பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
  நூல் முகம்  
   

நிமிடத் துளிகள் தோறும் உலகில் எண்ணற்ற நிகழ்வுகள் நிகழ்கின்றன. இவற்றில் சிக்கிய மனிதர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு, இவை நல்லன, தீயன என்று குறிப்பிடப் பெறுகின்றன.

சிலர் இவற்றைக் ‘காலத்தின் கோலம்’ என்ற திறனாய்வுப் பெயரைச் சூட்டுகிறார்கள்.

சிந்தனையாளர்கள், கவிஞர்கள் - இதனைக் ‘காலச் சக்கரம்’ என்பர்! இந்தக் கால வெள்ளத்தில் நான் தோன்றிய பத்திரிகைத் துறையில் ஏறக்குறைய 55 ஆண்டு காலமாகச் சுழன்று வருகின்றேன். அந்தச் சுழற்சியில் ஒரு சுற்றுதான் “இதழியல் கலை, அன்றும் - இன்றும்” என்ற இந்த நூல்.

இந்த நூலில் எனது முழு அனுபவங்களையும் எழுதவில்லை. எழுதினால் அது வாழ்க்கை வரலாறு என்ற பெயரைப் பெற்றுவிடும்.

ஆங்காங்கே வருகின்ற சம்பவங்களுக்கேற்ப சில குறிப்புக்களை மட்டுமே வழங்கியுள்ளேன். அனுபவம் தேவை என்போர் பயன்படுத்திக் கொள்ளலாம் - இல்லையா?

இளம் தலைமுறைப் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி நூலாக - இந்த நூல் பயன்பட வேண்டும் என்பது எனது ஆசை!

ஒரு பத்திரிகையாளருக்கு என்னென்ன அநுபவங்கள் தேவையோ, அவற்றை ஓரளவுக்கு நான் வழங்கியுள்ளேன். பக்கங்களைப் புரட்டி, தலைப்புகளை மட்டுமே மேலோட்டமாகப் பார்ப்போருக்கு நான் கூறுவதன் உண்மை புரியும்.

6