அலிபாபா (2002)/விறகுவெட்டியும் நிதிக்குவியலும்

விக்கிமூலம் இலிருந்து
1
விறகுவெட்டியும் நிதிக்குவியலும்


பற்பல ஆண்டுகளுக்கு முன்னால், பாரசிக நாட்டிலே, ஒரு நகரில் இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் மூத்தவன் பெயர் காஸிம். இளையவன் பெயர் அலிபாபா. அவர்களுடைய தந்தை வைத்துச்சென்ற சிறிதளவு சொத்தை அவர்கள் விரைவிலேயே செலவழித்துக் கரைத்து விட்டனர். ஆனால், காஸிம், செல்வம் மிகுந்த ஒரு பெண்ணை மணந்துகொண்டதில், அவனுடைய மாமனார் சொத்துகள் அவனை வந்தடைந்தன. ஒரு பெரிய கடை, ஏராளமான பொருள்கள் நிறைந்த ஒரு கிடங்கு, பூமிக்குள்ளே புதைத்து வைத்திருந்த தங்கம் முதலியவையும் அவனுக்கு உரிமையாயின. அவன் ஒரு கனவான் என்று ஊரெல்லாம் பெயராயிற்று. ஆனால் அலிபாபா, தன்னைப் போன்ற ஏழையான ஒரு பெண்ணை மணந்துகொண்டதால், அவன் ஒரு குடிசையிலேயே வாழ்ந்து வந்தான். ஒவ்வொரு நாளும் அவன் காட்டிற்குச் சென்று, விறகு வெட்டி, அதை விற்று, வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் மூன்று கழுதைகள் இருந்தன. அவைகளின் மீது விறகுக் கட்டுகளை ஏற்றிக்கொண்டு வருவது அவன் வழக்கம்.



ஒருநாள் அவன் வனத்தில், காய்ந்த கொப்புகளை வெட்டி, கழுதைகளின் மேல் ஏற்றி, வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில், அவனுக்கு வலப்புறம் சிறிது தூரத்தில், புழுதிப் படலத்தை அவன் கண்டான். குதிரைகளின்மீது எவர்களோ வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருடர்களாயிருந்தால், தன்னை வெட்டிப் போட்டுவிட்டு, தன் கழுதைகளையும் பற்றிக்கொண்டு போய்விடுவார்கள் என்று அவன் அஞ்சினான். எனவே, அவன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான். கழுதைகளை ஓர் ஒற்றையடிப் பாதையில் விரட்டிவிட்டு, அவன் ஒரு பெரிய மரத்தின் கிளையில் ஏறி மறைந்துகொண்டான். அந்த மரத்திற்கு எதிரில் உயரமான பாறை ஒன்று இருந்தது. மரத்தில் இருந்துகொண்டே அலிபாபா கீழே என்ன நடந்தாலும் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது. குதிரைகளில்வந்தவர்கள் வல்லமை மிக்க வாலிபர்கள். அவர்கள் கொள்ளைக்காரர்கள் என்பதைப் பார்த்தவுடனேயே அலிபாபா தெரிந்துகொண்டான். எங்கோ சாலையில் சென்றுகொண்டிருந்த வணிகர்களைக் கொள்ளையடித்து, கைப்பற்றிய பணத்தையும் பொருள்களையும் வனத்திலே ஒரு குகையில் மறைத்து வைப்பதற்காக, அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். எல்லோரும், தங்கள் குதிரைகளை, அலிபாபா அமர்ந்திருந்த மரத் தினடியில் நிறுத்திவிட்டுத் தாங்கள் கொண்டு வந்திருந்த கோணிப்பைகளைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கி நடந்து சென்றார்கள். பைகளில் ஏராளமான பொன்னும் வெள்ளியும் இருந்ததை அலிபாபா ஒரளவு கவனித்துக்கொண்டான். அவர்கள் மொத்தம் நாற்பது பேர்கள் இருந்தார்கள் என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். அவர்களின் தலைவனாக காணப்பெற்ற திருடன், மற்றவர்களுக்கு முன்னால், முள்ளிலும் புதரிலும் நடந்து சென்று, எதிரேயிருந்த நெடிய பாறையின் முன்பு நின்றுக்கொண்டு, “ஓ ஸிம்ஸிம், திற!” என்று கூறினான்.

