அந்த நாய்க்குட்டி எங்கே/அந்த நாய்க்குட்டி எங்கே

விக்கிமூலம் இலிருந்து
அந்த நாய்க்குட்டி

எங்கே?


1

ஹாலிவுட் நட்சத்திரம் ஜிப்பி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருகை தந்திருந்ததல்லவா? அதைப் பற்றி அன்றைய தினசரியில் செய்தி வெளியாகியிருந்தது.அந்த மனிதக் குரங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் பூபாலன். அவனுக்கு வாயெல்லாம் பல்லாகிவிட்டது.

சிரிப்பு அடங்கியது. அப்பொழுது அவனுடைய சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது, ஓடினான்.

மாம்பலம், ஜானகிராமப் பிள்ளைத் தெரு வீட்டு எண் இரண்டு.

“அம்மா, பசிக்குதே, அம்மா ஏம்மா இப்படிப் பசிக்குது?” என்று கேட்டான் பூபாலன்.

“உனக்கு பசிக்குதுன்னா அரை நாழிப் பொழுதிலே சோறு சமைச்சுப் போடுறேன். ஏன் பசிக்குதுங்கறதுக்கு உன் வயிற்றைக் கேட்டுத்தான் பதில் தெரிஞ்சுக் கோணும். நாம்ப ஏழைங்க பாரு நமக்கும் பசிக்கும் மட்டும்தான் ரொம்பச் சொந்தம்” என்றாள் பூபாலனின் தாய் அஞ்சலை.

“இன்னிக்கு நான் ஸ்கூலுக்குப் போகலேம்மா”

“ஏண்டா ?”

“ஏண்டாவா? அம்மாவுக்குக் கோபத்தைப் பாரு கோபத்தை..! அந்தக் காலத்திலே எல்லாப் பெரிய மனிதர்களும் சின்ன வயசிலே அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி அடிச்சவங்கதானாம். அதுபோல நான் இப்போ ஸ்கூலுக்கு மட்டம் போட்டா, அப்பாலே பெரிய மனிதனாகிப் போயிடுவேனாக்கும்” என்றான் சிறுவன், சிரித்தபடி.

“போடா, மண்டு!” என்று கடிந்தாள் தாய்.

பூபாலனின் வயிற்றுக்குள் சோற்று உருண்டைகள் இருபது போனதும்தான் தெம்பு வந்தது.

அப்பொழுது அவன் தந்தை முருகேசன் வந்தான்,

“அப்பா, என்னை அம்மா மண்டுங்கறாங்களே? நான் முட்டாளாயிருந்தா வருஷத்துக்கு வருஷம் இப்படி பாஸாவேனா?... என் சுயகெளரவத்தை யார் குறைச்சலா மதிச்சாலும் எனக்கு நெஞ்சு பொறுக்காது” என்றான்.

“பலே, மகனே! முதலிலே நீ ஒழுங்காகப் பள்ளிக் கூடத்துக்கு போ. அப்புறம் பெரிய மனிதனாக ஆகலாம். எனக்கு உடம்புக்கு முடியலே. அதாலே எங்க கண்ணாடித் தொழிற்சாலையிலே லீவு சொல்லி வந்திட்டேன்.” என்று சொன்னான் முருகேசன்.

புத்தகப் பையுடன் பூபாலன் ஸ்கூலுக்குப் புறப்பட்டான். சுவரில் பதித்திருந்த உடைந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு, கையால் தலையைக் கோதி விட்டுக் கொண்டான். புறப்பட்டு விட்டான்.

பூபாலன் ராஜாவுக்கு பராக் !...பராக்!

கோடம்பாக்கம் பெரியசாலையில் திரும்பினான் பூபாலன். அங்கே வ.உ.சி-யின் சிலை காணப்பட்டது. கப்பல் ஒட்டிய தமிழனுக்குச் சிரம் வணங்கிக் கரங்கூப்பி வணக்கம் தெரிவித்தான். அவன் தலையை நிமிர்த்தியபோது “கா.கூ. க்கூ” என்று பயங்கரமான தீனக் குரல் கேட்டது. நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். பூங்காவின் வடக்குக் கோடியில் காரின் அடியில் நசுக்கப்பட்டு உயிர் விட்ட ஒரு நாயைக் கண்டான். உடல் நடுங்கியது. அவனுக்கு அழுகை பீறிட்டது. அப்பொழுது அங்கு ஓர் அதிசயத்தைக் கண்டான். அழகானதொரு நாய்க்குட்டி அந்த நாயின் அருகில் கிடந்தது. விழிகளை நிமிர்த்திக் கூட்டத்தை நோட்டம் விட்டான். கார் டிரைவர், நாயின் உயிரைக் கொன்றதுமின்றி, அதன் வழி உயிரையும் தட்டிக் கொண்டு போக எண்ணுவதை ஊகித்தது பிஞ்சு நெஞ்சம். அவ்வளவுதான், பூபாலன் அந்த நாய்க் குட்டியைக் எடுத்துத் தன் பையில் திணித்துக் கொண்டு பிடித்துவிட்டான் ஒட்டம்!

2

“அம்மா. அம்மா’’ என்று அலறிக் கொண்டு ஓடி வந்தான் பூபாலன். ரேழியில் இருந்த தண்ணீரை மொண்டு ‘மடக் மடக்’ கென்று குடித்தான் மூச்சுக்கு அணைகட்ட முடியவில்லை.

அஞ்சலை என்னவோ ஏதோ என்று பதறிப்போனாள்.

“அம்மா, நான் போனவருஷம் பள்ளிக்கூடத்திலே தங்கப் பதக்கம் ப்ரைஸ் வாங்கினேனே, நினைவிருக்குதா?”

“ஆமாடா, தம்பி. வாயில்லாப் பிராணிகளிடம் அன்பு காட்டனும்னு நீ பிரசங்கம் செய்ததுக்கு பதக்கம் தந்தாங்க சர்க்காரிலே என்ன சேதி...?”

“சொன்னபடி நடக்கணும்னுதானே பெரியவங்க அடிக்கடி சொல்லுறாங்க...?”

“என்னென்னமோ கேட்கிறியேடா’கண்ணு! வேளா வேளைக்குச் சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு திட்டம் போடவே எனக்குப் பொழுது காணலே. சரி. சேதியைச் சொல்லு”

பூபாலன் பதில் எதுவும் சொல்லவில்லை. புத்தகப் பையைக் கீழே வைத்தான். ‘வாள்-வாள்’ என்று ஒரு கூக்குரல் எழுந்தது. உடனே அந்த நாய்க்குட்டி தரைக்குப் பாய்ந்து விட்டது. பிறகு அது பூபாலனைப் பார்த்தது.

“பூபாலா. உன்னைப் பார்த்து அப்படி வாலை ஆட்டுதே நாய்க்குட்டி?” என்றாள் அஞ்சலை.

“ஆமாம், அம்மா நான் அது உசிரைக் காப்பாற்றினேன். நன்றி சொல்லுது. நன்றி மறக்கக்கூடாதுன்னு ஒளவைப் பாட்டி சொன்னது இதுக்குக்கூடத் தெரியுதே! பாவம், அது தாயைத்தான் என்னாலே காப்பாற்ற முடியவில்லை. அம்மா, இனி இந்த நாய்க் குட்டியும் என்னோடே இருக்கட்டும்...” என்று பயந்த குரலில் கெஞ்சினான் அவன்.

“என்னா சொன்னே? இந்தத் தெரு நாய்க்குட்டிக்கு யார் படி அளக்கிறதாம்.? உள்ளதுக்கே சாப்பாட்டுக்குத் திண்டாட்டம் போடுகிறோம். போடா, போய் அதைத் தெருவிலே விட்டுவிட்டு வந்துடு!” என்று உத்தரவிட்டாள் அவன் அம்மா.

அப்பொழுது பூபாலனின் தந்தை முருகேசன் வந்தான். தன் புதல்வனை அழைத்து, “தம்பி. நீ அழுகாதே; நான் உன் நாய்க் குட்டியைக் காப்பாத்துறேன். நீ சும்மாயிரு...!” என்று சொன்னான்.

பிறகு முருகேசன் உள்ளே சென்று. “அஞ்சலை. குழந்தையின் மனசை நோகடிக்காதே. நம்ப பையன் என்னவெல்லாமோ பேசறான்; கேட்கிறான். சின்னப்பிள்ளை பேச்சாவே எனக்குத் தோணலை. ஒரு வேளை அவன்கூட பின்னாலே பெரிய மனிதனாக ஆனாலும் ஆகலாம். கல்லுக்குள்ளே இருக்கும் தேரைக்குக் கூட படியளக்கும் சத்தி படைச்சவன் ஆண்டவன். இந்த நாய்க்குட்டியை பகவான் மறந்திடவே மாட்டான். அன்பும் ஆண்டவனும் நமக்குத் துணை இருக்கு: காந்தித் தாத்தா சொல்லித் தந்த உண்மையும் நேர்மையும் நமக்கு நல்ல வாழ்க்கையைத்தரும்” என்றான் முருகேசன். அவன் கண்களில் கண்ணிர் இருந்தது.

“அப்பா நல்லவருதான். அம்மாவுக்குத்தான் ஜீவகாருண்யம்னா என்னான்னு புரியவே மாட்டங்குது..!” என்று கூறிய பூபாலன் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவிக் குதித்தான்.

பிறகு, முருகேசன் தன் ‘காக்கி’ சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து மகனிடம் கொடுத்தான்.

அவன் வாசித்தான் :


பூவைமாநகர்


‘அன்புள்ள முருகேசன்,

பிறந்த ஊரை மறந்து விட்டாயா ? உனக்கு ஒரு நல்ல செய்தியை எழுதவே இந்த லெட்டர் போடுகிறேன். 'என் பசி, ஒருவனின் பசியல்ல; கோடிக் கணக்கான ஏழைகளின் பசி என்று வினோபாஜி பூதான இயக்கத்தின் போது சொன்ன சொற்கள் என் இதயத்தைத் தொட்டு விட்டன. நீ நம் ஊர் நாடி வா என் நிலத்தை உனக்கும் உன் சகோதரர்களுக்கும் பங்கிட்டுத் தருகிறேன்.

இப்படிக்கு


மிராசுதார் சுகவனம்


“அடடே மிராசுதார் ஐயா புது மனுஷராயிட்டாரே?”என்றாள் அஞ்சலை; அவளுக்கு ஆனந்தம் மேலிட்டது.

அப்பொழுது வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு சிறுமி இறங்கினாள் “பூபாலா“ என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே துள்ளி ஓடி வந்தாள்.

“வா பூங்கோதை!” என்று வரவேற்றான் பூபாலன். வாசல் திண்ணை மீது ஒரு கிழிந்த பாயை விரித்து,"உட்கார். இது எங்கள் பங்களாவின் சுழல்நாற்காலி” என்று உபசரித்தான். பிறகு “இதோபார் என்னுடைய மற்றொரு தோழன்,"என்று சொல்லி அந்த நாய்க்குட்டியைக் காட்டினான் பூங்கோதையிடம். அது அமைதியாக அடங்கியிருந்தது.

“பூபாலன், நான் இன்றைக்கு ராத்திரி சினிமாவிலே நடிக்கப் போகிறேன். எங்க அம்மாவும் என் கூட நடிக்கிறாங்க. நீ வர்றியா ஷூட்டிங் பார்க்க?"

“ஓ, பேஷா வர்றேன். எனக்குக் கூட படத்திலே நடிக்க வேணும்னு ரொம்பவும் ஆசை. உன்கூட நடிக்கிறதுக்கு எனக்கு சந்தர்ப்பம் வந்தா, ரொம்பவும் குஷியாயிருக்கும். அத்தோட என் நாய்க்குட்டியையுங் கூடப் படத்திலே நடிக்கவச்சு, இதையும் ஒரு பெரிய ஸ்டாராக ஆக்கனும்!” என்றான் பூபாலன்.

