இதழியல் இன்றும்/எழுத்துரிமை, பேச்சுரிமைகளைக் காக்க

விக்கிமூலம் இலிருந்து


27


எழுத்துரிமை, பேச்சுரிமைகளைக் காக்க
கட்சிப் பத்திரிகைகள்
நடத்துவது எப்படி?


ந்தியா மக்களாட்சி நடைபெறும் மிகப் பெரிய நாடு. ஏறக்குறைய 110 கோடி மக்கள் மத நல்லிணக்கத்தோடு ஒன்றி வாழும் சுதந்திர நாடு. இந்த நாட்டின் ஒவ்வொரு ஆட்சி முறைத் திட்டங்களும் மக்களுக்கு, மக்களுக்காக, மக்களால் நடத்தப் படுபவைகளாகும்.

இந்த நாட்டில் பல கட்சிகள் இயங்குகின்றன. ஒவ்வொரு கட்சியும் அவற்றின் கொள்கைகளை, செயற்பாடுகளை, அவற்றால் நாடு மேம்பாடடைவதை தங்களது பத்திரிகைத் தொண்டுகளால் பொது மக்களுக்கு நாள்தோறும் விளக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகளில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் என்ற பிரிவுகள் இருக்கின்றன.

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் பெரிய கட்சி மட்டுமன்று; எல்லாக் கட்சிகளுக்கும் மூத்தக் கட்சி. முதன் முதலில் தோன்றிய கட்சி என்பதால் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், அகில இந்திய அளவில் நன்கு வளர்ச்சிப் பெற்றக் கட்சியாக அது விளங்குகின்றது. மற்ற அகில இந்திய சிறிய கட்சிகளும் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகள், பாரதீய ஜனதா போன்ற வேறு சிலவாகும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகள் இயங்கி வருகின்றன. அவை அந்தந்த மாநிலங்களின் முன்னேற்ற வளர்ச்சிக்காக அரசியல் துறையில் பணியாற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம், இன எழுச்சி உணர்வோடு ஏறக்குறைய 70 அல்லது 75 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. அவற்றுள் மூத்த, மிகப் பெரியக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராடர்கழகம் ஆகியவை ‘திராவிட’ என்ற இன உணர்வுப் பெயரை முன்னிறுத்தி, அதன் பெயரால் இயங்குகின்றன. இவற்றுள் திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடாத இன உயர்வுக்காக பணியாற்றி வரும் தாய் கழகம் ஆகும்.

இதற்கு அடுத்தப்படியாக, ஐந்தாறு மாவட்டங்களில் மக்கள் செல்வாக்குப் பெற்ற கட்சி பட்டாளி மக்கள் கட்சி; சிற்சில மாவட்டங்களில் தலித் மக்களுக்காக பாடுபடும் கட்சிகளும் உள்ளன. அகில இந்திய அளவிலான கம்யூனிஸ்ட் கட்சிகள் சில மாவட்டப் பகுதிகளில் பலம் பெற்று இயங்குகின்றன. தேவரின மக்களுக்காக உழைக்கும் கட்சிகளும் உள்ளன. முஸ்லீம் லீக் கட்சி அகில இந்திய அளவில் வளர்ந்துள்ளதால் தமிழ்நாட்டிலும் முஸ்லிம் லீக் கட்சி ஏறக்குறைய 60 அல்லது 65 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

பாரதீய ஜனதா கட்சி என்ற ஓர் அகில இந்தியக் கட்சியை செல்வி ஜெயலலிதா தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி அரசியலில் செல்வாக்கை உருவாக்கிக் கொடுத்தார். இதுதான் அந்தக் கட்சியின் தமிழ்நாட்டு வரலாறு. பிறகு கலைஞர் அதற்கு பரவலான செல்வாக்கு வளரக் காரணமானார்.

அகில இந்திய தேசியக் காங்கிரஸ், தமிழ் நாட்டில் 1885-ம் ஆண்டு முதலே வேரூன்றியக் கட்சி. அக்கட்சி வரலாறு தேசிய செல்வாக்குப் பெற்றது மட்டுமன்று. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் என்று காங்கிரஸ் கட்சியில் தனது காற்சுவடுகளைப் பதித்தாரோ அன்று முதல் அது மிகப் பெரும் அரசியல் செல்வாக்கோடு பலம் பெற்றிருந்தது. 1967-க்கு பிறகு இன்று வரை தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.வுக்கு அடுத்தப் படியாக, வளர்ச்சியுடையக் கட்சியாக, தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையின் எதிர்கட்சி என்ற பலத்தோடு காங்கிரஸ், அரசியல் கட்சியாக நடமாடுகிறது.

