அன்பு வெள்ளம்/இயேசு சொன்னது

விக்கிமூலம் இலிருந்து

இயேசு சொன்னது

லகுக்கு இயேசுபெருமான் வந்தார். ஏன்? முதல் உடன் படிக்கையை அவ் உடன்படிக்கையில் எடுத்துக் கூறப்பட்டுள்ள சமய ஆசிரியநிலை, கழுவாய் தேடுதல், பாதுகாப்பு, தன்மறுப்பு, சட்டம் ஆகியவற்றுடன் நிறைவேற்றிடவே. அதே நேரத்தில், பாதுகாத்து அருளல் என்பதனைவிட முழுநிறைவு மீட்டருளலை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய உடன்படிக்கையை அதுவும், ஒரு புதிய படைப்பு - சமயக் குருநிலையும் தன் இழப்பும் மற்றும் சட்டத்தினையும் கொண்ட உடன்படிக்கையை நிறுவிடவே உலகுக்கு வந்தார் என்பதே உகந்ததும் பொருத்தமானதும் ஆகும்.

யோவான் 13:34-35 “நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவராக அன்பாயிருங்கள் என்கிற புதிதான் கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்"

"நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய தொண்டர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” என்றார்.

இந்தத் திருமறைச் சொற்றொடரில் 'அகாபா' (Agapa) என்றொரு புதிய சொல்லைக் கூறுகிறார் இயேசு, 'அகாபா' என்றால் 'அன்பு' அல்லது 'அருளிரக்கம்' என்று பொருள் சொல்லப்படுகிறது. அந்தச் சொல் இயேசு அளித்த புதிய கட்டளையின் தனி ஆணையின் கீழ் வாழ்தலாகிய புதிய படைப்பு எனும் மெய்ப் பொருளியலை அறிமுகப்படுத்துகின்றார். அவர்தம் உலகில் ஆற்றுவதற்கான பாடுபணிகளை ஆற்றியதன் அடிப் படையிலும் மேலோங்கி நிற்கும் புதிய கட்டளையைக் கொடுக்கிறார் இயேசு.

"அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் அறமுறைகளைக் கைக் கொண்டு, அவற்றின்படி செய்ய, நான் அவர்களுக்கு என் நெஞ்சத்தைத் தந்து அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்துக், கல்லான நெஞ்சத்தை அவர்கள் தசையிலிருந்து எடுத்துப் போட்டு, சதையான நெஞ்சத்தை அவர் களுக்கு அருளுவேன்"

இவ்வாறு இயேசு அருளிச் செய்த மொழியிலிருந்து என்ன தெரிகிறது?

"நான் ஒரு நெஞ்சத்தைத் தருவேன்” என்னும் அச் சொற்றொடர், அப்படி இயேசுவால் அருளப் பெறுகின்ற நெஞ்சம் அல்லது நெஞ்சங்கள் அனைத்தும் அன்பினால் ஆளப்பெறுபவை என்பதாகும். அடுத்து, 'என்னுள் ஒங்கும் புதிய ஆவியை உங்களுள் நிரப்புவேன்' என்பதனை விளக்கமாகப் பார்த்தோ மானால், இயல்பான மாந்தர், அதுவரை இருந்துவரும் உள்ளுரை இயல் மெய்ம்மை கொண்டு இலங்கும் மாந்தர், இனி திரும்பவும் இறைவனின் இயல்பான அருள் வாழ்வினைத் தொடர்பு கொண்ட படைப்பாகப் பெற வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இயேசு மறுபடியும் சொல்லுகிறார் : கல்லான நெஞ்சத்தைத் தசையிலிருந்து எடுத்துப் போட்டுச் சதையான நெஞ்சத்தை அருளுவேன்'

இப்படி அருளப் பெற்றவர் புதிய உடன்படிக்கையின்பாற் பட்ட மனிதர்.

புதிய பிறப்பால், புதிய உடன்படிக்கையை எய்துகிறார்கள். பழைய உடன்படிக்கை, யூதர்களை வேலையாள்களாக ஆக்கின.

புதிய உடன்படிக்கையோ மாந்தரைப் பிள்ளைகளாக்குகிறது.

