அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/114-383

விக்கிமூலம் இலிருந்து

110. நாளுக்குநாள் ராஜதுரோகிகள் தோன்றுவதென்னோ

கொடுங்கோல் ஆடாக்குறையேயாகும் சிலகாலங்களுக்கு முந்தி வெடிகுண்டைக் கையாடிவந்த வீணர்கள் நீங்கி தற்காலம் கைத்துப்பாக்கிகளைக் கரத்தில் ஒளித்து வைத்திருந்து இராஜாங்க உத்தியோகஸ்தர்களை சுட்டுக் கொலைபுரிந்துவருகின்றார்கள்.

நாஸிக் கலெக்ட்டரை சுட்டுக் கொன்ற கொலைபாதகனை பிடித்தவுடன் காணும் மநுக்கள் யாவரும் கண்டு பயப்படத்தக்க கொடுங்கோல் தண்டனை செய்திருப்பார்களாயின் இப்போது கல்கத்தாவில் இன்ஸ்பெக்ட்டரை சுட்டுக்கொன்ற கொலைபாதகன் தோன்றியிருக்கமாட்டான்.

கொலைப்பாதகனைக் கையோடு பிடித்தவுடன் சகல குடிகளும் நடுங்கத்தக்க தெண்டனையை விதிக்காது அவனுக்கு உதவியார், இவனுக்கு உதவியார், அவன் எங்கிருந்தான், இவன் எங்கிருந்தான் அவன் லாயர் என்ன பேசினான் இவன் லாயர் என்ன பேசினானென்னும் வீண் விசாரிணையில் அனந்தங் கொலைஞர்கள் தப்பித்துக்கொண்டிருக்கின்றபடியால் மற்றைய கொலை பாதகர்களுக்குக் கொலைத் தொழில் எளிதாகக் காணப்படுகின்றது.

இராஜாங்கத்தோர் கொலைப் பாதகரை மீட்பின்றி தண்டிப்பதும் இன்றி அத்தண்டனையானது சகலமக்கள் இதயங்களும் நடுங்கத்தக்க கொடுந் தண்டனையாகக் காணப்படுமாயின் கொலைஞர்களும் நடுக்குற்று தங்கள் கொடிய செயலை அகற்றுவார்கள் மற்றுமுள்ள சாந்தக் குடிகளும் சுகம் பெற்று வாழ்வார்கள்.

நாளுக்குநாள் தோன்றிவரும் ஒவ்வோர் கொலைப்பாதக மிலேச்சர்களால் அனந்தங் குடிகள் சுகக்கேட்டை அநுபவிக்கின்றார்கள். இராஜாங்கத்தோர் இலட்சங் குடிகள் சுகம்பெறுவதற்கு ஒரு கொலைப்பாதக மிலேச்சனை சகலருமறியக் கொடுந் தண்டனைப்புரிவதால் யாதொரு கெடுதியும் வாராது.

கொலைஞர்களுக்குக் கொடுங்கோல் தண்டனையுமின்றி லாயர்களை வைத்துத் தப்பித்துக்கொள்ளும் வழிகளும் கிடைத்திருப்பதால் கொலைத் தொழிலைக் கூசாமற் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இத்தகைய செங்கோல் தண்டனையை குடிகள்பால் நடாத்தினும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மீது வஞ்சம்வைத்து கொலைபுரியும் கொலைப்பாதகர்களை உடனுக்குடன் கொடுங்கோலால் தண்டித்து சீர்திருத்துவதே உசிதமாகும். கொலைப் பாதகனாகும் கொலைஞனொருவனைக் கொடுங்கோலால் தண்டிப்பதினால் காணும் உலகோர் யாவரும் கண்டஞ்சி சீர்பெறுவார்களென்பது பூர்வ அரசாங்க விதியாதலின் குடிகள் யாவரும் சீர்பெறவேண்டுமென்னும் அரசர்கள் கொடுங்கோலை நடாத்துவதால் யாதொரு குறைவும் நேராதென்பது திண்ணம். இராஜாங்கத்தோருக்கு ஒருகோடி மக்கள் மீது மனத்தாங்கல் உண்டாவதினும் ஒருவனைக் கொடுங்கோலால் தண்டிப்பது உசிதமேயாம். கோடி மக்களுக்கு ராஜதுரோகிகளென்னும் பெயர் வாய்ப்பதினும் ஒருக்கொலைப்பாதகனை கொடுங்கோலால் தண்டித்து மற்றக் குடிகள் யாவரையும் சீர்பெறச்செய்வது மன்னர்க்கு அழகாதலின் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் வஞ்சகம், பொறாமெய், குடிகெடுப்பு, சுயநலம், கொலைபாதகம் முதலிய துற்குணங்கள் யாவரிடத்து நிறைந்துள்ளனவென்று ஆராய்ந்து அக்கூட்டத்தோரை அடக்கும் வகையால் அடக்கி ஆண்டுவந்தால்தான் பிரிட்டிஷ் ராட்சியம் ஆறுதலுற்று நிலைபெறும், அத்தகைய பேராசையுற்று வஞ்சகர்களைக் கண்டு அடக்காது அவர்களுக்கு வேண்டிய சுகங்களும், அதிகார உத்தியோகங்களுங் கொடுத்துக் கொண்டே வருவதாயின் வஞ்சகர்களின் கூட்டம் இராஜாங்க உத்தியோகக் கூட்டடத்தில் மிகுமாயின் அன்றே பிரிட்டிஷ் துரைமக்களை ஓட்டிவிட்டு தங்கள் சுற்றத்தார் சுகத்தை நிலைக்கச் செய்துக் கொள்ளுவார்கள்.

