ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/அறத்துப்பால்-2

விக்கிமூலம் இலிருந்து
அறத்துப்பால்
தெய்வத்துள் வைக்கப்படும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்


(பதவுரை) வையத்துள் = மண்ணுலகத்திலே, வாழ்வாங்கு வாழ்பவன் = (இல்லறத்தில் இருந்து) வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்து வருபவன், வான் உறையும் = விண்ணுலகத்தில் அமர்ந்திருக்கின்ற, தெய்வத்துள் வைக்கப்படும் = தெய்வங்களுள் ஒருவனாக வைத்து மதிக்கப்பெறுவான். (வையம் = மண்ணுலகு; வான் = மேலுலகு)

(மணக்குடவர் உரை) இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப் படுவன்.

(பரிமேலழகர் உரை) இல்லறத்தோடு கூடி வாழுமியல்பினால் வையத்தின்கண் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.

(விளக்கவுரை) இந்தக் குறளில் உலக வழக்கில் உள்ள உண்மை யொன்று பொதிந்து கிடப்பதாகப் புலப்படுகின்றது. உலகில் ஒழுங்கான முறையில் நல்வாழ்வு நடத்திப் பின்னர் இறந்து போனவரைக் குறித்துச் சுட்டி, "அவர் செத்துத் தெய்வமாகப் போய் விட்டார்" என்று மக்கள் பேசிக் கொள்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்றுதான் நம்புகிறேன். நாமே பலரைப் பற்றி அவ்வாறு சொல்லியிருப்போம். ஆனால், தீய செயல்கள் செய்து இறந்துபோன கொடியவர்களை அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வது வழக்கத்திலில்லை; அவர்கள் அலகை யாய் அலைவதாகச் சொல்வது தான் வழக்கம். ஆனால், நல்வாழ்வு வாழ்ந்து இறந்துபோன நல்லவரைக் குறிப்பிட்டுத் தான், "சும்மா சொல்லக்கூடாது; அவர் செத்துத் தெய்வமாய்ப் போய்விட்டாரு; அவர் எவ்வளவு பாடுபட்ட மனுழ்சன் தெரியுமா! அவர் மட்டும் இப்பொழுது இருந்திருந்தால் இது இப்படியா நடந்திருக்கும்? இந்நேரம் எவ்வளவோ மேல்நோக்கத்துக்குக் கொண்டுவந்திருப்பாரு" என்றெல்லாம் சொல்வது உலகியல். மக்களது பேச்சு வழக்கை இங்கே எழுத்துக்கு எழுத்து அப்படியே கொடுத்திருக்கிறேன். உண்மைதானே இது? இதே கருத்தைத்தான், "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்றார் திருவள்ளுவனார்,

எனவே, தெய்வநிலை யடைவதற்குரிய நேர்ப்பாதை வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் போலும்! தெய்வங்கள் எல்லாம் இப்படி மேல் வகுப்பு மாறி வந்தவைதாமோ? நம் திருக்கோவில்களுக்குள் நுழைவோமேயாயின், தெய்வங்களின் பட்டாளங்களைப் பரவலாகப் பார்க்கலாம். அவற்றையும் கூர்ந்து நோக்கின், ஆழ்வார்களாக. அல்லது நாயன்மார்களாக இருக்கக் காணலாம். அண்மைக் காலத்தில் மனிதர்களாக இருந்து பின் தெய்வமாக மாறிய இவை எல்லாம் 'ஜூனியர்' தெய்வங்கள் (பிந்தியவை) ஆகும், அவதார புருழ்சர்களாக வந்து தோன்றிய தெய்வங்கள் எல்லாம் 'சீனியர்' தெய்வங்கள் (முந்தியவை) ஆகும்.

இவையன்றி, இன்னும் இக்குறளின் உண்மைக்கு ஒரு சான்று தருவேன்:- உலகில் நல்லவரோ - கெட்டவரோ எவர் இறந்தாலும், 'சிவலோக பதவி யடைந்தார்' 'வைகுண்ட பதவி யடைந்தார்' என்று தானே 'கருமாதிப் பத்திரிகை' யில் அச்சிடுகின்றோம். இதிலுள்ள உண்மையாது? செத்தவரைத் தெய்வமாக மதிக்கிற உண்மைதான். செத்தவருக்கு எவ்வளவு படையல்கள் - வழிபாடுகள் நடக்கின்றன தெரியுமா? செத்துப்போன கெட்டவனையும் சமூகம் மதித்துத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறது எனில், 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்' என்று வள்ளுவர் சொல்லியிருப்பதில் என்ன தவறு? என்ன தடையிருக்க முடியும்?

தெய்வங்கள் மண்ணுலகில் நம் நடுவே வெளிப்படையாய்க் காணப்படாமையின், அவை விண்ணுலகில் எழுந்தருளியிருக்கக் கூடும் என்ற மக்களின் எண்ணத்தை எதிரொலிப்பவர்போல் 'வானுறையும் தெய்வம்' என்றார் வள்ளுவர். அவன் வானத்துக்குச் சென்ற பிறகுதான் தெய்வமாவான் என்பதில்லை; வாழ்வாங்கு வாழுமவன் வையத்துள் இருக்கும்போதே கூட தெய்வமாக மதிக்கப்படுவான் என்ற குறிப்புப் பொருள் 'வையத்துள் ... ... வைக்கப்படும்' என்பதிலிருந்து கிடைக்கின்றதல்லவா?

வாழ்வாங்கு வாழ்பவன் என்று கூறியுள்ளாரே -- வாழ்வாங்கு வாழ்தல் என்றால் என்ன? இல்லறத்தான் இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இத்தனை குறள்களில் கூறி வந்தாரே - இன்னும் எத்தனையோ குறள்களில் கூறப்போகிறாரே, அப்படியப்படி யெல்லாம் நடந்து கொள்வதுதான் 'வாழ்வாங்கு வாழ்தல்' என்பது. இயற்கை நியதியின்படி இல்லறத்தில் வாழ்வதே வாழ்வாங்கு வாழ்தல் தானே! இல்வாழ்க்கையின் முற்ற முடிந்த தனிப்பெருஞ் சிறப்பு. இந்தக் குறளில் கூறப் பெற்றுள்ளது.