ஆறுமுகமான பொருள்/கந்த சஷ்டி கவசம்

விக்கிமூலம் இலிருந்து

முருகன் துணை
கந்தர் சஷ்டி கவசம்
காப்பு


துதிப்போக்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கை கூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை

"அமரரிடம் தீர வமரம்புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

"சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவுஞ் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
வையை நடஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில்வே லால்எனைக் காக்கவென்று உவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சிக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
சரவண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதமும் பாராங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண்டும் இலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும்
கிலியுங் செளவும் கிளரொளி வையும்
நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்டபுருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செட்புஅழ குடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செககண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகன
டிகுகுண டிகுடிகு டிகுகுணடிகுண
ர ர ர ர ர ர ர ர ர ர ர ர
ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி
டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு
டகுடகு டிகுடகு டங்கு டிங்கு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
எந்தனை ஆளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா விநோதனென்று
உன் திரு வடியை உறுதியென்று எண்ணும்

என்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகு வேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்து இருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்குவேல் காக்க
சிற்றிடை அழகுறுச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பனைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணை வேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவளிருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன்வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தண்ணில் வச்சிர வேல் காக்க

அரையிருள் தன்னில் அனைய வேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல்படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேறி இத்துன்ப சேனையும்
எல்லியும் இரட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூஜை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்க காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட
ஆணை அடியினில் அருள் பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாள்எனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓட
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தனலெரி தனலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடாது ஓடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனுக்கு அருள்வாய்
ஈரேழு உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காம்

மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க உன்திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர புவனே பவமொழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்த, கடம்பா கடம்பனே
இடம்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகுத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கு எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை,
நேசமுடன் நான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது. நீங்கி,
உன்பதம் பெறவே உன் அருளாக
அன்புடனிரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக
வேலா யுதனார்
சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவள் நீ குரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே.
பிள்ளையென்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என்மீதுஉன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட வகுள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி கவசம் தனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்து ஆறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நிறணிய
அஷ்டதிக்கு உள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருள்வர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்


எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப் பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தெனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்
இருபத்து ஏழ்வர்க்கு உவந்து அமுதளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத் தடுத்து ஆட்கொள் என்றெனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில்நடம் இடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று


அமரர். கலைமணி. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று ஓர் அன்பர் சொன்னார். முற்றிலும் உண்மை. தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ்மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும். குற்றால முனிவர். ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சீடரான அவர் ஆக்கித்தந்துள்ள இலக்கியப் படைப்புகளும், கலைப்படைப்புகளும் தமிழுக்கும், கலையுலகுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், ஐ.ஏ.எஸ்.
ஆசிரியரது பிற நூல்கள்
1. வேங்கடம் முதல் குமரி வரை (நான்கு பாகங்கள்) .
2. வேங்கடத்துக்கு அப்பால் .
3. இந்தியக் கலைச் செல்வம் (வானொலிக் கட்டுரைகள்)
4. கலைஞன் கண்ட கடவுள்
5. கல்லும் சொல்லாதோ கவி
6. அமர காதலர்
7. தென்றல் தந்த கவிதை
8. தென்னாட்டுக் கோயில்களும், தமிழர் பணபாடும்
9. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
10. தமிழறிஞர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்
11. ரசிகமணி டி.கே.சி.