அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/062-383

விக்கிமூலம் இலிருந்து

58. கனந்தங்கிய லார்ட் மார்லியவர்களின் கருத்து

பிரபலமிகுத்த பிரிட்டிஷ் ஆட்சியில் மதியூகியாக விளங்கும் லார்ட் மார்லியவர்களின் மந்திராலோசினையை ஒவ்வொருவரும் மிக்க ஆலோசிக்க வேண்டியதாகும்.

அதாவது, லார்ட் மார்லியவர்கள் ஐரோட்டா தேசக் குடிகளின் ஆரவாரத்தை அறிந்தவரேயன்றி இந்துதேசத்தோர் இடியும் புடையும் அவர் கண்டறியார்.

ஐரோப்பாவிலுள்ளப் பிரபுக்கள் கமிஷனராக ஏற்படுவார்களானால் முநிசபில் பணத்தில் யாதொரு பலனையுங் கருதாது தங்கள் சொந்த சிலவிலேயே வீதிவீதியாய் உலாவி குடிகளுக்குள்ள கஷ்டநிஷ்டூரங்களை அறிந்து அவர்களுக்கு வேண்டிய சுகங்களை அளித்து வருகின்றார்கள்.

இந்துக்களில் ஏற்படும் முநிசபில் கமிஷனர்களோ வருஷத்திற்கு ஒரு முறை (ஓட்டு) வாங்குவதற்கு வீட்டண்டை வண்டி கொண்டுவருங்கால் காணப்பட்டவர்கள் மறுபடியுங் காணுவது கிடையாது.

இப்பேர்கொற்ற சிரத்தையுள்ள இந்துக்கள்வசம் பெருத்த உத்தியோகங்களை அளிக்கலாமென இவர் யோசிப்பது மிக்க விந்தையாம்.

சிலகால் கனந்தங்கிய லஜ்ஜிபதி ராய், கோக்கேல் முதலிய பெரியோர்களுடன் சினேகஞ்செய்பவராதலின் அவர்களிடமுள்ள வித்தை, புத்தி, பகை, சன்மார்க்க முதலியப் பெருந்தகமெகளைக் கண்டு இந்தியாவில் இருப்போரெல்லாம் இவர்களைப் போலவே இருப்பார்களென்று நம்பிக் கொண்டு ஐரோப்பியர்கள் பார்த்துவரும் அந்தஸ்தான உத்தியோகங்களை இந்துக்களுக்குங் கொடுக்கலாமென்று உத்தேசிக்கின்றார்போலும்.

அத்தகைய உத்தேசம் அவர் இந்தியாவை வந்து பாராத திறையும், இந்துக்களுடன் பழகாத குறையுமேயாம்.

கண்டும் பழகியும் இருப்பாராயின் அப்பா! அப்பா!! இந்துக்களுக்கும் அந்தஸ்தான உத்தியோகங்களுங் கொடுக்கப் போமோவென்று குப்புறப்படுத்துக்கொள்ளுவார். காணாதவரும், பழகாதவரும் ஆதலின் அவர் கருத்துகள் யாவும் விருத்தமாக விளங்குகின்றது.

ஒரு ஆபீசில் பெரியஉத்தியோகஸ்தர் ஒரு ஐயங்கார் சேர்வாராயின் ஐந்து வருஷத்துக்குள் அவ்வாபீசிலுள்ள முதலி, செட்டி, நாயுடு, மற்றுமுள்ளவர்கள் எல்லாம் மறைந்து போய் எல்லாம் ஐயங்காரர்கள் மயமாகவே தோன்றுவதியல்பாம்.

இத்தகையான மாறுதல்களை அறிந்த ஐரோப்பியர்களும் இருக்கின்றார்கள். ஏழைக்குடிகள் வாழும் கிராமங்களை எட்டிப்பார்க்காத ஐரோப்பியர்களும், சாதிவேஷத்தின் இடுக்கத்தால் நசுங்குவோர்களைக் காணாத ஐரோப்பியர்களும் அனந்தம்பேர் இருக்கின்றார்கள்.

இந்துதேசத்தைக் கண்ணுற்றும், பழகியுமுள்ள ஐரோப்பியர்களுக்கே இத்தேசத்தின் சாதிகளின் முடுக்குகளும் அத்தகையக் கொடுஞ்செயலால் ஏழைக்குடிகள் படும் இடுக்கங்களும் இன்னும் விளங்காமலிருக்கின்றது.

அங்ஙனமிருக்க நமது கனந்தங்கிய லார்ட் மார்லியவர்கள் இந்தியாவுக்கு வந்து தேசநிலைகளையும், கிராமநிலைகளையும் கண்டவருமன்று, பெரியசாதி சின்னசாதி என்னுங் குடிகளுடன் பழகியவருமன்று.

தான் வாசஞ்செய்யும் ஐரோப்பியக் குடிகள் ஏழைகளாயினும், கனவான்களாயினும், கற்றவர்களாயினும் கல்லாதவர்களாயினும் களங்கமற்ற வாழ்க்கையிலிருப்பதுமன்றி கனவான்கள் யாவரும் ஏழைகளை ஈடேற்ற வேண்டும் என்னும் முயற்சியிலிருக்கின்றார்கள்.

அதுபோல் இந்துக்களுக்குள் அன்பும், ஒற்றுமையுமுண்டோ? கனவான்களாயுள்ளவர்கள் ஏழைகளை சீர்திருத்தி முன்னேறச்செய்வதுண்டோ? யாதுங் கிடையாது செயல்களுங் குணங்களும் இவற்றிற்கு மாறாகவே விளங்கும்.

இத்தியாதி வித்தியாசங்களையும் இந்துக்களின் குணாகுணங்களையும் நன்காராய்ந்து அறியாத லார்ட் மார்லியவர்கள் இந்துக்களுக்கு பெருத்த உத்தியோகங்களை அளிக்கலாமென்றாலோசிப்பது உள்ள ஏழைக்குடிகள் ஒருவரையுந் தலையெடுக்கவிடாமல் நசித்துவிட்டு சாதித்தலைவர்களை மட்டிலும் சுகமடையச் செய்வதற்கேயாகும். ஆதலின் நமது பிரிட்டிஷ் ஆட்சியின் ஆலோசினையதிபர்கள் இந்தியகுடிகளை இடுக்கத்திற்கு ஆளாக்காமல் காக்க வேண்டிய தேவர்கள் கடனாகும்.

- 3:3; சூன் 30, 1909 -