உடனே, பாறையில் பெரிய வாயில் ஒன்று தோன்றிற்று. அந்த வாயிலில் பொருந்தியிருந்த பாறை, திருடர் தலைவனின் சொற்களால் ஒரு கதவு போல் உட்புறம் சென்றுவிட்டது. தலைவன் அந்த வாயிலடியில் நின்றுகொண்டு மற்றவர்கள் எல்லோரும் உள்ளே சென்ற பிறகு, தானும் உள்ளே சென்றான். உடனேயே பாறை தானாகவே வாயிலை அடைத்துக்கொண்டது. திருடர்கள் 

வெகு நேரம் உள்ளே தங்கியிருந்தார்கள். அலிபாபா கீழே இறங்கிச் செல்ல முடியாமல், துடித்துக் கொண்டிருந்தான். அவன் இறங்கிய சமயத்தில், திருடர்கள் வெளியே வந்து விட்டால் என்ன செய்வது? ஆனால், மரத்தின் மேலே எவ்வளவு நேரம் குந்தியிருப்பது? அவன், மெதுவாகக் கீழே இறங்கி, ஒரு குதிரை மேல் ஏறிக் கொண்டு, தன் கழுதைகளை ஓட்டிச் செல்லலாம் என்று எண்ணினான்.

அந்த நேரத்தில் குகையின் வாயில் திறந்து, திருடர்கள் வெளியே வரத் தொடங்கினர். தலைவன், முன் போலவே, வாயிலில் நின்று கொண்டிருந்தான்; எல்லோரும் வெளியேறிய பிறகு, அவன் “ஓ ஸிம்ஸிம், மூடிக் கொள்!” என்று சொன்னான். பாறை, குகையின் வாயிலை மூடிக் கொண்டது. நாற்பது திருடர்கள், தத்தம் குதிரைமீது ஏறிக்கொண்டு, தாங்கள் வந்த வழியிலேயே திரும்பச் சென்றுவிட்டார்கள். உடனே அலிபாபா கீழே குதித்துவிடாமல், சிறிது நேரம் மரத்தின்மீதே மறைந்திருந்தான். ஏனெனில், எவனாவது ஒரு திருடன் திடீரென்று திரும்பி, அந்தப் பக்கத்தைச் சுற்றிப்பார்க்க நேர்ந்தால், தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று எண்ணினான்.

திருடர்கள் நெடுந்துாரம் சென்றபிறகு, அவன் கீழே இறங்கினான். திருடர் தலைவன் சொல்லிய மந்திரச் சொற்களைத் தான் சொன்னால் பாறை விலகுமா என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. ஆகவே, அவன் “ஓ ஸிம்ஸிம், திற” என்று உரக்கச் கூவினான். என்ன ஆச்சரியம்! பாறை விலகிப் பாதை திறந்துவிட்டது. அவன் குகையினுள் புகுந்துவிட்டான். குகையின் வாயில் மட்டும் ஓர் ஆள் உயரத்தில் இருந்த போதிலும், உள்ளே பெரிய பண்டகச் சாலை அமைந்திருப்பதை அவன் கண்டான் குகையின் மேலேயிருந்த பாறைகளில் அமைந்திருந்த துவாரங்களின் வழியாக ஒளிக்கதிர்கள் உள்ளே வீசிக்கொண்டிருந்ததால், அங்கு நல்ல வெளிச்சமாயிருந்தது. அங்கே, குவியல் குவியலாகவும், அடுக்கு அடுக்காகவும் சேர்த்து வைக்கப் பட்டிருந்த பொருள்களைக் கண்டவுடன் அலிபாபா பிரமித்துப் போனான். பற்பல வண்ணங்களின் பட்டுத்துகில்கள், பருத்தி ஆடைகள், விலைமதிப்புள்ள இரத்தினக் கம்பளங்கள் முதலியவை தரையிலிருந்து

