அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/001

விக்கிமூலம் இலிருந்து
அன்னை கஸ்தூரிபாயின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண்!

"வ்வொரு பிரபலமான, வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்னால், நிச்சயமாக ஒரு பெண் இருப்பாள்" என்பது ஆங்கிலப் பழமொழி!

"தாய்க்குப் பின் தாரம்", "இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை.” என்பவை எல்லாம் தமிழ்நாட்டுப் பழமொழிகள்!

ஏறுக்கு மாறாக மனைவி அமைந்தால், அவன் சந்தியாசம் பெறுவதே நல்லது என்று அவ்வைப் பெருமாட்டி கூறியுள்ளார்.

திருவள்ளுவர் பெருமான், மனைவியை, மனைவி என்ற வார்த்தையால் சுட்டிக் காட்டாமல், வாழ்க்கைத் துணை என்றும் கூறாமல், வாழ்க்கையிலே துணையாக நின்று அவனது எல்லாச் செயல்களிலும் நன்மை புரிபவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மனைவி என்பவளை "வாழ்க்கைத் துணை நலம்' என்று குறிப்பிட்டது சிந்தனைக்குரியதாகும்.

நமது அண்ணல் மகாத்மா காந்தியடிகளது வெற்றிக்கும், புகழுக்கும் பின்னால் அன்னை கஸ்தூரிபாய் அற்புதமான ஒரு வாழ்க்கைத் துணை நலமாக வாழ்ந்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்க வரலாறாகும். எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தியடிகள், தனது சொந்த ஊரான, ராஜ்கோட் சமஸ்தான நகரிலே வழக்குரைஞர் தொழில் செய்த போது, போதிய வருமானம் வரவில்லை என்ற நிலையில் தென் ஆப்ரிக்க நாட்டில் வாழும் இந்தியர் பகுதிக்குச் சென்றார். அப்போது, அவர் தனது மனைவி கஸ்தூரிபாயையும் உடன் அழைத்துச் சென்றார்.

அங்கு இந்தியர்களை இழிவாக நடத்தி வந்த அடிமைத் தனத்தை எதிர்த்து அங்குள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி உரிமைப் போர் என்ற தியாக வேள்வியில் பலரை ஈடுபட வைத்து, தன்னையும் அதில் இணைத்துக் கொண்டு போராடினார்.

அந்தப் போராட்டத்தின் போது சட்டத்தை எதிர்த்து அறப்போர் செய்வதற்கு மகளிர் படையைத் திரட்டி, சக்தியாக்கிரகம் செய்யப் போகும் பெண்கள் எப்படியெல்லாம் சட்ட மறுப்புப் போரைச் செய்ய வேண்டும் என்று தனது திட்ட முறைகளை விளக்கிக் கொண்டிருந்ததை மகாத்மாவின் துணைவி கஸ்தூரிபாய் தனது வீட்டின் ஜன்னலருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தார்.

காந்தியடிகள் வீட்டிற்குள் வந்ததும், 'பெண்கள் சட்ட மறுப்புப் போராட்டம் செய்யப் போவதைப் பற்றி என்னிடம் நீங்கள் என் கூறவில்லை? நான் என்ன அதற்குத் தகுதியற்றவளா?' என்று கஸ்துரிபாய் அடிகளாரைக் கேட்டார்.

அதற்குக் காந்தியடிகள், "கஸ்தூரி உனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர்களைப் பார்ப்பதோடு, மேலும் உனக்குத் தொந்தரவு கொடுக்க என் மனம் விரும்பவில்லை. மற்றப் பெண்களோடு நீயும் சிறை புகுந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். எனது மகிழ்ச்சிக்காக உன்னை நான் சிறை புகவிட விரும்பவில்லை.”

"போராட்டம் செய்வதற்கு பெண்களே துணிந்து வர வேண்டுமே தவிர, நீ போகிறாயா சிறை புக சம்மதமா? என்று கேட்பது சரியல்ல. ஒரு வேளை நீ எனக்காகச் சம்மதித்துப் போராடி நீதி மன்றம் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டால், அப்போது நடுங்கினால், சிறை புகப்பயந்து பின்வாங்க நேர்ந்து திரும்பி வந்து விட்டால், என்னுடைய அரசியல் வாழ்வு பாதிக்கப்படும் அல்லவா? இந்தியர்கள் உரிமைக்குக் களங்கம் உருவாகிவிடுமே...! அப்போது எனது அரசியல் மரியாதை என்னவாகும், என்பதைச் சற்று எண்ணிப்பார். நான் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? இதையெல்லாம் சிந்தித்துத் தான் நான் உன்னைக் கேட்கவில்லை.... என்றார் காந்தியடிகள்.

"சிறைத்துன்பங்களுக்குப் பயந்து அல்லது நீதி மன்றத்தின் முன்பு மன்னிப்புக் கேட்டு விட்டு நான் வெளியே வந்தால், நீங்கள் என்முகத்தில் விழிக்க வேண்டாம். கஷ்டங்களை, கணவர் அனுபவிக்கும்போது நான்மட்டும், என் பிள்ளைகளுடன் சுகவாசியாக இருப்பேனா? அப்படிப்பட்ட நான் உங்களது மரியாதைக்குரிய மனைவியாவேனா?"

"நான்தான் இந்தப் பெண்கள் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துவேன். இதில் யோசித்துப் பார்க்க இருவித கருத்துக்கள் இல்லை".... என்று கூறினார் கஸ்தூரி பாய்.

அதற்கேற்ப, தென்னாப்ரிக்க இந்தியர்களது போராட்டத்தை, குறிப்பாகப் பெண்கள் படைக்குத் தலைமையேற்று அறப்போர் செய்து வீராங்கனையாக சிறை புகுந்தார் கஸ்தூரி பாய்!

அரசியல், பொருளாதாரம், சமூக உரிமைகள் இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாத அன்னை கஸ்தூரிபாய், தனது கணவரின் லட்சியம், அரசியல், மரியாதை, போராட்டம், மக்களது உரிமைகள் மீட்பு என்பதை மட்டுமே புரிந்து, தனது கணவர் ஏதாவது செய்கிறார் என்றால், அதில் உண்மை, சத்தியம், நியாயம் இருக்கும் என்று தனது புருஷன் சொல்லே வேதவாக்கு என்று நம்பி அவர் சிறை புகுந்தார்!

இதற்குப் பிறகு தென்னாப்ரிக்க இந்தியரின் உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றது. இந்தியருக்கு விரோதமான சட்டங்களை ஆங்கிலேயர் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அன்னை கஸ்தூரி பாய் விடுதலை செய்யப்பட்டார்!

இந்த சேவை மனப்பான்மை நிறைந்த தொண்டுள்ளத்துடன் எண்ணற்ற செயல்களை இந்திய விடுதலைக்காகச் செய்து மறைந்தவர் அன்னை கஸ்தூரிபாய் காந்தி. அந்த மாதரசியின் வரலாற்றை தொடர்ந்து இனி காண்போம்.

xxx