அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/107-383

விக்கிமூலம் இலிருந்து

103. இவ்வருஷம் லாகோரில் நடந்தது நாஷனல் காங்கிரசாமோ

இந்தியன் நாஷனல் காங்கிரசென்று கூடிய கூட்டங்களில் மகமதியர்களை சிலகால் சேர்க்கமுயன்றவர்கள் தற்காலம் இராஜாங்கத்தோர்களால் சேர்த்திருக்கும் மகமதிய அங்கங்களின் நியமனங் கண்டவுடன் மகமதியரையும், இந்தியரையும் இராஜாங்கத்தோர் வேறாகப் பிரித்து குறுக்கில் பெரிய ஓர் மதிலைப்போட்டுவிட்டார்களென்று கூறுங் கருத்தில் கவுன்சலர் நியமனத்தை இந்தியருக்கென்று பொதுவான உத்திரவு கொடுத்திருப்பார்களாயின் அந்தக் கவுன்சலில் மகமதியர்களையே சேர்த்திருக்கமாட்டார்களென்பது திண்ணம்.

காரணம், மகமதியரென்று பிரித்தவுடன் காங்கிரஸ் மெம்பர்கள் கவலைகொண்டு பேசுகிறபடியால் இவர்களை நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தாரென்று கூறுவதற்கே ஆதாரமில்லாமல் இருக்கின்றது.

ஏனென்பீரேல், சகலசாதியோரும் சுகம்பெறவேண்டும், சகலசாதியோரும் பிரிட்டிஷ் ஆட்சியில் பாகமடையவேண்டுமென்னும் நல்லெண்ணம் இவர்களுக்குள் இருக்குமாயின் மகமதியருக்குக் கொடுத்துள்ள ஓர் சுதந்திரத்தை கண்டிக்கமாட்டார்கள். அத்தகைய நல்லெண்ணம் இல்லாமலும் நாஷனல் காங்கிரசென்னும் ஐக்கியமில்லாமலும் வெறுமனே நாஷனலென்று கூறுங்கூட்டத்தாராதலின் மகமதிய சோதிரர்களுக்குக் கொடுத்துள்ள சொற்ப சுதந்திரத்தை மனத்துள் சகியாது காங்கிரசில் கூச்சலிட்டிருக்கின்றார்கள்.

தற்காலம் சென்னை ராஜதானியில் சேர்த்திருக்கும் கவுன்சல் மெம்பர்கள் 47 பெயர்களில் மகமதியர்களை 23 பெயரையேதேனும் நியமித்துவிட்டார்களா இல்லையே. 47 மெம்பர்களில் மகமதியர் இரண்டு பெயரைத்தானே நியமித்திருக்கின்றார்கள். இவ்விரண்டுபேர் நியமனத்தில் இவ்வளவு மனஞ்சகியாத காங்கிரஸ் கூட்டத்தார் இன்னும் 4 மகமதியரை சேர்த்துவிட்டால் என்ன கூச்சலிடுவார்களோ தெரியவில்லை. மகமதியர்மட்டும் 16 பெயருக்கு ஒருவரிருக்கின்றாரென்று கணக்கெடுத்துப் பேசியவர் தாங்கள் எவ்வளவு பெயர் இருக்கின்றோமென்று கணக்கெடுக்கவில்லை போலும்.

சாதிபேதம் வைத்துள்ளோர் மத்தியில் சாதிபேதமில்லாமல் வாழும் ஆறுகோடி மக்களுடன் மகமதியர்களையும், பாரசீகர்களையும், ஆங்கிலோ இந்தியர்களையும், சுதேசக் கிறிஸ்தவர்களையும், மற்றுமுள்ள பர்ம்மியர், சிங்களர், சீனர்முதலியவர்களையும் அப்புறப்படுத்தி இந்தியர் என்போர் கணக்கை எடுத்துப் பார்ப்பார்களாயின் யாதுமிகுமோ கண்டுபேசல்வேண்டும். கருணைதங்கிய இராஜாங்கத்தோர் மகமதியருக்கென்று யாதுசுகத்தைக் கொடுத்துவிட்டு இந்தியரைக் கெடுத்துவிட்டார்கள்.