பெருந் தலைவர் காமராசர் அவர்கள் செல்வாக்குறும் காலத்துக்கு முன்பு, ‘நவசக்தி’ என்ற தேசிய நாளேடுக்குத் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியான சுந்தரனாரை ஆசிரியராகக் கொண்ட கட்சிப் பத்திரிகையாக அது தொண்டாற்றியது. அதே ‘நவசக்தி’ பெருந்தலைவர் காலத்திலும் தனுஷ்கோடி என்ற காங்கிரஸ் தலைவரால் காங்கிரஸ் கட்சிக்காக 1975-ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளைப் பரப்பிட ‘ஜனசக்தி’ என்ற நாளேடு உழைத்து வந்தது. இப்போது ‘தீக்கதிர்’ என்ற நாளேடு அந்தக் கட்சிக்காக அற்புதமாகப் பணியாற்றி வருகின்றது.

‘முரசொலி’, கலைஞரால் அவருடைய பள்ளிப் படிப்புக் காலத்திலேயே கையெழுத்து ஏடாகத் துவக்கப்பட்டு, ஏறக்குறைய 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரே ஒரு தி.மு.கழகக் கொள்கைகளின் ஒலியாக முரசுக் கொட்டி வருவதை இன்றும் நாம் கண்டு வருகிறோம். எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு முதல் அமைச்சராக ஆவதற்கு முன்பு, ‘அண்ணா’ என்ற நாளேடு ஒன்றை அவரது அரசியல் வளர்ச்சிக்காகத் துவக்கப்பட்டு நடைபெற்று வந்ததை நாடறியும்.

‘நமது எம்.ஜி.ஆர்’ என்ற நாளேடு, செல்வி ஜெயலலிதா அவர்களால் நிறுவப்பட்டு, அதுவும் கால் நூற்றாண்டாக நடந்து வருகின்றது. அந்த தின ஏடு அண்ணா தி.மு.க.வுக்காக எம்.ஜி.ஆர். பெயரால் நடைபெற்று வரும் கட்சிப் பத்திரிகை ஆகும்.

தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘விடுதலை’ நாளேடு, திராவிடர் கழகக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ஏறக்குறைய எழுபது ஆண்டு காலமாக நடைபெற்று வரும் ஒரே ஒரு திராவிடரியக்கக் கொள்கை இதழாகும்.

‘சங்கொலி’ மறுமலர்ச்சித் தி.மு.கழகத்திற்குரிய வார இதழாக, அதன் வளர்ச்சிக்குரிய ‘சங்கொலி’யை வாரந்தோறும் போர்க் களக் போர்க் காலச் சங்கு போல ஒலித்து திராவிடரியக்கத்தைத் தட்டி எழுப்பிக் கோட்டைக்குப் போகப் பாதை அமைத்து வருகின்றது. இந்தக் கழகத்திற்கு அவசியம் ஒரு நாளேடு தேவை. என்ன காரணமோ, புரட்சிப் புயல் ‘வைகோ’ சிந்தித்துக் கொண்டிருக்கின்றார். அந்தச் சிந்தனை, க. திருநாவுக்கரசு பொறுப்பாசிரியராக இருக்கும் காலத்திலேயே வெற்றி பெறுமானால் நாட்டுக்கு நல்லதோர் விடிவு காலத்தை உணர்த்தும் சங்கொலியாக அமையும்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் அவர்கள் ‘தினக்குரல்’ என்ற நாளேட்டை நடத்தினார். அந்தக் குரல், கட்சி சந்தடி ஓசையிலே மறைந்து விட்டது. மீண்டும் எழுமா?

