அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/079-383

விக்கிமூலம் இலிருந்து

75. சென்னை ராஜதானியைச்சார்ந்த சானிட்டேரி கமிஷனர் அவர்களுக்கு விண்ணப்பம்

சென்னை ராஜதானியெங்கும் சுகாதாரங்களை விளக்கி சகலரையும் சுகதேகிகளாக வைக்கவேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் ஒவ்வோர் டிஸ்டிரிக்ட்டுகளுக்கும் ஹெல்த் ஆபீசர்களை நியமித்துள்ளதுடன் சானிட்டேரி இனிஸ்பெக்ட்டர்களையும் நியமித்து வேண்டிய மருந்துகளையுங் கொடுத்து ஆதரித்துவருவது சகலருக்குந் தெரிந்தவிஷயமேயாம்.

ஈதன்றி ஆடுகளடிக்கும் இடங்களிலும், மாடுகளை கடிக்கும் இடங்களிலும் இனிஸ்பெக்ட்டர்களை நியமித்து நோயில்லா ஜெந்துக்களாக அடித்து மநுக்களுக்கு உபயோகப்படுத்தி சுகதேகிகளாக வாழும்படி செய்விக்கின்றார்கள்.

இத்தகைய கருணை கொண்டு நடாத்திவரும் சுகாதாரங்களில் விஷக்கடியாலும், விஷரோகங்களாலும் தானே மடிந்துள்ள ஆட்டின் மாமிஷங்களையும், மாட்டின் மாமிஷங்களையும் ஏழைமநுக்கள் புசித்து விஷவாயுவாலும், விஷநீர்களாலும் பீடிக்கப்பட்டு அவர்களுக்குள்ள சுத்ததேகங்களுங்கெட்டு கஷ்டப்படும் உழைப்பையும் விட்டு நாளுக்குநாள் க்ஷீணமடைந்து சீக்கிரத்தில் மரணத்துக்குள்ளாகின்றார்கள்.

விஷஜெந்துவாலும், விஷரோகங்களாலும், மடிந்துவரும் ஆட்டு மாமிஷம், மாட்டின் மாமிஷங்களால் மக்களுக்குண்டாகும் தோஷங்கள் முநிசபிசில் எல்லைக்குள் விசேஷமில்லாவிடினும் நாட்டு கிராமங்களில் அதிகமாக நேரிட்டுவருகின்றது.

ஏழைக்குடிகளுக்கு நேரிட்டுவரும் விஷரோகங்களை அகற்றி அவர்களுக்கு சுகாதாரங்களை உண்டு செய்வதே விசேஷ தன்மமாகும்.

அவ்வேழைக்குடிகளோ பூமியை உழுது பண்படுத்தி சீவராசிகளைப் போஷிக்கும் வேளாண்மெயுற்றவர்கள்.

சகலராலும் சிறப்புப்பெற்ற வேளாண்மெயுற்றவர்கள் விஷமாமிஷங்களை புசிப்பதால் நாளுக்குநாள் தாளாண்மெயற்றுமடிந்து போகின்றார்கள்.

சகல குடிகளுக்கும் சுகாதாரமளித்துக் காத்து வரும் சானிட்டேரி கமிஷனரவர்கள் வேளாண்மெயுற்று சீவிக்கும் ஏழைக்குடிகள்மீதும் இதக்கம் வைத்து வியாதிகளால் தானே மடியும் ஆடுகளையும், மாடுகளையும் பூமியிற் புதைக்கும்படியான சட்டதிட்டங்களையும், புதைக்கும்படியான இடங்களையும் ஏற்படுத்தி சுகாதார நிலைகளை மேலுமேலும் விருத்திச் செய்ய வேண்டுகிறோம்.

மடிந்த ஆடுமாடுகளின் தோல்களை உரித்துக்கொண்டு மாமிஷங்களை புதைத்து விடலாமென்னும் சுயப் பிரயோசன ஆலோசனையும் சிலர் கொடுப்பார்கள். அவ்வகையான ஆலோசனைகளுக்கு சானிட்டேரி கமிஷனரவர்கள் இடங்கொடாது மடித்த ஜெந்துக்களை குறித்த இடங்களில் தோலை உரிக்காது உடனுக்குடன் புதைத்துவிட வேண்டுமென்னும் உத்திரவைப் பிறப்பித்தல் வேண்டும்.

