அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நூல் சுருக்கம்

விக்கிமூலம் இலிருந்து
நூல் சுருக்கம்
சிவமே சிவமே சிவமே சிவமணியே
தவமே தவமே தவமே தவப்பொருளே
சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்
பாரான தெச்சணமே பரமன் உறுதலத்தில்
போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
நன்னியாய் நானூறு நாலுபத்து எட்டதினோய்
தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்
செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து
வயது முகிந்தகலி மாளவந்த ஆறுகளும்
முன்னாள் குறோணி முற்சூரன் உடல் துணித்து
பின்னாள் இரணியனைப் பிளந்து இருகூறாக்கி
ஈரன்ஞ்சு சென்னி இராட்சதரையும் செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் இடைதவிர்த்து ஏது வராது
தேசாதி தேசர் சென்னி கவிழ்ந்தே பணியும்
தீசாதியான துரியோதனன் முதலாய்
அவ்வுகத்தில் உள்ள அல்லோரையும் வதைத்து
எவ்வுகமும் காணாது ஏககுண்டம் ஏகிப்
பொல்லாத நீசன் புருள் அறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக் கலியுகத்தில்
வம்பால் அநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்காக இரக்கமதாய்
அறுகரத்தோன் வாழும் ஆழிக்கரை ஆண்டி
நறுகரத்தோன் ஆன நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாளும் உலகம் ஏழும் தழைக்கத்
திருவெடுத்த கோலம் சிவனார் அருள்புரிய
ஈசன் அருள்புரிய இறையோன் அருள்புரிய
மாயன் அருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புவிமாது போர்மாது
நாமாது இலட்சுமியும் நன்றாய் அருள்புரிய
சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக்கு இனிது இருத்துமாத்தாளே அம்பிகையே
ஈரேழு உலகும் இரட்சித்த உத்தமியே
பாரேழும் அளந்த பரமேசுவரி தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகர் ஒவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயாய் உதிக்கச் செடம் எடுத்தது போலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து ஆறு மேல் பெரிய தவம்புரிந்து
சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல்
இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தாரணியில் உள்ளோர்க்குக்
கர்மமது தீரக் கணக்கு எடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச் சேவிப்பதுவும்
தொண்டராகச் சான்றோர் சூழ்ந்து நின்றவாறதுவும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
கண்டு மாபாவி கலைத்து அடித்ததுவும்
சாணார் இனத்தில் சுவாமி வந்தார் என்றவரை
வீணாட்டமாக வீறு செய்த ஞாயமதும்
மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்
தனு அறியாப் பாவி தடி இரும்பில் இட்டதுவும்
அன்பு பார்த்து எடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை அழித்து யுகம் வைகுண்டம்தான் ஆகி
எல்லா இடும்பும் இறையும் மிகத்தவிர்த்து
சொல் ஒன்றால் நாதன் தொல்புவியை ஆண்டதுவும்
நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும்
மேல் எதிரி இல்லாமல் வினை அறுத்து ஆண்டதுவும்
இந்நாள் விவரம் எல்லாம் எடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமைதனைக்
காரணமாய் எழுதி கதையாய் படித்தோர்க்கு
ஒய்யாரமாக ஊள்வினைநோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே
பேயை எரித்துப் புதுமை மிகச்செய்ததுவும்
ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்
நீண்டபுகழ் தர்மம் நிறுத்தி அரசாண்டதுவும்
பத்தும் பெரிய பாலருக்காக வேண்டிச்
சத்தழியும் பாவி தடிஇரும்பிலும் இருந்து
படுத்தின பாடெல்லாம் பாலருக்காகப் பொறுத்து
உடுத்த துணி களைந்து ஒரு துகிலைத்தான் வருத்தி
தேவ ஸ்திரீகளையும் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்ப்
பாவக் கலியுகத்தில் பாராத்தியங்கள் பட்டு
நாலு பிறவி நானிலத்திலே பிறந்து
பாலு குடித்தாண்டி பறுபதத்தின் மேல்தாண்டி
மனுக்கண் காணாமல் மறைந்து ஒரு மூன்று நாளாய்த்
தானும் தவம் அதுவாய்ச் சாயுச்சமே புரிந்து
நல்லோரை எழுப்பி நாலு வரமும் கொடுத்து
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வானம் இடியால் மலைகள் இளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவும் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்
ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே