இடைக்காட்டுச் சித்தர்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்

  • பக்கம் 198 - 211

காப்பு[தொகு]

ஆதி யந்தமில்லாதவ னாதியைத்
தீதுறும்பவந் தீப்படு பஞ்சுபோல்
மோது றும்படி முப்பொறி யொத்துறக்
காதலாகக் கருத்திற் கருதுவோம்

தாண்டவராயக் கோனார் கூற்று[தொகு]

1[தொகு]

எல்லா உலகமும் எல்லா உயிர்களும்

எல்லாப் பொருள்களும் எண்ணரிய

வல்லாளன் ஆதி பரம சிவனது

சொல்லால் ஆகுமே கோனாரே

2[தொகு]

வானியல் போல் வயங்கும் பிரமமே

சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்

ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லை யென்று

ஓர்ந்துகொள் ளுவீர் நீர் கோனாரே

3[தொகு]

முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது

முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்

சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்

சேரா வாகுமே கோனாரே

4[தொகு]

தொல்லாப் பிறவியின் தொந்தமுற்று அறவே

சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்

ஆரண மூலத்தை அன்புட னேபர

மானந்தக் கோலத்தைப் பண்புடனே

5[தொகு]

பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்

போத்ததைச் சார்ந்திரு கோனாரே

எல்லையில் கடவுள் எய்தும் பதம் உமக்கு

இல்லை யென்று எண்ணுவீர் கோனாரே

6[தொகு]

காலா காலங் கடந்திடும் சோதியைக்

கற்பனை கடந்த அற்புதத்தை

நூலாற் பெரியவர் சொன்ன நுண் பொருளை

நோக்கத்திற் காண்பது கோனாரே

7[தொகு]

சொல்லருஞ் சளக நிட்களம் ஆனதைச்

சொல்லினாற் சொல்லாமற் கோனாரே

அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்

அந்தகன் கிட்டுமோ கோனாரே

8[தொகு]

சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்

தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே

நாரிஇடப்பாகன் தாள் நெஞ்சிற் போற்றியே

நற்கதி சேர்ந்திடும் கோனாரே

9[தொகு]

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத

முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்

செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்

சிந்தையில் வைப்பீரே கோனாரே

10[தொகு]

பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்

பற்றற்ற நின்றதைப் பற்றி அன்பாய்

நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே

நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே

நாராயணக் கோனார் கூற்று[தொகு]

11[தொகு]

சீரார் சிலக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான் பொருளைப் பஞ் உரு ஆனொன்றை
பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே

12[தொகு]

கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண்ணுருவப் பாதியெனைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியைப் வெங்கதிரைத்
தண்ணளியை உள்ளில் வைத்து சாரூ பஞ் சாருவனே

13[தொகு]

மனமென்னும் மாடு அடங்கில் தாண்ட வக்கோனே முத்தி

வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே

சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்ட வக்கோனே யாவுஞ்

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே

14[தொகு]

ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே இந்த

அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே

ஓசையுள் அடங்கு முன்னம் தாண்டவக்கோனே மூல

ஓங்காரம் கண்டறி நீ தாண்டவக்கோனே

15[தொகு]

மூலப்பகுதியறத் தாண்டவக்கோனே உள்ளம்

முளைத்தவேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே

சாலக் கடத்தியல்பு தாண்டவக்கோனே மலச்

சாலென்றே தேர்ந்தறி நீ தாண்டவக்கோனே

16[தொகு]

பற்றே பிறப்புண்டாக்கும் தாண்டவக்கோனே அதைப்

பற்றாது அறுத்து விடு தாண்டவக்கோனே

சற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே உன்னுள்

சலியாமல் வைக்க வேண்டும் தாண்டவக்கோனே

17[தொகு]

அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே பத்தி

அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே

செவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே குரு

செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே

18[தொகு]

மாடும் மனைகளும் மக்களுஞ் சிற்றமும் வான் பொருளும்

வீடும் மணிகளும் வெண்பொன்னுஞ் செம்பொன்னும் வெண்கலமும்

காடுங் கரைகளும் கல்லாம்பணுயுங் கரிபரியும்

தேடும்பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே

19[தொகு]

போகம்போம் போக்கியம்போம் போசனம் போம் புன்மை போம்

மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் தாகம்போம்

வேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்

ஓது பிரமத்து உற்றக்கால்

தாண்டவராயக் கோனார் கூற்று[தொகு]

தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே
ஆநந்தக் கோனாரே அருள்
ஆநந்தக் கோனாரே