இப்படித் தூய ஆவியானவரின் தருக்கம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதேயாம். விளங்கச் சொல்ல வேண்டுமானால் ஊனால் ஆகிய உடம்பிலிருந்து சற்றேனும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நம் உடலிலுள்ள ஐம்பொறிப் புலன்களை அவித்து அருளுகிறார் என்பதாம். அப்படியென்றால், நாம் நம் ஊன் உடலின் - உணர்வுகளில் இயக்கங்களிலிருந்து வானுரை வல்லாளனின் ஆவியால் ஆளப்படும் நிலைக்கு உயர்த்தப்படுகிறோம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

மாந்தன் படைக்கப்பட்டபோது அவனைத் தூய ஆவியே ஆட்கொண்டது. ஆனால் தீமை செய்யத் தொடங்கியபின் ஊன் உடம்பு அவனது தூய ஆவியாம் தெய்விகத்தை தன் அடிக்கீழ் கொணர்ந்துவிட்டது. உடம்பில் ஊன் உணர்வை அகற்றி விடுவதாக இயேசு சொல்லுகிறார்.

தூய ஆவியினால் நமக்குப் புலன்கள் கொண்டு விளக்கிடுவதாவது: ஒரு மாந்தன் மீண்டும் புதிதாகப் படைக்கப்படும் போது அம் மாந்தனின் ஊனுடம்பு அதன் ஆளுமையை இழந்து விடுகிறது.

இதை மற்றொரு வகையில் விளக்க வேண்டும் என்றால், ஆதாமின் ஊன் உடம்பு மேம்பட்ட நிலையினை எய்தியிருப்பினும் இறுதியில் ஊனுடம்பின் ஆளுமையே மேல்ோங்கியது, ஆதாமை வீழ்ச்சி பெற வைத்தது. х -

ஆனால் புதிய - படைப்பில் தூய ஆவியானது, கிறித்துவின் மூலமாக ஊனுடம்பையும் அதன் உணர்வுகளையும் வென்று மேலாட்சி செய்கிறது.

முதல் உடன்படிக்கையின்படி மாந்தன் ஏன் இறைவனை விரும்பவில்லை, தன் அயலானை விரும்பவில்லை, அன்பு கூர்ந்திடவில்லை என்றால் மாந்தனின் நெஞ்சம் தன்னலம் மிக்கதாகவும் ஆவியினால் இறப்பினை எய்திட வேண்டியதாலும் தான்.

மாந்தன் தான்் கொண்ட அன்பு 'பீலியோ' (Phileo) ஆகும். பிலியோ என்னும் அன்பு, தன்னலத்தைக் கொண்டதாகும். இயேசுவானவர் அன்பினைக் குறித்துச் சொன்னபோது என்ன எண்ணி எடுத்து உரைத்தார் என்பதனை அறிய முற்படுவோம். என்றால், "நான் உங்களுக்குப் புதிய கட்டளை இடுகிறேன். அதனை ஏற்றுக் கொண்டு அதன்படி உங்களில் ஒருவர் மற்றொருவரை விரும்புங்கள், அன்பு கூருங்கள், நான் உங்களில் அன்பு கூர்ந்து போலே" என்பது புரியும்.

எளிய மாந்தன் ஒருவன் மற்றொருவனை விரும்பவோ அன்பு கூர்ந்திடவோ இயலாது; புதிதாகப் படைக்கப்பட்டிருப்பதால் மட்டுமே இயலும்.

பொதுவாக உலகிலுள்ள மாந்தர் தம்மைக் கண்டு அவர்களிடம் "உங்களில் ஒருவரை ஒருவர் அன்பு கூருங்கள்: விரும்புங்கள் என்றெல்லாம் சொல்வது வீண் முயற்சி, அவர்களால் முடியாது. அவர்களும் கிறித்து இயேசுவில் புதிதாகப் படைக்கப் பட்டவர்களானால் மட்டுமே முடியும்.

