உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/145-383

விக்கிமூலம் இலிருந்து

141. மதராஸ் கார்பொரேஷன் என்னும் சென்னை சுகாதார சங்கம்

சென்னை முநிசபில் எல்லைக்குள் வீதிசுகம் தருவதற்கும் விளக்கின் சுகம் தருவதற்கும், ஜலசுகம் தருவதற்கும், சாளரங்களின் சுத்தந்தருவதற்கும் வீதிகளெங்கும் சுத்தசுகம் தருவதற்கும், குடிகளுக்கு நேரும் வியாதிகளை நீக்கி சுகந்தருவதற்கும், குடிகளை பாதுகாத்து ரட்சிக்கும் சுகந்தருவதற்கும் ஓர் கூட்டத்தோர் சேர்ந்து சபாநாயகரென்றும், கமிஷனர்களென்றும் காரியதரிசியென்றும், நியமனம் பெற்று சுகாதாரங்களை செய்து வருவதில் அந்தந்த டிவிஷன்களுக்கென்று ஏற்பட்டுள்ள கமிஷனர்கள் அந்தந்த டிவிஷன்களிலுள்ளக் குடிகளுக்கு எந்தெந்த சுகாதாரங்களை அளித்து கார்த்துங் கவனித்தும் வருகின்றார்களோ விளங்கவில்லை.

கமிஷனர்களுடையக் கண்ணோக்கமும் கவலையும் குடிகளின் சுகாதாரத்தை நாடியிருக்குமாயின் ஒவ்வொரு வீதிகளில் குழாய்கலம் சரிவர வராமல் தடைகொண்டு வருவதைக் கவனிப்பார்கள். இரண்டாவது, நீர் நாற்றங்கொண்டுவருவதைக் கவனிப்பார்கள். மூன்றாவது, வீதிகளில் உள்ள பள்ளமேடுகளினால் வண்டிகள் உடையும் கேடுகளையும் மாடு குதிரைகள் படும் கஷ்டங்களையும் கவனிப்பார்கள். நான்காவது, கடைகளில் கொழுப்பு கலந்த நெய்களையும், கலப்புள்ள எள்நெய்களையும், கலப்புள்ள தானியங்களையும் கவனிப்பார்கள். ஐந்தாவது, முநிசிபாலிட்டிக்கு சம்மந்தப்பட்ட வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் வியாதியடைந்து வரும் ஏழைக்குடிகளைச் சரிவரக் காப்பாற்றிவருகின்றார்களா என்று கவனிப்பார்கள். ஆறாவது, முநிசிபாலிட்டிக்கு சம்மந்தப்பட்ட கலாசாலைகளில் வாசிக்கும் சிறுவர்களில் எந்தெந்த வகுப்பு சிறுவர்கள் அதிகப்பட்டுவருகின்றார்கள், எந்தெந்த வகுப்பு சிறுவர்கள் கல்வியிலும் கைத்தொழிலிலும் எவ்வளவு தேர்ந்து வருகின்றார்களென்றுங் கவனிப்பார்கள்.

இத்தியாதி செயல்களில் ஏதொன்றை கவனித்திருப்பார்களாயின் தாங்கள் கூடும் சுகாதாரக் கூட்டங்களில் தங்கடங்கள் டிவிஷன்களிலுண்டாம் சுகாதாரக் குறைவுகளையும் சுகாதார நிறைவுகளையுங் கூட்டத்தோருக்கு எடுத்து விளக்கி குடிகளுக்கு வேண சுகாதாரம் அளித்துவருவார்கள். கமிஷனர்கள் அந்தந்த டிவிஷன் குடிகளுக்கு வேண்டிய இன்னின்ன விஷயங்களை எடுத்துப் பேசினார்கள், என்னின்ன சுகங்களைக் குடிகளுக்கு அளித்தார்கள் என்னும் ஓர் வதந்தியுங் காணோம்.

வண்டிகளைக் கொண்டுவந்து குடிகளை ஏற்றிக்கொண்டுபோய் தங்கள் பெயரை எழுதும்படிக் கோரி தங்களைத் தாங்களே கமிஷனர்களாக நியமித்துக்கொள்ளுங்காலத்தில் காணுங் கமிஷனர்களை மற்றொருகாலுங் காணாதிருக்குங்கால் எந்த டிவிஷன் குறைகளை எந்த டிவிஷன் கமிஷனர் விளக்கிக்காட்டுவார்கள். சுகாதாரக் கூட்டங்களில் சுதேச கமிஷனர்கள் கூடுங்கால் ஓர் ஐரோப்பிய உத்தியோகஸ்தரை வைக்கவேண்டுமென்றால் அவர்களைத் தடுப்பதிலும் பணக்கணக்குப் பார்ப்பதிலும் மிக்க சுருசுருப்பாய் இருப்பார்களன்றி அவ்வைரோப்பியரால் குடிகளுக்குண்டாகும் சுகாதாரச் செயல்கள் யாதென்று கண்டறிந்து பேசுவாரில்லை.