உச்சிவரை அடுக்கப்பெற்றிருந்தன. அவற்றுடன், எத்தனையோ தோற்பைகளில் பொற்காசுகளும் வெள்ளி நாணயங்களும் மின்னிக் கொண்டிருந்தன. அவைகளையெல்லாம் கண்ட அலிபாபா பல தலைமுறைகளாகத் திருடர்கள் சேர்த்து வைத்திருந்த செல்வங்களாகவே அவை இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஏனெனில், ஒரே தலைமுறையில் அவ்வளவு பொருள்களைச் சேர்க்க முடியாது.

அலிபாபா குகையினுள்ளே நிற்கையில் வெளியேயிருந்த பாறை தானாகவே வாயிலை அடைத்துக் கொண்டது. ஆனால், அவன் அதைப்பற்றி கவலைப்படவேயில்லை. வாயிலைத் திறப்பதற்கும் அடைப்பதற்கும் உரிய மந்திரத்தை அவன் நன்றாக நினைவில் வைத்திருந்தான். அவனுடைய எண்ணமும் பார்வையும் நாணயங்கள் மீதே பதிந்திருந்தன. அவன் மற்றைப் பொருள்களை நாடவில்லை. ஆகவே, தன் கழுதைகள் இரண்டும் எத்தனை கோணி மூட்டைகளைச் சுமக்க முடியுமோ, அத்தனை நாணய மூட்டைகளை அவன் குகையின் வாயிலண்டையில் கொண்டுபோய் வைத்துக் கொண்டு, மந்திரமொழிகளை கூறினான். பாறை அகன்றதும் அவன், பொன், வெள்ளி, நாணயங்கள் நிறைய மூட்டைகளைக் கழுதை மேல் ஏற்றி, அவை வெளியே தெரியாத முறையில், அவற்றின்மீது சில விறகுச் சுள்ளிகளையும் வைத்துக்கட்டினான். “ஓ எலிம் எலிம், மூடிக் கொள்!” என்று அவன் கூறியதும், பாறை, குகையை மூடிக்கொண்டது. அவன் வழக்கம் போல், கழுதையை ஓட்டிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

கழுதைகள் வீட்டு முற்றத்தினுள் சென்றதும் அவன் வெளிக்கதவை அடைத்துவிட்டு, முதலில் மேலாக இருந்த சுள்ளிகளை இறக்கினான். பின்னர், நாணய மூட்டைகளை ஓரிடத்தில் அடுக்கி வைத்தான். அப்பொழுது அவன் மனைவி, எல்லா மூட்டைகளும் தங்கமும் வெள்ளியுமாயிருப்பதைக் கண்டு அவன் எங்காவது கொள்ளையடித்துக்கொண்டு வந்திருப்பான் என்று கருதினாள். அதனால் அவள் வருத்தமடைந்து, “நமக்கு இந்த ஈனமான தொழில் தகுமா?” என்று அவனைக் கண்டித்துப் பேசத்தொடங்கினாள். அப்பொழுது அலிபாபா, “நான் கொள்ளைக்காரன் ஆக வில்லை! என் கதையை முழுவதும் கேட்டால், நீயே ஆச்சரியப்படுவாய்!” என்று சொல்லி, வனத்திலே நேர்ந்த விஷயங்களை விவரமாக அவளுக்கு எடுத்துக் கூறினான். அத்துடன், பையிலிருந்த தங்க நாணயங்களை அவள் கண்முன்பு அவன் கீழே கொட்டிக் குவியல்களாகக் குவித்து வைத்தான்.

