலன் இழந்த, கண்!
கயல் உமிழ் நீர் போலக், கண் பனி கலுழாக்கால்?

இனிய செய்து அகன்று, நீ இன்னாதாத் துறத்தலின்,
'பனி இவள் படர்' எனப் பரவாமை ஒல்லும்மன் -
ஊர் அலர் தூற்றலின், ஒளி ஓடி நறு நுதல்
பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்?

'அஞ்சல்' என்று அகன்று, நீ அருளாது துறத்தலின்,
நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன் -
நனவினால் நலம் வாட, நலிதந்த நடுங்கு அஞர்,
கனவினால் அழிவுற்றுக், கங்குலும் ஆற்றாக்கால்?

என ஆங்கு,
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை
முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை
தளி பெறத் தகைபெற்றாங்கு, நின்
அளி பெற நந்தும், இவள் ஆய் நுதல் கவினே!

54 'கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெறப்
பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதைத்,
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்!
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு?' என்ன,
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றிப்,
பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை,
நலம்பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்;
நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரல் போது கொண்டு
செறாஅச் செங் கண் புதைய வைத்துப்
பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;
தொய்யில் இள முலை இனிய தைவந்து,
தொய்யல் அம் தடம் கையின், வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின், மருட்டலும் மருட்டினன்;
அதனால்,
அல்லல் களைந்தனன் தோழி! நம் நகர்
அரும் கடி நீவாமை கூறின்,'நன்று' என,
நின்னொடு சூழ்வல், தோழி, 'நயம் புரிந்து,
இன்னது செய்தாள் இவள்' என
மன்னா உலகத்து மன்னுவது புரைமே!

55 மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்,
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டுப்
போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை,
இன் நகை, இலங்கு எயிற்றுத், தேமொழித், துவர்ச் செவ்வாய்
நல் நுதால் நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி;

'நில்' என, நிறுத்தான்; நிறுத்தே வந்து.
நுதலும், முகனும், தோளும், கண்ணும்,
இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ,
'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று;
மை தீர்ந்தன்று, மதியும் அன்று;
வேய் அமன்றன்று, மலையும் அன்று;
பூ அமன்றன்று, சுனையும் அன்று;
மெல்ல இயலும், மயிலும் அன்று;
சொல்லத் தளரும், கிளியும் அன்று'

என ஆங்கு,
அனையன பல பாராட்டிப், பையென,
வலைவர் போலச் சோர் பதன் ஒற்றிப்,
புலையர் போலப் புன்கண் நோக்கித்,
தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்;
காழ் வரை நில்லாக் கடும் களிறு அன்னோன்
தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை
ஏழைத் தன்மையோ இல்லை, தோழி!

56 ஊர்க் கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால்,
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு,
கழும முடித்துக், கண் கூடு கூழை
சுவல் மிசைத் தாதொடு தாழ, அகல் மதி
தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து
ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவை கொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள் கொல்? வெறுப்பினால்
வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல்? - ஆண்டார்,
கடிது, இவளைக் காவார் விடுதல்; கொடி இயல்,
பல் கலைச் சில் பூங் கலிங்கத்தள் - ஈங்கு இது ஓர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்!

இவளை சொல்லாடிக் காண்பேன், தகைத்து;
நல்லாய்! கேள்;

ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை எனத்,
தூது உண் அம் புறவு எனத், துதைந்த நின் எழில் நலம் -
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! - நின் கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ?

நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என,
முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள் -
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய்! - நின் கண்டார்க்கு,
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ? அறியாயோ?

முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை எனப்,
பெயல் துளி முகிழ் எனப், பெருத்த நின் இள முலை -
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! - நின் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?

என ஆங்கு,
பேதுற்றாய்ப் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்,
யாது ஒன்றும் வாய் வாளாது இறந்தீவாய்! கேள், இனி;
நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடை
போதர விட்ட நுமரும், தவறு இலர்;
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்குப்
'பறை அறைந்து அல்லது செல்லற்க' என்னா

57 வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,
மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி -
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்பக்
கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின் கண் கண் கவர்பு ஒருங்கு ஓட,
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு - இகத்தந்தாய்! கேள் இனி;

பூம் தண் தார்ப் புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல்
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண் கண்
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்,
சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? - சின் மொழி!

பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்,
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன் தலைப்
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? - கனம் குழாய்!

வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல்,
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்!
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் - தக்கதோ? காழ் கொண்ட இள முலை!

என ஆங்கு,
இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி,
நினையுபு, நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே,
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்,
மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே!

58 வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள்,
பேர் எழில் மலர் உண் கண், பிணை எழில் மான் நோக்கின்,
கார் எதிர் தளிர் மேனிக், கவின் பெறு சுடர் நுதல்,
கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்,
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடிக் கை வீசினை,
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்;

உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக,
இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம்
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;

நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;

அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்கு ஆகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும்,
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;

என ஆங்கு,
ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான், மற்று இந் நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிது ஆயின், பொலம் குழாய்!
மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி,
நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே!

59 தளை நெகிழ், பிணி நிவந்த பாசு அடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி,
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர் அரி முன்கைச்
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட, அரிப் பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால
என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி;

'மருளி, யான் மருள் உற இவன் உற்றது எவன்?' என்னும்
'அருள் இலை இவட்கு' என அயலார் நின் பழிக்கும்கா,
வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?

உருள் இழாய்! 'ஒளி வாட, இவன் உள் நோய் யாது' என்னும்
'அருள் இலை இவட்கு' என அயலார் நின் பழிக்கும்கால்,
பொய்தல மகளையாய்ப், பிறர் மனைப் பாடி, நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?

ஆய் தொடி! 'ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது?' என்னும்
'நோய் இலை இவட்கு' என நொதுமலர் பழிக்கும்கால்,
சிறு முத்தனைப் பேணிச் சிறு சோறு மடுத்து, நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?

என ஆங்கு,
அனையவை - உளையவும், யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாய் ஆயின், சே இழாய்!
செய்ததன் பயம் பற்று விடாது;
நயம் பற்று விடின் - இல்லை - நசைஇயோர் திறத்தே.

60 சுணங்கு அணி வன முலைச், சுடர் கொண்ட நறு நுதல்,
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல்,
நுணங்கு எழில் ஒள் தித்தி, நுழை நொசி மட மருங்குல்,
வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!

'கண் ஆர்ந்த நலத்தாரைக், கதுமெனக், கண்டவர்க்கு,
உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று, புனை இழாய்!' எனக் கூறி தொழூஉம்; தொழுதே
கண்ணும் நீர் ஆக நடுங்கினன்; இன் நகாய்!
என் செய்தான் கொல்லோ! இ·து ஒத்தன் தன் கண்
பொரு களிறு அன்ன தகை சாம்பி, உள் உள்
உருகுவான் போலும், உடைந்து?

தெருவின் கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில,
நீ நின் மேல் கொள்வது, எவன்?

அலர் முலை, ஆய் இழை நல்லாய்! கதுமெனப்
பேர் அமர் உண் கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்;
மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண் தொடீ!

'நின் முகம் காணும் மருந்தினேன்' என்னுமால்;
நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்து இழாய்!
என் செய்வாம் கொல், இனி நாம்?

பொன் செய்வாம்;
ஆறு விலங்கித் தெருவின் கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம்,
'தேறல் எளிது' என்பாம் நாம்;
'ஒருவன் சாம் ஆறு எளிது' என்பாம் மற்று;
சிறிது, ஆங்கே - மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என,
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி,
பூண் ஆகம் நோக்கி, இமையான், நயந்து நம்
கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று,
நாண் அடப், பெயர்த்தல் நயவரவு இன்றே.

61 எல்லா! இ·து ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்;
செல்வம் கடைகொளச், சாஅய்ச், சான்றவர்
அல்லல் களை தக்க கேளிர் உழைச் சென்று
சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போலப்
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின்
மெல்ல இறைஞ்சும் தலை;

எல்லா! நீ, முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை;
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்!
என் நீ பெறாதது? ஈது என்?

