அலிபாபா (2002)/மார்கியானாவின் மதிநுட்பம்

விக்கிமூலம் இலிருந்து
4
மார்கியானாவின் மதிநுட்பம்


திருடர் தலைவன் மேற்கொண்டு சாதாரண ஆள்களை அனுப்பி ஏமாறக்கூடாது என்று கருதி, தானே நகருக்குள் சென்று, முஸ்தபாவின் உதவியால் அலிபாபாவின் வீட்டைத் தெரிந்து கொண்டான். வீட்டைக் காட்டும் வேலையிலேயே முஸ்தபாவுக்கும் பல பொற்காசுகள் சேர்ந்துவிட்டன. தலைவன் அந்த வீட்டில் அடையாளம் எதுவும் செய்யாமல், படம் பிடித்து வைத்துக்கொள்வது போல், அதை நன்றாக மனத்திலே பதிய வைத்துக் கொண்டு, திரும்பிச் சென்றான்.

மூன்று நாள்களுக்குப் பின்பு இரவில் முப்பத்தெட்டுத் திருடர்களும் நகருக்குச் சென்று, குறித்த வீட்டை அடைய வேண்டுமென்று திட்டம் செய்யப் பெற்றது. திருடர் தலைவன், பத்தொன்பது கோவேறு கழுதை களையும், தோலினால் செய்த பெரிய தாழிகள் முப்பத்தெட்டையும் வாங்கிவரச்செய்து, அவைகளை ஆயத்தமாக வைத்துக்கொன்டான் ஒவ்வொரு திாழியிலும் ஒரு திருடன் ஆயுத பாணியாக அமர்ந்து கொள்ளவும், அவ்வாறு முப்பத்தேழு தாழிகளிலும் அவர்கள் மறைந்திருக்கவும், ஒரு தாழியில் மட்டும் கடுகு எண்ணெயை நிரப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது. மற்றைத் தாழிகளின் வெளிப்புறங்களிலும் சிறிது சிறிது எண்ணெய் பூசப் பட்டது. ஒவ்வொரு கழுதையின் பக்கங்கள் இரண்டிலும் இரண்டு தாழிகள் வீதம் கட்டித் தொங்கவிடப்பட்டன. தலைவன், பின்னர், எல்லாக் கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு நகரத்திற்குச் சென்று, அலிபாபாவின் வீட்டை அடைந்தான். நள்ளிரவில், தான் கை தட்டியவுடன் எல்லாத் திருடர்களும் தாழிகளை விட்டு வெளிவந்து, வீட்டுக்காரனைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று, அவன் எல்லோருக்கும் முன்னதாகவே சொல்லி வைத்திருந்தான்.

அப்பொழுது அலிபாபா. இரவு உணவு அருந்திவிட்டு, வீட்டின் முன்வாயிலில் உலவிக் கொண்டிருந்தான். ஒரு வணிகனைப்போல் உடையணிந்திருந்த திருடர் தலைவன், அவனைக் கண்டு வணக்கம் செய்தான். அலிபாபாவும் பதிலுக்கு வணக்கம் செய்தான். தலைவன், “நான் ஓர் எண்ணெய் வியாபாரி. பல தடவை கிராமத்திலிருந்து இந்த நகருக்கு எண்ணெய் கொண்டுவந்து விற்றிருக் கிறேன். ஆனால், இன்று கழுதைகளை ஒட்டிக்கொண்டு நகருக்குள் வருவதற்குள் இருட்டிவிட்டது. இன்று இரவு மட்டும் நானும் என் கழுதைகளும் தங்குவதற்குத் தாங்கள் இடம் கொடுத்தால் பெரிய உதவியாயிருக்கும். வாயில்லாப் பிராணிகளாகிய இவை நீண்டநேரமாக எண்ணெய் தாழிகளைச் சுமந்து கொண்டிருப்பதால், பாரத்தை இறக்கி, அவைகளுக்குச் சற்றே ஓய்வு கொடுக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அவனுடைய குரலை அலிபாபா முன்பு வனத்தில் மரத்தில் ஒளிந்திருக்கையில் கேட்டிருந்தும், அவன் அப்பொழுது மாறுவேடம் புனைந்து வந்திருந்ததால், அக்குரல், திருடர் தலைவனின் குரல் என்பதைக் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே, அவன் ஒரு வியாபாரிதான் என்று நம்பி, அலிபாபா அவனை வரவேற்று, இரவிலே தன்வீட்டில் தங்கியிருக்க அனுமதியளித்தான். வீட்டின் பக்கத்தில் காலியாயிருந்த ஓர் ஒலைக் கொட்டகையைக் காட்டி, அதிலே கழுதைகளை நிறுத்தி வைக்கலாம் என்று அவன் கூறினான். பின்னர், ஓர் அடிமைப் பையனை அழைத்து, கழுதையின் உணவுக்குத் தேவையான காணம் முதலியவற்றையும் தண்ணிரையும் கொட்டகையில் கொண்டு வைப்பதற்கும் அவன் ஏற்பாடு செய்தான். அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த மார்கியானாவிடம், “இன்று ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். அவருக்கு விரைவிலே சாப்பாடு தயாராகட்டும்! அத்துடன், அவர் படுப்பதற்கு மாடியில் ஓர் அறையில் படுக்கையை எடுத்துப் போட்டுவை!” என்று அவன் உத்தரவிட்டான்.