பொற்காசுகளின் ஒளி அவளுடைய கண்களைப் பறித்தது. அவன் கூறிய வரலாறும் அவள் உள்ளத்திற்கு உவப்பாக இருந்தது. அந்நிலையில் அவள் நாணயங்களைக் கையிலெடுத்து எண்னத் தொடங்கினாள். அதைக்கண்ட அலிபாபா, “அடுத்தாற்போல், இவைகளை யாருக்கும் புலப்படாமல் குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்து வைக்கவேண்டும்! அதைப்பற்றி யோசனை செய்யாமல் எண்னத் தொடங்கிவிட்டாயே! இவைகளை எண்ண முடியுமா?” என்று கேட்டான். அவன் மனைவி, “எண்ண முடியாவிட்டாலும், எவ்வளவு நாணயம் இருக்கிறது என்பதற்கு ஒரு கணக்குத் தெரிய வேண்டாவா? அதற்கு வழி செய்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, எழுந்து வெளியே சென்றாள்.

அவள் நேராக மைத்துனன் காஸிமின் வீட்டுக்குச் சென்றாள். அங்கே அவன் இல்லாததால், அவன் மனைவியைக் கண்டு, ஒரு தராசும் படிக்கற்களும் வேண்டும் என்று கேட்டாள். அந்த அம்மாள் தராசுகளில் பெரியது வேண்டுமா அல்லது சிறியது போதுமா என்று கேட்டாள். சிறிய தராசையும் கற்களையும் வாங்கிக் கொண்டு, இளையவள் வெளியே சென்றாள். அந்தத் 

தராசில் பண்டங்களை வைக்கும் தட்டில், அவளுக்குத் தெரியாமல், காஸிமின் மனைவி கொஞ்சம் மெழுகைத் தடவி வைத்திருந்தாள். தராசில் நிறுக்கும் பொருளில் தட்டிலும் சிறிதளவு ஒட்டிக்கொண்டிருந்தால், அதைக் கொண்டு என்ன பொருள் நிறுக்கப்பட்டது என்று கண்டு கொள்ளலாம் என்பது மூத்தவளின் நினைப்பு.

வீட்டிலே அலிபாபா குழி தோண்டிக் கொண்டிருந்தான். அவன் மனைவி நாணயங்களை எடைபோட்டுக் கொண்ருந்தாள். எல்லா நாணயங்களையும் நிறுத்துக் கணக்குச் செய்தபின், இருவருமாக அவைகளைப் பூமிக்குள்ளே புதைத்து மண்ணினால் மூடிவிட்டனர். பின்னர் அலிபாபாவின் மனைவி, தராசையும் கற்களையும் எடுத்துச்சென்று, காஸிம் வீட்டில் சேர்த்துவிட்டு வந்தாள். தராசுத் தட்டிலிருந்த மெழுகில் ஒரு பொற்காசு ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு காஸிமின் மனைவி உண்மையை உணர்ந்துகொண்டாள். அலிபாபாவின் வீட்டில் பொற்காசுகளையே எடை போட்டிருக்கிறார்கள்! மகா ஏழையான அவனுக்கு தங்க நாணயங்கள் ஏது? அதிலும் தராசில் நிறுத்துப் பார்க்கும்படி, அவ்வளவு அதிகமான காசுகள் எங்கிருந்து வந்தன? இத்தகைய கேள்விகளை அவளே கேட்டுக்கொண்டு, பொறாமையால் உள்ளம் புழுங்கினாள். இரவிலே கனவன் காஸிம் வீட்டுக்கு வந்ததும், அவள் அவனை ஏளனம் செய்து பேசத் தொடங்கினாள்: நீங்கள்தாம் பெரிய பணக்காரர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தம்பி உங்களைவிட அதிகச் செல்வங்களைப் பெற்றிருக்கிறார். இன்று அவருடைய தங்க நாணயங்களை, உங்களைப் போல், கைகளால் எண்ண முடியாது என்று, நம் வீட்டுத் தராசை வாங்கிக்கொண்டுபோய் நிறுத்தார்கள். தராசுத் தட்டில் ஒட்டியிருந்த காசும் இதோ இருக்கிறது, பாருங்கள்!'

