அருள்நெறி முழக்கம்/பின்னிணைப்புகள்

விக்கிமூலம் இலிருந்து


பின்னிணைப்பு -1


இதயத்துடிப்பின் எதிரொலி
- ம.பொ. சிவஞானம்

குன்றக்குடி அடிகளாரின் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூலைப் படித்தேன். இது வெறும் எழுத்தோவியமன்று. அடிகளாரின் இதயத் துடிப்பின் எதிரொலி எனலாம். அவருடைய தமிழ்ப்புலமையும், வாதத்திறமையும் இந்நூலில் வெளிப்படுகின்றன. சமயமும், தெய்வ நம்பிக்கையும் தோன்றிய முதல் நிலம், “தமிழ்நிலம்" என்பது எனது நம்பிக்கை.

சமயமும், கடவுள் உணர்வும் பிற்காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தற்காலத்திலும் சமயத்துறைகளில் குற்றங்குறைகள் இருக்கலாம். ஆயினும் அத்தகு குறைகளையே பெரிதாக எண்ணி கடவுள் உண்மையை மறுப்பது, ஒழுக்கத்தை மறுப்பதாகும்.

குன்றக்குடி அடிகளார் நடமாடும் சமயக் கல்லூரியாக விளங்குகின்றார். கடவுள் “இல்லை" என்று சொல்லத் துணிவது சுலபம். மக்கள் அரைகுறை விழிப்புப் பெற்றுள்ள இந்நாளில் கடவுள் “உண்டு” என்ற கொள்கையை நிலைநாட்டுவது கடினம். இந்தக் கடினமான வேலையை அடிகளார் மேற்கொண்டுள்ளார். கடினத்தை எளிதாக்கும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. நாத்தீகத்தை எதிர்த்து வாதாடும் இடங்களில் அடிகளாரின் வாயில், வழுக்கியும் வன்சொல் இடம் பெறவில்லை.

குன்றக்குடி அடிகளார் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டார். அவருடைய எளிய தொண்டும், இனிய பேச்சுமே என்னைக் கவர்ந்ததற்குக் காரணங்களாகும். போலி வைதீகத்தை அவர் வெறுக்கிறார். அதுபோலவே, புரட்டு நாத்தீகத்தையும் அவர் எதிர்க்கிறார். இரண்டுக்கும் அப்பாற்பட்டுள்ள உண்மை ஆத்தீகத்தையே அவர் பரப்பி வருகிறார். அடிகளாரின் தொண்டுக்கு எனது மனமார்ந்த பாராட்டு.

இந்நூலை, ஒவ்வொரு தமிழரும் - ஏன்? - ஆத்திகர் நாத்திகர் ஆகிய இரு தரப்பாருமே வாங்கிப் படிக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.

__________________


  • தமிழகத்தில் அடிகளார் என்னும் தலைப்பில், மதுரை ஶ்ரீநவநீதகிருஷ்ணன் பஜனைக்கூடக் குழுவினர்வாயிலாக இவ்வுரைகள் நூல்வடிவானபோது எழுதிய அணிந்துரை. (01.11.1953)