அதாவது அசுத்த சாரள நீர்களை பூமியில் சற்றாழமாகக் குழாய்களைப் புதைத்து அதனுள்வழி அசுத்தஜலங்களைக்கொண்டுபோக வேண்டுமென்று ஏற்படுத்தி அவ்வேலையை இராயப்பேட்டையில் ஆரம்பித்து முடித்ததின் பேரில் அதன் செயலால் சாரளக் கெட்டநாற்றங்கள் அடங்கியதுமன்றி கொசுக்களால் உண்டாகும் உபத்திரவங்களும் நீங்கிவருகின்றன. இத்தகைய சுகாதாரச்செயலுக்கு பூமியுள் குழாயமைத்து சீர்திருத்தும் விவேகபுருஷனாம் ஓர் ஐரோப்பியரை தெரிந்தெடுத்து அவ்வுத்தியோகத்தில் நியமிப்பதால் யாதுகுறை உண்டாம். பணச்செலவு அதிகப்படுகின்ற தென்பாராயின் குடிகளிடம் வசூல்செய்யுந் தொகைகள் குடிகளின் சுகத்திற்கா அன்றேல் அவர்கள் சுகக்கேட்டிற்கா. கருணைதங்கிய கவர்ன்மெண்டார் தங்கள் கூட்டத்தோரைப்போல் சுகாதாரக்கூட்டமும் ஒன்றிருத்தல் வேண்டுமென்னும் நன்னோக்கத்தால் ஏற்படுத்தியும் சுதேசக் குடிகளுக்குள்ள சுகக்கேடுகளை சுதேசக் கமிஷனர்களே கவனியாவிடில் வேறு யாவர் கவனிப்பாரோ விளங்கவில்லை.

சுகாதார சங்கத்தின் பிரசிடெண்டாக ஓர் ஐரோப்பியரை நியமித்திருப்பது போல் ஒவ்வோர் டிவிஷன் கமிஷனர்களுக்காகவும் ஒவ்வோர் ஐரோப்பியர்களையே நியமித்துவிடுவார்களாயின் சகல குடிகளும் பேதமின்றி சமரச சுகம் பெறுவார்கள். அதாவது ஓர் ஐரோப்பியர் டிவிஷன் கமிஷனராக ஏற்படுவாராயின் இவர்கள் சின்னசாதிப்பார்கள், அவர்கள் பெரியசாதியார்கள் என்னும் பேதமில்லாமலும், இவர்கள் தன்சாதியார் அவர்கள் புறசாதியாரென்னும் பாரபட்சமில்லாமலும், இவர்கள் ஏழைகள் அவர்கள் கனவான்களென்னும் நோக்கம் வையாமலும் சகலர் சுகங்களையும் தங்கள் சுகம்போற் கருதி அவரவர்கள் சிறுவீதிகளிலும் சென்று உள்ளக் குறைகளை நேரிற் கண்டு வேண சுகமளித்து ஏழைக்குடிகளைப் பாதுகாப்பார்கள். அங்ஙனமின்றி சாதித்தலைவர்களையே பெரும்பாலும் சுதேசக் கமிஷனர்களாக நியமிப்பதினால் அதுசின்னசாதியோர் வாசஞ்செய்யும் வீதி, இது பெரிய சாதியோர் வாசஞ்செய்யும் வீதியெனுங் கொடும் பேதத்தால் ஏழைகளுக்கு என்றும் சுகக்கேடும், கனவான்களுக்கு என்றென்றும் சுகாதாரம் போலும்.

“கனத்தின்பேரில் வளைவென்னும்” பழமொழிக்கிணங்க கனவான்களின் வாக்கு சீர்பெறுகுவதற்கும், ஏழைகளின் வாக்கு சீர்கெடுவதற்கே ஆதாரமாய் இருக்கின்றது. ஆதலின் கனந்தங்கிய சுதேசக் கமிஷனர்கள் யாவரும் ஏழைக் குடிகளின் மீது கண்ணோக்கம் வைத்து சுகாதாரம் அளிக்க வேண்டுகிறோம்.

- 4:4: சூலை 6, 1910 -