அதே சமயம், வாசலிலே சினிமா விளம்பர கார் ஒன்று போய்க் கொண்டிருந்தது. நாய்க்குட்டியைக் கீழே விட்டுவிட்டு, வெளியே ஒடினான் சிறுவன். சிறுமியும் தொடர்ந்து அவனுடன் ஒடினாள்.

விளம்பரத்தில் சிறுவன் சுதாகரின் படம் இருந்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டான். சுதாகர் மாதிரி தானும் ஒரு ‘பால நட்சத்திரமாக’ ஆவது போன்ற இன்பக் காட்சிகள் தோன்றின.

பூங்கோதை அவன் தோளைத் தட்டி அழைத்ததும்தான், பூபாலனுக்குச் சுயநினைவு வந்தது.

“போகலாமா, கார் காத்திருக்குது?”என்று நினைவு படுத்தினாள் பூங்கோதை,

“இதோ.என் நாய்க்குட்டியையும் எடுத்துக்கிட்டு நொடியிலே ஒடியாந்துடுறேன்...!” என்று சொல்லிவிட்டு நாய்க்குட்டியைத் தேடினான் பூபாலன்.

ஆனால்-

“ஐயோ, நம்ப நாய்க்குட்டியை கார்ப்பரேஷன் நாய் வண்டியிலே தூக்கிப் போட்டுக்கிட்டுப் போயிட்டாங்களே!”என்று அலறினாள் பூபாலனின் தாய்.

“ஐயோ!"என்று கூப்பாடு போட்டவாறு, பூபாலன் வெறி பிடித்தவனைப் போலத் தெருவிலே ஓடிக் கொண்டிருந்தான்.
3

“ஏய், தம்பி”

“....”

“ஏய், தம்பி”

பூபாலன் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தான். வலது காதின் ஒரத்தில் படர்ந்திருந்த செம்மை அவனுக்கு வேதனை தந்தது. தடவி விட்டுக் கொண்டான். பாவிப் பயல் காதைத் திருகாமல் எழுப்பினால், அவன் குடியா முழுகிப் போய்விடும்?

“ஏன் ஐயா, எங்க பள்ளிக்கூடத்துக் கணக்கு வாத்தியார்கிட்டே நீங்க காதைத் திருகுற வித்தையைக் கத்துக்கிட்டிங்களோ?...ம்!. என் மாதிரி உமக்கு ஒரு பயல் இருந்தா இப்புடிச் செய்வீங்களா?” என்று வேதாந்தம் பேசினான் பூபாலன். உடனே அவன், அந்த மனிதனை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் எதிரில் நின்ற மனிதனை எடை போட்டுப் பார்த்தன.

மறுகணம் பூபாலன் வாயடைத்துப் போய் ‘யார் இந்த மனிதன்? நான் எங்கே இருக்கிறேன்? ஐயோ, என்னுடைய அருமை நாய்க்குட்டி எங்கே...?’ என்று மனத்திற்குள் வேதனைப்பட்டுக் கண்ணீர் வடித்தான்.

மறுபடியும் என்ன தோன்றிற்றோ, பூபாலன் எழுந்தான்; நடந்தான். காம்பவுண்ட் வாசலைத் தாண்டப் போனான். அப்போதும் அவனை யாரோ தடுத்து நிறுத்தியதை உணர்ந்தான். சற்று முன் எழுப்பிய அதே மனிதன்தான் எவ்வளவு ஆடம்பரமாக உடை உடுத்துக் கொண்டிருக்கிறான் இவன் ? எல்லாம் சில்க் மயம்!

“தம்பி, நீ யார்?”

“ஐயா, நீங்க யார்? அதை முதலிலே சொல்லுங்க”

“ஹி, ஹி! சுட்டிப்பயலாக இருக்கிறாயே? பேஷ் ! நான் யார் தெரியுமா? நான்தான் சுகுமார் சர்க்கஸ் கம்பெனி முதலாளி. என் பெயர் சுகுமார். சரி, இப்போது உன் பெயரைச் சொல்!”

“என் பெயர் பூபாலன்! ஐயா நான் எப்படி இங்கே வந்தேன்? நான் இப்போதே வெளியேற வேணும். என்னுடைய அருமை நாய்க் குட்டியைத் தேடிப்பிடிக்க வேணும். எனக்காக என் அப்பாவும் அம்மாவும் வேறே கவலைப்பட்டுக் கொண்டிருப்பாங்க.”

‘தம்பி, நீ தெருவில் மயக்கம் போட்டுக் கிடந்தாய். காரில் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தேன். அது சரி தம்பி, உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேணும். உன்னைப் போல ஒரு கெட்டிக்காரப் பையன் என்னுடைய சர்க்கஸ் கம்பெனிக்கு வேண்டும். உனக்கு வேண்டிய சகல வசதியையும் நான் ஏற்பாடு செய்கிறேன். உன் பெற்றோருக்கும் இப்போதே தகவல் சொல்லியனுப்பி விடுகிறேன். நீ என்னுடனேயே தங்கிவிடு. உனக்கு எல்லா வித்தைகளையும் கற்றுத் தருகிறேன். உன் படிப்புக்கும் ஏற்பாடு செய்கிறேன். உனக்கு இங்கே ஒரு தோழியும் இருக்கிறாள். அல்லி என்று பெயர். அவள் என்னுடைய ஒரே பெண். ம், சரி என்று சொல்...!”

பூபாலன் என்ன சொல்லப் போகிறனோ என்னவோ என்று சர்க்கஸ் முதலாளி அவன் முகத்தையே உற்று நோக்கியவாறு நின்றான்.

“ஐயா, என்பேரில் நீங்க கொண்டிருக்கிற அன்புக்கும் பாசத்துக்கும் ரொம்ப நன்றி. உங்களுக்கு நான் கடமைப்பட்டவன். எனக்குக்கூட சினிமாவிலே, சர்க்கஸிலே பங்கெடுத்துக் கொள்ளணும்னுதான் ரொம்ப ஆசை. பள்ளிப் படிப்பு மட்டும் எனக்குச் சோறு போட முடியாது. அத்தோடு தொழிற்கல்வியும் அவசியம் தேவைன்னு நம்ம ராஜாஜி அவர்கள் சொல்லியிருப்பதைப் பற்றி வாத்தியார் அடிக்கடி எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆனால் இப்போ என்னாலே இங்கே, ஏன் எங்கேயும் ஒரு நிமிஷங்கூட தங்கவே முடியாது. என்னுடைய உயிருக்குயிரான நாய்க்குட்டியைக் கண்டுபிடித்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அது இல்லாமல் எனக்குப்பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்குது. அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக்கிட்டு ஸ்டுடியோவுக்கு போகிறதாக இருந்தேன். புறப்படப் போறபோது நாய்க் குட்டியைத் தேடினேன்; காணவில்லை. அதை கார்ப்பரேஷன் நாய் வண்டியிலே துக்கிப் போட்டுப் போயிட்டதாக என் அம்மா சொன்னாங்க... ஐயா. நான் போயிட்டுவர்றேன்″என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் பூபாலன்.

அவனது கையைப் பற்றியவாறு, “தம்பி, அவசரப்படுகிறாயே? நில், நான் உனக்கு அந்த நாய்க் குட்டியைத் தருகிறேன். சரிதானே? அப்புறம் இங்கேயே தங்கி விடுவாய் அல்லவா?”என்றார் சுகுமார் புன்சிரிப்புடன்.

“ஓ நிச்சயமாக !”என்று தலையைப் பலமாக ஆட்டினான் சிறுவன்.

“அல்லி!” அழைத்தார் சர்க்கஸ் உரிமையாளர்.

நீலத் திரையை நுனி விரலால் நீக்கிக் கொண்டு ஒரு சிறுமி வந்தாள். அவள் கையில் அழகிய நாய்க்குட்டி ஒன்று இருந்தது.

பூபாலன் கண் இமைக்காமல் அந்த நாய்க்குட்டியையே பார்த்தவாறு இருந்தான். அந்தச் சிறுமி நெருங்கி வந்தாள். பூபாலன் அந்த நாய்க் குட்டியைக் கை நீட்டி வாங்கினான். ஆனால் அது ‘வாள் வாள்’ என்று விடாமல் குரைத்தது.

அடுத்த கணம், “ஊஹூம், இது என் நாய்க்குட்டி இல்லவே இல்லை! என்னை ஏமாற்றப் பார்க்கிறீங்க. என் நாய்க்குட்டியாயிருந்தால், என்னைக் கண்டதும் வாலை ஆட்டுமே என் நாய்க் குட்டியை எனக்கு அடையாளம் தெரியாதா? பொய் சொல்லி நீங்க என்னை ஏமாற்றப் பார்க்கிறீங்க...!” என்று கோபம் பொங்கப் பேசிவிட்டு அந்த பங்களாவிலிருந்து உடனடியாக வெளியேறினான் பூபாலன்.

4

ந்த ஸ்டுடியோ ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.

பூபாலன் வியர்வையைச் சட்டைத் தலைப்பால் துடைத்து விட்டவாறு, கூர்க்காவின் முன் நின்றான். அவன் ஏதோ கேட்டான். பையன் என்னவோ சொன்னான். இருவருக்கும் இடையில் இந்தியும் தமிழும் உயிரை விட்டுக் கொண்டிருந்தன. கடைசியில் பூபாலன் சைகை காட்டி, தான் உள்ளே செல்ல வேண்டுமென்பதையும், அங்கு தன் தோழி பூங்கோதை இருக்கிறாள் என்பதையும் சொன்னான். ஒன்றும் பதில் சொல்லாமல் பையனை ‘கல்தா’ கொடுத்து நெட்டித் தள்ளிவிட்டான் காவல்காரன்.

இருட்டில் கண் தெரியவில்லை. பூபாலன் ஒருமுறை அந்தக் கட்டடத்தை வலம் வந்தான். பிறகு பின்புறமாக வந்து, கவர் மீது ஏறினான். உள்ளே அமைந்திருந்த ‘செட்’ டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சிறுமி பூங்கோதைக்கு டைரக்டர் ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பூங்கோதை அழகாகப் பேசி நடித்துக் கொண்டிருந்தாள். அதே சமயம் அங்கு ஒரு சிறுவன் வந்தான்.அவனிடம் டைரக்டர் ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்து, “ம், நான் சொல்லிக் கொடுத்தபடி நடி, பார்க்கலாம்” என்று சொன்னார். பையனைக் கண்ட அந்த நாய்க்குட்டி குரைத்துக் கடிக்க முயன்றது. சிறுவன் பயந்து அலறினான்.

அதே சமயம், “ஆ என் நாய்க்குட்டி” என்று ஆர்ப்பரித்த வண்ணம் பூபாலன் உள்ளே குதித்து ஓடி வந்தான். அந்த நாய்க் குட்டி அவனைக் கண்டவுடன் சந்தோஷ மிகுதியால் வாலைக் குழைத்தது; அன்புடன் அவனுடைய முகத்தை நாக்கால் நக்கியது.

“பூபாலன், உன்னை எங்கெல்லாம் தேடுவது? உன்னுடைய நாய்க்குட்டியைக் கார்ப்பரேஷன் வண்டிக்காரன் தூக்கிப் போகவில்லை. நாம் பேசிக்கிட்டிருந்தபோது ஒரு சினிமா விளம்பர கார் வந்ததல்லவா? அந்தக் கார்காரன்தான் தூக்கிப் போய் விட்டிருக்கிறான். வழியிலே கண்டுபிடிச்சு, அவனோடு சண்டை போட்டு அதை மீட்டுக்கிட்டு வந்து விட்டோம்!”என்றாள் பூங்கோதை.

அப்போது அவனைத் தேடிக் கொண்டு அவன் பெற்றோர் வந்தார்கள். அன்று கடிதம் போட்டிருந்த மிராசுதார் சுகவனத்தைப் பார்த்துவர பூவைமாநகர் செல்வதாகவும், இரண்டு நாட்களில் திரும்பி விடுவதாகவும் சொன்னான் முருகேசன். அதுவரையில் பூபாலன். பூங்கோதை வீட்டில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெற்றோரை வழியனுப்பி வைக்க ஸ்டுடியோவுக்கு வெளியே வந்தான் பூபாலன்.

