அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/100-383

விக்கிமூலம் இலிருந்து

96. ஜோனாஸ்பர்க் தமிழ் மஹாஜனசபையார்

1909 வருஷம் டிசம்பர் மீ 1உ வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகையில் கனந்தங்கிய சென்னை மஹாஜன சபையோருக்கு ஜோனஸ்பர்க் தமிழ் மஹாஜனசபையோர் ஓர் விஞ்ஞாபனம் அனுப்பியுள்ளதாகக் கண்டிருக்கின்றது.

அவ்வகைக் கண்டுள்ள விஞ்ஞாபனத்தின் கருத்தோ யாதெனில், “அத்தேசத்தோர் கொடிய சட்டத்தை அநுசரித்து துன்பத்தை அநுபவிப்பதினும் சட்டத்தை அங்கிகரியாமைக்கு வருந் துன்பத்தை அநுபவிப்பதே மேலெனத் துணிந்து பதிவுப் பத்திரங்களை எல்லாம் அக்கினி பகவானுக்குச் சமர்ப்பித்துவிட்டு எதிர்த்து நிற்கின்றோம்.” என்று கூறியதின்பின் இந்தியர்கள் அதிக துன்பத்தை அநுபவிக்கின்றோமென்று வரைந்திருக்கின்றார்கள்.

இத்தகைய தமிழ் சபையார் தங்களை இந்தியர்களென்று எப்போது பிரித்துக்கொண்டார்களோ அப்போதே ஜோனாஸ்பர்க் அன்னியர் தேசமென்பது சொல்லாமலே விளங்கும்.

அவ்வகை அன்னியர்தேசஞ் சென்றுள்ளவர்கள் அத்தேசத்தோர் சட்டத்திற்குப் பொருந்தியே வாழவேண்டுமென்பதும் சொல்லாமலே அமையும்.

அவர்கள் சட்டத்திற்குள் அமைந்து வாழ்கப்பிரியமில்லாதவர்கள் அத்தேசத்தை விட்டு நீங்கிவிடுவதே நியாயமாகும். அங்ஙனமின்றி ஈட்டிமுனையில் உதைத்து காலில் சீழ்பிடித்து அதி வாதைப்படுகிறோமென்றால் அன்னோயை சகித்து ஆற்றிக் கொள்ளவேண்டியவர்கள் அவர்களேயாகும்.

அத்தேசத்தில் இவர்கள் பழங்குடிகளாயிருந்து சட்டம் நூதனமாகத் தோன்றியிருக்குமாயின் அச்சட்டத்தின் நடவடிக்கையும், செயலும் நாளுக்குநாள் நிறைவேறி வருவதையறிந்து அதி உபத்திரவமாகக் காணப்படுமாயின் அதன் உபத்திரவத்தை பிரிட்டிஷ் ராஜாங்கத்தோருக்குத் தெள்ளற விளக்கிக் கேட்பார்களாயின் அச்சட்டத்தின் மாறுதலுக்காய் ஆலோசனைகளைச் செய்து சீர்திருத்துவார்கள். அவற்றிற்கு மாறாக அத்தேசத்திலிருந்துகொண்டே அவர்கள் சட்டத்திற்கு அடங்கமாட்டோமென்றால் எந்த ராஜாங்கத்தான் இவற்றை ஏற்றுக்கொள்ளும்.

இந்துதேசத்தில் வாசங்செய்யும் சில மனிதர்கள் தங்கள் வீடுகளிலும், பொதுவாய்க் கோவில்களிலும் சில மனிதர்களை வரலாகாதென்று தடுத்துவைத்திருக்கின்றார்கள். அம்மனிதர்கள் மீறி வந்துவிட்டாலோ, அவர்களைத் தெண்டிக்கத்தக்க சட்டத்தையும் வகுத்து வைத்திருக்கின்றார்கள். அவ்வகை தெண்டித்தும் வருகின்றார்கள். இத்தகைய சட்டத்தை நியாயந்தானெனப் பார்த்திருக்கும் இந்துதேச பாரதமாதாவானவள் ஜோனாஸ்பர்க்கிலுள்ளோர் நியாயந்தீர்க்கப்போகிறாளா, இல்லை. இந்தியாவிலுள்ளோர் கீழ்ச்சாதி மேற்சாதியொன்னுஞ் சட்டங்களை அக்கினிக்கு இரையாக்கிவிடுவார்களாயின் பாரதமாதா ஜோனாஸ்பர்க்கின் சட்டத்தை அன்றே சீர்திருத்திவிடுவாள்.

