இராச ராச சோழனுலா--இராசேந்திர சோழனுலா

விக்கிமூலம் இலிருந்து


புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச் செயல்வண்ணங் காட்டிய சேயோன் - உயிரனைத்தும் 1

காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி பூட்டுந் தனியாழிப் பொற்றேரோன் - ஓட்டி 2

அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி புறவாழி முட்டப் புரந்தோன் - மறையோற்குப் 3

பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும் நாவிற் பழுதஞ்சி நல்கினோன் - வாவியிற் 4

புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும் ஒக்க வொருகாலத் தூட்டினோன் - புக்கால் 5

மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப் புறாநினை புக்க புகழோன் - அறாநீர்த் 6

தரங்கக் கடலோழுந் தன்பெயரே யாகத் துரங்கப் பசுநாடித் தொட்டோன் - வரங்கொள் 7

சுரநதி தன்பெய ராகச் சுருதி வரனதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர் 8

மல்லன் மரபை ரகுவின் மரபென்று சொல்ல வுலகளித்த தொல்லையோன் - செல்லலால் 9

வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய இந்திரனை யேறாக்கி யேறினான் - முந்தும் 10

ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர் வருதேரால் வான்பகையை மாய்த்தோன் - பொருது 11

சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே 12

வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத் தூங்கும் புரிசை துணிந்தகோன் - வீங்கு 13

குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும் வடகடற்குந் தென்கடற்கு மன்னன் - தரையின் 14

கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின் 15

பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன் திருமகளைக் கல்யாணஞ் செய்தோன் - பரநிருபர் 16

கன்மலை மார்புங் கடவுள் வடமேருப் பொன்மலை மார்பும் புலிபொறித்தோன் - சொன்மலைய 17

நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் காற்றளையை விட்டகோன் - புல்லார் 18

தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும் தழும்புடைய சண்டப்ர சண்டன் - எழும்பகல் 19

ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து வேழந் திறைகொண்டு மீண்டகோன் - சூழி 20

மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டித் துதகையைத் தீத்த வுரவோன் - முதுவானக் 21

கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும் மங்கையுட னாடு மரபினோன் - பொங்கி 22

அலைவீசி வேலை யனைத்தினும்போய்த் தெம்மீன் வலைவீசி வாரிய மன்னன் - கொலையானை 23

பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் - ஒப்பொருவர் 24

பாட வரிய பரணி பசுடொன்றின் கூடல சங்கமத்துக் கொண்டகோன் - நாடும் 25

கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி உலகை முன்காத்த வுரவோன் - பலவும் 26

தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப் பரணி புனைந்த பருதி - முரணில் 27

புரந்தர னேமி பொருவு மகில துரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபனென் 28

றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து சேய பெரிய திருக்குலத்து - நாயகன் 29

சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும் மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய 30

மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும் சூளிகையு மெத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான் 31

கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில் வாயிற் றிருச்சுற்று மாளிகையும் - தூயசெம் 32

பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்தும் முன்னிற் கடலகழின் மூழ்குவித்த - சென்னி 33

திருமகன் சீராச ராசன் கதிரோன் மருமக னாகி மறித்தும் - திருநெடுமால் 34

ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப் பாதிப் பகைதடிந்து பாதிக்கு - மேதினியிற் 35

செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க வந்தான் மனுவங்க்ச மாமேரு - முந்தி 36

உடுத்த திகிரிப் பதினா லுலகும் அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக் 37

கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும் தண்ணென் கவிகைச் சனநாதன் - எண்ணும் 38

தவன குலதிலகன் றன்பெருந் தேவி புவன முழுதுடைய பூவை - அவனியில் 39

எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப் பெண்பெருமா ளந்தப் புரப்பெருமாள் - மண்பரவ 40

ஓகை விளைக்கு முபய குலரத்னத் தோகை யுடனே துயிலெழுந் - தாகிய 41

மூர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித் தீர்த்தத் தபிடேகஞ் செய்தருளிப் - போர்த்திகிரி 42

மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும் காலைக் கடவ கடன்கழித்து - மூலப் 43

பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை வரும்பே ரணியென்ன வாய்ப்ப - நிரம்பப் 44

பவளச் சடையோன் பணித்த படியே தவளத்ரி புண்டரஞ் சாத்திக் - குவளைப்பூங் 45

கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன் போர்க்கோலங் காண்பானே போற்கொண்டு - பார்த்திபர்தம் 46

தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம் தில்லைதா திருநடனஞ் சிந்தித்து - வல்லவர் 47

சூழச் சுருதி யனைத்துந் தொகுத்தெடுப்ப வேழப் பெருமானை மேல்கொண்டு - வாழி 48

அரச வலம்புரி யார்ப்ப வதன்பின் முரசொரு மூன்று முழங்கத் - திரையின் 49

சுடற்பொற் கவரி யெழப்பொங்கத் தொங்கற் கடவுட் கவிகை கவிப்ப - புடவியின் 50

மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன் தீட்டுங் கொடிப்புலியாய்ச் சேவிப்ப - வாட்டானைத் 51

தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து மன்னரு மாளவரு மாகதரும் - பின்னரும் 52

காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட பூந்தார் நரபாலர் முன்போத - வேந்தர் 53

பொருவாத பூபால கோபால னென்னும் திருநாம நின்று சிறந்த - வருநாளில் 54

தென்மாடக் கூடற் சிறைவிட்ட கார்புகார்ப் பொன்மாட வீதிப் பொடியடக்கத் - தன்மீது 55

கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன் பொன்மாரி பெய்யும் புயலேவப் - பின்னரும் 56

காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும் பூமாரி கௌமாரி முன்பொழிய - யாமந்தீர் 57

காலை வெயிலொதுங்கக் கார்களாற் கார்களும்போய் மாலை வெயிலால் மறித்தொதுங்கக் - கோலப் 58

பெருங்குற் றுடைவாளப் பேரொளி மேரு மருங்கிற் பெரும்புலி மான - நெருங்கிய 59

கோளி னொழுங்கு மழுங்கக் குலரத்ன ஒளி மகர வொளியெறிப்பத் - தோளில் 60

இருபொறை தீரு மிருபாப் பரசும் இருதொடி யாயகொல் லென்ன - வரரத்னம் 61

தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ் மாமேரு வென்ன முடிவயங்கப் - பூமேற் 62

புடைநிலவுந் தங்கள் புகழ்நிலவின் மேலே குடைநிலவுஞ் சக்ரகிரி கோல - உடையதன் 63

கைவைத் தருளாமே தாமே கடன்கழிக்கும் தெய்வப் படையைந்துஞ் சேவிப்பப் - பெய்கணைத் 64

தூணிப் புறத்தோடுந் தோளிற் சிலையோடும் பூணித் தனங்கவேண் முன்போத - மாணிக்கக் 65

கோவையான் முக்குவட்டுக் குன்றா யொருதிருப் பாவையாற் கொல்லிப் பனிவரையாய் - ஓவாது 66

செய்ய தமிழ்முழங்கத் தெய்வப் பொதியிலாய் வெய்ய புலிமுழங்க மேருவாய் - வையகஞ்சூழ் 67

கோர முடன்பொத நேமிப் பொலன்குன்றாய் வார்சுவரி யாலிமய மால்வரையாய் - வேரி 68

விடுங்குழையார் சென்னி மிலைச்சிய சென்னி கொடுங்குழையார் வீதி குறுக - நடுங்காமல் 69

குழாங்கள்[தொகு]

விண்ணாடு காத்த முககுந்தன் மீண்டநாள் மண்ணாடு கண்ட மடந்தையரும் - நண்ணார்மேல் 70

சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர வாள கிரியர மங்கையரும் - தோளிணையால் 71

கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த ஆழியிற் கொண்ட வரம்பையரும் - ஊழியின் 72

சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால் வாய்த்த வரையர மாதரும் - போய்த்தனியே 73

கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்ட வேதண்டலோக விமலையரும் - காதலால் 74