அப்பொழுது ஸ்டுடியோ வாசலில் ஒரு கார் வந்து நின்றது. காரில் தன் பெற்றோர் ஏறிக் கொண்டதைக் கண்ட பூபாலன் வியப்பிற்குள்ளானான். அவனது வியப்பு அடங்குவதற்குள், அவனையும் கையைப் பிடித்து காருக்குள் அமர்த்திக் கொண்டான் அவனுடைய அப்பா.

பூபாலனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. திரும்பிப் பார்த்தான். முன் ஆசனத்தில் அந்த, சர்க்கஸ் முதலாளி சுகுமார் விஷமப் புன்னகையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்!


5

...ஹ்....ஹா!’

ஜப்பானில்தானே ப்யூஜியாமா போன்ற எரிமலைகள் அதிகம் என்று புத்தகங்கள் பேசுகின்றன? இங்கே தண்டையார் பேட்டையில் எரிமலை எங்கிருந்து இப்படி வெடித்துச் சீறுகிறது; ஓங்காரச் சிரிப்புச் சிரிக்கிறது..?

பூபாலன் இப்படி எண்ணினான். இடது கையைத் தலைக்கு அணை கொடுத்து வெளித் திண்ணையில் படுத்திருந்தவன், வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான்.

“தம்பி!”

‘எனக்கு அண்ணன் இல்லையே, யாருக்கு என்னைத் தம்பி என்று கூப்பிட உரிமையிருக்குது’.

“தம்பி!....ஹஹ்ஹா!”

“நன்றாகச் சிரிக்கிறீங்க! பாவம், நீங்கள் சினிமாவிலே சிரிக்கக் கற்றுக் கொடுக்கவென்று இருக்க வேண்டியவர். இங்கே சர்க்கஸிலே வந்து அகப்பட்டுக்கிட்டிருக்கீங்க போலிருக்கிறது”.

“தம்பி!”

“முதலிலே என்னைப் பெயரிட்டு அழையுங்க!”

“சூடாகப் பேசுகிறாயே?”

“இளரத்தம் சார், இளரத்தம்!”


“பேஷ், நானே சொல்லலாமென்றிருந்தேன். நான் ஒரு அருமையான சிறுத்தை வளர்க்கிறேன். அதற்குக் கூட உன் போன்ற பையன்களின் இளம் ரத்தம்தான் தேவையாம். உன்னை அன்றைக்கு நான் காரில் போட்டு என் வீட்டுக்குக் கொண்டு வந்தேன் பார். அன்றிலிருந்தே அது சொல்லிக்கொண்டேயிருக்கிறது. இன்றுதான் என்னால் நிறைவேற்ற முடியப் போகிறது!”

“சந்தோஷம், அப்படியே செய்யுங்கள். நான் கூட முந்தி ஸ்கூலிலே பேசியிருக்கேனாக்கும், வாயில்லா ஜந்துக்களிடம் அன்புகாட்ட வேணுமின்னு. இப்போ நீங்க உங்களுடைய சிறுத்தையிடம் அன்பு காட்டுகிறது. இதுதான் முதல் தடவையோ? பரிதாபம் சிறுத்தை வாடி மெலிஞ்சிருக்குமே..? ம், ஜல்தி...எங்கே அந்தச் சிறுத்தை? கொண்டு வாரும் இப்படி நான் அதனிடம் கேட்கிறேன். என்னுடைய ரத்தம்தான் அதற்குத் தேவையா என்று?” – இடி முழக்கம் செய்தான் பூபாலன். முகத்திரையில் ரத்த வர்ணம் வழிந்தது.

சர்க்கஸ் உரிமையாளர் ககுமார் பேய்ச் சிரிப்புச் சிரித்தார். அடுத்த நிமிஷம், அங்கிருந்த பொத்தானை மெல்ல அழுத்தினார்.

அவ்வளவுதான் – பயங்கரமான உறுமல் முழங்க, அச்சம் தரும் பற்கள் ஒளியில் மின்ன, பெரிய சிறுத்தையொன்று தோன்றியது.

“ஐயோ, அப்பா! ஐயோ, அம்மா!” என்று அலறினான் பூபாலன்.

அடுத்த தடவையும் சர்க்கஸ்காரன் பயங்கரமாகச் சிரித்தான்.

“தம்பி, உன் அப்பாவையும் அம்மாவையும் ஏன் வீணாகக் கூப்பிடுகிறாய்? அவர்கள் இருவரும் உன்னை என் வசம் ஒப்புவிக்கச் செய்த சூழ்ச்சிதான் இப்போது உன் கண்முன்னாலே நாடகம் ஆடுகிறதே? பாவம்...!”

“இரக்கப்படக் கூட உமக்கு நெஞ்சு இருக்குதா..?”

“இரக்கப்பட மட்டுமல்ல, உன்னை அகில இந்திய சர்க்கஸ் விளையாட்டுக்காரனாக ஆக்கவும் எனக்கு இதயம் இருக்கிறது; துணிவு இருக்கிறது”

“பேஷ்!“

“பேஷ், பேஷ்! அப்படியென்றால், என் இஷ்டப்படி நீ இங்கேயே என்னுடனேயே தங்கி விடுகிறாயா?”

“அது பகற்கனவு ஐயா, பகற்கனவு!”

“அப்படியென்றால் முடியாதென்றுதான் மறுமுறையும் சொல்கிறாயா?”

“ஆமாம், முடியாது...! முடியாது...! முடியவே முடியாது...!”

“அப்படியென்றால் இனி நீ இங்கிருந்து மீளவும் முடியாது. இதோ, உன்னை விழுங்கி ஏப்பம் விடக் காத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறுத்தையிடமிருந்து தப்பவும் முடியாது. ஆமாம் மாஸ்டர், முடியாது! முடியாது! முடியாது!”

“எனக்கு இனி என்னைப் பற்றிக் கவலையில்லை. காணாமற் போன என் அருமை நாய்க்குட்டி கிடைச்சும் கடைசி நேரத்திலே அது கை நழுவிப் போச்சு, இப்போ என்னைப் பெற்றவங்களும் என்னைக் கை கழுவிப்பிட்டாங்க. சத்தியமாகச் சொல்றேன்; நான் சாகத் துணிஞ்சிட்டேன்!”

“பூபாலா, உன்னிடம் அடைக்கலமடைந்திருக்கும் அந்த நெஞ்சுரத்திற்காகவேதான் தம்பி உன்னை என் கம்பெனியில் அமர்த்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்.”

“வாஸ்தவம் சார். உங்கள் ஆசைக்குக் காரணம் எனக்குப் புரியாமலா போயிடும்? என்னைக் கொண்டு பணம் பண்ணத்தான் நீங்க கோட்டை கட்டுறீங்க, இல்லையா...?”

“இல்லை, தம்பி. உன்னைக் கொண்டுதானா எனக்குப் பணம் கிடைக்கவேணும்? உன் அப்பாவை இப்போது அவர் வேலை செய்யும் தொழிற்சாலையிலே சேர்த்துவிட்டது நான்தான். அந்த நன்றியில்தான் உன்னை என்னிடம் சேர்ப்பித்துச் சென்றிருக்கிறார் அவர் நினைவு வைத்துக்கொள் அப்பனே!”

“ஐயா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. என் நிலையிலே உங்கள் மகள் அல்லி அகப்பட்டுத் திண்டாடினால் என்ன பாடுபடும் உங்கள் மனசு? நினைச்சுப் பார்த்து, என்னை விட்டு விடுங்கள்.. சார், என் நாய்க்குட்டியைக் காணாமல் ஒரு நிமிஷம் கூட என்னாலே தங்க முடியாது!” என்று கண்ணீரைத் தாரை வார்த்துக் கெஞ்சினான் பூபாலன்.

சர்க்கஸ் மாஸ்டர் இம்முறை வாய் திறக்கவில்லை. அருகிலிருந்த பொத்தானை இடது கை நுனி விரலால் அழுத்தினார். சிறுத்தை பயங்கரமாக உறுமிக் கொண்டு அவன் மீது பாய்ந்தது.

“ஐயோ!” என்று கூக்குரலெழுப்பினான் பூபாலன். அவனுடைய தலை சுற்றியது.

அப்பொழுது ஓர் அதிசயம் நடந்தது.

“பூபாலா, பயப்படாதே!”

எங்கிருந்தோ ஒரு குரல் சூன்யத்தைத் துண்டாடி எதிரொலித்தது. அதே வேகத்தில், பாய்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுத்தையின் உடலில் ஒரு பட்டாக்கத்தி வந்து பாய்ந்து செருகிக் கொண்டது. மறுகணம் அந்தப் பயங்கரமான சிறுத்தை மாயமாக மறைந்து விட்டது!

என்ன அதிசயம் இது!

பூபாலனின் உடலில் வேர்வை ஊற்றெடுத்துப் பெருகியது.

“பூபாலா, பயப்படாதே! உன்னைப் படிய வைக்க எங்க ‘நைனா’ செஞ்ச நாடகமாக்கும் இது” என்று கூறி கடகட வெனச் சிரிக்கலானாள் சிறுமி அல்லி.

“தங்கச்சி“ என்று உணர்ச்சிப் பெருக்கோடு அழைத்து, அல்லியைத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணிர் விட்டான் பூபாலன்.

“அண்ணா, என் அப்பாவின் இஷ்டத்துக்கு இணங்கி நட. நீ சர்க்கஸிலே விளையாட ஆரம்பிச்சா நான்கூட உன்னோட சேர்ந்து விளையாடுவேன். நம்ப ரெண்டு பேராலேயும் எங்க கம்பெனிக்கும் நல்ல பேர் கிடைக்கும். எனக்காக வேண்டியாச்சும் ‘சரி’ சொல்லு, இங்கே உனக்கு எந்தவிதக் குறைச்சலுமே இல்லை. உன் அப்பாவும் அம்மாவும் கூட அடுத்த வாரம் வந்திடுவாங்க” என்று தன் பங்குக்குக் கெஞ்சினாள் அல்லி – அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டே

“ஆகட்டும். ஆனா என் அருமை நாய்க்குட்டி...?” என்று கேட்டான் பூபாலன் வேதனையுடன்.

“இதோ, பார்”என்றார் சுகுமார்.

அதே நிமிஷம் பூபாலனுடைய நாய்க்குட்டி அங்கு வந்து நின்றது.

“ஐயா, ஆத்திரத்திலே வயசையும் வார்த்தையையும் மீறி என்னென்னமோ பேசிப்பிட்டேன். மன்னிப்பீங்களா? என்னோட நாய்க்குட்டி கிடைச்சப்புறம் இனி எனக்கு எந்தக் கவலையுமே இல்லை. உங்க ‘நன்றிக் கடனை’ அடைக்க வேண்டியது என் பொறுப்பாச்சே... சினிமாவிலே அந்த சுதாகர் மாதிரி நடிக்க ஆசை கொண்டேன். இப்போ என்னடான்னா சர்க்கஸ் மாஸ்டர் ஆகிறதுக்கு யோகம் வந்திருக்குது!ம்.. இப்பவே எனக்கு சர்க்கஸ் ஆட்டத்தைக் கற்றுத் தர ஆரம்பிச்சிடுறீங்களா” என்று பூபாலன் மகிழ்ச்சி கரை புரளக் கூறினான்.

“ஒகே!” என்று சொல்லி அவனைத் தட்டிக் கொடுத்தார் சுகுமார்.


6

சுகுமார் சர்க்கஸ் கம்பெனியில் மாட்டப்பட்டிருந்த காலண்டரில் இரண்டு மாதத்திய தினசரித் தாள்களைக் கால தேவன் திருடிச் சென்றுவிட்டானாம்!

