உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/231-383

விக்கிமூலம் இலிருந்து

227. இராஜ துரோகிகள் என்றும் பெயரற்று இராஜ விசுவாசிகள் எனத் தோன்றுவராக

இந்திரர்தேசமென்னும் இப்பதியில் இந்திரவிழாக்கள் கொண்டாடி இந்திரரது தன்மத்தையும், சங்கத்தையும் சிந்தித்து குருவிசுவாசத்திலும் இராஜவிசுவாசத்திலுமிருந்து சுத்தவிதயவுள்ளக்கிளர்ச்சியால் வானம் பெய்யென்றால் பெய்யவும், தானியம் பெருக்கவும், குடிகள்சிறக்கவும், கோன் உயரவுமாயிருந்தது. அத்தகைய நீதி வழுவா சிறப்புற்றிருந்த தேசம் வானஞ் சுருங்கவும், பூமி கருகவும், பயிறுகள் சிறுகவும், குடிகள் குறுகவும், கோன் மனமுறுகவும் வந்த காரணம் யாதெனில், வன்னெஞ்சர்களும், பொறாமெக்காரர்களும் குடிக்கேடர்களும் தாங்கள் ஒருகுடி பிழைக்க நூறுகுடிகளைக் கெடுக்க முயலும் பஞ்சமாபாதகர்களும், கருணையென்பதே அற்று கபடு மிகுத்த அசத்தியர்களும், அசப்பியர்களும், துன்மார்க்கர்களும், நயவஞ்சகர்களும், மக்கள் துரோகிகளும், தேசத்துரோகிகளும் இத்தேசத்துள் சிறந்து விட்டபடியால் இராஜதுரோகிகள் பெருகிக்கொண்டே வருகின்றார்கள். இத்தியாதி சீர்கேடுகள் யாவற்றையும் நமது இந்திரர்தேயப் பூர்வக் குடிகள் யாவரும் ஒன்றுகூடி ஆலோசிப்பார்களாயின் இராஜவிசுவாசிகள் பெருகி தேசமுங் குடிகளும் சீர்பெற்றுப்போவார்கள். அங்ஙனமின்றி இராமன் ஆண்டாலென்னை, இராவணனாண்டாலென்ன என்றிருப்பதாயின் இராஜதுரோகிகள் பெருகி அவர்கள் சீர்கெட்டு நாசமடைவதுடன் தேச்சிறப்பும் அழிந்து பூர்வக்குடிகளும் நிலைகுலைந்துப்போம்படி நேரிடும்.

அதலின் நமது இந்தியதேசப் பூர்வக்குடிகள் சற்று நிதானித்து இதுகாரும் நம்முடைய தேசத்தை பிரிட்டிஷ் ஆட்சியார் ஆளுகை பெறாவிடின் பாதைகள் சீர்பெற்றிருக்குமா, ஒருதேசங்களைவிட்டு மறுதேசங்களைக் கண்ணிற் காணக்கூடுமா, குளம் ஏரிகளில் சுத்தநீர்கள் தங்குமா, ஒவ்வொரு வரும் நாகரீகமான உடைகளைத் தரிக்கலாகுமா, சகலசாதியோரும் சுகச்சீர் பெற்று வாழப்போகுமா, சகலசாதியோரும் சுத்த நீரை மொண்டு குடிக்கக்கூடுமா, சகலசாதியோருடனும் சரசமாக வண்டிகளிலேறிச் செல்லுந் தைரியம் ஓடுமா, பஞ்சம் உண்டாகிய தேசங்கள் அங்கங்கு பாழடையாமல் உடனுக்குடன் தானியங்களைக் கொண்டுபோய் பசியாற்றுதற்கு வழிகளும் வண்டிகளும் நேருமா, தூரதேசக் குடும்ப சங்கதிகளைத் தெரிந்து கொள்ளக்கூடிய ஓலைகள் சேருமா எனும் இத்தியாதி சுகங்களையுங் கவனித்து இவற்றை அளித்து ஆதரித்து வருபவர்கள் யாவரென சிந்தித்து அவர்களது அரசாட்சியே என்றும் நீடுகவென வந்தித்து இராஜ துரோகிகளாகத் தோன்றுவோர் யாவரையுந் தலையெடுக்கவிடாமல் கண்டித்து அவ்வஞ்சநெஞ்சர்கள் கூட்டுறவையும் அருகில் சேர விடாமல் துண்டித்து பிரிட்டிஷ் இராஜவிசுவாசத்தையே என்றென்றும் தொந்தித்து நிற்பதாயின் எக்காலும் எல்லோரும் சுகச்சீர் பெறலாம்.

எக்காலும் சுகச்சீரை நாடுவோர் இராஜதுரோக சிந்தனையுடையவர்கள் யார், இராஜதுரோகக் கூட்டங் கூடுகிறவர்கள் யாரெனக் கண்டறிந்து உடனுக்குடன் ஆங்கில உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கி அங்கங்கு அவர்களைப்பிடித்து அடக்கிவருவதாயின் இராஜதுரோகிகளின் பெருக்கம் தங்களுக்குத்தாங்களே ஒடுங்கி வஞ்சினமும் பொறாமையும் அடங்கி இராஜ விசுவாசத்தில் நிலைப்பார்கள்.

இத்தகைய வன்னெஞ்சர்களாம் சத்துருக்களைக் கண்டுபிடியாமலும் அவர்களது துற்கிரித்தியங்களை அடக்காமலும் இருப்பதாயின் உள்ளக் காச்சலால் பஞ்சமும் பெருவாரிக் காச்சலுமுண்டாகிப் பாழடைவதுடன் இராஜாங்கக் காச்சலு மேற்கொண்டு இரும்பை அடிக்குமடி துரும்புக்கும் படுவதுபோல் இராஜதுரோகிகளின் மீது உண்டாயக் காச்சல் நிரபராதிகளாகியக் குடிகள் மீதும் பரவி உள்ள சுகச்சீருங் கெட்டுப்போகும். ஆதலின் இராஜதுரோகிகளை இராஜ விசுவாசிகளாக்க முயல்வதே பெருமுயற்சி யெனப்படும்.

- 5:15; செப்டம்பர் 20, 1911 -