அகில இந்திய அளவில் எல்லா வளமும் உடைய தேசியக் காங்கிரஸ் கட்சி தனக்கென ஒரு தின ஏடு இல்லாமலேயே இருக்கின்றது? காலம்தான் அதன் கவனத்தைக் கணிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியலில் எழுத்துரிமைகளைக் காக்க, பேச்சுரிமையை நிலை நாட்ட, பொடா, தடாக்களது சட்டக் கொடுமைகளை, கோரங்களை மக்களுக்கு எடுத்துரைக்க எப்படிப்பட்ட கட்சி ஏடுகள் தேவை. அதை நடத்துவது எப்படி? எந்தக் கட்சி ஏடுகளிலே அதற்காகப் பயிற்சி பெறுவது நல்லது என்பதை; வருங்கால இளையத் தலைமுறைப் பத்திரிகை ஆசிரியர்கள் எண்ணிடத் தயாராக வேண்டும் என் பதற்காகவே, இந்தப் பகுதிக்கு ‘கட்சிப் பத்திரிகை நடத்துவது எப்படி?’ என்று ஒரு புதிய பகுதியை எழுதுகிறோம். ஆர்வமுள்ள இளைய தலைமுறைகள் படித்துப் பயன் பெற்றால் மகிழ்ச்சி.

கட்சிப் பத்திரிகை
நடத்தப் பயிற்சி

கட்டுரைகளில் எழுதும் எழுத்துச் செறிவுகளைச் சுத்தமாக எழுத வேண்டும்; அதனால் தவறுகள் அதிகம் ஏற்படாது; Scrawl எனப்படும் கிறுக்கல் எழுத்தாக இருக்கக் கூடாது? இருந்தால் ஏராளமான பிழைகள் ஏற்படும். இப்படி எழுதுவதால் என்ன பயன்? என்று கேட்கிறீர்கள் இல்லையா?

நீ ஒரு Scribble பத்திரிகை ஆசிரியன். அதாவது பிரச்னைகளை சிக்கல் எடுக்கும் கட்டுரை ஆசிரியன் என்பதை நீருபிப்பாயா இல்லையா? சிந்தித்துப் பார்! இவ்வாறு நீ பெயரெடுத்துப் புகழ் பெற வேண்டுமா? முதலில் நீ எழுதும் அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்! அதனால் மனச் சுத்தம் பெற முடியும். கட்டுரைப் போக்கும், அதன் தொடர்புகளும், கட்சி சார்பாக ஆசிரியரைக் காண வருபவர்களும், அவர்கள் தரும் செய்திகளும் சுத்தமாக இருக்கும். இல்லையேல் குழப்பவாதிகள்தான் குவிவார்கள்.

கட்சிப் பத்திரிகையில் எழுதும் கட்டுரைகள் கரடு முரடாக, திகைப்பெனும் பள்ளத்திலே விழுகின்றாவாறு எழுதக் கூடாது. பழி, பாவம், சிறு பிழை ஆகியவற்றுக்கு அஞ்சுகின்ற பண்பாளராக இருந்தால்தான் உன்னைத் தேடி வந்து மனதைப் புண்படுத்தும் கட்சிக் குணத்தினர் scrupulous அண்டா மாட்டார்கள் - வாரார். இல்லையென்றால் பத்திரிகை அறை Scuffle அமளி, கை கலப்பு, வம்பு தும்பு எழும் அறையாகி விடும். அதாவது சட்டையைப் பிடித்துத் தள்ளுகின்ற தள்ளுமுல்லு அறையாகி விடும்.

அதனால், எழுதும் கட்டுரையில், அனுபவ அறிவுத் திறனும், தனித் திறமும், விறுவிறுப்பூட்டும் மாற்றுச் சுவையும் எடுத்துக் காட்டாக, சிலேடை நயம், கவிதை மேற்கோள், மற்றவர் கருத்தை ஆதரிக்கும் மாண்பு, அகநிலை நுண்நோக்கு ஆற்றல், நாம் எவருக்கும் இளைத்தவரில்லை என்கிற பெருமித நினைவுகள் ஓர் எழுத்தாளன் கட்டுரையில் நீய்ச்சலடிக்க வேண்டும்.

மதச் சார்பின்மை, அரசியல் ஒழுக்கம், சமயச் சார்பற்ற கல்வி முறை, குறிப்பாக சமுதாய வியல் ஒழுக்கம், சமநிலை உணர்ச்சியுடைய கட்டுரை எழுத்துக்கள்தான் பத்திரிகைக்குரிய பெருமையை வழங்கும். எதிலும் புல்லறிவாண்மையை Smatterer நுழைய விடுவீர்களேயானால், உங்கள் இடமிருக்கும் சுறுசுறுப்புகள் (Smartness) துடிதுடிப்புகள் எல்லாமே தளர்ந்து போய்விடக் கூடும்.

