இன்பம்/புலவர் க. மாணிக்கம், தில்லை

விக்கிமூலம் இலிருந்து
3
இன்பம்

புலவர் ந. மாணிக்கம், தில்லை

இன்பம், இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம் நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும் இவை பற்றி புலவர் ந. மாணிக்கம் தில்லை அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

இன்பம் என்பது என்ன?

இன்பத்தைக் குறித்து உலகோர் அனைவரும் பேசுகின்றனர். ஒரு மனிதனே ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்றை இன்பம் என்று கூறிடக் கேட்கின்றோம். நம் நாட்டு மத நூல்கள் உயிரின் குறிக்கோளே இன்பம் எய்துவதுதான் என்றும் அதற்காகத்தான் உயிர்கள் தோன்றுகின்றன என்றும் அல்வுலக இன்பங்கள் எல்லாம் சிற்றின்பம் என்றும் இறைவனோடு கலக்கும் இன்பமே பேரின்பம் என்றும் சிற்றின்பம் அழிந்து போவது என்றும் பேரின்பம் அழிவில்லாததென்றும் கூறுகின்றனர். முதற்கண் இன்பத்தின் இயல்பு இன்னதென அறுதியிட்டு முடிவு கட்டல் இதன் உண்மை பொய்மையை வெளிப்படுத்துவனவாகும்.


விஞ்ஞானிகள் இவ்வுலகம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கின்றது என்பர். இயங்கும் உலகத்தில் இயக்கத்தினால் மனதில் உண்டாகும் ஒரு உணர்ச்சியையே இன்பம் என்று மக்கள் கூறுகின்றனர் என்று உலகினர் வாய்ச் சொல் கொண்டே நிறுவ இயலும். ஆடுதல், பாடுதல், உண்ணல், காண்டல், கருதுதல், ஓடுதல், கூடுதல், கேட்டல், முகர்தல் என்பனபோல உலகில் மக்கள் ஆற்றுகின்ற தொழில்கள் அனைத்துமே, பொருள் இடம் காலத்தின் ஒற்றுமையினால் மனத்தில் ஒரு கிளர்ச்சியை விளைவிக்கக் காணுகிறோம், வெறுக்கத்தக்கன, இகழத்தக்கன, நகைக்கத்தக்கன. மயங்கத்தக்கன, போன்ற நிகழ்ச்சிகள் மனத்தினைப் பற்றும் போது ஒவ்வொரு வகையான கிளர்ச்சியுண்டாகின்றது. இவற்றிற்கு நாம் வெவ்வேறு பெயர் கூறிக் குறிப்பிடுகின்றோம். அது போலவே பொருள், இடம், காலம் துணை செய்ய நிகழ்த்தும் ஒவ்வொரு தொழிலும் மனதைப்பற்றி ஒரு வகையான கிளர்ச்சியை விளைவிக்க நாம் இன்பம் என்று அதனைக் கூறுகின்றோம்.

இவ்வின்பம் தானும் உலகில் எல்லோருக்கும் ஒரே படித்தாக அமைகின்றதா எனின் இல்லை யென்றே துணிந்து கூறலாம். உலகிலுள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று உருவத்தில் வேறுபட்டு விளங்கும் இயற்கையை மனதிலெண்ணி, உள்ளெண்ணங்கள் ஒன்றுக் கொன்று வேறுபடுவதையும் மனதிலெண்ணினால் உள்ளத்தைப் பற்றுகின்ற கிளர்ச்சியும் உள்ளத்தின் இயல்பிற்கேற்ப வேறுபட்டு விளைவதையே காண்கின்றோம், கேட்கின்றோம். இந்நிலையில் எல்லோரும் ஒரே தன்மைத்தான இன்ப உலகத்தை எய்தலாம் என்பது நம் உலக இயற்கைக்கு எவ்வளவு மாறுபட்டது என்பதனைத் தோழர்கள் எண்ணிப் பார்த்திடுக. நிற்க, இயக்கத்தினால் மனதில் உண்டாகும் கிளர்ச்சிக்கு இடமாக விளங்கும் ஒரே பொது இயல்பை வரையறுத்துக் கூறுதல் இயலுவதே ஆகும்.