20[தொகு]

ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்

அந்த வட்டத்துள்ளே நின்றதுங் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்த்தேன் (தாந்)

21[தொகு]

அந்தக் கரணமெ னச்சொன்னால் ஆட்டையும்

அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்

சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்

சாவது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன் (தாந்)

22[தொகு]

மெய்வாய் கண் மூக்குச் செவினும் ஐந்தாட்டை

வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை

எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்

ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (தாந்)

23[தொகு]

பற்றிரண் டும்அறப் பண்புற்றேன் நண்புற்றேன்

பாலையும் உட்கொண் டேன்மேலையாங் கட்கண்டேன்

சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்

சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (தாந்)

24[தொகு]

அண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்

அந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்

விண்ணாளும் மொழியை மேவிப் பூசை பண்ணேன்

மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் (தாந்)

25[தொகு]

மண்ணாதி பூதங்கள் ஐந்தையுங் கண்டேனே

மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே

விண்ணாளி மொழியை மெய்யினுள் கொண்டேனே

மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே (தாந்)

26[தொகு]

வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே

மாயைசம் பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே

நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே

நுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே (தாந்)

27[தொகு]

ஆறா தாரத் தெய்வங்களை நாடு

அவர்க்கும் மேலான ஆதியைத்தேடு

கூறான வட்ட ஆனந்தத்திற் கூடு

கோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு (தாந்)

நாராயணக் கோனார் கூற்று[தொகு]

28[தொகு]

ஆதி பகவனையே – பசுவே – அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான் – பசுவே – சொந்தமது ஆகாதோ

29[தொகு]

எங்கும் நிறைபொருளைப் – பசுவே – எண்ணிப் பணிவாயேல்
தங்கும் பரகதியில் – பசுவே – சந்ததம் சாருவையே

30[தொகு]

அல்லும் பகலும் நிதம் – பசுவே – ஆதி பதந்தேடில்
புல்லும் மோட்சநிலை – பசுவே – பூரணங் காண்பாயே

31[தொகு]

ஒன்றைப் பிடித்தோர்க்கே – பசுவே – உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே – பசுவே – நேர்மை அறிவாயே

32[தொகு]

எல்லாம் இருந்தாலும் – பசுவே – ஈசர் அருள்இலையேல்
இல்லாத தன்மையென்றே – பசுவே – எண்ணிப் பணிவாயே

33[தொகு]

தேவன் உதவியின்றிப் – பசுவே – தேர்ந்திடில் வேறொன்றுமில்லை
ஆவிக்கும் ஆவியதாம் – பசுவே – அத்தன் திருவடியே

34[தொகு]

தாயினும் அன்பன் அன்றோ – பசுவே – சத்திக்குள் ளானவன் றான்

நேயம் உடையவர்பால் – பசுவே – நீங்காது இருப்பானே

35[தொகு]

முத்திக்கு வித்தானோன் – பசுவே மூலப் பொருளானோன்
சத்திக்கு உறவானோன் – பசுவே – தன்னைத் துதிப்பாயே

36[தொகு]

ஐயன் திருப்பாதம் – பசுவே – அன்புற்று நீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் – பசுவே – விட்டோடுங் கண்டாயே

37[தொகு]

சந்திர சேகரன் தாள் – பசுவே – தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மான் முதலோர் – பசுவே ஏவல் புரிவரே

38[தொகு]

கட்புலன் காண ஒன்னாய் – பசுவே – கர்த்தன் அடியிணையை
உட்புலன் கொண்டேத்திப் – பசுவே – உன்னதம் எய்வாயே

39[தொகு]

சுட்டியும் காண ஒண்ணாப் – பசுவே – சூனிய மானவத்தை
ஒட்டிப் பிடிப்பாயேல் – பசுவே – உன்னை நிகர்ப்பவர் யார்

40[தொகு]

தன்மனந் தன்னாலே – பசுவே – தாணுவைச் சாராதார்
வன்மரம் ஒப்பாக – பசுவே – வையத்து உறைவாரே

41[தொகு]

சொல்லென்னும் நற்பொருளாம் - -பசுவே – சோதியைப் போற்றாக்கால்
இல்லென்று முத்திநிலை – பசுவே – எப்பொருளுஞ் சொலுமே

பலரோடு கிளத்தல்[தொகு]

(குறள் வெண் செந்துறை)

42[தொகு]

கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றிரே

43=[தொகு]

மனம்வாக்குக் காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத
தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே

44[தொகு]

காலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்
சாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே

45[தொகு]

பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுப்போலும்
நூலிற் பொருள் போலும் நுண்பொருளைப் போற்றீரே

46[தொகு]

மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே

47[தொகு]

தூய மறைப் பொருளைச் சுகவாரிதி அமிர்தை
நேயமுடன் அருள் நிலை பெறவே போற்றீரே

48[தொகு]

சராசரத் தைத்தந்த தனிவான மூலம் என்னும்
பராபரத்தைப் பற்றிப் பவமறவே போற்றீரே

49[தொகு]

மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே

50[தொகு]

பொய்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே

51[தொகு]

எள்ளில் தைலம் போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே

நெஞ்சோடு கிளத்தல்[தொகு]

52[தொகு]

பூமியெல்லாம் ஓர் குடைக்கீழ்ப் பொருந்த அரசாளுதற்குக்
காமியம் வைத்தால் உனக்குக் கதியுளதோ கன்மனமே

53[தொகு]

பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியிலையே கன்மனமே

54[தொகு]

மேயும் பொறிகடமை மேலிட வொட்டார்க்கு வினை
தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கன்மனமே

55[தொகு]

பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கன்மனமே

56[தொகு]

பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல்
மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன் மனமே

57[தொகு]

பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய் நரிகள் போல் அலைந்தால் நன்மையுண்டோ கன் மனமே

58[தொகு]

இரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை
விரும்பினதால் அவை நிலையோ விளம்புவாய் கன்மனமே

59[தொகு]

கற்பநிலை யால் அலவோ கற்பகாலங் கடத்தல்
சொற்ப நிலை மற்ற நிலை சூட்சங்காண் கன்மனமே

60[தொகு]

தேகம் இழப்பதற்குச் செபம் செய்தென் தவஞ்செய்தென்
யோகமட்டுஞ் செய்தால்என் யோசிப்பாய் கன்மனமே

61[தொகு]

சாகாது இருப்பதற்குத் தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறி நீ கன்மனமே

அறிவொடு கிளத்தல்[தொகு]

62[தொகு]

எல்லாப் பொருள்களையும் எண்ணப் படிபடைத்த
வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே

63[தொகு]

கட்புலனுக்கு எவ்வளவுங் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே

64[தொகு]

விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
செழித்திலங்கும் ஆன் மாவைத் தேர்ந்தறி நீ புல்லறிவே

65[தொகு]

மெய்யில் ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யில் ஒரு பொய்யாகும் புலமறி நீ புல்லறிவே

66[தொகு]

ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துப் புரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே

67[தொகு]

இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும் உன்றன் வல்லமையை
அருள் துறையில் நிறுத்தி விளக் காகுக நீ புல்லறிவே

68[தொகு]

நல்வழியிற் சென்று நம்பதவி எய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே

69[தொகு]

கைவிளக்குக் கொண்டு கடலில் வீழ் வார்போல
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே

70[தொகு]

வாசிக்கு மேலான வான் கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே

71[தொகு]

அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே

சித்தத்தோடு கிளத்தல்[தொகு]

72[தொகு]

அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற – பர

மானந்தம் கண்டோம் என்று தும்பீபற –

மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற – மலை

மேலேறிக் கொண்டோம் என்று தும்பீபற

73[தொகு]

அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற – நிறை

ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற –

தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற – பரஞ்

சோதியைக் கண்டோம் எனத் தும்பீபற

74[தொகு]

ஐம்பொறி அடங்கினவே தும்பீபற – நிறை

அருவே பொருளாம் எனத் தும்பீபற

செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற – ஒரு

தெய்வீகங் கண்டோம் என்றே தும்பீபற

75[தொகு]

மூவாசை விட்டோம் என்றே தும்பீபற – பர

முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற

தேவாசை வைத்தோம் என்று தும்பீபற – இந்தச்

செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற

76[தொகு]

பாழ்வெளியை நோக்கியே தும்பீபற மாயைப்

பற்றற்றோம் என்றே நீ தும்பீபற

வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற – நிறை

வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீபற

77[தொகு]

எப்பொருளுங் கனவென்றே தும்பீபற – உல

கெல்லாம் அழியும் என்றே தும்பீபற

அப்பிலெழுத் துடல் என்றே தும்பீபற – என்றும்

அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற

குயிலொடு கிளத்தல்[தொகு]

78[தொகு]

கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே – கெட்ட

காம்முதல் ஓராறும் ஒடுங்கினவே

சரணங்கள் ஒருநான்குங் கண்டனம் என்றே – நிறை

சந்தோட மாகவே கூவுகுயிலே

79[தொகு]

உலகம் ஒக்காளமாம் என்று ஓதுகுயிலே – எங்கள்

உத்தமனைக் காணபரிதென்று ஓது குயிலே

பல மதம்பொய்மையே என்று ஓதுகுயிலே – எழு

பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓதுகுயிலே

80[தொகு]

சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே – எல்லாத்

தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே

மாதவங்கள் போலும்பலன் வாயாகுயிலே – மூல

மந்திரங்கள் தான் மகிமை வாய்க்கும் குயிலே

81[தொகு]

எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை கியிலே – மனம்

ஏகாம னிற்கிற்கதி எய்துங்குயிலே

நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே – ஆதி

நாயகனை நினைவில் வைத்து ஓதுகுயிலே

மயிலொடு கிளத்தல்[தொகு]

82[தொகு]

ஆடுமயிலே நடமாடுமயிலே எங்கள்

ஆதியணி சேடனைக் கண்டு ஆடுமயிலே

கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே – என்றுங்

குறையாமல் மோன நெறி கொள்ளுமயிலே

83[தொகு]

இல்லறமே அல்லலாம் என்று ஆடுமயிலே – பத்தி

இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே

நல்லறமே துறவங் காணுமயிலே – சுத்த

நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே

84[தொகு]

காற்றூணைப் போல்மனத்தைக் காட்டுமயிலே

காலனையும் தூரத்தில் ஓட்டுமயிலே

பாற்றூடுருவமே பாயுமயிலே – அகப்

பற்றுச் சற்றும் இல்லாமற் பண்ணுமயிலே

அன்னத்தொடு கிளத்தல்[தொகு]

85[தொகு]

சிறுதவளை தான் கலக்கிற் சித்திரத்தின் நிழல் மறையும்
மறுவாயைத் தான் கலக்கி மதிமயங்கும் மடவனமே

86[தொகு]

காற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே

87[தொகு]

அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
பக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே

88[தொகு]

குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படு த்தல்போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே

89[தொகு]

அப்புடனே யுப்புச் சேர்ந் தளவுசரி யானதுபோல்
ஒப்புறவே பிரமமுடன் ஒன்றி நில்லு மடவனமே

90[தொகு]

காய்ந்த இரும்புநிறங் காட்டுதல் போல் ஆத்துமத்தை
வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே

புல்லாங்குழல் ஊதல்[தொகு]

91[தொகு]

தொல்லைப் பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
இல்லை என்று ஊதுகுழல் - கோனே – இல்லை என்று ஊதுகுழல்

92[தொகு]

இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லை என்று
அந்தமாய் ஊதுகுழல் – கோனே – அந்தமாய் ஊதுகுழல்

93[தொகு]

மோன நிலையினில் முத்தி உண்டாம் என்றே
கானமாய் ஊதுகுழல் - கோனே – கானமாய் ஊதுகுழல்

94[தொகு]

நாய்போற் பொறிகளை நானாவி தம்விட்டோர்
பேயரென்று ஊதுகுழல் – கோனே – பேயரென்று ஊதுகுழல்

95[தொகு]

ஓடித்திரிவோர்க்கு உணர்வு கிட்டும்படி
சாடியே ஊதுகுழல் – கோனே – சாடியே ஊதுகுழல்

96[தொகு]

ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை
ஓட்டியே ஊதுகுழல் – கோனே – ஓட்டியே ஊதுகுழல்

97[தொகு]

மட்டிக்குணமுள்ள மாரீச நாய்களைக்
கட்டி வைத்து ஊதுகுழல் – கோனே – கட்டி வைத்து ஊதுகுழல்

98[தொகு]

கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
கிட்டாவென்று ஊதுகுழல் – கோனே – கிட்டாவென்று ஊதுகுழல்

99[தொகு]

பெட்டியிற் பாம்பெனப் பேய்மனம் அடங்க
ஓட்டியே ஊதுகுழல் – கோனே – ஓட்டியே ஊதுகுழல்

100[தொகு]

எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
தனதாக ஊதுகுழல் – கோனே – தனதாக ஊதுகுழல்

101[தொகு]

அற்ற விடமொன்றே அற்றதோடு உற்றதைக்
கற்றதென்று ஊதுகுழல் – கோனே – கற்றதென்று ஊதுகுழல்

பால் கறத்தல்[தொகு]

102[தொகு]

