அண்ணா சில நினைவுகள்/தந்தை மகற்காற்றும் நன்றி

விக்கிமூலம் இலிருந்து
தந்தை மகற்காற்றும் நன்றி!

“அண்ணாவுக்குப் பெரியாரிடத்தில் அன்பு அதிகமா? பெரியாருக்கு அண்ணாவிடத்தில் அன்பு அதிகமா?” என்று ஒரு பட்டிமண்டபம் நடத்தி, என்னை நடுவராக வைத்தால், தீர்ப்புச் சொல்வதற்கு நான் திண்டாடித் திணறித் திக்குமுக்காடிப் போவேன். இரு தலைவர்களின் அன்பும் சம எடையாயிருக்குமோ? தந்தை மகற்காற்றிய நன்றி பெரிதா? மகன் தந்தைக்காற்றிய உதவி பெரிதா?

ஈரோட்டில் அண்ணா வாழ்ந்து வந்த காலம்.எங்களில் யாருக்குமே தெரியாது. சங்கரய்யா சில கதைகள் சொல்வார். E. W. R. செல்வம் சில விவரங்கள் கூறுவார். 1942-ல் அய்யா கொஞ்சம் (Types) எழுத்துகள் Cases முதலியன கொடுத்து, அதைக் கொண்டு, அண்ணா காஞ்சிபுரத்தில் “திராவிட நாடு” இதழும் அச்சகமும் தொடங்கினார் என்று கேள்வி. ஆனால் நான் நேரடி யாகப் பார்த்தது, 1967.க்கும் 1969-க்கும் இடையில் பற்பல சந்தர்ப்பங்களில் அய்யாவும் அண்ணாவும் சந்தித்த பல சூழ்நிலைகள்! அப்போதெல்லாம் வீரமணி, நாகரசம்பட்டி சம்பந்தம் இவர்களும் இருந்திருக்கிறார்கள். மணி யம்மையார் இருந்தார்கள் என்பதைச் சொல்லத் தேவை யில்லை!

“வெற்றிபெற்றதும் அண்ணாதுரை என் முன் வந்து தைரியமாக உட்கார்ந்து விட்டார். எனக்குத் தான் ஒரே வெட்கம். இந்த ஆட்சி நிலைக்க எந்தவித மனஒதுக்கலும் (without any reservation) இல்லாமல் மனதாரப் பாராட்டுவேன்” என்றார் அய்யா. சென்னை இம்பீரியல் ஒட்டலில் பிரியாணி விருந்தளித்துச் சிறப்பித்தார் அய்யா. இது வரையில் இந்தவூர் எனக்குச் சொந்தமாயிருந்தது. இனி இதை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறேன் என்று சொல்லி, நாகரசம்பட்டியில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். தமிழக அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தில், அண்ணாவின் உருவப்படத்தினைப் பெரியார் திறந்து வைத்தார். “ஒட்டுக் கேட்கும் நேரத்தில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசாவிட்டாலும், தயதய என்று ஒட்டுகள் பெற்றுப் பதவியில் அமர்ந்தபின், அண்ணா பழைய “தீ பரவட்டும்” நூலின் ஆசிரியராகவே-மீண்டும் காத்திகராகவே-தன்னைக் காட்டிக்கொள்கிறார்” என்று புகழ்ந்தார்; “தமிழர்களின் நல்வாய்ப்பாக அண்ணாவின் ஆட்சி வந்துள்ளது. இதைக் காப்பாற்றவேண்டும். இதை அழிக்க நினைத்தால் கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்” என்றார் பெரியார்,

அண்ணாவுக்கு உடல்நலங்குன்றி, முதன்முறையாகச் சென்னை பொது மருத்துவமனையில், அவருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் தோன்றியிருப்பதைக் கண்டு பிடித்தார்கள். இது 6.9.1968. உடனே அமெரிக்கா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டது. அப்போது அண்ணாவின் வயது 59 முடியும் சமயம் . 15.9.68 அன்று 60 தொடக்கமல்லவா? அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். எனக்கும் அதே 59 வயதில், தொண்டையில், அதே நோய் வந்தது. அறுவை சிகிச்சையின்றி, வேறு முறைகளைக் கையாண்டனர். எனக்குக் கோபால்ட் தெரபி எனப்படும் ஒளிச் சிகிச்சை முறையிலும், கீமோதெரபி எனப்படும் ஊசி மருந்துகள் செலுத்தும் வகையிலும் இப்போது நோயைக் குணப்படுத்த முயல்கின்றனர். இது மருத்துவத் துறையின் 16 ஆண்டுகால முன்னேற்றமோ?

அடுத்த நாள் திருச்சியிலிருந்து விரைந்த பெரியார், இரவு சுமார் 11.30 மணியளவில் வந்து அண்ணாவைப் பார்த்தார். அங்குள்ள மருத்துவ நிபுணர்களை நோக்கி “அய்யா! தமிழ்நாட்டின் நிதி போன்றவரை உங்களை எல்லாம் நம்பி ஒப்படைக்கிறோம்” என்றார் பெரியார், கண்கலங்க!