இன்பத்தின் இயல்பை இன்னது என வரையறுப்பதின் முன்னர் எத்தகையோருக்கு இன்பம் உண்டு எனக் காணல் இக்கட்டுரைக்கு நலம் பயப்பதாகும். இன்பம் நுகர்பவனுக்கு எத்தகைய தகுதி வேண்டும்? மக்கள் உருவொடு காணப்படும் தகுதி ஒன்றே மக்கள் இன்பத்தைத் துய்க்கப் போதுமானதாகாது. இன்பமாகிய கிளர்ச்சி அல்லது உணர்ச்சித் தோன்றுவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தகுதி வலிமைஒன்றேதான், ஆம். வலிமையே! என்ன வலிமை? வலிமை என்னும்போது மன வலிமை, உடல் வலிமை, பொருள் வலிமை, ஆள் வலிமை எனப் பற்பல நினைவிற்கு வரல் இயல்பு. இவை யத்தனையும் உள்ளிட்டி ஒன்றைத்தான் மேலே வலிமையென்று கூறியது. இங்குக் கூறிய வலிமையின் பிரிவுகளுக்கு வெவ்வேறு பெயர் தரலாம். மனவலிமையென்பது அகவலிமை, உடல்வலிமையென்பது இகப்புற வலிமை, பொருள் வலிமை என்பது புறவலிமை, ஆள் வலிமை என்பது புலப்புற வலிமை, இந்நான்கு வகையான வலிமைகளும் அகவலிமையில்லாது ஏனைய வலிமைகள் ஒருவனுக்கு வேறு காரணங்களால் வாய்த்திருப்பினும் இன்பம் என்பதைக் காணலும் அரிதாகும். அகவலிமை இருந்து ஏனைய வலிமைகள் இல்லாதிருப்பினும் ஒருவனுக்குத் தீதின்று, அகவலிமையுடையவன் ஏனைய வலிமைகளை உடையனாவதும் அகவலிமைக்குரிய இயல்பேயாகும். இதனால் இன்பமும் நுகர்பவனுக்கு மனவலிமையே இன்றியமையாது வேண்டப்படுவதாகும் என உறுதியிட்டு கூறலாம். ஆனால் ஏனைய வலிமைகள் வேண்டுவதில்லை என்பது இதன் கருத்தன்று.

நம் நாட்டு மக்களுள் எவ்வளவு பேர் இந்த அகவலிமையை உடையவர்கள்? அகவலிமையென்பது ஒருவனுக்கு எவ்வாறு அமையும்? நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று கூறிய கவியின் வாக்கு, இன்றளவும் ஆழியவில்லை. அஞ்சியஞ்சிச் சாகும் இயல்புடைய மக்கள்தானே நம் நாட்டில் நிறைந்து காணப்படுகின்றார்கள். இதற்குக் காரணம் என்ன? மக்கள் அனைவரும் இயற்கையில் மனவலிமை யுடையாரே ஆயினும் நம்நாட்டு மக்கள் ஏன் மனவலிமைவியிழந்து காணப்படுகின்றார்கள்? அறியாமையும் அதனடியாகப் பிறக்கும் அச்சமும், பொய்மையும் நம் நாட்டு மக்களினத்துள் எவ்வாறு புகுந்தன? ஆரியத்தை இன்றையத் தமிழர்கள் வெறுக்கின்றனர். அதற்குப் படுகுழிதோண்டிப் புதைக்க வீறுகொண்டு எழுந்துள்ளனர். ஏன்? அறியாமையும், அச்சத்தையும், பொய்மையையும் ஆரியமே படைத்தது என்பதில் கருத்து வேற்றுமையிருப்பினும் ஆரியம்தான் அம்மூன்றையும் நாட்டில் வளர்த்துக் கொண்டும் பரப்பிக் கொண்டும் வந்தது வருகின்றது என்பதில்கருத்து வேற்றுமையுண்டோ? நம் நாட்டில் இன்று காணப்படும் கோயில்கள் நமக்கு எவற்றை நினைப்பூட்டுகின்றன. வானளாவிய கோபுரங்கள் தமிழரின் பெருமை வானளாவ உயர்ந்திருந்த தன்மையை தோற்றுவிப்பது உண்மையா? நம் நாட்டில் அச்சம் எவ்வளவு ஆழமாகவும் எவ்வளவு பரந்தும் உயர்ந்தும் அழகோடு குடிகொண்டுள்ளது என்பதனைக் காட்டுவது உண்மையா? கோவில்களும் பேய் பிசாசுகளும் சகுனமும் இராகு காலமும் இவற்றிற்கு மேலாக விதியும், இவை போன்ற பிறவும் மக்களினத்தின் அச்சத்தின் சின்னங்கள் அன்றோ? இந்நாட்டில் ஒரு குழந்தைச் சுற்றுப்புறமாய் அமையவும் தாயும் தந்தையும் ஆசிரியரும் நண்பரும்,அரசாங்கத்தாரும் அவர்தம் துணையால் செய்தியாளர்களும் வானொலியார்களும் அஞ்சத் தகுவனவற்றை இடைவிடாது புகுத்தி வளர்த்துக் காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் நம் நாட்டு மக்களின் மனவலிமையைக் கருதவும் இயலுமோ?

இன்பம் துய்ப்பதற்குரிய தகுதியான அகவலிமை அறிவொடு பொருந்தியதாக இருத்தல் வேண்டும். உலகில் அறியாமையொடு பொருந்திய மனவலிமையையும் காணுகின்றோம். இதைத்தான் பேதமை யென்று கூறுவர். அறிவொடு பொருந்திய மன வலிமையொரு எழுச்சியையும், அறியாமையொடுபட்ட மனவலிமை சோர்வையும் இடையிடையே தோற்றுவிப்பதே இவற்றிற்கு வேறுபாடு.