திருடர் தலைவன், கழுதைகளைக் கொட்டகையில் கொண்டுபோய் நிறுத்தி, தாழிகளை அவிழ்த்துக் கீழே வைத்தான். பிறகு, கழுதைகளுக்குத் தீனி வைத்து, தண்ணி காட்டிவிட்டு, அவன் முன்வாயிலுக்குச் சென்று, அலிபாபாவைக் கண்டான். அலிபாபா அவனை அன்புடன் அழைத்துக்கொண்டுபோய், மார்கியானாவைக் கண்டு, “விருந்தினர் இதோ வந்துவிட்டார். அவருக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்! நான் முன்புறம் படுக்கச் செல்கிறேன். நாளை அதிகாலையில் நான் குளிப்பதற்காக ஹம்மாமுக்குப் போக வேண்டும். ஆகையால், எனக்கு வேண்டிய வெளுத்த துணிகளை அடிமைப் பையன் அப்துல்லாவிடம் கொடுத்துவை. காலையில் நான் குளித்துவிட்டு வந்ததும் குடிப்பதற்கு நல்ல சூப்பும் தயாரித்து வை!” என்று சொன்னான்; அவள், “அவ்விதமே செய்கிறேன்!” என்று சொன்னாள். பின்னர், அலிபாபா உறங்கச் சென்றான். தலைவன், இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, மறுபடி கொட்டகைக்குச் சென்று கழுதைகளைப் பார்த்துவிட்டு, நடுச்சாமத்தில், தான் கை தட்டியுடன், எல்லாத் திருடர்களும் தங்கள் வாள்களால் தோலினால் செய்த தாழிகளைக் கீறிப் பிளந்து கொண்டு வெளிவர வேண்டுமென்று அவர்களுக்குத் தனித் தனியாகச் சொல்லிவிட்டு, மாடியில் தனக்காக ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குச் சென்றான். மார்கியானா ஒரு கைவிளக்கை எடுத்துக்கொண்டு அவனுக்கு வழி காட்டியதுடன், “உங்களுக்கு ஏதேனும் தேவையாயிருந்தால், என்னை அழையுங்கள்! உங்கள் பணிவிடைக்காகக் காத்திருக்கிறேன்!” என்றும் கூறினாள். தலைவன் மேற்கொண்டு தனக்கு எதுவும் தேவையில்லை என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றான். 

