பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 குன்றக்குடி அடிகளார்


வட்டத்தைச் சார்ந்தே இயங்கியுள்ளன; வளர்ந்து வந்துள்ளன. தமிழ்நாட்டு வரலாறு திருக்கோயில்களின் வரலாறு. திருக்கோயில்களின் வரலாறு தமிழ் நாட்டின் வரலாறு.

வாழ்வியலும் சமயமும்

வாழ்க்கை அருமையானது, அருமையிலும் அருமையானது. “வாழ்க்கை பொய்யானது; துன்பமானது” என்ற கருத்து தமிழியலுக்கு மாறானது. “வாழ்க்கை வாழ்வதற்கே!” “வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்” என்பது தமிழ் நெறி. தமிழர் கோட்பாடு. வாழ்வாங்கு வாழ்வதற்குச் சிந்தனை தேவை; தெளிவு தேவை; அறிவு தேவை. “சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்பது திருமுறை. மானிடத்தை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டுவது சிந்திக்கும் திறனேயாம். “நான் ஆர்? என் உள்ளம் ஆர்?” என்று சிந்திக்கின்ற பொழுது உயிர் தன் மதிப்பீடு செய்து கொள்கிறது; தன்னை அறிந்து கொள்கிறது. தன்னுடைய குற்றங் குறைகளைத் தெரிந்து உணரும் உயிர், மேம்பாட்டை நோக்கி அவாவுவது இயற்கையின் நிகழ்வு. இது அறிவியல் சார்ந்த உண்மை. குறைகளை உணர்தலே நிறைகளைப் பெறுவதற்குரிய வாயில்! தன் அறியாமையை உணர்தலே அறிவைப் பெறுவதற்குரிய வாயில்! மனிதன் விலங்கல்ல; மனிதனுமல்ல! மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி, மனிதத் தன்மையை முயன்று பெற்று, அதனினும் உயர்ந்த இறை நலம் அல்லது கடவுள் மங்கலம் அடைதலே. வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி. இந்த முயற்சி எளிதில் கைகூடுவதே! ஆயினும் அருமைப்பாடு உடையது என்பதையும் மறந்து விடுதற்கில்லை !

மானிடன் தன் புலன்களின் அழுக்கை அகற்றி பொறிகளில் தூய்மை காத்து, தன்னை பக்குவப்படுத்திக்