எந்தத் தொழிலும் இன்பத்தைத்தர வல்லதாயினும் செய்யும் தொழில்கள் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பெரும் பகுதியும் மற்றையோருக்குச் சிறு பகுதியுமாகப் பயன் விளைவிக்காமல் தனக்கும் மற்றையோருக்கும் ஒத்த அளவு பயன் விளைவிக்கும் நல்ல குறிக்கோளை ஒருவன் கொள்ளல் வேண்டும். இத்தகைய குறிக்கோளையுடைய நிகழ்த்தும் தொழிலாலுண்டாகும் கிளர்ச்சி யைத்தான் பேரின்பம் எனலாம். (இன்பம் என்று கூறப்படுவது உண்மையில் இன்பமாக இருப்பின் அவ்வின்பத்தில் உண்மையில் சிறுமை பெருமைக்கு இடமின்று, இங்கு சிற்றின்பம். பேரின்பம் என்று கூறியது இன்பத்தைத் தரும் வழிகளின் சிறுமை பெருமைகளை நோக்கியேயாகும்.)

அறிவொடு பட்ட மனவலிமையொடு தனக்கும் உலகினருக்கும் ஒத்த அளவு பயன் விளைவிப்பதாக ஒரு நற்குறிக்கோளைக் கொண்டு அதனை யடைய முயலுதல் இன்பம் நுகர்தற்கு முதல் நிலையெனலாம். அறிவு, தொழில் நிகழ்த்த வேண்டிய களத்தையும் காலத்தையும், தொழிலின் வலிமையையும் உணர்த்த அதன்வழி நின்று தொழிலைச் செய்யுங்காலை அத்தொழிலின் வெற்றி தோல்விக்கிடையே துணிந்த நிலையாலோ, துணியாத நிலையாலோ ஏற்படும் எதிர்நிகழ்ச்சிகளை வரவேற்று தன்னுள்ளுணர்ச்சியனைத்தையும் ஒரு சேர அவ்வெதிர் நிகழ்ச்சிகளுக்கு எதிர் நிறுத்திச் செய்யும் போராட்டமே ஒருவனுக்குச் சிறந்த இன்பத்தை பேரின்பத்தை அளிப்பதெனலாம். பொதுவாக எந்தத் தொழிலாக இருந்தாலும் ஒரு சிறு முட்டுப்பாடும் இல்லாது தன் வழியே இயங்கி முடிவு பெறுமானால் அதனை உயிர்ப்பு இல்லாத தொழில் அல்லது ஒரு இயந்திரம் நிகழ்த்தும் தொழில் என்றே இயம்புதல் வேண்டும். தொழில் நிகழ்ச்சிக்கிடையே உண்டாகும் எதிர் நிகழ்ச்சியே இன்ப உணர்ச்சிக்குப் பிறப்பிடமாகும், எதிர் நிகழ்ச்சி எவ்வளவு வன்மையுண்ட் யதோ அவ்வளவு இன்பமும் வன்மையுடையதாகும் இத்தகைய இன்பத்தை நுகரவல்ல ஒருவனுக்கு தொழில் நிறைவேறுவதோ நிறைவேறாமையோ ஒரு பொருட்டன்று.

இனி இன்பம் நிலையானதா நிலையற்றதா என்ற விடை காண்டல் முறையாகும். இன்பம் என்பது மனத்திலுண்டாகும் ஒரு கிளர்ச்சியென்னில் அக்கிளர்ச்சி நிலையுடையதா அல்லவா என்ற வினாவை யெழுப்புதலே முறையுடையதாகும். மனதில் உண்டாகும் கிளர்ச்சிகள் சார்ந்ததின் வண்ணத்தாகும் மனதினால் வேறுபட்டுக்கொண்டு செல்வதை நாம் உணர்கின்றோம். ஆனால் மனத்தில் அழுத்தமாக தைத்த ஒரு கிளர்ச்சி அதனை அடிக்கடி எண்ணச் செய்து விடுகின்றது என்பதனையும் நாம் உணர்கின்றோம், ஒன்றை நிகழ்த்துங்கால் உண்டாகும் கிளர்ச்சியை இன்பம் எண்ணில் பின் அதனைக் குறித்து எண்ணுவதாலுண்டாகுங் கிளர்ச்சியை இன்பத்தின் நிழல் எனலாம். இன்பத்தின் நிலையுடைமை அதன் வன்மையைப் பொறுத்தது என்றே விடையிறுக்க வேண்டும்.

ஆதலால் இன்பத்தை அடைய விரும்பும் ஒருவனுக்கு முதற்கண் பகுத்தறிவும் அறிந்தபடியொழுகும் மனவலிமையும், தான் வாழும் நாட்டின் சூழ்நிலைக்கேற்றதாய்த் தன் நிலைக்குப் பொருத்தமானதாயுள்ள ஒரு குறிக்கோளும், அக்குறிக்கோளை அடையத் தன் உழைப்பையும், பொருளை யும் இறுதியில் வேண்டப்படின் உயிரையும் இழத் தற்கேற்றதாய் நிகழ்த்தும் போராட்டமே வேண்டற்பாலது.

திராவிட நாடு
29-4-1945