மார்கியானா, எசமானருக்கு வேண்டிய சலவைத் துணிகளை எடுத்து அப்துல்லாவிடம் கொடுத்து விட்டு, சூப்பு தயாரிப்பதற்காக அடுப்பிலே சட்டியைத் தூக்கி வைத்தாள். அவள் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கையில், எல்லா விளக்குகளும் அணைந்து போய் விட்டன. அவற்றில் இருந்த எண்ணெய் தீர்ந்து போய் விட்டது. வீட்டிலும் வேறு எண்ணெய் இல்லை. அப்பொழுது அப்துல்லா, மார்கியானாவைப் பார்த்து, “நீ ஏன் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாய்? நமது கொட்டகையில் தாழி தாழியாக எண்ணெய் இருக்கிறது. அவசரத்திற்கு உனக்குத் தேவையான அளவு ஒரு தாழியிலிருந்து எண்ணெய் எடுத்து வா!” என்று யோசனை சொல்லிவிட்டு கூடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான். மார்கியானா அவன் கூறிய ஆலோசனைப்படியே. எண்ணெய் டப்பாவைப் துரக்கிக் கொண்டு கொட்ட கைக்குப் போனாள். தாழிகள் பல வரிசைகளாக இருந்ததில், முன்னாலிருந்த ஒரு தாழியருகில் சென்று. அவள் மெது வாகக் குனிந்து பார்த்தாள். அதிலிருந்த திருடன், விவரம் தெரியாமல், காலோசை கேட்டதுமே தலைவன் வருவதாக எண்ணி, “நாங்கள் வெளிக் கிளம்பி வரலாமா?” என்று மெல்லிய குரலில் வினவினான். உடனே, மார்கியானா திடுக்கிட்டுப் பின்னால் நகர்ந்தாள். தாழிக்குள்ளே மனிதன் குரல் கேட்கிறதே என்று அவள் திகைத்த போதிலும், அவள் சமயத்திற்கு ஏற்றபடி உடனே யுக்தி செய்து கொண்டு, “இன்னும் நேரமாகவில்லை!” என்று, தானும் மெல்லிய குரலில் பதிலுரைத்தாள். தாழிகளில் எண்ணெய் இல்லை என்பதால், அவள் சிந்திக்கலானாள். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது! என் முதலாளிக்கு எதிராக இந்த எண்ணெய் வியாபாரி துரோகமான சதி ஏதோ செய்திருக்கிறான்! இவனுடைய வலையிலிருந்து அருளாளனான அல்லாஹ்தான் எங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும்!”

அவள் மற்றொரு தாழிப்பக்கம் சென்றாள்; அதனுள் இருந்தவனும், “வெளியே வரலாமா?” என்றே கேட்டான். மார்கியானா எண்ணெய் வியாபாரியின் குரலைப்போல் தன் குரலையும் மாற்றிக்கொண்டு, “இன்னும் நேரமாகவில்லை!” என்று பதில் கூறினாள். இவ்வாறே அவள் மற்றைத் தாழிகளில் இருந்தவர்களுக்கும் ஒரே பதிலைத் திரும்பத் திரும்பக் கூறினாள், பிறகு அவள், ஆண்டவனே! இவன் எண்ணெய் வணிகன் என்று நம்பியல்லவா இவனை என் முதலாளி வீட்டினுள் ஏற்றினார்! ஆனால், இவனோ திருடர்களைக் கொண்டுவந்து அடைத்திருக்கிறான்! எல்லோரும் இவனுடைய உத்தரவை எதிர்பார்த்துக் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்கள் இன்று வீட்டைக் கொள்ளையடித்து, முதலாளியையும் கொன்று விடுவார்கள்!” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள். பிறகு, கடைசியாக எஞ்சியிருந்த தாழிப்பக்கம் சென்று பார்த்தாள். அதில் ஆளில்லை, நிறைய எண்ணெய் இருந்தது. உடனே, அவள் தன் டப்பா நிறைய எண்ணெயை எடுத்துக் கொண்டு சென்றாள்.

அவள் வீட்டிலிருந்த விளக்குகள் எல்லாவற்றிலும் எண்ணெய் ஊற்றி, திரிகளை நன்றாகத் துண்டிவிட்டு, எல்லாவற்றையும் பொருத்தி வைத்தாள். பின்னர், அடுப்பில் நிறைய விறகுகளை அள்ளிப்போட்டு, ஒரு பெரிய அண்டாவைத் துக்கி அடுப்பின்மேல் வைத்தாள். டப்பாவில் இருந்த எண்ணெயை அண்டாவில் ஊற்றி விட்டு, மேலும் மேலும் ஏராளமான எண்ணெயை எடுத்து வந்து ஊற்றி, அதை வேகமாகக் கொதிக்க வைத்தாள். பின்பு, கொதிக்கும் எண்ணெயைப் பல கலயங்களிலே கொண்டுபோய் ஒவ்வொரு தாழிக்குள்ளும் ஊற்றத் தொடங்கினாள். ஒவ்வொரு தாழியினுள் அமர்ந்திருந்த திருடனும், வெளியே வரமுடியாமலும், வாய் திறந்து கூவ முடியாமலும், கொதிக்கும் எண்ணெயால் தலை, முகம், உடலெல்லாம் வெந்து, அந்தத் தாழியிலேயே செத்துக் கிடந்தான். ஒவ்வொரு தாழியிலும் ஒரு பிரேதம் கிடந்தது! இவ்வாறு ஓர் அடிமைப் பெண், தன் புத்தி சாதுரியத் தால், ஓசைப்படாமல், வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரி யாமல், முப்பத்தேழு திருடர்களைப் பரலோகத்திற்கு அனுப்பிவிட்டாள்! எந்தத் தாழியிலும் எவனும் உயிருடன் இல்லையென்று உறுதியான பின், அவள் சமையலறைக்குத் திரும்பி, அண்டாவை இறக்கி விட்டு, மீண்டும் அலிபாபாவுக்காகத் தயாரிக்க வேண்டிய குப்பை அடுப்பில் ஏற்றி வைத்தாள்.

