உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/190-383

விக்கிமூலம் இலிருந்து

186. சுதேசிகள் சுகத்தை சுதேசிகளேபொருக்காததென்னோ?

தற்காலம் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் வடநாட்டில் உலாவிவரும் ஓர் பத்திரிகைக்கு சிலவுதவிபுரிந்து அப்பத்திரிகையை அதிகமாகப் பரவச்செய்யும் ஏதுக்களைச் செய்துள்ளார்களாம்.

அப்பத்திரிகா உதவிபெற்றுள்ள பத்திராதிபரே சுதேசியேயாகும். இவற்றையறிந்த சுதேசியாம் மற்றோர் தென்னாட்டு பத்திராதிபர் அதை விரோதமாகவும், அவ்வகை உதவி செய்யத்தகாதென்றும், நீதிநெறியிற் சிறந்து நடுநிலை நடாத்தும் நிபுணர்போல் அபிநயிக்கின்றார். அத்தகைய உபகாரத்தை ராஜாங்கத்தார் இவரது பத்திரிகைக்கு உதவிபுரிவரேல் ஆனந்தமாக ஏற்று அடக்கத்தில் நின்றுவிடுவார். அங்ஙனமிராது வடநாட்டு பத்திராதிபருக்கு அளித்துவிட்டபடியால் மஞ்சகியாது நியாய விரோதமென்றும், தீயவிரோதமென்றும் தனது பத்திரிகையில் வரைந்துவிட்டார். இத்தகைய பொறாமெயும் பொய்ச்சார்பு முள்ளவர்கள்தானோ சுதேசத்தை சீர்திருத்தி சுதேசிகளை ரட்சிக்கப்போகின்றார்கள். கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் சுதேசிகளுக்கு அளித்துவருஞ் சுகங்களையும், அதிகார உத்தியோகங்களையும் சுதேசிகளே கண்டு களிக்காது மொறுமுறுப்பார்களாயின் சுதேசிகள் எக்காலத்தில் சீரும் சிறப்பும் பெறுவார்கள்.

இத்தகையக் குடிகெடுப்பும், வஞ்சினமும், பொறாமெயுமிகுத்த சுதேசிகள்பால் சுயராட்சியம் அளித்துவிடுவதாயின் எவ்வகையால் அவற்றைக் கார்த்து ராட்சியபாரம் தாங்குவார்கள். தங்களுக்குத்தாங்களே சகியாத வஞ்சினர்கள் ஏனையோர் சுகத்தை சகிப்பார்களோ, ஒருக்காலும் சகியார்கள்.

கண்டு சகியா செயலுக்குக் காரணங்கள் யாதெனில், வித்தை, புத்தி முதலிய விருத்தியால் தேசத்தை வருத்தி பொருள் சம்பாதித்து தாங்களும் சுகித்து தங்களை அடுத்தோர்க்கும் சுகமளித்து வருவார்களாயின் இத்தகைய குடிகெடுப்பின் குணமும், பொறாமெய் மிகுத்தச் செயலும் இவர்களுக்குத் தோன்றமாட்டாது. சதா சோம்பல்கொண்டு பொய்யாலும், சூதாலும் பொருள் பறித்துண்பதே பெரியசாதியென்னும் பெயர்பெற்றுள்ளவர்களின் செய்யலாதலின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் சுதேசிகளுக்குச் செய்து வருஞ் சுகத்தையே கண்டுகளிக்காது சோம்பியும், சொற்சோர்வுற்றுந் திரிகின்றார்கள். இவர்களது செயலும் குணமும் புலியானது பசுவின் தோலைப் போர்த்து பகிரங்கத்தில் உலாவுவதுபோ லிருக்கின்றபடியால் இத்தகையோர் குணத்தையும் செயலையும் நன்காராயாது அவர்களது கருத்துக்கு இசைவது அவலட்சணமேயாகும்.

சுதேச லட்சணத்தையும் சுதேசிகளின் லட்சணங்களையுங் கருதுவோர் வித்தையிலும் புத்தியிலுந் தங்களது வல்லபத்தை காட்டல்வேண்டும். அங்ஙனமின்றி ஒருவர் கொடுப்பதை தடுக்கமுயல்வோரும், மற்றொருவர் பெறுவதைக் கண்டுசகியாதவர்களுமாகியக் கூட்டுரவிற் சேராமலும், அந்நோர் வாய்மொழிகளைக் கேளாமலு மிருக்கக் கருதியே நீதி நூலாசிரியர்கள் தீயோரைக் காண்பதுவுந் தீது, தீயோர் சொற்கேட்பதுவுந் தீது, தீயோர்குணங்களை பல்லோர்க்கு உரைப்பதுவுந் தீது, தீயாரோடு இணங்கியிருப்பதுவுந் தீதென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். கருணைதங்கிய ராஜாங்கத்தோர் செய்துவரும் உபகாரச்செயல்களைக் கண்டு களித்து அவர்களுக்கு நன்றியறிந்த வந்தனஞ்செய்யாது அவர்களது உபகாரச் செயலுக்கு அபகாரமொழிக் கூறுவது அழகின்மெயேயாம்.

வடநாட்டிலுலாவி ராஜாங்கத்தோரால் உதவி பெற்றுள்ள பத்திரிகையும், சுதேச பத்திரிகை, அதனை நடத்துவோரும் சுதேசி, அவற்றைக்கண்டு சகியாதாரும் சுதேசியாதலின் இவற்றைக் காணும் ஒவ்வோர் புறதேசிகளும் நகைப்பதற்கு ஏதுவாகிவிடுகின்றது. ஆதலின் சுதேசிகளென சொல்லித்திரிவோர் வீண் பொறாமெய்ச்செயலில் வீண்காலம் போக்காது வித்தையிலும் புத்தியிலும் தங்கள் காலத்தைப் பெருக்கி சகல குடிகளும் சுகம்பெறும் வாழ்க்கையில் நிலைக்கச்செய்வார்களென்று நம்புகிறோம்.

- 4:34; பிப்ரவரி 1, 1911 -