அன்று சர்க்கஸ் கொட்டகையில் எள் விழுவதற்குக் கூட இடம் இல்லாதபடி கூட்டம் கூடியிருந்தது. மாஸ்டர் பூபாலன் புதிதாக அரங்கேறி, ஊசலாடிக் கொண்டிருக்கும் கம்பி வளையத்தில் நின்று விளையாடும் காட்சிகளைப் பற்றிய விளம்பரங்களெல்லாம் பலன் பெறாமல் போய்விடுமா என்ன?

ஆயிற்று, கோமாளி வந்து கூத்தடித்துச் சென்றான். அடுத்தவன் வந்து கரணம் போட்டுச் சென்றான். மூன்றாமவள் அல்லி, வந்து ‘ஜிப்பி டான்ஸ்’ ஆடிச் சென்றாள்.

ஆம்; அதோ பூபாலன் அழகாக உடை உடுத்துக் கொண்டு வந்து வணக்கம் சொல்கிறானே! என்ன விந்தை இது? அவன் எப்படி இவ்வளவு அற்புதமாக ‘பார்’ விளையாடுகிறான்? ஆஹா, அவனுடைய கழுத்தில் எவ்வளவு உரிமையோடு அந்த நாய்க்குட்டி பின்னிப் பிணைந்திருக்கிறது?

பூபாலன் அதிர்ஷ்டமே, அதிர்ஷ்டம்!

மக்களின் ஆரவாரம் மிகுந்தது; ஒரே கைதட்டல். ஆனால் மறுகணம்...?

நாய்க்குட்டியுடன் ’பார்’ விளையாடிக் கொண்டிருந்த பூபாலன் அப்படியே ’தொபுகடீர்’ என்று தாவிப் பாய்ந்தான்.

காம்பவுண்ட் கவரைத் தாண்டி நின்ற அந்த லாரியில் அவன் நாய்க்குட்டியுடன் விழுந்தான்.

அதே சமயத்தில்....

“டுமீல், டுமீல்“ என்ற வெடி ஒலி திக்கெட்டும் பரவியது!

7

ப்போது நிறுத்தப்போகிறாயா...? இல்லையா...?”

“முடியாது.”

“முடியாதா?”

“ஆமா, முடியாது”

தம்பி, நீ சிறுபிள்ளை, நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள்.”

“முடியாது”

“முடியாதா?”

“முடியாது; முடியாது; முடியாது..!”

“பூபாலன்!”

“ஆ!”

“ஏன் அப்படி அதிசயப்படுகிறாய்?”

“என் பெயர் உமக்கு எப்படித் தெரிந்தது?”

“தெரியும்.”

”விளக்கமாகச் சொல்லுங்கள்.”

“முடியாது!”

“முடியாதா?”

“ஆமாம், முடியாது; முடியவே முடியாது!”

“பழிக்குப் பழியா?”

“இல்லை”

“பிறகு...?”

“அன்புக்கு அன்பு!”

“என்ன, அன்புக்கு அன்பா? முன் ஒரு சமயம் என்னைத் தமிழ்ப் படம் ஒன்றிலே நடிக்கச் சொன்னாங்க. அங்கே இப்படித் தான் அழகான தமிழ் வார்த்தைகள் பேசினாங்க. நீங்கள் அந்தக் கும்பலைச் சேர்ந்தவரில்லையே? பிறகு அன்பைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? ம்...! ஏன்தான் தெரியப் போகிறது?”

“தம்பி, கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு அன்பைப் பற்றி என்ன தெரியும் என்றுதானே நீ சந்தேகப்படுகிறாய்? நியாயம் இருக்கிறது. உன் எண்ணத்தில். தமிழ் ரத்தம் துடிக்கிறது, உன் கேள்வியில். நெஞ்சு இருக்கிறது, உன் கண்ணிரில்!”

“போதும், நிறுத்துங்கள்! வேண்டாம், நீங்கள் பாடம் பண்ணி வைத்திருப்பதையெல்லாம் பேஷாக ஒப்பியுங்கள். ஆனால், என்னை இங்கிருந்து விடுதலை செய்து அனுப்பிவிட மாத்திரம் தடை போட்டு விடாதீங்க."

“இந்தக் குருட்டு இருட்டிலா நீ வெளியேறப் போகிறாய், தம்பி?”

“என்னுடைய அருமை நாய்க்குட்டி மூன்றாம் தவணையாக என்னை விட்டுப் பிரிஞ்சபோதே என் கண்கள் குருடாகிடுச்சு; உலகம் இருட்டாகிப் போச்சு. பயங்கரமான இந்தக் குகை எனக்கு ஒரு பொருட்டல்ல!”

“பூபாலன், உன் அழுகையை நிறுத்தச் சொல்லி இந்த மூன்று நாட்களாகக் கெஞ்சினேன். இந்த வேண்டுகோளுக்கா இவ்வளவு வியாக்யானம்? இதோ பார், முதலாவதாக நீ உன் கண்ணீர் வெள்ளத்துக்கு அணை போட்டாக வேணும். இரண்டாவதாக நீ சிரிக்க வேணும்,” என்றான் அந்த மனிதன். அவனுடைய விரல்கள் பூபாலனின் கன்னத்தில் இழைந்திருந்த கண்ணிர் முத்துகளை வருடி விலக்கி விட்டன.

பூபாலன் திமிறிக் கொண்டு விலகினான். தன்னை மறந்த நிலையில் விர்ரென்று பாய்ந்து ஓடினான். எங்கு பார்த்தாலும் பாறைச் சுவர்கள் நந்தியாக வழி மறைத்து நின்றன. ஆத்திரம் தாளவில்லை; வெறி தாளவில்லை. அழுகை மூண்டது; வேதனை மூண்டது. “ஐயோ, என் நாய்க்குட்டி ?” என்று கதறியவனாக, பாறையில் படார், படார் என்று தலையை மோதிக் கொண்டான். ரத்தம் ஊற்றெடுத்தது. மயங்கிக் கீழே சாயப் போனான் பூபாலன்.

அப்பொழுது–

“ஐயோ, பூபாலா!” என்ற குரல் முன்னோடிச் சென்றது. அடுத்து, ஒரு சிறுமி பாய்ந்து சென்றாள். தரையில் விழுந்திருந்தவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் கீழே அமர்ந்தாள். சிறுமியின் அன்பு மடியில் சிறுவன் தன் நினைவைக் கொள்ளை கொடுத்து விட்டுக் கிடந்தான்.

ஒரு நாழிகைப் பொழுது கழித்திருக்கும்.

பூபாலன் கண்களைத் துடைத்துக் கொண்டான்; கண் மலர்கள் விரிந்தன. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். கை நீட்டும் தொலைவில் கிடந்த ஒரு பழைய காகிதக் கிழிசலை அவசர அவசரமாக எடுத்தான். அவனுடைய கைகள் நடுங்கின. வாய் விட்டுப் படித்தான்.

‘பூபாலா! பயப்படாதே! இன்று இரவு சர்க்கஸ் கூடாரத்தின் வெளி வாசலில் உனக்காக காருடன் காத்திருக்கிறேன்– உன்னுடைய அருமை நாய்க்குட்டியோடு, நல்ல சமயம் பாத்துத் தப்பி வந்து விடு...’

இப்படிக்கு உன் அன்புள்ள தங்கை,
–பூங்கோதை



பூபாலன் அந்தத் துண்டுத் தாளைக் கசக்கி வீசி எறிந்தான். கண்ணிர் கரை உடைத்துப் பொங்கியது. மறுபடியும் தரையில் தலையைப் ‘படார், படார்’ என்று மோதிக் கொண்டான். உறைந்திருந்த ரத்தக் கோடுகளில் செந்நிறம் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.

‘பூங்கோதை! தங்கச்சி உன் அன்புக்கு ஈடே இல்லை. எனக்காக, என்னை அந்தப் பாவிப் பயல் சர்க்கஸ்காரன்கிட்டே இருந்து விடுவிக்கிறதுக்காக, நீ எவ்வளவு பாடுபட்டியோ? கடைசியா, எல்லாம் வீணாகிப் போச்சே, புலி வாயிலிருந்து தப்பி சிங்கம் வாயிலே வந்து அகப்பட்டுக்கிட்டேனே? தெய்வமே, என்னைப் பெற்றவங்கதான் அடியோடு மறந்து விட்டாங்க – நீ கூடவா இப்படி மறந்திடணும்? அறியாத வயசு, சின்னப் பையன்; எனக்கா இத்தனை பெரிய சோதனை.?”

சிறுவன் பூபாலன் வாய்விட்டுப் புலம்பினான். சித்தம் தடுமாறியவனைப் போன்று, அப்படிப் பிதற்றினான்.

“அண்ணா!”

வெட்டிப்பாயுமே மின்னல். அம்மாதிரி திரும்பிப் பார்த்தான் அவன்.

அன்பின் அழைப்பு – பாசத்தின் குரல். எங்கிருந்து, யார் இதயத்திலிருந்து வெட்டிப் பாய்கிறது...?

“அண்ணாச்சி...”

“ஆ! பூங்கோதையா...? என் அருமைத் தங்கச்சி பூங்கோதையா? நீ எப்படி இங்கே அகப்பட்டுக்கிட்டே? கொள்ளைக் கூட்டத்துக்குப் பலியாகும் தலைவிதி என்னோடு மட்டும் தப்பலையா? உனக்குங்கூடவா அந்தத் தலை எழுத்து....? நான் சாவதைப் பற்றி அக்கறைப்படலே; அச்சப்படலே. ஆனா, உன்னைக் காப்பாற்றி உயிர் தப்பிக்கச் செய்யறதிலே என் உயிர் போனா, அதைத்தான் பெரும் பாக்கியமாய் நினைப்பேன். இது படைத்தவன் பேரிலே இடுற ஆணை, தங்கச்சி!” என்று வீறு கொண்டு ஆவேசத்துடன் முழங்கலானான் சிறுவன்.

அதே கணம்–

“ஹ ஹ் ஹா!”

“யார், நீயா சிரிக்கிறாய்? பிஞ்சுக் குழந்தைகளைத் தஞ்சம் அடையச் செஞ்சுட்ட, உன்னுடைய வெற்றியை நினைச்சா அப்படி அட்டகாசச் சிரிப்புச் சிரிக்கிறே? இல்லை, பச்சை ரத்தத்தைக் குடிக்கப் போகிறோமே என்ற போதை வெறியிலே நீ அப்படி எக்காளமிட்டுச் சிரிக்கிறாயா? ஆனா, ஆண்டவன் உன்னைக் கண்டு பரிகாசமாகச் சிரிக்கிறதை மட்டும் நீ மறந்திடாதே...?” என்று ஆத்திரத்துடன் பேசினான் பூபாலன்.

அப்பொழுது ஒர் அதிசயம்!

என்ன ஆச்சரியம்? கொள்ளைக் கூட்டத் தலைவனுக்குக் கூடக் கண்ணீர் வருமா, அவனுக்குக் கூட இதயம் என்ற ஒன்றை மறக்காமல் கொள்ளாமல் பிரம்மா படைத்திருக்கிறானா...?