ஒரு மணி நேரம் கழிந்தபின், திருடர் தலைவன் கண்விழித்து, மேலேயிருந்து படிக்கட்டில் இறங்கி நின்றுகொண்டு, ஒருமுறை தன் கைகளைக் கொட்டினான். பதிலே இல்லை. சிறிது நேரத்திற்குப்பின் அவன் இரண்டாம் முறை கொட்டி, உரக்கக் கூவினான். அப்பொழுதும் பதில் வரவில்லை. அவன் மூன்றாம் முறையாகக் கைகளைக் கொட்டிக் கூவியும் பார்த்தான். மறுமொழியில்லை. எனவே, அவன் கீழே இறங்கி, நேரே கொட்டகைக்குச் சென்றான். ‘எல்லோரும் உறங்கிவிட்டனர் போலிருக்கிறது! எடுத்த காரியத்தை முடிக்க இதுவே தருணம்! ஒவ்வொரு வரையும் தட்டி எழுப்பியாவது உடனே அழைத்து வர வேண்டும்!’ என்று அவன் தீர்மானித்தான்.

முன்னணியில் இருந்த தாழி அருகில் அவன் சென்றதும், காய்ந்த எண்ணெயின் வாடையும், வெந்த சதையின் வாடையும் அவன் முகத்தில் கலந்து வீசின. அவன் தாழியைத் தொட்டுப் பார்த்தான். அது கொதிப்பாக இருந்தது. பிறகு, அவன் ஒவ்வொரு தாழியாகச் சென்று தொட்டுப் பார்த்தான். எல்லாம் கொதிப்படைந்தே இருந்தன. எண்ணெய்த் தாழி மட்டும் குடில்லாமல் இருந்தது. உடனே, அவன் தன் தோழர்கள் அனைவருக்கும் நேர்ந்த கதியை உணர்ந்துகொண்டான். மேற்கொண்டு தானும் அங்கே தங்கியிருந்தால் ஆபத்து நேரும் என்று கருதி, அவன் அருகிலிருந்த சுவரின்மீது ஏறி, அடுத்த தோட்டம் ஒன்றிலே குதித்து அங்கிருந்து வெளியே தப்பி ஓடி விட்டான்.

எண்ணெய் வியாபாரி மாடியிலிருந்து இறங்கிக் கொட்ட கைக்குச் சென்றதுவரை மார்கியானா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அங்கே சென்றவன் நெடுநேரமாகத் திரும்பி வரவேயில்லை. அப்பொழுது, அவள் சந்தேகமடைந்து, மெதுவாகக் கொட்ட கைப் பக்க மெல்லாம் சென்று சுற்றிப் பார்த்தாள். அங்கே யாருமில்லை. தெருப்பக்கம் செல்லக்கூடிய கதவில் இரட்டைப் பூட்டுகள் பூட்டப்பட்டிருந்தன. ஆகவே, திருட்டு வியாபாரி சுவரேறிக் குதித்து வெளியேறிவிட்டான் என்று அவள் யூகித்துக் கொண்டாள். அன்று தான் பார்க்க வேண்டிய வேலைகளை வெற்றிகரமாக நிறை வேற்றியதில் அவள் மகிழ்ச்சியடைந்தாள். இனியாவது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று எண்ணி, அவள் வீட்டிலே ஒருபக்கத்தில் தலையைக் கீழே சாய்த்தாள்.