தந்த பணிபதி தன்மகளைச் சேவித்து வந்த கடவுண் மடந்தையரும் - பந்தாடும் 75

மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள் வாரும் வரையர மாதரும் - வீரவேள் 76

வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன் தூங்கெயிலிற் கைக்கொண்ட தோகையரும் - பாங்கின் 77

நிதியோடுங் கூட நிதியோ னளகைப் பதியோடுங் கொண்டார் பலரும் - முதலாய 78

சாய லரமகளிர் தந்தந் திருமரபில் கோயி லுரிமைக் சூழாநெருங்கி - வாயிலும் 79

மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும் சூளிகையு மெம்மருங்குந் தோரணமும் - சாளரமும் 80

தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும் சுற்றிய பாங்கருந் தோன்றாமே - பற்றி 81

மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க் கொருவர் - தயங்கிழையீர் 82

குழாங்களின் கூற்று

தற்கோடி யோரிரண்டு கொண்டு சதகோடி கற்கோடி செற்ற சிலைகாணீர் - முற்கோலி 83

வட்ட மகோததி வேவ வொருவாளி விட்ட திருக்கொற்ற விற்காணீர் - வெட்டிச் 84

சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய 85

மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும் பதியெறிந்த கொற்றவாள் பாரீர் - உதியர் 86

இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட கடப்ப முதுமுரசங் காணீர் - கொடுப்பத் 87

தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக் கரைகொண்ட போர்முரசங் காணீர் - சரதப் 88

பவித்ர விசயப் படைப்பரசு ராமன் கவித்த வபிடேகங் காணீர் - தவித்துலகில் 89

மூவெழுகா லெக்கோக் களையு முடித்தவனி மூவெழுகாற் கொண்ட முடிபாரீர் - தாவி 90

வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண் பரப்பு மொருவேங்கை பாரீர் - புரக்கநின் 91

றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட கூடம் பொருவுங் குடைபாரீர் - கூடற் 92

பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்பு வரும்பொருமாள் வந்தனன் வாரீர் - இருங்கடற் 93

றோன்றருக்க மண்டலமுந் தோற்க வுலகங்கள் மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர் - தோன்ற 94

அணைத்தரு காயிர மாயிர மாகப் பணைத்த பணிவலயம் பாரீர் - அணைக்கட் 95

சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன் பரித்த மணியாரம் பாரீர் - தரிந்தருள 96

வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட பாண்டியன் கட்டு வடம்பாரீர் - மீண்டும் 97

திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி இருந்த படிபாரீ ரென்பார் - பெருந்தேவர் 98

முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த எக்கொடியு முன்ன ரெடுத்துளவால் - அக்கொடியால் 99

தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர் எல்லாருங் காணு மினவென்பார் - புல்லிய 100

நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார் போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின் - போர்ப்பூவில் 101

மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்த தாதகி யொன்றூமே சார்பென்பார் - மீது 102

பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணி இரந்தன கொண்டன வென்று - புரந்து 103

தனிச்சே வகம்பூமி தன்னதே யாக இனிச்சே வடிவிடா ளெனபார் - பனிச்சாரல் 104

மண்டு மலையால் வருந்தா வகைவருந்திப் பண்டு கலக்கிய பாற்கடலுட் - கொண்டதோர் 105

செங்கோ கனகை திருமார்பி லன்றியே எங்கோ விருப்பா ளினியென்பார் - நங்காய் 106

திருப்பதி மாபதி யித்திரு மார்பில் இருப்பது காட்டுமி னென்பார் - சிரித்தெதிரே 107

அங்கட் கமலை யமலன் பெருந்தேவி கங்கட் புலனாயி னன்றென்பார் - நங்கைமீர் 108

கண்ணாகுந் தாமரையுங் கைதொழுதே மெம்மறையும் பண்ணாகுஞ் செந்தா மரைபணிந்தேம் - வண்ணத் 109

தொடித்தா மரையுந் தொழுதன நாபிக் கடித்தா மரைதொழுவேங் காட்டீர் - பிடித்தென்ன 110

அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றி மைத்தா மரைக்கொளிதோ மற்றென்பார் - உய்த்தால் 111

