அழுகணி சித்தர்

விக்கிமூலம் இலிருந்து

அழுகணி சித்தர் பாடல்கள்

  • பக்கம் 233 - 237

கலித்தாழிசை

1[தொகு]

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கம் தெருநடுவே
சாலப் பதி தனிலே தணலாய் வளர்த்த கம்பம்
மேலப் பதிதனிலே – என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாய்க் காரர் ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி

3[தொகு]

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ் பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை அடக்கி நிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கே ற்றி என் கண்ணம்மா
கோலமிட்டுப் பாரேனோ

4[தொகு]

சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந்
தித்திக்கும் தேனமிர்தம் என் கண்ணம்மா
தின்று களைப் பாறேனோ

5[தொகு]

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல் தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா
கண்குளிரப் பாரேனோ

6[தொகு]

எட்டாப் புரவியடி ஈராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ

7[தொகு]

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென் வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலை நிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்த நமன் என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ

8[தொகு]

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா
உன் பாதஞ் சேரேனோ

9[தொகு]

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமல் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ

10[தொகு]

பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ

11[தொகு]

மாமன் மகளடியோ மச்சினியோ நான்றியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா
கண் விழிக்க வேகாவோ

12[தொகு]

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத் தேரேறியல்லோ மான் வேட்டையாடுதற்குச்
சந்திரருஞ் சூரியருந் தாம் போந்த காவனத்தே
வந்து விளையாடியல்லோ என் கண்ணம்மா
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ

13[தொகு]

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைவிரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தா லுங்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா
கண்குளிரக் காண்பேனோ

14[தொகு]

உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானெடுத்துக்
கச்சை வடம்புரியக் காய லூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா
வகைமோச மானேண்டி

15[தொகு]

மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான் தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதுந் தவிக்கிறண்டி

16[தொகு]

காம மலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாம வலிதொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாம வலிதொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காம மலர் மூன்றும் என் கண்ணம்மா
கண்ணெதிரே நில்லாவோ

17[தொகு]

தங்காயந் தோன்றாமல் சாணகலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்று விட்டு வெகு நாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றோலைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா
சாகிறண்டி சாகாமல்

18[தொகு]

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்தது போல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன் மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா
பாசியது வேறாமோ

19[தொகு]

கற்றாரும் மற்றாருந் தொண்ணூ ற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரை விட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா
துணையிழந்து நின்றதென்ன

20[தொகு]

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன் புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலைறி உன் புதுமை கண்டவர்க்குங்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா
காரணங்கள் மெத்தவுண்டே

21[தொகு]

சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கந்தான் சேர்த்து
மாயப் பொடி கலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா
இல்லேட மானேண்டி

22[தொகு]

பாதாள மூலியடி பாடாணந் தான் சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்சாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெலாந் தான் மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா
தணலாக வேகுறண்டி

23[தொகு]

கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால் பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா
கடுகளவு காணாதோ

24[தொகு]

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமுந் தான்பறி போய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன

25[தொகு]

ஆகாப் புலையனடி அஞ்சானந் தான் பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தான்றியேன்
வேகாத காலறியேன் விதி மோசமானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா
நொடியில் மெழுகானேனடி

26[தொகு]

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக்கலவி விட்டு மதிமயக்கந் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்ணம்மா
தந்தையரு மொப்பாமோ

27[தொகு]

அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய் சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதேயென்று சொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ

28[தொகு]

உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய் தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்ணம்மா
ஒத்திருந்து வாழேனோ

29[தொகு]

காயப் பதிதனிலே கந்தமூ லம்வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்கு முன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன

30[தொகு]

சித்திர த்தைக் குத்தியல்லோ சிலையை எழுதி வைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்பலமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்ணம்மா
சிலையுங் குலையாதோ

31[தொகு]

புல்லரிடத்திற் போய்ப் பொருள் தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கி றண்டி
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ

32[தொகு]

வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீக்கி என் கண்ணம்மா
விழித்து வெளி காட்டா யோ
  • முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=அழுகணி_சித்தர்&oldid=493279" இலிருந்து மீள்விக்கப்பட்டது