சாவாது இருந்திடப் பால்கற – சிரம்

தன்னில் இருந்திடும் பால்கற

வேவாது இருந்திடப் பால்கற – வெறு

வெட்ட வெளிக்குள்ளே பால்கற

103[தொகு]

தோயாது அருந்திடும் பால்கற

தொல்லை வினையறப் பால்கற

வாயால் உமிழ்ந்திடும் பால்கற – வெறு

வயிறார உண்டிடப் பால்கற

104[தொகு]

நாறா திருந்திடும் பால்கற – நெடு

நாளும் இருந்திடப் பால்கற

மாறாது ஒழுகிடும் பால்கற – தலை

மண்டையில் வளரும் பால்கற

105[தொகு]

உலகம் வெறுத்திடும் பால்கற – மிக

ஓக்காளம் ஆகிய பால்கற

கலசத்தினுள் விழப் பால்கற நிறை

கண்டத்தின் உள்விழப் பால்கற

106[தொகு]

ஏப்பம் விடாமலே பால்கற – வரும்

ஏமன் விலக்கவே பால்கற

தீப்பொறி ஓய்ந்திட பால்கற – பர

சிவத்துடன் சாரவே பால்கற

107[தொகு]

அண்ணாவின் மேல் வரும் பால்கற – பேர்

அண்டத்தில் ஊறிடும் பால்கற

விண்ணாட்டில் இல்லாத பால்கற – தொல்லை

வேதனை கெடவே பால்கற

கிடைகட்டுதல்[தொகு]

108[தொகு]

இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே – உன்
அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே

109[தொகு]

சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - -நாளும்
தவமவமாகக் கழிப்பவரே சனனமதில் வருவார்

110[தொகு]

அகங்கார மாடுகள் மூன்று அகற்றிவிடு கோனே – நாளும்
அவத்தையெனும் மாடதை நீ அடக்கி விடு கோனே

111[தொகு]

ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக் கட்டுகோனே – உடன்
உறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுகோனே

112[தொகு]

மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக் கட்டுகோனே – மிக
முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே

113[தொகு]

இந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே – என்றும்
இல்லை என்றே மரணங்குழல் எடுத்து ஊதுகோனே

114[தொகு]

உபாதியெனும் முன்றாட்டை ஒட்டுவிடு கோனே உனக்
குள்ளிருக்கும் கள்ளம் எல்லாம் ஓடிப் போங் கோனே

115[தொகு]

முக்காய மாடுகளை முன்னங்கட்டுக்கோனே – இனி
மோசமில்லை நாசமில்லை முத்தி உண்டாங்கோனே

116[தொகு]

கன்ம பல மாடுகளைக் கடைக் கட்டுகோனே – மற்றக்
கன்மத்திர யப்பசுவைக் கடையிற் கட்டுக்கோனே

117[தொகு]

காரணக்கோ மூன்றனையுங்கால் பிணிப்பாய்கோனே – நல்ல
கைவசமாம் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே

118[தொகு]

பிரமாந்தரத்திற் பேரொளி காண் எங்கள்கோனே –முத்தி
பேசாது இருந்து பெரு நிட்டைசார் எங்கள்கோனே

119[தொகு]

சிரமதிற் கமலச் சேவை தெரிந்தெங்கள்கோனே – முத்தி
சித்திக்குந் தந்திரம் சித்தத் தறியெங்கள் கோனே

120[தொகு]

விண்நாடி வத்துவை மெய்யறி விற்காணுங்கோனே – என்றும்
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லுங் கோனே

121[தொகு]

கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்துக் கொள்ளுகோனே – ஞானக்
கண்ணன்றிக் கண்ணாடி காண ஒண்ணாதெங்கள் கோனே

122[தொகு]

சூனியமானதைச் சுட்டுவார் எங்குண்டு கோனே – புத்தி
சூக்குமமே அதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே

123[தொகு]

நித்தியமானது நேர்படி லேநிலை கோனே – என்றும்
நிற்குமென்றே கண்டு நிச்சயங் காண் எங்கள் கோனே

124[தொகு]

சத்தியும் பரமும் தன்னுட் கலந்தே கோனே – நிட்டை
சாதிக்கில் இரண்டு தன்னுள்ளே காணலாங் கோனே

125[தொகு]

மூகை போல் இருந்து மோனத்தைச் சாதியெங்கோனே – பர
மூல நிலைகண்டு முட்டுப் பிறப்பறு கோனே

• முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=இடைக்காட்டுச்_சித்தர்&oldid=493283" இலிருந்து மீள்விக்கப்பட்டது