ஒருபொருந் தாதகி தோய்சுரும்பை யோட்டற் கிருபெருஞ் சாமரையு மென்பார் - அருவி 112

அருகெய்த வொட்டா வயிரா பதத்தின் இருகன்ன சாமரையு மென்பார் - தெருவத்துத் 113

தங்களின் மாறாடி யுள்ளந் தடுமாறித் திங்க ணுதலார் தெருமரலும் - அங்கவரில் 114

பேதை[தொகு]

பேதைக் குழாத்தொரு பேதை சிலபழங் காதற் குழாத்தோர்தங் கையடைளாள் - மீது 115

பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை மறந்தணிய செவ்வி மடமான் - புறந்தணியத் 116

தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தாற் சுற்றத்தார்க் கோகை விளைக்கு மொருகரும்பு - பாகைத் 117

தொடைபோய முல்லைத் தொடையலே போல இடைபோய தூய வெயிற்றாள் - உடையோன் 118

செறிந்து விடாத திருத்தோற்ற முற்றும் அறிந்து பிறந்த வறிவோ - நெறிந்தகுழல் 119

எம்பாவை யெங்கொல்லிப் பாவை யெனப்பாடும் அம்பாவை பாடும் படியறிவாள் - உம்பர் 120

வெருவக் கரையை மிகும்பொன்னி யன்றிப் பருவத்து வேறு படியாள் - உருவக் 121

குறைவனை யென்றெழுதுங் கோலத்து ஞாலத் திறைவனை யல்லா லெழுதாள் - இறைவன் 122

முழங்கேழ் கடல்கொடுத்த முத்தேழு மல்லால் கழங்கேழு மாடக் கருதாள் - வழங்கிய 123

முற்றி லெடுத்துக் கொழித்து முழுமுத்தால் சிற்றி லிழைக்கின்ற செவ்விக்கண் -சுற்றும் 124

பனிநீங்கத் தோன்றும் பகலவன் போல் வையம் துனிநீங்கத் தோன்றிய தோன்றல் - முனியும் 125

பொறைவிட் டெயில்விட்டுப் பொய்கை கவிக்குச் சிறைவிட்ட சோளேந்த்ர சிங்கம் - நறைவிட்ட 126

அந்தாமச் செங்கழுநீர் மார்ப னழகிய செந்தா மரைக்கட் டிருநெடுமால் - வந்தானை 127

ஓகைய ராகி யுலப்பில் பலகோடித் தோகைய ரோடத் தொடர்ந்தோடித் - தாகம் 128

தணியத் தணியத் தமரும் பிறரும் பணியப் பணியப் பணிந்தாள் - மணிமார்பில் 129

ஆரந்தான் கண்டா ளயிரா பதந்தொழுதாள் கோரந் தெரியவுங் கும்பிட்டாள் - வீரன் 130

படாகைப் பெரும்புலியும் பார்த்தொழிந்தா ளண்ட கடாகத் ததிர்முரசுங் கண்டாள் - அடாதனவும் 131

சொல்லி யறியா தொழிந்தாள் சுருப்புநாண் வில்லி யறியாது விட்டதே - நல்லார்சூழ் 132

பெதும்பை[தொகு]

மற்று மொருத்தி வலம்புரி யாயிரம் சுற்றுஞ் சலஞ்சலம்போற் றோன்றுவாள் - சுற்றுடன் 133

அன்ன நடக்க நடந்தா ளருங்கிள்ளை பின்ன ருடன்பேசப் பேசினாள் - இன்னிசையாழ் 134

பாட வதனுடனே பாடினாள் பைந்தோகை ஆட வதனுடனே யாடினாள் - கூடிய 135

நல்லிள மானோக்க நோக்கினா ணாணிரம்பி முல்லை முகிழ்க்க நகைமுகிழ்த்தாள் - கொல்லும் 136