10.ந் தேதியே அண்ணா அமெரிக்கா புறப்பட வேண்டும் என மருத்துவர்களால் நாள் நிர்ணயிக்கப் பட்டது. இதைக் கேள்விப் பட்டதும் சுற்றுப் பயணத்திலிருந்த பெரியார் உடனே சென்னை திரும்பி, Wheel chair-ல் அமர்ந்து G, H. வந்து சேர்ந்தார். அவரோடு தவத்திரு குன்றக்குடி அடிகளார், மணியம்மையார், வீரமணி, சம்பந்தம், புலவர் இமயவரம்பன் இருந்தனர். குன்றக்குடி அடிகளார் கொண்டு வந்திருந்த பொன்னாடையை வாங்கி, அண்ணாவுக்குப் போர்த்தினார் அய்யா.

பெரியார் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே, அண்ணாவின் வலது காதருகே குனிந்து, தம் வாயைக் காதில் வைத்து, ஏதோ சொன்னார். பிறகு தம் மடியை அவிழ்த்து எதையோ எடுக்க முனைந்தார். அண்ணா, கையைக் கலைஞர் இருந்த திசையில் காட்டி, முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டு, “கருணாநிதி கிட்டெ சொல்லுங்க அய்யா” என்றார் மெல்லிய குரலில். மறுபுறம் நாற்காலியைத் திருப்பி, அய்யா கலைஞரின் கழுத்தில் தன் கையை வைத்து, அவர் தலையை வளைத்து, அருகே இழுத்து, இதிலெ இருவத்தஞ்சாயிரம் (ரூ. 25,000) பணம் இருக்குது. அண்ணாவுக்கு வைத்திய செலவுக்கு வச்சிக்குங்க!” என்றார். “இப்பப் பணம் இருக்குங்க அய்யா! அப்புறம் பாத்துக்கலாம்! நன்றி!” எனக் கூறினார் கலைஞர்.

சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஈயாதவர், கொடாதவர், கஞ்சத்தனமுள்ளவர், செட்டானவர், கருமி, உலோபி என்றெல்லாம் விவரமறியாத மக்களால் எண்ணப்பட்ட தந்தை பெரியார்-என்னதான் சிக்கனக் கொள்கையை ஒம்பிக் காப்பவரெனினும்-தேவைப்பட்ட நேரத்தில் கருணை வள்ளலாகவும் திகழ்வார் என்பதற்கும் அண்ணாவின் உயிரைக் காப்பாற்ற அவர் எதற்கும் தயார் என்பதை மெய்ப்பிக்கவும்-இந்நிகழ்ச்சிக்கு இணையாக எதையேனும் எடுத்துரைக்க ஒல்லுமா? அந்தத் தடவை அண்ணாவுக்கு மருத்துவத்திற்காக ஆன மொத்தச் செலவே சுமார் 90,000 ரூபாய். இதில் பெரியார் தர முன்வந்த ரூ. 25,000 பெரும் பங்கல்லவா?

நான் நண்பர் சம்பந்தம் அருகில் சென்று விசாரித்தேன் அய்யா, திடலில் இருந்து இங்கு வருவதற்காகப் புறப்பட்ட போதே, 25,000 ரூபாயை எடுத்து மடியில் கட்டிக் கொண்டு, “அம்மா, நான் மறந்துடப் போறேன். ஆசுபத்திரிக்குப் போனதும், நீ மெதுவா மடியிலே கை வைத்து, ஒரு சாடை காட்டு. நான் புரிஞ்சிக்குவேன்” என்றாராம் அய்யா. “இல்லெயில்லெ, நீங்க மறக்க மாட்டீங்க, சும்மா வாங்க என்றார்களாம் மணியம்மை யார். அவ்வாறேதான், எந்தச் சாடையும் காண்பிக்காமல், அய்யா அண்ணாவிடம் பணம் தருவதாகச் சொன்னார்கள் மறக்காமல்.

மருத்துவமனையிலேயே காலையில் பார்த்து விட்டதால், அன்று மதியம் 2 மணிக்கு விமான நிலையத்துக்கு அய்யா போகமாட்டார் என்று கருதி, வீரமணியும் சம்பந்தமும் சாப்பிட உட்கார்ந்தார்களாம். உடனே :அய்யா கூப்பிடுகிறார். வேனில் ஏறிவிட்டார்” என்று சேதி வரவே, அப்படியே கையலம்பிக் கொண்டு இருவரும் புறப்பட்டனராம். விமான நிலையத்தில் அய்யா சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அண்ணாவின் கார் விமானத்துக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. காசி விருந்தவாறே அண்ணா, தன் மக்கள் திரளை நோக்கிக் கையசைக்கிறார். பெரியாரைப் பார்த்ததும், சட்டென்று காரை நிறுத்தச் சொல்லவும் தோன்றாமல், ஒடும்போதே இறங்கிவிடும் எண்ணத்தில் கதவைக் கூடச் சிறிது திறந்து விட்டார். பெரியார், இறங்க வேண்டாமெனச் சைகை செய்து, “போய் வாருங்கள்” என்று கைகுவித்து வணக்கம் சொல்லிப் பிறகு, கையசைத்து வாழ்த்தி விடை தந்தார்.