“தம்பி, இதோ இந்தக் கடுதாசியைப் பார். உன்னால் எழுதப் பட்டதுதான். இது பற்றி உனக்கு நினைவிருக்கிறதா? நீ சர்க்கஸ் கூடாரத்திலேயிருந்து தப்பப் போகிற துப்பு பூங்கோதைக்குத் தெரிஞ்சுது பூங்கோதை தக்க ஏற்பாடுகளோடு வெளி வாசலிலே காத்துக் கிட்டிருந்துச்சு. நீ ‘பார்’ விளையாடின கையோட நாய்க்குட்டியுடன் குதிச்சேயில்லையா, அப்போது துப்பாக்கி வெடிச்ச ‘டுமீல்’ சத்தம் கேட்டுச்சு. நீ தாவிப் பாய்ஞ்ச கார் என்னுடையது.. மெய்தான், கொள்ளைக் கூட்டத் தலைவனுடையது. நான்தான் உன்னையும் பூங்கோதையையும் காப்பாற்றி, காரிலே வைத்துக் கொண்டு புறப்படப் போனேன். அப்பொழுது திரும்பவும் சர்க்கஸ் தலைவன் நம் எல்லோர் பேரிலும் குறி வைத்துச் சுட்டான். உன்னையும் பூங்கோதையையும் காப்பாற்ற வேணுமே என்ற பதட்டத்திலே, உன் நாய்க்குட்டியைப் பற்றிக் கவனிக்க முடியல்லே. அது எங்கே போச்சோ தெரியவும் இல்லை. தம்பி, கண் சிமிட்டுற நேரம் தாமதிச்சு இருந்தால் கூட, நாமெல்லாம் கூண்டோடு கைலாசம் போயிருக்க வேண்டியதுதான். கடவுள் புண்ணியத்திலே நல்ல வேளை தப்பிச்சிட்டோம். தம்பி, பயப்படாதே! உன்னையும் பூங்கோதையையும் என் குழந்தைகள் போலக் காப்பாற்றுகிறேன். என் சொல்லை நம்பு...” என்று கெஞ்சினான் கொள்ளைக்காரன்.

‘முடியாது! நீ என்னைக் கொல்; நான் கவலைப்படலே. ஆனா, என் தங்கச்சியை உன்னாலே ஒண்னும் செய்ய முடியாது; ஞாபகம் வச்சுக்க தங்கச்சி, வா புறப்படுவோம்!” என்று சொல்லிப் பூங்கோதையின் கையைப் பிடித்துக் கொண்டான்; எதிரே குறுக்கிட்டு நின்ற அந்தக் கொள்ளைக்காரனை விலக்கி விட்டு நடந்தான் பூபாலன்.

“தம்பி! தங்கச்சி!”

கொள்ளைக் கூட்டத் தலைவன் அவர்கள் இருவரையும் வழி மறித்தான்.

“சீ! போ!” என்று ஆத்திரம் பொங்கக் கூறினான் பூபாலன். அதே சடுதியில், அருகில் கிடந்த ஒரு கழியை எடுத்து அவன் மீது வீசினான் பூபாலன். கள்வனின் மண்டையில் ரத்தம் பீறிட்டது.

“அப்பா!” என்ற குரல் வானை முட்டியது.

மறுகணம், பூங்கோதை அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் அருகே சென்று விம்மினாள்.

யார் இவன்? இந்தக் கொள்ளைக்காரனா பூங்கோதையின் தந்தை...?

“அப்பா, போதும் இந்த நாடகம்!”

“தம்பி!”

“ஏன்!”

“இதோ பார்!”

“ஆ!”

“நீங்களா? என் பூங்கோதையின் அப்பாவேதான்! ஏன் இந்தக் கொள்ளைக்காரன் வேஷம்?”

“உன்னைக் காப்பாற்றத்தான்!”

“இல்லை, ஏமாற்ற...!”

“ஆமா, அண்ணா மூணு நாளைக்கு முன்னாலே அப்பாவுக்கு ஷூட்டிங் இருந்திச்சு. படமுதலாளி, அப்பாவுக்கு இந்தக் கொள்ளைக்கார வேஷம் தந்திருந்தாங்க. அதே வேஷத்தோடேதான் உன்னைக் காப்பாற்ற வந்தாங்க - ரகசியம் வெளியே தெரிஞ்சுடக் கூடாதல்லவா? மூணு நாளாகக் கெஞ்சுறாங்க அப்பா. நீ மனசு மாறவேயில்லை. என்ன, அப்படிப் பார்க்கிறே, ஆமாம், நான் இப்போது இருக்கும் இடம் ஸ்டுடியோவேதான். நீ முன்பு நடிக்கப் பழகிக்கிட்டியே அதே இடம்தான். படப்பிடிப்புக்காக வேண்டி திருடர்கள் குகையா கட்டப்பட்டிருக்குது – அவ்வளவு தான்! அண்ணா, என் சொல்லை, அப்பாவின் சொல்லை இனியாவது கேளு. ரொம்பவும் ஜாக்கிரதையாக நீ இருக்கணும். இல்லாமப் போனா அந்தப் பாவி சர்க்கஸ்காரன் திரும்பவும் உன்னைப் பிடிச்சிக்கிட்டுப் போயிடுவான்!” என்றாள் பூங்கோதை.

“ஆகட்டும் பூங்கோதை.ஆனா, என் அருமை நாய்க்குட்டி?” என்று விம்மினான் பூபாலன்.

“கடவுள் கட்டாயம் அதைக் காப்பாற்றுவார்“ என்று ஆறுதல் சொன்னாள் பூங்கோதை,

பூபாலன் வானத்தில் பறந்தான்.

அப்பொழுது அவன் கண்ணில் பட்டது ஒரு செய்தித்தாள். மறு வினாடி, அவன், “ஐயோ!’ என்று அலறியவாறு மூர்ச்சித்துக் கீழே விழுந்தான்.

செய்தி ‘...சுகுமார் சர்க்கஸ் கம்பெனியில் பார் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பூபாலன் எப்படியோ தப்பிவிட்டதை அறிந்து, சுகுமார் அவனைத் துப்பாக்கியால் சுட்டான். பூபாலன் தப்பித்து விட்டான். ஆனால் பாவம், அவனுடைய நாய்க்குட்டி துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி விட்டது!”

8

பூபாலன் நன்றாகச் சிரித்து நாட்கள் பன்னிரண்டு ஆகி விட்டன.

பூங்கோதையும் வாய்விட்டுச் சிரித்துப் பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன.

“பூபாலன் அண்ணாச்சி! எதையோ பறிகொடுத்தாற் போல சதா உட்கார்ந்துகிட்டு இருந்தா என்ன தான் ஆகப்போகிறது...?”

“தங்கச்சி, தன் அருமை நாய்க்குட்டியைப் பறிகொடுத்தவன் பின்னே எப்படி இருக்க முடியும்...? என் நாய்க்குட்டி காணாமப் போச்சு; அப்பவே என் நிம்மதியும் காணாமப் போயிட்டுது. இப்போ என்னுடைய நாய்க்குட்டி செத்துப் போயிட்டதாக பத்திரிகையிலே வேறே தாக்கல் வந்திடுச்சு. பூங்கோதை, நீ மட்டும் இல்லையானா நான் என் நாய்க்குட்டியைத் தேடி எமலோகம் போயிருப்பேன். பெற்றவங்க அன்புண்ணா அது என்னான்னு நான் கேட்க வேண்டிய நிலையில் இருக்கேன். ஆனா உன் அன்பைப் பற்றி, என் பேரிலே நீ கொண்டிருக்கிற அந்தப் பாசத்தைப் பற்றி நான் மணிக்கணக்கிலே பேசுவேன். ஆனா ஒண்ணு மேலே இருக்கிறதாச் சொல்றாங்களே, அந்த ஆண்டவன் நம்ப ரெண்டு பேர் அன்பையும் அறிஞ்கக்காம இருந்தாரோ, நாம் பிழைச்சோமோ, பூதக் கண்ணாடி வச்சு இந்த ரகசியத்தைப் புரிஞ்சுக்கிட்டாரோ, அப்புறம் நமக்கு சோதனை காட்ட அவர் மூளை துரிதமாக வேலை செய்ய ஆரம்பமாகிடும்....!”

‘களுக்’கென்று சிரித்தாள் பூங்கோதை முத்துப் பற்கள் பிஞ்சு உதடுகளுக்கு அழகு சேர்த்தன.

“அண்ணா, நீ இப்படிப் பேசுறதைக் கூட திரை மறைவாத்தான் வைத்துக் கொள்ள வேணும். முன்னே, உன்னைப் படத்திலே நடிக்க எங்க அப்பா வலை போட்டாங்க, அப்புறம் உன்னைச் சர்க்கஸிலே விளையாடச் செய்ய ஒரு பாவி சதி செஞ்சான். இப்போ நீ அழகாப் பேசற துப்பு – வெளியே தெருவே பரவினா, பிரசங்கம் செய்யறதுக்கு உன்னை யாராச்சும் ஏரோப்ளேனிலே தூக்கிட்டுப் பறந்திடப் போறாங்க உஷார்! கபர்தார்!”

“நீ கூட ஜாக்கிரதையாக இருக்கணும், தங்கச்சி நீ பேசத் தொடங்கிட்டா என் காதிலே தேன் வந்து பாயுது. அப்புறம் நான் அடையும் சந்தோஷத்திலே திரும்பவும் மயக்கம் வந்திடப் போகுது!” என்று பதிலுக்குச் சொல்லிவிட்டுப் பலமாகச் சிரித்தான் பூபாலன்.

“அண்ணா, இன்னும் கொஞ்சம் சிரி அண்ணா...! சிரிச்சுக்கிட்டே இரு அண்ணா! இந்த மாதிரிச் சிரிப்பைக் கண்டு எத்தனை யுகமாயிடுச்க...?”

“தங்கச்சி!”

பூபாலனால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கண்களில் பொங்கி வந்த கண்ணீர், வாய்க்குள்ளிருந்து புறப்பட்ட வார்த்தைகளைத் தடுத்துவிட்டது.

அப்பொழுது ...

“தம்பி” என்ற இரட்டைக் குரல் ஒன்றாக ஒலித்தது.

பூபாலன் திரும்பினான்.

அங்கே அவனுடைய தாய் தந்தையர் நின்றார்கள்.

அவன் தலையைத் திருப்பிக் கொண்டான். “நம்ப மாரியம்மன் கிருபைதான். அப்பா மேலே நீ கோபப்படாதே, தம்பி. அந்த சர்க்கஸ்கார ஐயாதான் உன் அப்பாவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தாங்க. உன்னை பெரிய சர்க்கஸ்காரனாக ஆக்கிப்பிடுகிறதாகவும் சொன்னாங்க. ஆனா, இப்படியெல்லாம் இல்லாததும் பொல்லாதும் நடக்குமின்னு நாங்க என்னத்தைக் கண்டோம்? நாம் இனி நம்ப பிறந்த இடத்திலேயே தங்கி வெள்ளாமை விளைச்சலைப் பார்த்துக்கிட்டிருப்போம்... போதும், பட்டணத்து வாழ்வு!” என்று சொல்லிக் கண்ணீர் பெருக்கினாள் பூபாலனின் அன்னை.

“ஆமாம், தம்பி” என்று சொல்லித் தன் மகனின் முகத்தை அன்போடு வருடினான் முருகேசன், -

திக்கு திசை எதுவும் புரியவில்லை பூபாலனுக்கு அருகே நின்று தன்னையே அன்புப் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி பூங்கோதையை நோக்கினான் பூபாலன்.

“தங்கச்சி, நான் இப்போ எங்கே இருக்கிறேன்?”

“எல்லாரும் உங்க பிறந்த ஊரிலேதான் இருக்கிறோம்– பட்டணத்திலே இல்லே! அண்ணா, உனக்கு நிம்மதி கிடைக்க வேண்டுமென்றுதான் இங்கே பூவைமாநகருக்கு உன்னைக் காரிலே கொண்டாந்தோம். இத்தனை நாளாகத்தான் உனக்கு சுய நினைவே வரல்லியே! இனியாச்சும் நடந்த கதையையெல்லாம் மறந்திடு. மத்தியானத்துக்கு இந்த ஊரிலே மாரியம்மன் தேர் திருநாள் நடக்குதாம் – அதைப் படம் பிடிக்கப்போறாங்க எங்க அப்பா. சினிமா கம்பெனிக்காரங்க கூட வந்திருக்காங்க. இளைஞர் சங்கத்திலே தங்கியிருக்காங்க, நீயும் நானும் கூட கொஞ்ச நேரம் நடிக்க வேணுமாம். ‘வசந்த பைரவி’ சினிமாவுக்காக...! அதோ அப்பா காரிலிருந்து இறங்குறாங்களே!” என்றாள் பூங்கோதை, சிரிப்பு வெள்ளத்தில் அன்பின் அலைகள் ஆர்ப்பரித்தன.