விஷமாமிஷங்களைப் புசித்து துன்பமடைவது கிராமங்களில் விசேஷமாயினும் முநிசபில் எல்லைக்குள் வாசஞ்செய்யும் சகலபாஷை சிறுவர்களுக்குத் தோன்றும் வியாதிகளின் விஷயம் நூதனமாகவே விளங்குகின்றது.

எவ்வகையில் என்பீரேல் பத்து பனிரண்டுவயது சிறுவர்கள் சிகரெட்டென்றும், பீடியென்றும், சுருட்டென்றும் வழங்கும் புகை வஸ்துக்களைப் பிடிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அப்புகைப்பிடிப்பதிலும், புகையை மூக்கில்விடுவதும், வாயில் விடுவதுமாகிய ஓர் புகைபிடிக்குஞ் செய்கையால் அனந்தஞ்சிறுவர்கள் ஊஷ்ணரோகங்களால் நைந்துப்போகின்றார்கள். அவற்றையும் நமது சானிட்டேரி கமிஷனரவர்கள் ஆலோசனைக்குக் கொண்டுவருவாரென்று நம்புகிறோம்.

- 3:12; செப்டம்பர் 1, 1909 -

ஈதன்றி தற்கால கடைகளில் விற்கும் சரக்குகளில் நல்ல அரிசிகளுடன் மட்ட அரிசிகளைக் கலப்பதும், நெய்களிற் பல வித நெய்களைக் கலப்பதுமாகிய செய்கைகளிலும் பற்பல வியாதிகள் தோன்றுதற்கிடமுண்டாகின்றது.

இத்தகையக் கலப்புள்ள நெய்களால் பலகாரஞ்செய்து விற்பனைச் செய்கின்றவர்களோ இரண்டுநாள் மூன்றுநாளைய பலகாரங்களை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஏழைக் குடிகளுக்கு விற்றுவருகின்றார்கள். அவர்களதைக் கையில் வாங்கிப்பார்த்து இது பழயப் பலகாரமாச்சுதே இவற்றை மாற்றிக்கொண்டு வேறு கொடுங்கோள் என்பாராயின் நீங்கள் தொட்டுவிட்டதை யாங்கள் வாங்கமாட்டோமென்று துரத்திவிடுகின்றார்கள்.

ஏழைகளோ துட்டுகொடுத்து வாங்கியப் பலகாரமாச்சுதே என்று தின்றுவிடுவார்களாயின் உழைத்து சம்பாதிக்கக்கூடிய சுத்ததேகிகள் புழுத்தப் பலகாரங்களைத் தின்று பலவகை வியாதிதோன்றி பதிகுலைந்துபோகின்றார்கள்.

சில வாசித்தக் குடும்பங்களிலும் சாராயங்குடிக்கும் வழக்கங்களில் இரவும் பகலும் அன்ன ஆகாரமின்றி சாராயத்தையே குடித்துக்கொண்டு இரத்தங் கக்குகிறவர்கள் சிலரும், மார்பு வரட்சியுண்டாய் இருமல் கண்டு வாதைப்படுகிறவர்கள் சிலரும், குடியின் அதிகரிப்பால் வெட்டை மீறி நீரடைப்பு தோன்றி அதினால் வாதைப்படுகிறவர்கள் சிலரும், தங்களது தேகசக்திக்கும் பிரமாணத்திற்கும் மீறியக் குடியினாலும் அனந்தம்பேர் தேகத்தைப் பாழாக்கிக்கொள்ளுகின்றார்கள்.

இவ்வகையாய் சாராயத்தை வாங்கிவைத்துக்கொண்டு ஓயாது குடித்துக்கொண்டிருப்பவர்களை தற்கொலை செய்துக் கொள்ளுவோர்களுக்கு சமதையாகவே யோசிக்கவேண்டியதா யிருக்கின்றது.

ஆதலின் சுகக்கேடுகளுக்கு ஆதாரமாகும் செய்கைகளை விலக்கத்தக்க சட்டதிட்டங்களை வகுத்து சுகாதார மளிக்கும்படி வேண்டுகிறோம்.

- 3:13: செப்டம்பர் 8, 1909 -