நீங்கள் எழுதும் கட்டுரையில் என்னென்ன Styles இருக்க வேண்டும் தெரியுமா? இதோ சில :

பரந்த நீர் பரப்பில் அலையாடாத,

ஒலி வகையில் வல்லோசை இல்லாத மெல்லோசையோடு,

வள்ளலார் அருட்பாடல் மென்மை போல,

கடுகடுப்பு, சொரசொரப்பு இல்லாத இன்சொற்கள்

நத்தை நடை, ஆமை நடைகளை அகற்றி, ‘அரிமா’ நோக்கு நடை வளம்,

முயல் வேக, மான் வேக ஓட்டத்தோடு பாயும் தமிழ் வேகம் துள்ளத் துள்ள,

முழு நிலா சந்திரனை உடைத்து அந்த ஒளிக் குளிர்ச்சியை மையாக ஊற்றி எழுதும் போக்கு,

தென்றற் சிறு காற்றலையின் இதமான வீச்சுடன் வரவேற்று வாழ்த்தும் தமிழ்நடையில் கட்டுரைக் கருத்துக்களை எழுத வேண்டும்.

இத்தகையக் கட்டுரையைக் கட்சிப் பத்திரிகையில் முதன் முதலாக படித்த ஒரு வாசகன், நாளையும் பத்திரிகை வாங்க வரமாட்டான் என்றா எண்ணுகிறீர்கள்? ஆளும் கட்சித் தலைவர்களை இந்த Styleல் வரவேற்றுப் பாருங்கள். விற்பனைப் பெருகாதா?

எதிர்த்து எழுதும்
கட்டுரை நடையில்...

ஆட்சிக் கட்சித் தலைவர்களை, எதிர்க் கட்சியைச் சேர்ந்த பத்திரிகைகளைக் கண்டனம் செய்து எழுதும் தமிழ் நடை எவ்வாறு அமைந்திருந்தால் சிறப்பாக இருக்கும்? இதோ அந்த நடைக்குரிய இலக்கணம்.

அகம்பாவ உணர்ச்சியை அடக்கிக் கொண்டு, வேகமாகப் பின்வாங்கி முன்னோடி வந்து மோதும் செம்மறி ஆட்டுக் கடாக்களைப் போன்ற மானம்; ரோஷம்; அந்தத் தமிழ் நடையில் செஞ்சொற்களால் அமைந்திருக்க வேண்டும்.

பின் சென்று சுருண்டு உருண்டு புரண்டோடி வரும் பொங்கு மாங்கடல் அலைகளைப் போன்ற ஜால வித்தைகள் அந்தத் தமிழ்நடையில் தாண்டவமாட வேண்டும்.

காண்டா மிருகம் தனது கொம்புகளால் தாக்கும் போதுள்ள வலிமை, எழுதும் கட்டுரையில் மறைந்திருந்தாலும், கலை மான் கொம்புகளது வளைவுகள் உண்டாக்கும் ரத்தக் கசிவுக் காயங்கள் போல; எதிரிகளின் சிந்தனைக் கருத்துக்களைச் சிதறடித்து, அதன் ‘கரு’ என்கிற கபால ஓட்டைக் கழற்றி எறியும் தமிழ் எழுத்துக்கள் கட்டுரையில் அலை மோத வேண்டும்.

வானத்தில் வளரிளம் பிறைகளது ஒரு முனைக் கூர்மை போல, கண்டனக் கட்டுரைச் சொற்கள் எதிரிகள் எண்ணங்கள் மீது கூர்மையாகப் பாய்ந்து மோத வேண்டும்.

அறிவு, கொப்பளிக்கும் கருத்துக்கள் எழுதுகோல் முனையில் பொங்கி வழிய வேண்டுமே தவிர, Horns of Dliemma அதாவது இருதலைக் கொள்ளி எறும்பு மயக்கம் நெஞ்சில் ஊர்ந்திடக் கூடாது. அதனால், அறிவுத் தோல்வி வந்தாலும் அதை ‘வேலான் பட்ட வேழ நடையுணர்வோடு’ சகித்துக் கொள்ளலாம்! ஏனென்றால், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் அல்லவா? அதனால்!