யோவான் 12:9-10 "தந்தை என்னில் அன்பாயிருக்கிறது போல், நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்;

"நான் என் தந்தையின் கற்பனைகளைக் கைக் கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறது போல நீங்களும் என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்”

"அபைட்" (Abide) நிலைத்திரு என்னும் சொல் "மெனோ" (Meno) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பொருள் கொள்ளப் படுவதாகும். அதாவது கடைப்பிடியுங்கள் (Abide) என்னும் சொல்லிற்கு ஈடாக 'நிலைத்திரு' என்று பொருள்படுவதாயிற்று. அதனால்தான், "தந்தையின் அன்பில் நான் நிலைத்திருப்பது போல நீங்கள் என்னில் அன்பு கூருங்கள், என் அன்பில் நிலைத்திருங்கள், நான் தந்தையின் அன்பில் நிலைத்திருக்கிறேன். அதுபோல நீங்கள் எனது அன்பில் நிலைத்திருங்கள்" என்று இயேசு சொல்லி அருளினார்.

இதனைச் சற்று வேறுவிதமாகப் பொருள் கொண்டால், இயேசு சொன்ன ஒரு புதுவகையான அன்பு, ஒரு புத்துலகைப் புதிய அருட்பேற்றுலகையே படைத்தளித்தது எனலாம்.

ஆம், இயேசு சொல்லி விளங்க வைத்தது அத்தகு தெய்விகப் பேரன்புப் பேருலகில் நாம் சென்றடைதல் வேண்டும்: வாழ்தல் வேண்டும். என்றென்றும் நீங்காத நிலை மக்களாக் அன்பெனும் அருளுலகை விட்டு அகலாத குடிமக்களாக ஆங்கே வாழ்ந்துய்ய வேண்டும். அன்பின் அரவணைப்பில் இருக்கும் எவராலும் எவர்க்கும் எப்போதும் எந்தத் தீங்கும் விளைவதில்லை.

அன்பு என்னும் அருளுலகை விடுத்து அகல்பவர்கள் தீங்கு என்னும் பொல்லாத உலகில் புகல் அடைகிறார்கள் என்பது உறுதி.

அன்பினை நாம் கடைப்பிடித்தாலும் அன்பு நம்மில் நின்று நிலவினாலும் நம்முடைய அன்பு தனிப்பெரும் அழகுடன் திகழ்கிறது, மிகு கவர்ச்சி ஏற்று விளங்குகிறது.

1 யோவான் 4:16 உரை அதனை நன்கு புரிந்து கொள்ள உதவும் :

"நமக்குத் தெரியும் என்பதோடு நம்மைப் பொறுத்தமட்டில் கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பினைக் கொண்டுள்ளார் என்னும் நம்பிக்கை கொண்டுள்ளோம். கடவுள் அன்பாக இருக்கிறார்; எவர் ஒருவர் அன்பினைக் கைக் கொள்ளுகிறரோ அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறாரோ அவர் கடவுட் பற்றிலும் நிலைத்து நிற்கிறார்!" என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

அன்றாட வாழ்வில், வாழ்க்கையின் மற்றெந்தச் சட்ட திட்டங்களைவிட அன்பில் மட்டும் பெரும் பற்றினை வைத்திட வேண்டும் என்ற மெய்ம்மையியல்பினை நாம் அறிந்துள்ளோம். மனச்சான்றுப்படி நாம் அன்பென்னும் பெருவெளியில் வாழ்கிறோம்; அன்புப் பெருவெளியில் நயத்தக்க நாகரிக மாந்தர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்கிறோம். அதனால்தான்் நாம், அன்புப் பெருவெளியில் அன்புப் பிள்ளைகளாக அன்பு மக்கள் என்னும் ஒரு பெரிய இடத்தைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமிதப்படலாம்.

இவற்றினால் எல்லாம் நாம் உணர்த்தப்பட்டது, நாம் எல்லாம் அன்பு என்னும் மொழியினைக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்பின் எழுதாத சட்டத்திட்ட முறை - ஒழுங்கான முறைமை. அன்பென்னும் அந்த அற்புத உலகினை அரசோச்சும் செங்கோன்மையை அறிந்து தேர்ந்து தெளிந்து விளங்க வேண்டும் என்பதே.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள்-75