சொல்லின், மறாது ஈவாள் மன்னோ, இவள்?
செறாஅது, ஈதல் இரந்தார்க்கு, ஒன்று ஆற்றாது வாழ்தலின்,
சாதலும் கூடுமாம் மற்று;

இவள் தந்தை, காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப் பொருள்;
யாது நீ வேண்டியது;

பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல், யான்;

'அன்னையோ!' மண்டு அமர் அட்ட களிறு அன்னான், தன்னை ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன் கொலோ?

ஒண் தொடீ! நாண் இலன் மன்ற; இவன்;
ஆயின், ஏஎ!

'பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,
மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறு நுதல்
நல்காள் கண்மாறிவிடின்' எனச் செல்வான் - நாம்
எள்ளி நகினும் வரூஉம்; இடை இடைக்
கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது
கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்
உள்ளம் குறைபடா ஆறு.

62 ஏஎ! இ·து ஒத்தன், நாண் இலன் - தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்;
மேவினும், மேவாக்கடையும் அ·து எல்லாம்
நீ அறிதி; யான் அ·து அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்
புல் இனிது ஆகலின், புல்லினென்; - எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?

சுடர் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றக் கேள்
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?

செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன் கொலோ -
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று;

அறனும் அது கண்டற்று ஆயின், திறன் இன்றிக்
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?

63 நோக்கும்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்
தூக்கு இலி; தூற்றும் பழி என கை கவித்துப்
போக்கும்கால், போக்கு நினைந்திருக்கும்; மற்று நாம்
காக்கும் இடம் அன்று, இனி;
எல்லா! எவன் செய்வாம்?

பூங் குழாய்! செல்லல் அவன் உழைக் கூஉய்க் கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள் மேல்
கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; 'ஈங்கு ஆக
இருந்தாயோ?' என்று ஆங்கு இற;

அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும்
மருந்து நீ ஆகுதலான்;

இன்னும், கடம் பூண்டு ஒரு கால் நீ வந்தை, 'உடம்பட்டாள்'
என்னாமை என் மெய் தொடு;

இ·தோ அடங்கக் கேள்;

நின்னொடு சூழும்கால், நீயும் நிலம் கிளையா,
என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன்
தன்னொடு நின்று விடு.

64 அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும்
மணி முகம்; மா மழை, நின் பின் ஒப்ப, பின்னின் கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவுக் கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,
அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும்
விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை! எமக்குப்
பெரும் பொன் படுகுவை பண்டு;

ஏஎ! எல்லா, மொழிவது கண்டை, இ·து ஒத்தன்; தொய்யில்
எழுதி இறுத்த பெரு பொன் படுகம்?
உழுவது உடையமோ, யாம்?;

உழுதாய்;
சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இ·தோ,
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த
குவளையும், நின் உழவு அன்றோ? இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல,
என் உழுவாய் நீ, மற்று இனி?

எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு;
முற்று எழில் நீல மலர் என உற்ற,
இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம்,
பெரும் பொன் உண்டு என்பாய்! இனி;

நல்லாய்! இகுளை! கேள்;
ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின்,
வேந்து கொண்டன்ன பல;

ஆங்கு ஆக! அத்திறம் அல்லாக்கால், வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ
முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம்
உத்தி எறிந்துவிடற்கு.

65 திருந்து இழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது; ஒரு நிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்,
அம் துகில் போர்வை அணிபெற தைஇ, நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆகத் -
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானைத்,
தோழி! நீ போற்றுதி என்றி - அவன் ஆங்கே,
பாராக், குறழாப், பணியாப், 'பொழுது அன்றி
யார் இவண் நின்றீர்?' எனக் கூறிப், பையென
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
'தையால்! தம்பலம் தின்றியோ?' என்று, தன்
பக்கு அழித்துக், 'கொண்டீ' எனத் தரலும் - யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்பக் - கடிது அகன்று கைமாறிக்
'கைப்படுக்கப்பட்டாய் சிறுமி! நீ மற்று, யான்
ஏனை பிசாசு, அருள் என்னை நலிதரின்,
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்'
எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப -
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,
ஒடுங்கா வயத்தின், கொடும் கேழ்க், கடுங்கண்
இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டற்றால்; காதலன்
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அது ஆகக் கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கைப் பெரும் கரும் கூத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=குறிஞ்சிக்கலி&oldid=500875" இலிருந்து மீள்விக்கப்பட்டது