இவை போன்ற கட்டுரைச் சொற்களது உணர்ச்சிகள், சம்பவங்கள், அதற்கான சான்றுகள், ஆதார ஏடுகள் எல்லாம் எதிரியின் ஏறணைய நெஞ்சிலே பேரச்சத்தை, பயங்கரக் கிலியூட்டும் சினச் சீற்றத்தை உருவாக்கும்போது, கட்டுரையைப் படிக்கும் வாசகர் வட்டங்கள் எல்லாருமே வீரம் தவழும் வெங்களப் பாடல்களைப் பாடித் துள்ளுவார்கள். கட்டுரை எழுதுபவருடைய எழுதுகோலின் அற்புதங்களை வழக்கமாக படிக்கும் அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் பக்தர்களாகி விடுவார்கள்.

குறிப்பு :- வாயால் சொல்லி விட்டால் போதுமா?

எங்கே எடுத்துக் காட்டுக் கட்டுரைகள் என்று கேட்போர்களுக்கு ‘மறுப்புக் கட்டுரை எழுதுவது எப்படி?’ என்ற இப் புத்தக இறுதிப் பகுதியிலுள்ள கட்டுரைகளைப் படித்துப் பின்பற்றினாலே போதும். பல நூல்களது ஆதாரச் சான்றுகள் (References) உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எழுதுவதற்கும் அவை அடிப்படையாகச்

சான்றளிக்கும்.

கலைஞர் ‘முரசொலி’

“முரசொலி”க்கும் வயதாகி விட்டது. Box Box-சாக பெட்டிச் செய்திகளை எழுதிக் குவிக்கும் ‘முரசொலி’ மாறன் அவர்களும் இப்போது இல்லை. இப்போது அது வேங்கைக்கு வாய்ப்பூட்டு போட்ட நிலையில் இருக்கிறது.

‘தீக்கதிர்’ ஏட்டைப் படிக்கும் போது ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகையின் வைர நெஞ்சுரத்தைக் காணலாம். அற்புதமான தமிழாய்வுகள், அறிஞர்களது வரலாறுகள் அனைத்தையும் அது வழங்கித், தொண்டர்களை ஊக்குவிக்கும் ஆக்கப் பணிகளை ஆற்றுகின்றது.

ம.தி.மு.க. ‘சங்கொலி’

எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது ‘சங்கொலி’ வார ஏட்டை விட்டால், அரசியல் ரீதியான எதிர்க்கட்சி ஏடு வேறு ஏதுமில்லை. ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்பார்களே அந்தத் தகுதியில் திராவிடரியக்கப் பழங்கால பத்திரிகை உணர்வுகளோடு பீடுநடையிட்டு அது வந்து கொண்டிருக்கின்றது.

‘விடுதலை’, ‘உண்மை’ என்று தந்தை பெரியார் வளர்த்த ஏடுகளில் இப்போது இனமான சைவ உணவு வாசனைதான் மூக்கைத் துளைத்து ஊடுருவுகின்றது. அவை வீர சைவமாக இருந்தாலும் பரவாயில்லை. அதனால், அவை என்று பழைய அசைவ ஏடுகளா மாறி, ஆய்வுக் கருத்துக்களை வரும் இளைய தலைமுறைகளுக்கு வழங்குமோ! காலம்தான் வேகம் காட்ட வேண்டும்.

“Paper
War” - அல்ல

எனவே, கட்சிப் பத்திரிகைகள் Paper War, Paper Warfare ஆக மாறிவிடக் கூடாது. அது தாள் போர், தாள் வாக்குவாதம், செய்தித் தாள் மூலமாக, மேடைப் பேச்சில் கேட்டது வாயிலாக, தலைவர்களுடைய அறிக்கைக் கருத்துக்கள் சார்பாக நடத்தப்படும் கண்ணியமான, கட்டுப்பாடான, கடமையான ஒரு கருத்துப் போரே தவிர, வாக்குவாதக் களங்களே அன்றி, பத்திரிகைகள் கலவரமூட்டும் களமாக அது மாறிவிடக் கூடாது என்பதில் எழுத்தாளர்கள் எச்சரிகையாக எழுத வேண்டும்.