பாரதமாதா அத்தேசத்திற்கு சென்றிருக்கும் இந்தியர்களின் மீது கண்ணோக்கம் வைக்காதக்காரணம் யாதென்பீரேல், இந்தியாவில்தான் ஆயிரத்தெட்டு பொய்ச் சாதிப் பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டு அதற்காதரவாய் சமய பேதங்களையும் வகுத்து ஒருவர் முகச் சின்னத்தை மற்றொருவர் பார்க்க விரோதமும், ஒருவர் சாதிப் பெயரை மற்றவர்கள் கேழ்க்க விரோதமும் பெருக்கிக்கொண்டு ஒற்றுமெய்க் கேட்டிலிருப்பவர்களிற் சிலர் செளத்து ஆபிரிக்காவென்னுந் தேசத்திற்கு நெடும்பிரயாணஞ்செய்து கப்பலில் போகும்வரையில் சாதிபேதச் செயல்கள் ஒன்றுமில்லாமற் சென்று அவ்விடம்சேர்ந்து சொற்ப துட்டு சம்பாதித்துக்கொண்டவுடன் ஐயர், முதலி, நாயுடு, செட்டி என்னுந் தொடர் மொழிகளைச் சேர்த்துக்கொண்டு சாதிப் பிரிவினைகளை உண்டு செய்து வருகின்றார்கள். அத்தேச வாசிகளாகிய போயர்களோ சாதிபேதமென்னுங் கொடூரச்செயலற்று சிறந்த குணம் அமைந்த ஒற்றுமெயுற்றவர்கள் அத்தகைய சுத்தகுணமும், பொருந்தகமெயும் வாய்த்தவர்கள் மத்தயில் ஒற்றுமெய்க் கேட்டையும், விரோத சிந்தையையும் உண்டு செய்வதான சாதிபேதப் பிரிவினைப் பெயர்களை பரவச் செய்துவருகிறபடியால் பாரத மாதாவிற்கே மனந்தாளாது இந்தியர்களை அதிக கொறூரத்துடன் அவ்விடம் விட்டு அகற்றுகின்றாள் போலும்.

நற்கருமத்திற்கு ஈடா சுகபலனையும், துற்கருமத்திற்கு ஈடாய் துக்கபலனையும் அநுபவிக்க வேண்டுமென்பது இந்தியர்களின் தன்மசாஸ்திர அநுபவமாதலின் துற்கருமத்திற்கீடாய் வருந் துக்கங்களை கவனியாது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் மீது குறைகூறுதலிலும், மஹாஜன சபையோர் முன்பு முறைகூறுதலிலும் யாதுபயனுண்டாம்.

தாங்கள் தொழுந் தெய்வக் கோவிலுக்கு ஏனைய மநுக்கள் வரப்படாதென்றும், தாங்கள் நீர் மொள்ளுங் குளங் குட்டைகளில் ஏனைய மநுக்கள் நீர் மொள்ளப்படாதென்றும், தங்களுக்கு சவரஞ் செய்யும் அம்மட்டர்களை ஏனைய மக்களுக்கு சவரஞ்செய்யப்படாதென்றும், தங்களுக்கு வஸ்திரம் வெளுக்கும் வண்ணார்களை ஏனைய மக்களுக்கு வெளுக்கப்படாதென்றும் தமிழ்பாஷைக் குடிகளில் ஆறுகோடி மக்களை அலக்கழித்து எது விஷயத்திலும் தலையெடுக்கவிடாமல் நசித்துவரும் காரணங்களை எந்த நீதிமான்களுங் கண்டறிந்து ஏழைத் தமிழர்களின் இடுக்கங்களை நீக்கி ஆதரித்தவர்களைக் காணோம்.

இந்துதேசப்பூர்வக்குடிகளாகும் ஏழை மக்களின் இடுக்கம் நீங்கும் வரையில் ஜோனாரஸ்பர்க்குமட்டிலுமல்ல மற்றுமுள்ள இடங்களில் சுயநலங்கேட்குஞ் சாதியிற் பெரியோரென்பவரின் இடுக்கங்களும் நீங்கப் போகிறதில்லை.

- 3:26; டிசம்பர் 8, 1909 -