மழகளிற்றின் கோடேழுச்சி யென்று மரவின் குழவி யெயிறெழுச்சி யென்றும் - பழகி 137

எறியு மழையெழுச்சி யென்று முலகம் அறியு முலையெழுச்சி யன்னம் - செறியும் 138

வரையேழி லுள்ள வயிரமும் வாங்கும் திரையேழின் முத்தின் றிரளும் - தரையேழிற் 139

பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக மின்னுஞ் சுடிகை வெயின்மணியும் - பின்னும் 140

பொழிலேழிற் போதும் புனையப் புனைவாட் கெழிலேறும் நாளையே யென்னக் - கழிய 141

உழப்போ மினியென் றுடலுள்ள போழ்தே எழப்போக வெண்ணு மிடையாள் - மழைத்துப் 142

புடைபோ யுளகம் பொதுக்குவதன் முன்னே கடைபோ யுலகளக்குங் கண்ணாள் - உடையதன் 143

சேரிச் சிறுசோறுஞ் சிற்றிலும்போய்ச் சில்லணிபோய்ப் பேரிற் பெருஞ்சோற்றுப் பேரணியாள் - ஒரையில் 144

தன்னாய நிற்பத் தனிநா யகன்கொடுத்த மின்னாயஞ் சேவிப்ப வீற்றிருப்பாள் - மென்மலர் 145

மேய சிறுமுல்லைப் பந்தர் விடவெடுக்கும் பாய பருமுத்தின் பந்தராள் - நாயக 146

உச்சியிற் கொண்டை முடிப்பி னுலகுடையோன் முச்சியிற் சூட்டு முடிக்குரியாள் - நிச்சமும் 147

நல்லுயிர்ப் பாவை துணைபெற நாயகன் கொல்லியிற் பாவை கொளவிருப்பாள் - மெல்லியற் 148

பாங்கிக்கு நங்கோமன் விந்தைப் பசுங்கிளியை வாங்கித் தரப்போய் வணங்கென்பான் - ஆங்கொருத்தி 149

மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின் மேயமான் வேண்டி விடப்பெறுவாள் - சேயவொளி 150

தென்பா லிலங்கைவாழ் தெய்வ மணிபணிப்பீர் என்பாவை பூண வினிதென்பாள் - அன்பால் 151

உயிர்த்துணைப் பாங்கி யொருநோன் புணர்த்த எயிர்புறத் தெல்லாருஞ் சூழ - அயிற்படை 152

வீரனை யெய்த வியன்காவிற் சென்றெய்தி மாரனை நோக்கி வழிபட - மாரன் 153

படியில் கடவுட் பணைமுழங்க வென்றிக் கொடியின் மகரங் குமுற - நெடிய 154

அலகி லசோக நிழற்ற வடைய உலகில் மதுகரமூதக் - கலகித் 155

தலங்க லடவிக் குயிற்குல மார்ப்ப விலங்கன் மலயக்கால் வீசக் - கலந்தெழும் 156

ஆவி யகிலொடு நீரோ டரமகளிர் தூவிய தண்ணறுஞ் சுண்ணமும் - காவில் 157

விடவிட வந்துயிர் மீதடுத்துப் போன வடிவும் பழம்படியே வாய்ப்பக் - கொடியிடை 158

எண்ணிய வெண்ண முடிப்ப வவளெய்தும் புண்ணியம் போலப் பொழில்புகுந்தான் - அண்ணல் 159

சரம்போலுங் கண்ணி தனக்கனங்கன் றந்த வரம்போல் வளமறுகில் வந்தான் - வரும்போதில் 160

ஏன்று மதன னியமியம்ப வேயனகன் மூன்று முரசு முழங்கின - தோன்றாத 161

வாரிக் களிறு முழங்கவே மானதன் மூரிக் களிறு முழங்கியது - வேரித்தார் 162

கற்கு மசோக நிழற்றவே பார்கவித்து நிற்குங் கவிகை நிழற்றியது - முற்கொண்டு 163

மற்றை யலகின் மதுகர மூதவே ஒற்றை வலம்புரி யூதியது - முற்றாத 164

சொற்குதலைக் கோகுலங்க ளார்க்கவே சோளேசன் அற்கமணிக் காகளங்க ளார்த்தன - தெற்கெழுந்த 165