பின்னிணைப்பு - 2

தமிழ்மாமுனிவர் அருள்நெறித்தந்தைதவத்திரு குன்றக்குடி அடிகளார்

வாழ்க்கைக் குறிப்புகள்


ஆண்டு  நிகழ்வுகள்
1925 தோற்றம்
பூர்வாசிரமம்: தந்தையார்: திரு. சீனிவாசம்பிள்ளை
தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி
பிள்ளைத் திருநாமம்: அரங்கநாதன்
தோற்றம் பெற்ற ஊர்: தஞ்சை மாவட்டம்
திருவாளப்புத்தூர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம்.
1931–36 சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம்.
சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.
1937ー42 தமையனார் திரு. கோபாலகிருஷ்ண பிள்ளை வீட்டில் கடியாபட்டியில் வாழ்தல்.
1942 பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல்.
1942 விடுதலைப்போராட்டத்தில் ஈடுபாடு. "வினோபாவே படிப்பகம்” தொடங்கி நடத்துதல்.
1945 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம்
கயிலைக்குருமணி அவர்களிடம் கந்தசாமித்தம்பிரான் என்ற தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல்.
தருமபுரம் ஆதீனம் தமிழ்க்கல்லூரியில் பயிலுதல்.
1947-48 சீர்காழிக் கட்டளைத்தம்பிரான்-திருஞானசம்பந்தர் திருமடம் தூய்மைப்பணி: திருமுறைவகுப்பு, விழா நடத்துதல்.
1949 1949 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு
பட்டம் ஏற்பு:திருநாமம் ஸ்ரீலருஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
1951 காரைக்குடிக் கம்பன் விழாவில் புதரிடை மலர் என்ற
தலைப்பில் அறிஞர்களின் நெஞ்சம் கவர்ந்த சொற்பொழிவு
1952 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45-ஆவது குருமகாசந்நிதான்மாக எழுந்தருளல்.
அருள்நெறித்திருக்கூட்டத்தோற்றம்
"மணிமொழி” என்னும் பெயரில் இயக்கப்பத்திரிகை வெளியிடல்.
1953 ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத்
திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்ககால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) "வள்ளல் பாரி விழா” தொடங்குதல்.
பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல்.
இலங்கைப் பயணம்- இரண்டுவாரச் சுற்றுப் பயணம்.
1954 இராசாசிதலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்டமாநாடு.
திராவிடர் கழகத்தலைவர் பெரியார் சந்திப்பு.
தாய்லாந்து, இந்தோசீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்)
1955 அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல்.
"தமிழ்நாடு" நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல்.
1956 அறிஞர் அண்ணா குன்றக்குடித் திருமடத்திற்கு வருகை.
ஆச்சார்ய வினோபாவே திருமடத்திற்கு வருகை.
1958 குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல்.
1959 ஆ. தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்.
பாரதப்பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை.
1960 மத்தியசேமநலக் குழு உறுப்பினராதல்.
1962 சீனப்போரின்போது தங்க உருத்திராட்ச மாலையைத்
திருவெற்றியூர்க்கூட்டத்தில் ஏலம்விட்டு ரூ. 4000 தருதல்.
மதுரைமீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சுனை தொடங்குதல்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசு வழக்குத் தொடர்தல்.
1966 தமிழ்நாடு தெய்வீகப் பேரவை தோற்றம்
1967 திருப்புத்தூர்த்தமிழ்ச்சங்கம் தோற்றம்.
திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறைநெறிப்படி-போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல்.
1968 இரண்டாம் உலகத்தமிழ்மாநாடு-"திருக்குறள் உரைக்கோவை" நிகழ்ச்சிதொடக்கவுரை நிகழ்த்தல்-
திருக்குறள் இந்திய மாநாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல். இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணாநோன்பிருத்தல்.
கீழவெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல். புத்தாடை வழங்குதல்.
1969 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி ஏற்பு.
கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை. கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல்.
தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறல்.
1970 சட்டமன்றமேலவையில் இந்து அறநிலையத்திருத்த மசோதா-
சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல்பற்றிப் பேசுதல்.
1971 தமிழ்நாடு சமாதானக் குழுத் தலைவராதல்.
சோவியத் பயணம், 22நாள் சுற்றுப் பயணம்.
1972 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி,
திருவள்ளுவர் கலைக்கல்லூரியாக உருவாதல். சென்னை, மயிலாப்பூர்திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம். வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம்.
குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித்திறத்தல்.
1973 திருக்குறள் பேரவைத்தோற்றம்
திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநிலமாநாடு நடத்துதல்.
"கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப் பெற்றது.
1975 நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை
மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொர்ணாம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச்சொற்பொழிவு.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சொர்ணாம்மாள் அறக்கட்டளைச்சொற்பொழிவு.
இராமநாதபுரம் இனக்கலவரம்- அமைதிப்பணி.
1982 குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல்.
மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்டமன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் பாராட்டுதல்.
திருவருட்பேரவை தொடங்குதல்.
மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலியநாடுகளில் சுற்றுப்பயணம்.
புளியங்குடி இனக்கலவரம்- அமைதிப்பணி.
1984 பாரததலமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி
அவர்கள் குன்றக்குடிக் கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.
1985 நடுவணரசு திட்ட ஆணைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை.
கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.
பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல்
மணிவிழா.
1986 தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெறுதல்.
இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் பாராட்டி. “Kundrakkudi Pattern” என்று அறிவித்தது.
1989 இவர் எழுதிய"ஆலயங்கள் சமுதாய மையங்கள்” என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் (D.lit) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1991 இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம்.
அரபுநாடுகள் பயணம்.
1993 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் "தமிழ்ப்பேரவைச் செம்மல்" விருது வழங்கிச் சிறப்பித்தது.
1995 இறைநிலையடைதல்.