பிரிட்டிஷ் ராட்சியத்திற்கே வேர்புழுவாகத் தோன்றும் வஞ்சகக் கூட்டத்தோருக்குக் குடிகள் மீது அதிகாரஞ் செலுத்தக்கூடிய உத்தியோகங்களையும், பணங்களை வசூல்செய்யும் உத்தியோகங்களையும் கொடுப்பதாயின் தங்களுடைய அதிகாரத் தொழில்களினால் குடிகளை பயமுறுத்தி தங்கள் வசப்படுத்திவைத்திருந்து காலம் நேர்ந்தபோது பிரிட்டிஷ் அரசாட்சிக்கு பின்னமுண்டாக்கி தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளுவார்கள்.

இதற்கு ஆதாரமாகப் பூர்வ பெளத்தமார்க்க, விரோதத்தினால் சாதிபேதமற்ற திராவிடர்களாம் ஆறுகோடி மக்களை எதுவிஷயத்திலும் தலையெடுக்க விடாமல் நசித்து மிருகத்திற்குந் தாழ்ச்சியாக நடத்தி தாழ்ந்தசாதி களென்னும் கட்டுக்கதையும் ஏற்படுத்தி அவ்வழியாகவும் இழிவுகூறி முன்னேறவிடாமற் கொல்லாமற் கொன்று வந்ததுமன்றி நூதனமாக இத்தேசத்திற் குடியேறி வருகிறவர்களுக்கும் இவர்கள் தாழ்ந்த சாதியார் மெத்தக் கேவலமுடையவர் களென்றும் போதித்து அவர்களாலும் இழிவுபடுத்தச் செய்துவந்த சத்துருக்கள் தற்காலத்திய சில காரியங்கள் கைக்கூடாமல் இருக்கின்றதென்று கருதி தாழ்ந்த சாதியோர்களென்று சீர்கெடுத்து வந்தவர்களையே உயர்ந்த சாதிகளென்று சீர்படுத்திவிடுவதாய் சில கூட்டங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

காருண்ய பிரிட்டிஷ் இராஜாங்கத்தோர் இதன் அந்தரார்த்தங்களை ஆழ்ந்தாலோசித்து சத்துருக்களின் கொரூரச் செயலால் சீர்கெட்டு சிந்தனை நைந்திருந்தவர்கள் தற்கால பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் சில இடுக்கங்களற்று சுகம்பெற்றுவருகின்றார்கள். இவ்வகை சீர்பெற்றுவரும் சாதிபேதமற்ற ஆறுகோடி மக்களை இன்னும் கைசோரவிடாது கார்த்து அவர்களை நசித்துப் பாழ்படுத்திவந்த சத்துருக்கள் முன்னிலையில் சீருஞ் சிறப்பும் பெற செய்து வைப்பார்களாயின் பிரிட்டிஷ் ஆட்சியின் நன்றியை என்றும் மறவாது தங்கட்பிராணனை முன்பு கொடுத்து பிரிட்டிஷ் துரைமக்களை காப்பார்களென்பது சத்தியம் சத்தியமேயாம்.

வித்தையும், புத்தியும், ஈகையும், நீதியும் நிறைந்த கருணைதங்கிய இராஜாங்கத்தோர் தற்காலத் தோன்றிவரும் இராஜதுவேஷ காலத்தில் சாதிபேதமற்ற மக்களை கைநழுவவிடாது தங்கள் அடைக்கலத்தில் வைத்து ஆதரிக்கவேண்டுகிறோம்.

- 3:34; பிப்ரவரி 2, 1910 -