அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/180-383

விக்கிமூலம் இலிருந்து

176. கனந்தங்கிய நமது கவர்னர் சர் ஆர்த்தர் லாலிபிரபு அவர்களின் கருணை

இந்திய தேசத்தோர்களே சற்று கவனியுங்கள். தற்காலத் தோன்றியுள்ள பிளேக்கென்னும் மகாவிஷரோகத்தின் பெயரைக் கேட்டபோதினும், அதன் செயலைக் கண்டபோதினும் அத்தேசத்து மக்கள் எவ்வளவோ பயந்து தேசம்விட்டு தேசம் ஓடிப்போகின்றார்கள்.

இத்தகையக் கொடூர ரோகம் சேலத்திலும் அதைச்சார்ந்த சுற்றுக் கிராமங்களிலும் தோன்றி ஆயிரம் இரண்டாயிரம் மநுக்களைக்கொன்று கூச்சலுண்டாயது உலகப் பிரசித்தமாம். அவ்வகை விஷரோகம் நிறைந்துள்ள தேசத்திற்கு நமது கருணைதங்கிய கவர்னர் சர். ஆர்த்தர் லாலி பிரபு அவர்கள் தனதுயிரை ஓர் துரும்பைப்போல் கருதியும், தனது குடிகளினுயிரை மாணிக்கம்போல் பாவித்தும் அவ்விடஞ்சென்று வீதிவீதியாய் நுழைந்தும் எங்கெங்கு ஜலவசதி கெட்டுள்ளதென்றும் எங்கெங்கு சுகாதாரங்கள் கெட்டுள்ளதென்று நன்காராய்ந்து அங்கங்கு குடிகளுக்கு நேர்ந்துள்ள கேடுபாடுகளை அகற்றி அவரவர்கள் மனோபயத்தை நீக்கிக் கார்க்கத்தக்கயேதுக்களைக் கலெக்ட்டர் துரையவர்கட்கும், டாக்டர்களுக்கும், சானிட்டேரி ஆபீசர்களுக்குக் கூறி குடிகளுக்கு நல்ல சுகாதாரம் அளிக்கும்படி செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்திருக்கின்றார்கள்.

இத்தகைய சுத்தவீரர்களன்றோ அரசாங்கத்திற்குரியவர்கள். இத்தகைய நீதியும், நெறியும், அன்பும் வாய்த்தவர்களன்றோ குடிகளைக்காக்கும் புருஷர்கள். இத்தகைய நீதியும், கருணையும் வல்லபமும், மனோதிடமும், வித்தையும், புத்தியும் நிறைந்துள்ளவர்களின் ஆட்சிக்கு துரோகஞ்செய்து அவர்களை ஓட்டிவிட்டு தாகத்தாலும், பிணியாலும், விடாயாலும் ஓர் மனிதன் வீதியில் விழுந்துவிடுவானாயின் அவனருகில் சென்றெடுத்து அவனது ஆயாசத்தை நீக்குவதை விடுத்து விலகி நின்றுக்கொண்டு அவனென்னசாதி, அவனெந்தவூரெனக் கேட்டுக்கொண்டு நிற்குஞ் சீவகாருண்யமற்றவர்களும், தங்களை ஒத்த மநுமக்களை சுத்தசலம்மொண்டு குடிக்கவிடாத பொறாமெயுற்றவர்களும், தேசத்துள் படையெழிற்சியும் விஷரோக எழிற்சியும் தோன்றுங்கால் தங்கள் பிராணனைக் கார்த்துக்கொள்ள ஊரை விட்டோடிவிடும் வீரமற்றவர்களும் எக்காலும் மநுக்களை ஒற்றுமெய் அடையவிடாது பிரிக்கத்தக்க பேதம் உள்ளவர்களுமாய தற்கால சுதேசிகள் வசம் ஆட்சியளிப்பதாயின் குடிகளைப் பாதுகாத்து ரட்சிப்பரோ குடிகளுக்குள்ள குறைகளை நெருங்கிப் பரிகரிப்பரோ. வேற்றரசரின் படைதோன்றி குடிகளைத் துன்பஞ் செய்யுங்கால் சுத்தவீரத்துடன் எதிர்த்து எதிரிகளை வென்று குடிகளைப் பாதுகாப்பரோ. அவற்றைக் கனவிலும் நினைக்க ஏதுவில்லை. இதுவுமன்றி தருமஞ்செய்வதில் தனது சாதியோர்களுக்கே செய்ய வேண்டும், ஏனைய சாதியோருக்கு தரும் செய்யலாகாதென்னும் பாரபட்சமுள்ள சாதித் தலைவர்கள் வசம் அரசாட்சியை அளித்து விடுவதாயின் யாவர்பால் தங்களாட்சியை அன்புகொண்டு நடாத்துவார்கள் தருமஞ்செய்வது போலேயாம் தங்கள் தங்கள் சுயகாரியங்களுக்காய்க் கூச்சலிடும் சோம்பேறிகளின் வார்த்தைகளை நம்பிக்கொண்டு பூர்வ சுதேசிகளும் புலம்புவது பயனற்றச் செயலாகமுடிவதுடன் பழிக்கும் பாவத்திற்கும் ஏதுண்டாகிப்போம். ஆதலின் பிரிட்டிஷ் ஆட்சியோருக்குள்ள கருணையும், நீதிநெறி வல்லபமும், தன்னவரன்னியர் என்னும் பட்சபேதமற்றச் செயலும் எத்தகையதென்றுணர்ந்து அதன் பின்னர் சுயராட்சியம் விரும்பி செல்ப் கவர்ன்மெண்டு வேண்டுமென்னும் சாதித் தலைவரும் சமயத்தலைவருமானவர்களின் கருணையற்றச் செயல்களையும், அநீதியாய வாழ்க்கைகளையும், வல்லபமற்ற சோம்பேறிகளையும் தங்கள் சுயப்பிரயோசனங்களைக் கருதி ஏனையக் குடிகளைக் கெடுக்கும் பட்சபேதமுள்ளச் செயல்களையும் உணர்ந்து சுயராட்சியமென்னும் சொல்லையே மறந்து அவ்வார்த்தையை எடுத்துப் பேசும் கூட்டத்தோரையுந் துறந்து பிரிட்டிஷ் ஆட்சியில் விசுவாசம் வைத்து பிரிட்டிஷ் ஆட்சியே என்றும் நிலைத்து ஆளுகைபுரியவேண்டி சிந்திப்பார்களென வந்திக்கின்றோம்.

- 4:28; டிசம்பர் 21, 1910 -