அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/163-383

விக்கிமூலம் இலிருந்து

159. இந்தியதேசமும் இந்தியதேச மக்களும் எவ்வகையால் சீரும் சிறப்பும் பெறுவர்

தங்கள் தங்கள் முயற்சிகளினாலேயாம். அதாவது, நமது தேசத்து தனவான்களுக்கு ஈகையென்னும் குணமே மாறி வாகையென்னுங் குணம் பெருகிநிற்கின்றது ஈகையின் குணமோவென்னில் தாங்கள் சம்பாதித்துள்ளப் பொருளைக் கொண்டு ஏனையோரும் தன்னைப்போல் சுகம்பெறவேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் பொருளீய்ந்து போஷிப்பது ஈகையின் குணமாகும். வாகையென்னும் குணமோவென்னில் தனது கைக்குவந்தவரையில் கிடைத்த பொருளை மேலும் மேலும் சேர்த்து பெட்டியில் பூட்டிடுவதும், மண்ணுள் புதைத்து வைப்பதுமே மகிழ்ச்சியாதலால் அவற்றை வாகையின் குணமென வகுத்துள்ளார்கள்.

இவ்விருகுணத்தோருள் வாகைகுணத்தோரே மிகுத்து, ஈகைகுணத்தோர் நசிந்துவிட்டபடியால் இலவசமான கல்விசாலைகளும் கைத்தொழிற் சாலைகளும் அமைத்து சிறுவர்களை சீர்படுத்துவதற்கு ஏதுவில்லாமலிருக்கின்றது. ஆதலின் இந்திய சிறுவர்களை சீர்திருத்தி இந்தியாவை சிறப்படையச் செய்யவேண்டுமாயின் சகல இந்தியர்களும் ஒருமனப்பட்டு தங்கள் இந்துக்கோவில்களிலுள்ள சாமிகளை சகலரும் பார்த்துத் தொழும் வழியில் திறந்துவிட்டு உள்ளிருக்கும் மண்டபங்களை விருத்தி கட்டி கல்வி கற்பதற்கும் வெவ்வேறு கூடங்களை வகுத்து அக்கோவில்களுக்கு மானியமென விட்டிருக்கும் பூமிகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் தட்சணை தாம்பூலங்களாலும் சேரும் பெருட்களை எட்டு பாகமாக்கி இரண்டு பாகத்தைக் கோவில் சிலவுகளுக்கும், இரண்டு பாகத்தை கட்டிட விருத்தி சிலவுகளுக்கும், மிகுந்த நான்கு பாகத்தைக்கொண்டு சிறுவர்களைக் கல்வியிலும் கைத்தொழிலிலும் விருத்திக்குக் கொண்டுவருவரேல் இந்தியர்கள் சிறப்படைவதுடன் தேசமும் சிறப்படையும்.

இவ்வகையால் ஏற்படுத்தும் கல்விசாலைகளிலும், கைத்தொழிற்சாலைகளிலும் சாதியுள்ளவர்கள்தான் வந்துக் கற்றுக் கொள்ளவேண்டுமேயன்றி சாதியில்லாதவர்கள் வந்து கற்கப்போகாதென தடுப்பார்களாயின் உள்ளசீருங்கெட்டுப் பாழடைந்து போவார்கள். காரணமோ வென்னில் தற்காலமுள்ளப் பெருங் கோவில்களெல்லாம் சாதிபேதமில்லாப் பூர்வபௌத்தர்களுடையவைகளேயாகும். தற்கால சாதியாசாரமுடையவர்களுக்கோ அவற்றுள் யாதொரு சுயாதீனமும் கிடையாது. ஆதலின் இந்திய தேசப் பொதுப்பொருளை சகலமக்களும் பொதுவாக அநுபவிப்பதே சுகந்தரும். இத்தேசத்துப் பூர்வக்குடிகளாகும் சாதிபேதமற்றவர்களுக்கு அங்கு சுகங்கிடையாதபோது அதற்கு அன்னியப்பட்டவர்களுக்கு அங்கு சுகங்கிடையாதென்பது துணிபு.

தன்னைச் சுகம்பெறவேண்டுமென்று கருதுகிறவன் முதலாவது அன்னியர் சுகத்தைக் கருதவேண்டும். தான் அன்னியரால் உபகாரம் பெறவேண்டுமென்று கருதுகிறவன் தன்னால் அன்னியருக்கு உபகாரஞ் செய்தல் வேண்டும். “அன்னியர் பிள்ளையை வூட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” எனும் பழமொழிக்கிணங்க தேசத்து ஏழைகளை சீர்திருத்தி முன்னேறச்செய்வதே கோவில் தன்மகர்த்தாக்களின் அழகாகும். அங்ஙனம் ஏழைகளின் சீர்திருத்தங்களை நோக்காது கோவிலுக்கென்றுவரும் பணங்களை, வடை, தோசை, பாயாசத்திற்குச் சண்டையிடவும் நெய்ப்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுக்குச் சண்டையிவும், ததியோதனம், புளியோரைக்குச் சண்டையிடவும் விட்டு அவர்களுக்கு வேண்டிய வரையில் வேளை வேளைக்குப் புசிக்கக் கொடுத்து முழுச் சோம்பேறிகளாகத் திரியவைப்பது கோவில் தன்மகர்த்தாக்களின் அழகாகாவாம். எப்போது கோவில் தன்மகர்த்தாக்களென்று ஏற்பட்டார்களோ, அவர்களது கோவிலும் பொதுவாயிருத்தல் வேண்டும். அவர்களது தன்மமும் பொதுவாயிருத்தல் வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கிட்டுள்ள தன்மகர்த்தாவென்னும் பெயரும் பொருந்தும். தருமத்திற்குக் கர்த்தாவென்று ஏற்படுத்தப்பட்டவர்கள் அக்கோவில் சொத்தை வீண் சோம்பேரிகளுக்குச் செலவிட்டு மேலுமேலும் சோம்பேரிகளைப் பரவச் செய்யவிடாமல் கோவில் சொத்துக்களைக்கொண்டு தேசத்து சிறுவர்களைக் கல்வியிலும் கைத்தொழிலிலும் விருத்திச்செய்ய வேண்டுகிறோம். டிப்பிரஸ் கிளாசை சீர்படுத்தப் போகிறோமென்னும் கூட்டத்தார் வருமானமுள்ள கோவில்களையே கல்விசாலைக் கைத்தொழிற்சாலைகளாக வகுத்து முக்கோவிலுக்கு வரும் பணங்களைக்கொண்டே சகல சிறுவர்களுக்கும் பேதமின்றி கற்பித்து சீர்பெறச் செய்வார்களாயின் வெளிபணங்களைத் தருவித்து ஏழைகளை சீர்திருத்துவதினும் கோவில் பணங்களைக்கொண்டே குடிகளை விருத்தி செய்யக்கூடும். இதுவே டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தும் யதார்த்த வழியுமாகும்.

- 4:18; அக்டோபர் 12, 1910 -