மல்லன் மலயக்கால் வீசவே மானதன் மெல்லென் கவரிக்கால் வீசியது - மெல்லியலும் 166

காமன் பெருநோன்பு கைவந்த தென்றெதிரே கோமைந்தன் வேழங் குறிகினாள் - கோமனும் 167

மல்கு மூவகைக் கலுமி வரவரப் பில்கு மதர்வைப் பெரும்பரப் - பல்குலும் 168

கொங்கைப் புதுவரவுந் தோளுங் குறைநிரம்ப மங்கைப் பருவத்தை வாங்கினாள் - மங்கை 169

திருக்கொள்ளு மார்பற்குக் காமவேள் செவ்வேள் வெருக்கொள்ளுஞ் செவ்வி விளைத்தாள் - பெருக்க 170

ஒருவ ரொருவர்க் குருகி யுருகி இருவரு மீடழிய நோக்கி - வருகாமன் 171

செஞ்சாயல் வல்லியையுஞ் செந்தா மரைத்தடங்கண் மஞ்சாய கோல மணாளனையும் - அஞ்சாதே 172

கொய்யும் பகழி கரும்பிற் சுரும்பிற்கோத் தெய்யுந் தரமே யெழப்போனான் - தையல் 173

மங்கை[தொகு]

ஒருத்தி தரள மிருநிரைகொண் டொப்பித் திருத்தி யனைய வெயிற்றாள் - கருத்தின் 174

நிலையிற் சிறந்த நிகரிலா மேரு மலையிற் பிறந்த வயிரம் - அலையிற 175

பழக்கச் சலஞ்சலம் பாற்கடலே போல முழக்கக் கருவுயிர்த்த முத்தம் - தொழத்தகும் 176

முன்னை யுலக முழுதுந் தருமுரசு மன்ன னபிடேக மாணிக்கம் - முன்னவன் 177

பாற்கட னீங்குநா ணீங்கப் பழம்படியே நாற்கட னாயகனை நண்ணுவாள் - மேற்கவின 178

பண்டு கடல்கடைந்தும் பாரெடுத்தும் வில்லிறுத்தும் கொண்ட துணைவியருங் கூசுவாள் - புண்டரிகத் 179

தாடும் பொழுதினு மன்னப் பெடையயிர்ப்பப் பாடு மழலைப் பரிபுரத்தாள்- நீடிய 180

தூசுகள் வெள்ளென்று தூயன சேயன கோசிக மாக்குங் குறங்கினாள்- கூசிப் 181

பணியு மரசுப் பணிச்சுடிகை யேகோத் தணியு மரைப்பட் டிகையாள் - துணியுங்கால் 182

அற்றுண் டிலதென்று மம்மருங்கு லின்றெமக்குப் பற்றுண் டெனுமுதர பந்தனந்தாள் - கொற்றவன் 183

சங்க நிதிமுத்தத் தாமத்தாள் பத்மநிதி துங்க நவரத்னத் தோள்வளையாள் - புங்கம் 184

தொடுக்கு மலரோன் சுறவுக் குறவு கொடுக்கு மகரக் குழையாள் - அடுத்துப் 185

பணிதந் தலகில் பராவெடுத்துத் சிந்தா மணிதந்த சூளா மணியாள் - அணியே 186

பரவி விறலியரும் பாணருந் தற்சூழந் திரவி புகார்பாடு மெல்லை - வரவரக் 187

கொங்கைக்குந் தோளிணைக்கு மாற்றாக் கொடிமருங்குல் நங்கைக்கு வந்தொருத்தி நாயகியே - கங்கைத் 188

துறைவன் பொறையன் றமிழ்நாடன் சோணாட் டிறைவன் றிருப்பவனி யென்றாள் - பிறைநுதலும் 189

வேனிற் கணிய குயில்போன்றும் வீழ்தாரை வானிற் கணிய மயில்போன்றும் - தானே 190

வரவே நினையு மனக்களியா லிற்றை இரவே நமக்கிடையூ றென்றாள் - இரவில் 191

செயிர்க்கரங்கள் வேண்டா டிருக்குலத்து வெய்யோன் வெயிற்கரங்க ளூடாட வேண்டும் - உயிர்க்கொலைசூழ் 192