பொழுது விடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, அலிபாபா துயிலெழுந்து, அப்துல்லாவை
 அழைத்துக் கொண்டு, ஹம்மாமுக்குச் சென்றான். அவன், குளித்து விட்டுத் திரும்புவதற்குள், சூரியன் அடிவானத்திற்கு மேலே எழுந்து விட்டான். அவன் வீட்டினுள் நுழைந்ததும், கொட்டகையில் தாழிகள் வைத்த இடங்களில் அப்படியே இருந்ததைக் கண்டு, “என்ன, இந்த வியாபாரி இவற்றை இன்னும் சந்தைக்கு எடுத்துப் போகவில்லையா?” என்று மார்கியானாவிடம் கேட்டான். அவள் உடனே, “உங்களுக்கு ஆண்டவன் நூறு வயதுக்கு மேல் அளித்து அருள் புரிய வேண்டும்! அந்த வியாபாரியைப் பற்றி நான் உங்களிடம் தனியாகச் சொல்லுகிறேன், வாருங்கள்!” என்று சொல்லி அழைத்துச் சென்றாள். முதலில் வாயிற் கதவைத் தாழிட்டாள். பிறகு, கொட்டகைப் பக்கம் சென்று, ஒரு தாழியை அவனுக்குக் காட்டி, “இதில் எண்ணெய் இருக்கிறதா? வேறு ஏதேனும் இருக்கிறதா


என்று பாருங்கள்!” என்றாள். அவன் அவ்விதமே குனிந்து தாழிக்குள்ளே பார்த்தான். உடனே, அவன் கூக்குரலிட்டுக் கொண்டே பின்னால் நகர்ந்து, துள்ளிப் பாய்ந்தான். அவனுக்கு ஏற்பட்ட அச்சத்தில், அவன் வெளியிலேயே ஓடிப் போயிருப்பான். ஆனால், மார்கியானா அவனைத் தடுத்து, “தாழிக்குள்ளே இருப்பவன் உங்களுக்குத் தீங்கு செய்யக் கூடிய நிலைமையில் இல்லை! அவன் செத்து, மரக்கட்டை போல் விறைத்துக் கிடக்கிறான்!” என்றாள். அலிபாபா. “எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து நாம் தப்பியிருக்கிறோம்! இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தன என்று தெரியவில்லையே!” என்று கூறினான்.

மார்கியானா, “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது! எல்லா விவரத்தையும் நான் உங்களுக்குப் பிறகு சொல்லுகிறேன். அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கு காதில் கேட்காதபடி நாம் மெதுவாகப் பேசவேண்டும். இனி நாம் எச்சரிக்கையாகயிருக்க வேண்டும். தவறினால் பெரிய ஆபத்து வந்துவிடும்! இப்பொழுது எல்லாத் தாழிகளையும் ஒருமுறை நீங்கள் பாருங்கள்!” என்று சொன்னாள். அவன் அவ்வாறே பார்த்ததில், ஒவ்வொன்றிலும் ஆயுதங்களுடன் கூடிய ஒரு பினம் இருப்பதைக் கண்டான். அவனால் ஆச்சரியத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த வியாபாரி எங்கே?' என்று அவன் கேட்டான். “அவனைப்பற்றியும் உங்களுக்குச் சொல்லுகிறேன். வியாபாரியா அவன்? உங்களை அழிக்க வந்த கொலைக் காரன் அவன்! இனிய சொற்களால் உங்களை ஏமாற்றி விட்டான் அந்தப் பாதகன். அவன் கதையை அப்புறம் சொல்லுகிறேன். குளித்துவிட்டுப் பசியோடு இருக் கிறீர்கள். முதலில் கொஞ்சம் குப்பைக் குடியுங்கள்! மற்ற விஷயங்களைப் பின்னால் கவனிப்போம்!” என்றாள் மார்கியானா.