காஸிம் காசைக் கண்களால் கண்டு கொண்டான். அதில், பழங்காலத்து மன்னர் ஒருவருடைய முத்திரையும் இருந்தது. தன் தம்பி அத்தகைய காசுகளில் ஆயிரக் கணக்காகப் பெற்றுவிட்டானே என்ற பொறாமையினால், அவனுக்கு இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. பொழுது விடிந்ததும், அவன் எழுந்து சென்று, அலிபாபாவைக் கண்டான். “என்ன தம்பி! வெளிப்பார்வைக்கு நீ ஏழைபோலத் தோன்றிய போதிலும் எடைபோட்டுப்

பார்க்க வேண்டிய அளவுக்கு உன்னிடம் பொற்காசுகள் குவிந்திருக்கின்றன!” என்று அவன் சொன்னான். அலிபாபா, “அண்ணா! நீ சொல்வது ஒன்றும் புரிய வில்லையே! விளக்கமாய்ப் பேசு!” என்றான். காஸிம் கோபமடைந்து, “உனக்கா புரியவில்லை? நன்றாகப் புரிந்துகொண்டு விஷயத்தை மறைக்கப் பார்க்கிறாய்!” என்றான். அவன் தன் கையிலிருந்த தங்க நாணயத்தைக் காட்டி, “இதைப்போல் நீ ஆயிரக்கணக்கில் வைத்திருக்கிறாய். தராசுத் தட்டில் ஒட்டியிருந்த இந்தக்காசை என் மனைவி எடுத்து என்னிடம் கொடுத்தாள்!” என்றும் அவன் தெரிவித்தான். ஏராளமான காசுகள் தன்னிடம் வந்துள்ளதைக் காஸிமும், அவன் மனைவியும் தெரிந்து கொண்டு விட்டனர் என்பதை அலிபாபா உனர்ந்து கொண்டான். மேற்கொண்டு மறைப்பதில் பயனில்லை என்பதையும் அவன் கண்டான். எனவே, முந்தையநாள் வனத்திலே குகையில் நடந்த நிகழ்ச்சியை அவன் அண்ணனிடம் விவரமாகச் சொன்னான்.

காஸிம், “அந்தக் குகை எங்கேயிருக்கிறது? அதன் வாயிலைத் திறப்பதற்கும் அடைப்பதற்கும் உரிய மந்திரச் சொற்கள் எவை? இவற்றையெல்லாம் நீ எனக்கு விளக்கமாகச் சொல்லாவிட்டால், உன்னிடம் புதையற் செல்வம் வந்திருப்பதாக நான் வாலியவர்களிடம்[1] தெரிவித்துவிடுவேன்! நீ உன் செல்வம் முழுவதையும் இழக்க நேரும்!” என்று பயமுறுத்தினான். இதற்குப்பின் அலிபாபா முழுவிவரத்தையும் அவனுக்குச் சொல்லி விட்டான். அவன் அண்ணனுடைய பயமுறுத்தலுக்குப் பணிந்துவிட்டான் என்பதில்லை. இயற்கையிலேயே அவன் நற்குணமும் அமைதியும் நிறைந்தவன். ஆதலால், குகை இருந்த இடத்தையும், அதன் வாயிலைத் திறப்பதற்கும் அடைப்பதற்கும் உரிய மந்திரச் சொற்களையும் காஸிமுக்கு அறிவித்தான்.

  1. வாலி - காவலர் தலைவர் போலிஸ் தலைமையதிகாரி.