தீப்பொறி தோன்றி மறைந்தது.

பூபாலன் சிலைபோல அப்படியே மயக்க நிலையில் நின்று விட்டான்.

“பூபாலா, மறுபடியும் உன் கண்ணிலே கண்ணீர் இருக்குதே? நீ அழுதா, நானும் அழுவேன். நீ அழாதே, அண்ணா”.

“பூங்கோதை, நம்பளோடே என் நாய்க்குட்டியும் நடிக்க வேணுமின்னு ஆசை வைச்சிருந்தேன். அது நிறைவேறலியேன்னுதான் வருத்தமாயிருக்குது..” என்று சொல்லிவிட்டு விம்மினான் அவன்.

அதே சமயம்–

“பூபாலன், இதோ பார் ஒரு நாய்க்குட்டி’ என்று கூப்பிட்டு அவனிடம் ஓர் அழகிய நாய்க்குட்டியைக் கொடுத்தார் பூங்கோதையின் தந்தை.

‘ஊஹூம், இது எனக்கு வேண்டவே வேண்டாம் என் நாய்க் குட்டி இல்லை இது. ஒரு தரம் நான் பட்டபாடு, அனுபவிச்ச வேதனையெல்லாம் போதும்!” என்று சொல்லிப் புலம்பினான் அவன்.

மத்தியானம்–

“பூங்கோதை!” என்று அழைத்தான் பூபாலன். பிறகு உள்ளே எட்டிப் பார்த்தான்.

பெண்கள் நாலைந்து பேர் சிறுமி பூங்கோதையைச் சற்றி நின்றுகொண்டு பாட்டுப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆகா! எவ்வளவு அற்புதமான காட்சியுடன், இனிமையான பாடல்.

‘குங்குமத்தின் பொட்டுதனை நெற்றியிலிட்டு
     குலச் சுடராம் கோதைக்கு வாழி பாடுவோம்.
எங்கள் குலக்கொடியில் பூத்த பூங்கோதை;
     எல்லோரும் அன்பு செயும் நல்ல பூங்கோதை;
மங்களம் பிறந்த தினம் போற்றி மகிழ்வோம்,
     மலரிதழைத் தூவி இறை பதம் பணிவோம்;
தங்கத்தைப் பொடிசெய்து கோல மிடுவோம்;
     தந்தத்தை வந்தவர்க்குச் சீர் வழங்குவோம்!’

“பூபாலா, புறப்படு, இன்றைக்கு ஷூட்டிங் இருக்கு. பூவைமாநகர் மாரியம்மன் தேர் திருநாளையும் படம் பிடிக்க வேணும். நீயும் கோதையும் அற்புதமாக நடிச்சிடணும்?” என்றார் கோதையின் தந்தை – டைரக்டர் பரசுராம். “ஓ” – ஒரு குரல் மட்டுமல்ல; இரட்டைக் குரல்!

கோயிலின் எதிர்ப்புறத்தில் இருந்த பங்களாவில் படப்பிடிப்புக்குரிய வேலைகள் நடைபெற்றன.

தேர் ஊர்வம் படமாக்கப்பட்டது.

பிறந்த நாள் வைபவ வாழ்த்துப் பாட்டைச் சற்றுமுன் பூபாலன் கேட்டு மெய் மறக்கவில்லையா? அதே பாட்டைத் திரும்பவும் பாடினார்கள்.

பூங்கோதை சிரித்த வண்ணம் நின்றாள். அப்பொழுது பூபாலன் மகிழ்ச்சி பொங்க, ஓர் அழகிய வைரச்சங்கிலியை யாரும் எதிர்பாராத சமயத்தில் பூங்கோதையிடம் நீட்டினான். “அண்ணா!”

“கோதை, இது என்னுடைய பரிசு. உன் பிறந்த நாளுக்கு இந்த ஏழையின் அன்புப்பரிசு!” என்றான் பூபாலன்.

பூங்கோதை மகிழ்ச்சியுடன் அதை வாங்கி அணிந்து கொண்டாள்.

“நானும் உனக்கு ஒரு பரிசு தரவேண்டாமா? இதோ!” என்று சொல்லித் தன் கழுத்திலிருந்த அந்தப் புதிய வைரச் சங்கிலியை கழற்றி அவன் கழுத்தில் போட்டாள் பூங்கோதை.

பிறகு இருவரும் சிரித்து மகிழ்ந்து, கை கோர்த்து நடனமாடினார்கள்.

“கட்!... ஒகே!... டேக்!...”

டைரக்டரின் குரல்கள் மாறி மாறி ஒலித்தது.

படம் பிடிக்கப்பட்டது:

அடுத்த இரண்டாவது வினாடி–

“ஆ!” என்று கதறினான் பூபாலன். கீழே கிடந்த கத்தியொன்றை எடுத்து எதிரே வீசினான்.

“ஆ!” என்ற எதிர்க்குரல் கேட்டது. எதிரே அந்தக் குரலுக்குரிய உருவம் நின்றது.

“ஐயோ! சர்க்கஸ்காரன்... சுகுமாரன்!”

சில வினாடிகள் தேய்ந்தன.

“தம்பி பூபாலன்! உன்னைக் கைது செய்திருக்கிறோம், இதோ நீ கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கும் இந்த வைரச் சங்கிலி திருட்டுச் சொத்து. இதோ பார் ‘சர்க்கஸ் சுகுமார்!’ என்ற எழுத்துகள் இந்தச் சங்கிலியின் டாலரில் மின்னுகின்றன...! சர்க்கஸ்காரர் சுகுமாரனுடையதாம் இந்தச் சங்கிலி! அதோடு, நீ அவரைக் கத்தியால் குத்த யத்தனித்த குற்றம் வேறே! ம்... புறப்படு தம்பி, அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு..!”

சட்டம் சிரித்தது; சிரித்துக் கொண்டேயிருந்தது!

9

றந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் என்றுமில்லாத கூட்டம். அடுத்த கட்டடத்திலுள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் ஜனங்கள் கூடி நின்றனர்.

பெரியவர் ஒருவர் சொன்னார் “பாவம், பூபாலன் நல்ல பையனாச்சே! பிறந்த மண்ணிலேயே பூவை மாநகரிலேயே முருகேசன் தங்க நினைச்சிருந்தான். போதாத காலம், அப்பன் மனசை ஒடியச் செய்ய, மகனுக்கு - அறியாத பிள்ளைக்கு இப்படி ஜெயிலும் விலங்கும் வந்து விடிஞ்சிருக்குது. படம் பிடிக்க பட்டணத்துக்காரங்க வந்த அதிசயத்தையே நம்ப நாடு நகரம் கதை கதையாய் பேசுது! அதுக்குள்ளே சட்டத்தின் அதிசயமான இந்தக் கதையையும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அந்த சர்க்கஸ்காரனோட வைரச் சங்கிலியை இந்தச் சின்னப் பிள்ளை திருடிடுச்சாம். அதுக்காக அவனுக்குத் திருட்டுப் பட்டம் கட்டின கையோடு விலங்கையும் கைக்கு மாட்டிப்பிட்டானே பாவி..! பட்டணத்துப் போக்கிரின்னா சரியாய்த்தான் இருக்கிறான்...! ம். ஆண்டவன் விட்டவழி! அரசாங்கத்தின் நியாயம் எப்படி இருக்கப்போகுதோ..? ஹும்...! படைச்சவனின் நீதி எப்படித் தீர்ப்புச் சொல்லப் போகுதோ..? வரவர உலகம் உருப்படாமல் போகுது. இல்லையானா, இந்தப் புயல் அடிச்சு ஊர் உலகத்தை இப்படி திமிலோகப் படுத்தியிருக்குமா?”

காலை மணி பதினொன்று.

அரசாங்கச் சேவகன் கூப்பாடு போட்டான்.

கூடியிருந்தவர்களின் கவனம் ஒன்று கூடியது.

சிறுவன் பூபாலன் கைதிக் கூண்டில் விலங்கும் கையுமாக கண்ணீரும் கம்பலையுமாக நின்றான். அருகே போலீஸ் ஜவான்கள் இரண்டு பேர் பாதுகாப்பிற்காக நின்றார்கள். ஒரு ஓரத்தில் பூங்கோதையின் தந்தை டைரக்டர் பரசுராம், பூங்கோதை, சர்க்கஸ்காரர் சுகுமாரன், பூபாலனின் அப்பா முருகேசன் ஆகியோர் நின்றார்கள்.

நாற்காலியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் சிந்தனைக் கோடுகள் கிழிக்கப்பட்டிருந்தன. அவருடைய கையில் அந்த வைரச் சங்கிலியும் கத்தியும் மின்னிக்கொண்டிருந்தன.

பட்டணத்துக்கு இந்த வழக்கை மாற்ற முயன்ற டைரக்டர் தோற்றார். பட்டணத்துக்கு இந்த விசாரணையை மாற்றத் தேவையில்லை என்று வாதாடிய சர்க்கஸ்காரர் வெற்றி பெற்றார்.

விசாரணை நடந்தது. இரு தரப்பு வக்கீல்களும் வாதப்பிரதிவாதங்களை முடித்துக் கொண்டார்கள்.

மாஜிஸ்திரேட்டின் கவனம் தன் மேஜை மீதிருந்த தாளில் ஓடியிருந்த எழுத்துக்களில் ஈடுபட்டிருந்தது. பூபாலனின் வாக்குமூலம் அது :

“...என் பெயர் பூபாலன். என் பிறந்த ஊர் அறந்தாங்கியிலிருக்கும் பூவைமாநகரம் என்பது. என் அப்பா பிழைப்பு காரணமாக சென்னைப் பட்டணத்துக்குப் போனார். அப்பாவுக்கு இந்த சர்க்கஸ்கார முதலாளி சுகுமாரன்தான் சிபாரிசு பண்ணி வேலையில் அமர்த்தினார். நான் சினிமாப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டதை இவர் எப்படியோ அறிந்து, தன்னுடைய சர்க்கஸ் கம்பெனியில் என்னைச் சேர்த்துவிடத் துடியாய்த் துடித்தார். எனக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை ஒரு நாள் என்னைத் தந்திரமாக தன்னுடைய இருப்பிடத்துக்குக் கூட்டிச் சென்றார். வேறு ஏதோ ஒரு நாய்க்குட்டியைக் காட்டி அதுதான் காணாமல் போன என்னுடைய நாய்க்குட்டி என்று பொய் சொல்லி, என்னை ஏமாற்றப் பார்த்தார். கடைசியில் என்னுடைய அந்த நாய்க்குட்டியும் கிடைத்தது. ஆகவே, அவருடைய மகள் அல்லி என்ற சிறு பெண்ணின் அன்பு நிறைந்த நிர்ப்பந்தத்தின் பேரில் நான் அங்கு தங்கினேன். எனக்கு என்னவோ சர்க்கஸ் விளையாட்டு வெறுப்பாகயிருந்தது. ஆனால் நான் சர்க்கஸில் விளையாட ஆரம்பித்ததிலிருந்துதான் அவருக்கு நிறைய வசூலானது. ஒரு நாள் இந்தச் சர்க்கஸ்காரனை ஏமாற்றிவிட்டு ஓடி விட முன் கூட்டியே நான் திட்டங்கள் போட்டிருந்தேன். நானும் என் அருமை நாய்க்குட்டியும் ‘பார்’ விளையாடிக் கொண்டிருக்கையில், காம்பவுண்ட் சுவருக்கு அருகில் தயாராக நின்ற என் உயிர் தோழி – அன்புச் சகோதரி பூங்கோதையின் காரில் குதிக்கப் போன சமயம், என் ரகசியத்தை எப்படியோ துப்பறிந்திருந்த இவர் என்னைக் குறிபார்த்துச் சுட்டார். நான் தப்பித்துக் கொண்டேன். நான் மட்டுமே காரில் தொப்பென்று விழுந்தேன். என் நாய்க்குட்டி கை தவறி விட்டதை அப்புறம்தான் அறிந்துகொண்டேன். என் நாய்க்குட்டி இறந்து விட்டதாக அடுத்த நாள் பேப்பரில் படித்தேன். அதிலிருந்து எனக்கு மூளை குழம்பி விட்டது. கடைசியில் என் மனத்தின் அமைதிக்காகப் பட்டணத்தை விட்டு பூவைமாநகருக்கு வந்தேன்.