PARALYSIS
JOURNALIST

பத்திரிகைக்குப் பத்திரிகை இடையே வெளியிடப்படும் முரண் உரையாக, தலைவர்களுக்குத் தலைவர் அறிவிக்கும் முரணுரைபோலத் தோன்றும் மெய்யுரையாக, புரியாத புதிராக, ஏற்றுக் கொண்ட இயல்புக்கு மாறான செய்தியாக, கருத்தாக, நம்பமுடியாததாக, எழுதும் செய்திகளாகவோ, கருத்துக்களாகவோ, புதிராகவோ - எழுதும் கட்டுரைகள் இருக்கக் கூடாது.

அவ்வாறு அந்த எழுத்துக்கள் அமையுமானால், இருந்தால், எழுதிய எழுத்தாளர் தனது எழுத்தாட்சிகளை, சொல்லாட்சிகளை, பொருளாட்சிகளை, இயக்கும் ஆற்றலை இழந்து விட்ட பக்கவாதம், முடக்கு வாதம் (Paralysis Journalist) என்று, மற்ற எழுத்தாளர்களும் அல்லது பத்திரிகை உலகமும் அவரைப் பழிக்கும் என்பதை உணர வேண்டும்.

எழுதப்படும் கட்டுரைகள் எதுவானாலும் சரி, அது வெல்லுதற்கரிய inexpugnable-யனவாக இருந்தால்தான், அடுத்தப் பத்திரிகை எழுத்தாளர் மீண்டும் தாக்கி எழுத அஞ்சுவார். அது மட்டுமன்று; இத்தகைய எழுத்துக்கள், பத்திரிகையைச் சார்ந்திருக்கும் கட்சிக்காரர்களை வீரர்களாக்கும். மற்றக் கட்சிக்காரர்கள் தாக்கிக் கைப்பற்ற முடியாத கொள்கை உறுதி கொண்ட வீரர்களாக அவர்கள் உலா வருவார்கள். அதாவது, ஆழ்ந்த கட்சிச் சிந்தனைகளை, உலக அறிவுச் சிந்தனைகளை எழுத்து மூலம் தெரிவிக்கும் முறையை Lucubrate என்பர். அந்தப் பணியைக் கட்டுரையாளர் செய்வது நல்லது.

ஆனால், அக்கட்டுரை எழுத்துக்கள், கருத்துக்கள், கேலிக்கும், முட்டாள்தனத்துக்கும் (Ludicrous) சான்றாகிவிடக் கூடாது.

கட்சிக்காரர்கள் அனைவரையும் அக்கட்சியின் இலட்சியத்திற்கான விடி வெள்ளியாக Luciferத் திகழ்ந்தால் அந்தப் பத்திரிகை மக்களிடையே கொள்கை மலராகப் பூத்து மணந்து கொண்டே தேன் பிலிற்றும்.

பல் சுவைகளை
வழங்க வேண்டும்

கட்சிப் பத்திரிகை நாளேடாக இருந்தால் தொடர் கதை எழுதச் சொல்லலாம். ஆனால், அந்தக் கதை ஆற்றொழுக்கான தொடர்பாக எழுதப்பட்டிருக்கின்றதா என்று படித்துப் பார்ப்பது ஆசிரியர் கடமைகளில் ஒன்று.

அவ்வாறு எழுதப்படும் கதையில் முழுநிலைப் பின்னணி விளக்கம்; சென்ற காலக் கதைச் சுருக்கம்; ‘சங்கொலி’ பத்திரிகையில் வெளி வந்த ‘வைகோ’ நடைப் பயணச் செய்திக் கட்டுரைகள் போல, மற்றும் துணுக்குரைகள், கேள்வி-பதில், சிற்றிலக்கியச் சிறுகதைகள், கவிதை மலர் பூக்காடுகள் அழகு, விந்தைகள் புரியும் விஞ்ஞானக் கூறுகள்; வரலாற்று ஓவிய நினைவுகள், பேரிலக்கியச் சிறுகதைகள்; புத்தக விமர்சனங்கள்; நாடகம், சினிமா, இசை, ஆடல் பாடல்களது கலை விமர்சனங்கள், இறுதியாக வீர விளையாட்டுப் போட்டி விந்தைகள், இளம் கவிஞர்கள் தலைமுறைகளை வளர்க்கும் கவிதைச் சோலை போன்ற பகுதிகளைத் தக்க வல்லவர்களைக் கொண்டு வெளியிட்டால், அந்தப் பல்சுவை தேன் துளிகளைப் பருக வாசகர் தேனீக்கள்; பத்திரிகைப் பகுதி மலர்களை மலர வைத்து, நுகர்ந்து, தேனுறிஞ்சி, அடை நெய்து, பிற்கால உலகுக்கு வழங்கும் அறிவைப் பெறுவார்கள். கவிஞர் சுரதாவும், கவிஞர் கண்ணதாசனும் தங்களது கவிதை, உரைநடை இதழ்களில் இந்தப் பணிகளைச் செய்து வெற்றி பெற்றிட்ட வித்தகர்களாக விளங்கினர் என்பதைத் தமிழகம் அறியும்.