'அண்ணாவின் அறுபதாம் ஆண்டு பிறந்த திருநாள்' என்ற தலைப்பில், “அறிஞர் அண்ணா என்று பாராட்டுவது அவரதுஅறிவின் திறம்தான் காரணம். தனதுஅமைச்சரவை யில் பார்ப்பனர் ஒருவரையும் சேர்க்கவில்லை என்பதோடு, தி. மு. க. வுக்கு மாறான கொள்கையுடைய தமிழரையும் போடவில்லை” என்று பெரியார் பாராட்டி எழுதினார் “விடுதலை” யில்.

அறுவை சிகிச்சைக்குப் பின் சிலவாரம் ஒய்வெடுத்த அண்ணா 6.11.68 சென்னை திருப்பினார். மறுநாள் தமது அருமை அன்னையாரைக் காணக் காஞ்சி சென்றார். நலம் பெற்றுவிட்டார் என்று நம்பிய தமிழகம் சென்னையில் திரண்டு அண்ணாவை வரவேற்று மகிழ்ந்தது. அப்போது சென்னை மாநகரில் இல்லாத பெரியார், 11-ஆம் நாள் வந்து, நேரே நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு விரைந்தார். உடன் மணியம்மையார், வீரமணி, என். எஸ். சம்பந்தம் வந்திருந்தனர். அண்ணா மிகவும் சங்கடத்துடன், “நான் வந்து அய்யாவைப் பார்க்க வேணும்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க முந்திக் கொண்டிங்களே” என்று கூறிக் கொண்டே எல்லாருடைய முகத்தையும் நோக்கினார். அண்ணாவின் உடல் இளைத் திருந்த போதிலும், அகன்ற நெற்றிப் பரப்பின் அடிபீடத் தில் சுடர்விடும் பெரிய விழிகளின் ஒளி எப்போதும் போல் பிரகாசித்தது. ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அண்ணா பெரியாரின் கையில் அளித்தார். அய்யா அதைப் பெற்றுக் கொண்டு, மணியம்மையின் கையில் கொடுத்தார். பிறகு அண்ணாவின் பக்கமாகச் சிறிது குனிந்து, அவருடைய இரு கன்னங்களிலும் தமது இரு கரங்களின் விரல்களாலும் தடவிக் கொடுத்து-“ஒண்ணுமில்லிங்க! நீங்க நல்லா இருக்கீங்க! நல்லா இருக்கீங்க!” என்றார் தழுதழுத்த குரலில், ஆனால் கம்பீரங் குன்றாமல்!

காணற்கரிய இந்தக் கண்கொள்ளாக் காட்சியினைஇதன் மாட்சியினை-எவ்வாறு உரைப்பது! எங்கள் அனைவர்க்கும் கண்கள் கலங்கி, நீர் முத்துகள் உருண்டன கன்னங்களில்! வீரமணியும், நானும், எங்கள் மேல் துண்டுகளால் கண்களைத் துடைத்துக் கொண்டோம். மணியம்மையார், புடைவைத் தலைப்பால் முகத்தினைத் துடைத்தார்கள். நாகரசம்பட்டி சம்பந்தம் அழுத்தமான திடசித்தம் உடையவராயினும், அவருக்கே நெகிழ்ச்சி மிகுந்துவிட்டதென்பதை, மகிழ்ச்சியற்ற முகம் தெரிவித்தது.

பிறகு, அண்ணா அடையாறு மருத்துவமனையிலிருந்த போது, அருகிலுள்ள வீரமணியின் இல்லத்தில் தங்கிக் கொண்டு, பெரியார் அடிக்கடி வந்து பார்த்துக் கவலை தேங்கிய முகத்துடன் திரும் பிச் செல்வார் தினந்தோறும்!

2.2.1969 நள்ளிரவில் தேவைப்பட்டால் உடனே புறப்பட்டுச் செல்ல வசதியாக வீரமணி வீட்டு மாடியில் படுக்காமல் கார் ஷெட்டிலேயே படுத்து உற்ங்கிக்கொண்டிருந்த பெரியாரை எழுப்பிய என். எஸ். சம்பந்தம், அண்ணாவின் சேதியைச் சொல்ல, அருகிலிருந்த சுவரில் கையை ஓங்கி அறைந்து, “எல்லாம் போச்சு, எல்லாம் போச்சு” என்று புலம்பிய பெரியார், உடனே மணியம்மை யாரையும், வீரமணியையும், சம்பந்தத்தையும் அழைததுக் கொண்டு அடையாறு மருத்துவமனைக்கு வேனில் வந்து சேர்ந்தார். அண்ணாவின் சடலம், துங்கம்பாக்கம் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட,வெளியில் ஸ்ட்ரெச்சரில் வந்தபோது, வெறித்து நோக்கிய தந்தை பெரியாரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கலைஞர். “அய்யா, நாங்க அநாதைகளாயிட்டோமே அய்யா!” என்று கதறிக் கதறி அழுததும்-

(இனி எழுத என்னாலாகாது)