என் பெற்றோர் பேரில் நான் கொண்டிருந்த ஆத்திரத்தையும் அவர்கள் மாற்றி விட்டார்கள். சென்ற வாரம் சூட்டிங்கில் தேர்த் திருவிழாவில் – நானும் பூங்கோதையும் நடித்தோம்.

கோதையின் பிறந்த நாள் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டுமென்று எண்ணியவாறு நடந்து முன் சென்ற போது, வழியில் ஒரு புத்தம் புதிய வைரச் சங்கிலி கிடக்கவே, சடக்கென்று அதை எடுத்து சமயோசிதமாக என் அன்புக் கோதைக்கு பரிசளித்து விட்டேன். அவளோ அதையே கழற்றி எனக்குத் தன் பரிசாகத் திரும்பப் போட்டு விட்டாள் சிறிது நேரம் சென்றதும் என்னை நோக்கி ஒரு கத்தி வருவது கண்டு விலகிக் கொண்டேன். குறி தவறிய கத்தி சிறிது தூரம் தள்ளி விழுந்தது. எதிரே பார்த்தேன். இந்தச் சர்க்கஸ்காரர் என் முன் நின்றார். என் மீது அவருக்கு இருந்த பல நாள் கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளத்தான் இச்சதி செய்திருக்கிறார் என்று தோன்றியது. உடனே அவர் என் மீது குறி வைத்து வீசிய அதே கத்தியை பதிலுக்கு நான் குறி வைத்து அவரை நோக்கி வீசினேன். அடுத்த நிமிஷம் போலீஸ்காரர்கள் என்னைக் கைது செய்தார்கள். இந்த வைரச் சங்கிலியைப் பற்றிய விவரம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் நிரபராதி. ககுமார் சொல்வது பொய். அவருடைய வைரச் சங்கிலியை நான் வேலை பார்த்தபோதே திருடி வந்து விட்டதாகப் பழி சுமத்துவது அபாண்டப் பொய். நான் நிரபராதி. கடவுள் சாட்சியாக நான் சொன்னது பூராவும் உண்மை...!”

மாஜிஸ்திரேட் சைகை காட்டினார். எஸ்.ஐ. எழுந்து சென்றார். கத்தியும் வைரச் சங்கிலியும் இப்பொழுது அவரது மேஜையில் கிடந்தன. மாஜிஸ்திரேட் அவை இரண்டையும் புரட்டிப் பார்த்தார் ‘சுகுமார்’ என்ற அழகான எழுத்துக்கள் அவை இரண்டிலும் மின்னின. அடுத்த மூன்றாம் நாள் தீர்ப்புச் சொல்லப்படுமென்று அறிவிக்கப்பட்டது.

மூன்றாம் நாள்...!

கூடியிருந்த அனைவரின் பார்வையும் ஒரு முகமாக மாஜிஸ்திரேட்டையே நோக்கியிருந்தது. அப்பகுதிக்கு அவர்தானே நீதியின் காவலர்!

பூபாலன் பழைய கைதிக் கோலத்துடன் கிளிக் கூண்டில் நின்றான். டைரக்டர், பூங்கோதை, பூபாலனின் தகப்பன் முருகேசன் முதலியோர் தெய்வத்தின்மீது பாரத்தைப் போட்ட வண்ணம் நின்றார்கள்.

இந்தத் துயரக் காட்சிகளைக் கண்டு அந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு மனிதரால் தான் சிரிக்க முடிந்தது. ஆம். அவர்தான் சர்க்கஸ் கம்பெனிச் சொந்தக்காரரான சுகுமார்! நீதி பேசியது: “சிறுவன் பூபாலனை விடுதலை செய்கிறேன். தன் மீது குறி வைத்து வீசப்பட்ட சுகுமாரனின் கத்தியைக் கொண்டுதான் எதிரியைத் தாக்கியிருக்கிறான் சிறுவன். எதிரியின் பெயர் கத்தியிலிருப்பதே இதற்குச் சாட்சியம். அடுத்ததாக, இந்தப் பையன் களவாடி விட்டதாகச் சொல்லப்படும் இந்த வைரச் சங்கிலி சர்க்கஸ் சுகுமாரனுடையதென்று இவரே சொல்கிறார். அதற்கு அத்தாட்சியாக இவர் பெயரே இதிலும் பொறிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் பாவம், இந்த வைரச் சங்கிலி போலி நகை...! இதில் வைரமும் இல்லை; தங்கமும் இல்லை. யானை தன் தலையில் மண்ணைக் கொட்டிக் கொண்டு விட்டது. பொய்யாக கேஸ் கொடுத்த இந்தச் சுகுமார் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப்பட வேண்டும். பாவம், இவரையும் மன்னிக்கிறேன். இனியும் இந்த சுகுமாரன் திருந்தவில்லையென்றால், மறுபடியும் கம்பி எண்ணாமல் இவர் தப்பவே முடியாது சிறுவன் பூபாலனை இப்போதே விடுதலை செய்கிறேன்!”

அடுத்த மின்வெட்டும் இடைவேளையிலே மற்றுமொரு எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.

அவசரத் தந்தியொன்று வந்தது.

மாஜிஸ்திரேட் உத்தரவு போட்டார் : “எஸ்.ஐ! அந்தச் சர்க்கஸ்காரர். சுகுமாரை உடனே கைது செய்யுங்கள்!”


1O

பூவைமாநகரில் எங்கு பார்த்தாலும் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதற்குரிய காரணங்கள் - அவ்வூர் ஆரம்பப்பள்ளி, உயர் தர ஆரம்பப் பள்ளியாக அன்று தான் உயர்த்தப்பட்டது. அந்தக் கிராமத்தில் அன்றைக்குத்தான் புதியதாக தபாலாபீஸ் திறக்கப்பட்டது. பிறகு, சந்தோஷத்துக்குக் கேட்க வேண்டுமா, என்ன?

புது உலகிலே சஞ்சரிப்பதாக அப்பொழுது பூபாலனுக்குத் தோன்றியது.

‘போன வாரம் இதே நேரத்துக்கு அறந்தாங்கி ஜெயிலிலே அடைப்பட்டுக் கிடந்தேன். ஆண்டவன் புண்ணியத்திலே தலைக்கு வந்தது தலைப்பாகையோடே போயிடுச்சு. நல்லவங்க ஒரு நாளும் கெடுவதில்லைன்னு தமிழ் வாத்தியார் அடிக்கடி பாடம் படிச்சுக் கொடுப்பாங்க - அது நூற்றுக்கு நூறு நிஜம் தான். அந்தச் சர்க்கஸ்காரன் பலே ஆள்தான். நெஞ்சில்லாத இரக்கமில்லாத அந்தப் பாவிக்கு நெஞ்சுள்ள, இரக்கமுள்ள அல்லி மகளாகப் பிறந்திருக்குது. நத்தை வயிற்றிலே முத்து பிறக்கிற கதைதான்..! ஆனா, தங்கச்சி பூங்கோதை, பூங்கோதையேதான்! அது உடம்பெல்லாம், அன்பு: செய்கையெல்லாம் அன்புதான்! அது மாதிரியேதான் அதோட அப்பாவும்...! நான் ஏழை வீட்டுப் பையன் அதுவோ பணக்கராங்க வீட்டுப் பொண்ணு! மலையும் மடுவும் சடுகுடு விளையாடற கதைதான் ஆண்டவன் பலே கில்லாடிதான்! படைப்பின் புதிர் ரொம்ப அதிசயம், அதைக் காட்டிலும் அதிசயம் வாழ்க்கையின் புதிர்!’

வயதிற்கும் அப்பாற்பட்ட வரப்புக் கோட்டில் நின்று அவனது எண்ணங்கள் ஓடின சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். புதுச் சட்டை, நிஜார் மாற்றினான். வாரிவிடப்பட்ட கிராப்பில் ஒரே ஒரு மயிரிழை அவன் நெற்றியோடு மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தது சிரித்துக் கொண்டே ஓடினான் அவனை முந்திக் கொண்டு, ஏப்பம் ஒட்டமாக ஓடியது ஆறு இட்டிலி, இரண்டு தோசை, ஒண்ணரை டம்ளர் அசல் காப்பி என்றால் காசா, லேசா?

சிறுவன் பூபாலன் கீழத் தெருவிலிருந்து ஓடி வந்தான்.

“தம்பி, உன்னை விடுதலை பண்ணிட்டாங்களாமே? நல்லவேளை, தம்பி” என்றார் காந்திஜி நூல் நிலையக் காரியதரிசி சோமசுந்தர ஆசாரி.

“அடடே, மிஸ்டர் பூபாலனா..? உன் பெயர் ஞாபகம் வந்ததும், உடனே எனக்கு நம் ஊர் எழுத்தாளர் ஒருவரின் புனைப்பெயரும் ஞாபகத்துக்கு வந்துவிடும். சாப்பிடப்பா! அடைக்கலம். இரண்டு டீ போடு ம்...! அப்படியே உட்காரப்பா? பட்டணத்து வாடை அமர்க்களமாய் வீசுதே? ஆமா, நீ மறுபடியும் பட்டணத்துக்கு டேரா தூக்கப் போறியா. உங்க அப்பாரு இங்கேதான் வெள்ளாமை விளைச்சலைப் பார்த்துக்கிட்டு இருக்கப் போறதாகச் சேதி கிடைச்சுதே...? மெய்யா? அந்த சர்க்கஸ்காரனை ‘அரஸ்ட்’ பண்ணிட்டாங்களாமே?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே போனார் பாலகிருஷ்ணன்.

தன் எதிர்காலத் திட்டம் பற்றிய கேள்விகள் எழுந்தபோது பூபாலன் நறுக்குத் தறித்த மாதிரி கூறின பதில் இதுதான் “ஆமா எனக்குப் பட்டணம் அறவே பிடிக்கவில்லை. நல்லவங்களுக்கு வரக்காத்திருக்கிற ஆபத்துக்களுக்குக் கணக்குமில்லே, வழக்குமில்லே. இதுதான் என் பிறந்த ஊர் இங்கேதான் நான் படிக்கப் போறேன். அப்பாவோடு நானும் வெள்ளாமை செய்யக் கூடப் பழகிக்கிடுவேன். எங்களைப் போன்ற ஏழை பாழைங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிற பெரிய மனிதர்கள் தாம் என் வரை தெய்வங்கள்:”

தப்பித்தோம் பிழைத்தோம் என்று நடந்துவந்தான் பூபாலன். வழியில் அவனுடைய நண்பர்கள் மனோரஞ்சிதம், தங்கவேலு, வீரமணி, சிங்காரம் ராஜாக்கண்ணு, துரைராசன், தியாகு முதலியோர் குறுக்கிட்டார்கள்.

“பலே, முன்பு நம் ஊர்க்கார எழுத்தாளர் பெயர் திரையிலே வந்தது; இப்போது நம் பூபாலனைப் படத்திலே சந்திக்கப் போகிறோம். பூவைமாநகர் இப்போதுதான் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது”

“ஆமா, ஆமா! அதுபோலவே இந்த ஊர்க்காரங்க எல்லாரும் ஒருவருக்குள்ளே ஒருவர் வம்படிச்சிக்கிடாம, கட்சி மனப்பான்மையை மறந்து, ஒற்றுமையாகி, பூவைமாநகர் என்ற பேரிலே கூட்டுக்குரல் எதிரொலிக்கும் நாள்தான் இந்த ஊருக்கு விடிவு நாளாகும்!” என்று உணர்ச்சிப் பெருக்கோடு எடுத்துச் சொன்னான் பூபாலன்.

அப்பொழுது–

அவன் அருகாமையில் ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டே வந்து நின்றது.

ஒரு கணம் தொடுத்த கண் வாங்காமல் அந்த நாயைப் பார்த்துக் கொண்டிருந்தான் பூபாலன். ‘குபுக்’கென்று கண்கள் கலங்கிவிட்டன. அந்த ஒரு நாள் – கப்பலோட்டிய தமிழனுக்குச் சிரம் வணங்கிக் கரம் கூப்பி அஞ்சலி செய்து திரும்புகையில், கார் விபத்துக்கு ஆளாகி உயிர் துறந்த தாய் நாய் விட்டுச் சென்ற அந்த நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவத்தை அவன் எப்படி மறப்பான்...? வீட்டுக்கு வந்ததும் அந்த நாய்க்குட்டிக்கு உண்டான எதிர்ப்புகளைச் சமாளித்து அதைத் தன்னோடு வைத்துக் கொண்டு வளர்க்கத் திட்டமிட்ட போது, அது காணாமற் போன நிகழ்ச்சியைத்தான் அவனால் மறக்க முடியுமா? இல்லை. காணாமற் போன அவனுடைய அருமை நாய்க்குட்டியை சினிமா ஸ்டுடியோவில் கண்ட கண்கொள்ளக் காட்சியைத் தான் அவன் மறப்பானா, கடைசியில், சர்க்கஸ்காரன் சுகுமாரின் கம்பெனியில் ‘பார்’ விளையாடினான் அல்லவா? அப்போது, முன்கூட்டியே முடிவெடுத்த திட்டத்தின் படி அவன் அந்த நாய்க் குட்டியுடன் தப்பி வாசலுக்கு வெளியே நின்ற பூங்கோதையின் காரில் குதிக்க எத்தனம் செய்த போது, சர்க்கஸ்காரன் குறி வைத்துச் சுட்டதை நீங்களே நினைவு வைத்துக் கொண்டிருப்பீர்களே? அப்பொழுது அவன் மட்டுமே தப்பினான். நாய்க்குட்டி சர்க்கஸ் கூடாரத்தில் அகப்பட்டுவிட்டதாக எண்ணியிருந்தான்..! ஆனால், பாவம். அடுத்த நாள் பத்திரிக்கையில் தான் தப்பிய விவரத்தைப் பற்றியும், தன்னுடைய நாய் சுகுமாரனால் சுடப்பட்டு மாண்டதைப் பற்றியும் படித்த போது, அவனுக்கு மூளை குழம்பிவிட்ட துயரம் மிகுந்த நாட்களையும் அவன் மறத்தல் சாத்தியமே இல்லை!

‘என்னோட அருமை நாய்க்குட்டியைப் பிரிஞ்சு எத்தனை மாசமாயிட்டது? அது இந்நேரம் உயிரோடே இருந்திருந்தால், பெரிய நாயாக ஆகியிருக்குமே? என்று மனதிற்குள் நினைத்துப் பார்த்த பூபாலனுக்கு அழுகை வந்து விட்டது.

அப்பொழுது–

உலகத்து அதிசயங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கை குலுக்கிக் கொண்டிருந்தன – ஆஹா பட்டணத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பூங்கோதையும் அவளுடைய அப்பா டைரக்டர் பரசுராமனும் அல்லவா!

உண்மைதானா–அல்லி!... அரக்கன் சர்க்கஸ் சுகுமாரின் புதல்வி!

என்ன அதிசயம்! என்று அவனைக் கைது செய்து விடுவித்த அதே எஸ்.ஐ – அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்!

அவன் முன் நின்று கொண்டிருந்த அத்தனை பேரிலும் பூங்கோதை முன்னாடி வந்தாள்.

“பூபாலன் அண்ணாச்சி! நாங்க இந்த ஊரை விட்டுப் பட்டணத்துக்குப் போன இரண்டு மூணு நாளுக்குள்ளே ரொம்ப ரொம்ப அதிசங்கள் நடந்து விட்டன.

சர்க்கஸ்காரன் சுகுமாரன் கள்ள நோட்டு தயாரிப்பவனாம்..! அவனுடைய அட்டூழியத்தைப் பொறுக்காமல் அல்லியே அவனைக் காட்டிக் கொடுக்க இருந்துச்சாம். அதுக்குள்ளே அவனைக் காட்டிக் கொடுத்திட்டுது அவன் கிட்டேயிருந்த ஒரு நாய்க்குட்டி...! இது முதல் அதிசயம்! அடுத்த அதிசயம் என்னான்னா, அல்லி அவனோட வளர்ப்புப் பெண்ணாம்! நீ அங்கே வேலைக்கு இருக்கிறப்பவே அது எல்லா ரகசியத்தையும் உங்கிட்டே சொல்லத்தான் துடிச்சுதாம்; சமயம் வாய்க்கலையாம். இப்போது மூன்றாம் அதிசயம் நடக்கப் போகுது. ரெடி, ரெடி, பார், பார்” என்று சொல்லி விட்டுப் பூபாலனுக்கு முன்னே வந்து நின்றாள் பூங்கோதை.

அவர்கள் முன்னிலையில் இப்பொழுது ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டே‘ஜாம் ஜாம்’ என்று வந்து நின்றது.

காண்பது கனவா, நனவா என்றே சிறுவனுக்குப் புரியவில்லை. எதிரில் நின்ற அந்த நாயைக் குனிந்து தொட்டு பார்த்தான். அவனை நெருங்கி அவன் முகத்தை நாக்கால் நக்கியது அது. அன்பு, அன்பு, அன்பு! மறுகணம் அவன் அந்த நாயைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினான். இரண்டு கண்களும் இரண்டு லட்சம் கண்ணிர் முத்துக்களைச் சரம் தொடுத்து அவனுடைய நாய்க்கு மாலை போட்டன.

“தெய்வமே, நீ நிஜமாகவே உலகத்திலே எங்கேயோ ஓர். இடத்திலே இருக்கத்தான் இருக்கிறாய்! இல்லையானால் என் அருமை நாய் என்கிட்டே திரும்பவும் கிடைச்சிருக்குமா?” என்று சொல்லிய வண்ணம் குதித்தான் பூபாலன்.

“பூபாலன், நாய்தான் ரொம்பவும் நன்றியுள்ள பிராணி, அது செத்து விட்டதாகப் பேப்பரிலே போட்டிருந்த சேதிகூட அந்தச் சர்க்கஸ்காரன் செஞ்ச சூழ்ச்சிதானாம்! இந்த நாய்க்குட்டியின் நன்றிக் கடனுக்கு ஈடும் இல்லை; இணையும் இல்லை. அன்றைக்கு சாவிலிருந்து இதைக் காப்பாற்றினாய்! அந்த நன்றியை இன்னமும் மறக்கலே, பாரு...! சரி. இதோ பார், நாலாவது அதிசயம்!” என்று கூறிக்கொண்டே ஒரு பத்திரிக்கையை எடுத்து நீட்டினார் டைரக்டர் பரசுராம்.

(Upload an image to replace this placeholder.)



பூபாலன் ஆவல் பொங்கப் படித்தான் :

பிரசித்தி பெற்ற சர்க்கஸ் முதலாளி கைது செய்யப்பட்டார். அவர் வளர்த்த பெண் அல்லியும் ஒரு பெரிய நாய்க்குட்டியுமே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டன. அவர் பெரியதொரு கள்ளநோட்டுத் தயாரிப்பாளர் என்ற ரகசியத்தை இந்த நாய்க்குட்டி மூலம்தான் போலீஸ் இலாகாவினர் அறிந்தார்களாம். இந்த நாய் மவுண்ட்ரோட் போலீஸ் ஸ்டேஷனில் நின்று குரைத்து சில சைகைகள் செய்ததன் பேரில், போலீஸ்காரர்கள் சிலர் அதைப் பின் தொடரவே அது சர்க்கஸ் கூடாரத்தை அடுத்த பங்களாவிலிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு வழிகாட்டியது. கூடியிருந்த சிலபேர் கைது செய்யப்பட்டனர். சுகுமாரன் அப்பொழுது அறந்தாங்கியில் இருப்பதறிந்து, அந்த போலீஸுக்குத் தகவல் அனுப்பி உடனே அவரையும் கைது செய்து விட்டார்கள்.

சென்னை போலீஸ் இலாகா பராமரிக்கும் ‘துப்பறியும் நாய்களுக்கு’ இருக்கும் சில பண்புகள் இதற்கும் இருப்பதால், இதைத் தாங்களே வைத்துக் கொள்ள எண்ணி இந்த நாயின் விவரத்தை அறிய-முயன்றார்கள். இது பூபாலன் என்ற சிறுவனின் நாய் என்ற செய்தி கிடைத்தது. சிறுவனுக்கு வஞ்சனை செய்தவனைக் கடைசியில் பழி வாங்கிவிட்ட இந்த நாயின் நன்றிக் கடனைப் பற்றித்தான் ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறது. ஆம்; இந்த நாய்க்குட்டிக்குத்தான் ‘கோஹினூர்’ என்ற செல்லப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள் போலீஸ் இலாகாவிலே!'

பூபாலன் உணர்ச்சி வசப்பட்டு அப்படியே நின்றான்.

“தம்பி பூபாலன்! நான்கு அதிசயங்கள் நடந்து முடிந்தன. இப்பொழுது ஐந்தாவது அதிசயம் நடக்கவிருக்கிறது. உன்னுடைய நாய் கோஹினூர் சாதித்த நல்ல செயலுக்கு தமிழக அரசினர் உன் நாய்க்குப் பரிசாக ஒரு தங்கப் பதக்கத்தையும் உனக்கு இருநூறு ரூபாய் ரொக்கப் பரிசையும் எங்கள் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். கோஹினுரை நீ பிரியப்பட்டு சென்னை போலீஸ் இலாகாவுக்கு அனுப்பினால், பெருமையுடன் பெற்றுக் கொள்வதாகவும் செய்தி அறிவிக்கும்படி எழுதியிருக்கிறார்கள். ஆனால், உன் கதையை முழுதும் அறிந்த பிறகு, அந்த வேண்டுகோளை உன்னிடம் கூறவே மனம் மருகிற்று. ஆகவே, இந்த கோஹினூர் உன்னுடனேயே இருக்கட்டும்” என்று சொல்லிய போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கப் பதக்கத்தை நாயின் கழுத்தில் மாட்டினார்.

வாலைக் குழைத்துச் சிரித்த கோஹினூரை முகத்தோடு முகம் பொருத்திக் கொஞ்சினான் பூபாலன்.

“எல்லாருக்கும் என் வணக்கமும் நன்றியும். எனக்குப் புது உலகப் புது வாழ்வு தந்த அன்பு ஜீவன் அருமை கோஹினூர். என் உயிருள்ள மட்டும் அதை என்னால் மறக்கவே முடியாது...!” என்று பூபாலன், உணர்ச்சி பொங்கும் குரலில் சொன்னான்.

“பூபாலன் அண்ணாச்சி! எங்க படத்திலே இன்னொரு காட்சி எடுக்க வேண்டியிருக்குதாம். அதிலே நீ, நான், அல்லி, உன் கோஹினூர் எல்லாருமே சேர்ந்து நடிச்சிடுவோம்...ம்! ஓ.கே. சொல்லித் தீரணும்...! நாளைக்குப் பட்டணத்துக்குப் பயணப்படணும்...!”

“பூங்கோதை ! உன் பேச்சைத் தட்டிப் பேச எனக்கு ஏது உரிமை?” என்றான் பூபாலன், கண்களைச் சிமிட்டியபடி,

உடனே, எல்லோரும் சேர்ந்து ‘களுக்’கென்று சிரித்தார்கள். ஆமாம்; கோஹினூரும் சேர்ந்துதான்!.