ஆன்மீகம்
செய்திகள்

ஆன்மீகக் கருத்துக்களைப் பத்திரிகையில் வெளியிடலாம். புற உலகில் தோன்றுவன எல்லாமே கருத்தளவே ஆகும் என்ற கொள்கையுடைய idealisticக்குகளாக இருக்கலாம். இலக்கியவாதிகள் குறிக்கோளை உயர்வாக நினைக்கின்ற idealize ஆக இருத்தல் சிறந்தது. மக்கள் ஆன்மீக உணர்வுகளைப் புரிந்து கொண்டு திருக்கோவில் விழாச் செய்திகளை வெளியிட்டு ஆன்மிகர்களை மகிழ்வுப்படுத்தலாம். அந்த வாசகர்களும் பத்திரிகை வளர்ச்சிக்கு ஆதரவாக நடமாடுவார்கள்.

தேசிய கவி பாரதியாருக்குப் பிறகு கவிதை வானம் வெளுத்து வந்தது. புரட்சிக் கவிஞராக விளங்கிய பாரதிதாசன் அதற்குச் செம்மையை ஏற்றிச் செவ்வான மாக்கினார். அவருடைய பாக்களின் வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல், நமது உடலின் நாடி நரம்புகளிலே துள்ளலை, துடிப்பை, நெருப்பை, கந்தக வெடிப்பை, தென்றல் சுவை போன்ற, புதுப்புதுச் சிந்தனை இசைகளோடு பாடி வந்த பாவேந்தர் ‘பா’ நயங்களைப் பத்திரிகையிலே எழுதி, பாவேந்தர் கவிதா மண்டலத்தை வளர்க்கும் இளைய தலைமுறைகளை உருவாக்கலாம்.

பத்திரிகைத்
தொண்டு

படிப்பு, கல்வி, ஆராய்ச்சி, இலக்கிய உணர்ச்சிகளது வளர்ச்சிகள், ஆழ்நிலை ஆய்வுகள், ஏடாய்வுகள், கூராய்வுகள், நுண்ணாய்வுகள், அறிவியல் சாதனைகள், கலைத் துறை முன்னேற்ற ஆய்வுகள், கருத்துப் படம், எழுதும் பயிற்சி, ஆர்வ உழைப்பு ஈடுபாடு, தலையங்கங்களது, வெற்றிகள், தொடர் வரலாற்றுப் புதினம் வெளியீடு, சங்க கால இலக்கிய ஆய்வுச் சிந்தனைகள், பொருளாதார வளர்ச்சி நிலை, அரசியலில் ஆளும் கட்சி ஆட்சியின் அவலங்கள், அதற்கான ஆக்கப் பணிகளை கூறும் திட்டங்கள், விளையாட்டுச் சிந்தனைகளின் பெருமைகள், சினிமா-நாடகம், இசைத் துறைகளுக்குரிய விமர்சனங்கள் ஆகியவற்றுக்கான துரண்டுகோலாக அமைந்தால் அதுதான் பத்திரிகை ஆற்றும் மக்கட் தொண்டு!

இத்தகையப் பத்திரிகையின் வளர்ச்சிக்குப் பொது மக்கள் ஆதரவு காட்டுவதுதான், பத்திரிகையும் மக்களும் Heart and Heart அதாவது மனம் விட்டுப் பழகும் பண்பு நிலையில் உள்ளார்கள் என்று பொருள்!