இந்துக்களைப்போல் ஆறுகோடி மக்களைத் தீண்டப்படாது தீண்டப்படாதென்று தீட்டுமதில் போட்டுவிட்டார்களா, ஆறுகோடி மக்களை சுத்தஜலம் மொண்டு குடிக்கவிடாமல் சுற்றுமதில் போட்டுவிட்டார்களா, ஆறுகோடி மக்களுக்கு தங்களது அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாது அடுக்குமதில் போட்டுவிட்டார்களா, ஆறுகோடி மக்களுக்குத் தங்கள் வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாது அண்ணாந்த மதில் போட்டுவிட்டார்களா, இல்லையே.

சுவாமியென்பது சகலருக்கும் பொதுவென்பதே உலகசம்மதம். ஆனால் இந்துக்களென்னும் கூட்டத்தோர் தொழுதுவரும் சுவாமிகள் இருக்குமிடத்திற்கு சாதிபேதமற்ற ஆறுகோடி மக்களும் போகப்படாது, ஆங்கிலோ இந்தியர்களும் போகப்படாது, மகம்மதியர்களும் போகப்படாது, பாரசீகர்களும் போகப்படாது, கிறிஸ்தவர்களும் போகப்படாது.

பொதுவாகிய சுவாமியைத் தொழும் இடங்களுக்கு இத்தனைபேர் போகக்கூடாத பெருமதிலிட்டிருக்கும் இந்தியர்கள் வசம் பொதுவாகி ஆலோசினை சங்க நியமனத்தை விட்டிருப்பார்களாயின் சகலசாதியோரும் உள்பிரவேசிக்கக்கூடாத எப்பெரிய மதிலிட்டிருப்பார்களோ தெரியவில்லை,

சகலசாதியோரும் சமரச்சுகமுற்று வாழ்கவேண்டுமென்னுங் குணம் இல்லாது சகல சுகமுந் தாங்களே அநுபவிக்கவேண்டுமென்றும் பேராசையால் மற்றவர்களைத் தடுக்க மத்தியில் மதிலைப்போட்டுக்கொள்பவர்களாதலின் தங்கள் குணத்தை கருணை தங்கிய ராஜாங்கத்தோர்மீது விடுத்து மகமதியர்களுக்கும், இந்துக்களுக்கும் பெருமதில் போட்டுவிட்டார்களென்னும் பெருங்கூச்சலிடுகின்றார்கள்.

இந்த நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தோரென்போர் யதார்த்தத்தில் நாஷனல் கூட்டத்தாராகவும், பொதுநலப் பிரியர்களாகவும் சகலசாதியோரையும் தன்னபேரன்னியரென்னும் பட்சாதபாமில்லாமல் நடத்துவோராகவும் இருப்பார்களாயின் இவர்கள் காங்கிரஸ் கூடும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு கனந்தங்கிய பரோடா ராஜனவர்கள் தீண்டப்படாதென்னும் ஆறுகோடி மக்கள் படும் அவமதிப்பையும் அவர்கள் முன்னேற வழியில்லா இடுக்கங்களையும் எடுத்தோதி முன்பு இவர்களை சீர்திருத்தும் வழிகளைத் தேடுங்கோளென்று கூறியுள்ளவற்றை தங்கள் காங்கிரஸ் கூட்டத்தில் எடுத்துப்பேசி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கும்வழி தேடியிருப்பார்கள்.

அத்தகையப் பொதுநலமற்று சுயநலங் கருதுவோர்களாதலின் ஆறுகோடி ஏழைகளின் அவமதிப்பைக்கருதாது தங்கள் சுகங்களை மட்டும் மேலெனக் கருதி மகமதியருக்குக் கொடுத்துள்ள இரண்டுபேர் சுதந்திரத்தையும் மனஞ்சகியாது வீணே கூச்சலிட்டிருக்கின்றார்கள்.

இந்துக்களென்னும் ஐயர், முதலி, செட்டி, நாயுடு என்பவர்களுள் முப்பது பெயரை சேர்த்துவிட்டு மகமதியருள் இரண்டு பெயர் சேர்த்துள்ளதை மனஞ்சகியாதவர்கள் மற்றுமுள்ளவர்களின் சேர்க்கையை எவ்வித சகிப்பார்களோ விளங்கவில்லை. ஆதலின் நமது கருணை தங்கிய ராஜாங்கத்தோர் இவர்களின் குணாகுணங்களை நன்காராய்ந்து ஏழைகளை ஈடேற்றுவார்களென்று நம்புகிறோம்.

- 3:30; சனவரி 5, 1910 -