அலிபாபா அவளுடன் வீட்டுக்குள்ளே சென்று. சூப்பைப் பருகி முடிந்ததும், அவள் முந்தைய இரவில் நடந்ததையெல்லாம் விவரமாக அவனுக்கு எடுத்துச் சொன்னாள். அதற்குப்பின் அவள் மேலும் கூறியதாவது: “சென்ற சில நாள்களாகவே எனக்கு இப்படி ஏதோ நடக்கப்போகிறது என்று சந்தேகம் இருந்து வந்தது. அதை உங்களிடம் சொன்னால், மெல்ல மெல்ல விஷயம் அண்டை அயலார்களுக்கும் தெரிந்துவிடுமே என்று அஞ்சி, நான் மெளனமாயிருந்தேன். இதுதான் விஷயம். ஒருநாள் நம் வீட்டுக்கதவில் சுண்ணாம்புக்கட்டியால் யாரோ ஒரு வெள்ளை அடையாளம் செய்திருந்தனர். புதிதாக அதைப் பார்த்தவுடன், நான் வியப்படைந்தேன். உடனே ஒரு யோசனை செய்து, வேறு பல வீடுகளிலும் அதேபோல வெள்ளை அடையாளம் செய்துவிட்டேன். பிறகு, மற்றொரு நாள் நம்முடைய கதவில் மட்டும் சிவப்புக்குறி ஒன்றைக் கண்டேன். வேண்டுமென்று எவரோ இப்படிக் குறியிடுவதால், எந்த நேரத்திலும் உங்களுக்கு அபாயம் நேரும் என்று எண்ணி, நான் அதே சிவப்புக் குறியை மற்ற வீடுகளிலும் திட்டி வைத்தேன். இப்பொழுது நடந்ததையும் சேர்த்துக் கவனித்தால், வனத்திலுள்ள திருடர்களே நம் வீட்டில் குறியிட்டார்கள் என்பது தெளிவா கின்றது. முதலில் இருவர் வீட்டைப் பார்த்துவிட்டு, மறுபடியும் இதே வீட்டுக்கு வருவதற்காக இருமுறை அடையாளம் செய்திருந்தனர். நாற்பது திருடர்களில் மாண்டுபோன முப்பத்தேழு பேர்களைத் தவிர, மற்ற இருவரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. மூன்றாவது ஆசாமியான திருடர்கள் தலைவன் விஷயமாக இனி நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவன், இந்தத் தடவை சுவரேறிக் குதித்துத் தப்பிப் போய்விட்டான். இனி, அவன் உங்களை வஞ்சம் தீர்க்கவேண்டுமென்று கறுவிக்கொண்டேயிருப்பான். ஒரு முறை அவனிடம் நீங்கள் சிக்கினால், அப்புறம் உயிருடன் மீளமுடியாது. இங்கே எனக்குத் தெரிந்த அளவுக்கு நான்


உங்களைக் கவனித்துக் கொள்வேன். உங்களுடைய அடிமையாகிய நான் தங்களுக்காக எதையும் செய்யத் தயாராயிருக்கிறேன்!”

இந்த வார்த்தைகளைக் கேட்டு அலிபாபா மிகவும் மகிழ்ச்சியடைந்து, “இதுவரை நீ செய்து முடித்த அரிய காரியங்களைக் கேட்டு உன்னை நான் மெச்சுகிறேன். உனக்கு நான் கைம்மாறாக என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே நீ சொல்ல வேண்டும்! என் உடலில் மூச்சு உள்ள வரை, நான் உன் உதவிகளை மறக்க மாட்டேன்!” என்று கூறினான். மார்கியானா “அதெல்லாம் இருக்கட்டும். முதலில் நாம் இந்தப் பினங்களை மண்ணுக்குள் புதைக்க வேண்டும். இல்லாவிட்டால், மற்றவர்களுக்கு விவரம் வெளியாகிவிடும் அல்லவா?” என்றாள்.  அலிபாபாவும், அடிமைப் பையன் அப்துல்லாவும் கொல்லைத் தோட்டத்தில் ஒரு பெருங்குழியை வெட்டினார்கள். அதிலே திருடர்களுடைய உடல்களையெல்லாம் தள்ளி, மீண்டும் குழியின்மீது மண்கொட்டி நிரப்பினார்கள். திருடர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும், தோலாலான தாழிகளையும் வெளியே வேறிடத்தில் அவர்கள் மறைத்து வைத்தார்கள். கொட்டகையில் நின்று கொண்டிருந்த கோவேறு கழுதைகளை, இரண்டு இரண்டாகவும், மூன்று மூன்றாகவும் சந்தைக்குக் கொண்டுபோய், அத்தனையையும் அப்துல்லா விற்றுக் காசாக்கி விட்டான்.