தென்மலயத் தென்றலை யோட்டிப் புலியிருந்த பொன்மலைய வாடாய் புகுதென்னும் - முன்மலைந்த 193

கார்க்கடல் வாயடங்க நாயகன் கண்வளர்ந்த பாற்கடல் வாராய் பரந்தென்னும் - மேற்பரந்து 194

கார்பாடும் புள்வாய்க் கடுப்பெய் தமுதிறைவன் பேர்பாடும் புள்வாயிற் பெய்கென்னும் - ஈர்குரல் 195

அன்றிற் கொழிய மகன்றிற்கே யாக்குமிம் முன்றிற் பனையு மெனமொழியும் - இன்றிரவை 196

ஊழிக் குயில்காய்ந் தொருபுலரி கூவிய கோழிக்கே சோலை கொடீரென்னும் - வாழிய 197

பள்ளி யெழுச்சி பவனி யெழுச்சிதரும் வெள்ளி யெழுச்சி யெனவிளம்பும் - நள்ளிருட் 198

கங்குற் கடற்கெல்லை யிவ்வாறு கண்டுவந்த மங்கைப் பருவத்து வாணுதலும் - பொங்கொலிநீர் 199

வையகங் காவலற்குப் பெய்யு மலர்மழைக்குக் கொய்பொழில் சென்று குறுகினாள் - செய்ய 200

கொடுங்குழை மின்னக் குயில்கொழுதக் கோத விடுங்குழை தேமாவின் மின்ன - நெடுங்குழை 201

வல்லிக் கொடிய முறுவலிப்ப வந்தெதிர் முல்லைக் கொடியு முறுவலிப்ப - மெல்லியற் 202

பாந்தளுந் தோற்கும் பகட்டல்குல் கைம்மலரக் காந்தளு நின்றெதிர் கைம்மலரப் - போந்தார் 203

பரவு மரப்பாவை கொள்ளப் பயந்த குரவு மரப்பாவை கொள்ளப் -புரிகுழற் 204

சோலையின் மான்மதஞ் சூழ்வர வேழிலைப் பாலையின் மான்மதம் பாரிப்பச் - சோலையின் 205

வாங்கும் புதுமது வாணுதல் கொப்புளிப்பக் கோங்கு மதுவெதிர் கொப்புளிப்ப -ஆங்குத் 206

திருவஞ்சு கோலத்தாள் செவ்வியா லெல்லாம் பருவஞ்செய் சோலை பயப்பப் - பெருவஞ்சி 207

கொய்தன கொய்தன யாவும் பலகூறு செய்தனர் செய்தனர் பின்செல்லக் - கொய்யாத 208

பொன்மல ராயம் பொழியப் பொழிற்கொண்ட மென்மலர் கொண்டு வௌிப்பட்டாள் - மன்னனும் 209

எப்போதிற் போது மொருபோதி லேந்திழை கைப்போதிற் பெய்தன கண்டருளா - அப்போதே 210

செங்கை தடவந்துஞ் சீறடி தீண்டியும் கொங்கை கணங்கெறிந்துங் கொப்பளித்தும் - மங்கை 211

பரிசி லுருவம் பயந்தன வென்று குரிசி லெதிர்கவர்ந்து கொண்டான் - தெரிவரிய 212

தூசுந் துகிலுந் தொடியுங் கடிதடஞ்சூழ் காசும் பலகாற் கவர்ந்ததற்குக் -கூசி 213

இலகுஞ் சுடர்முடியு மியானையு மீரேழ் உலகுங் கொடுப்பானே யொப்பப் - பலகாற் 214

கொடாத திருநோக்க முற்றுங் கொடுத்து விடாது களிறகல விட்டான் - அடாதான்பால் 215

மடந்தை[தொகு]

ஈரடியான் மூவுலகுங் கொண்டானை யெப்பிறப்பும் ஓரடியு நீங்காதா ளோராணங்கு - சீருடைய 216

மானுங் கலையும் வளர வுடன்வளர்ந்து தானு மதிய மெனத்தகுவாள் - பானின்று 217

அனலுங் குழைமகர மஞ்சப் புடைபோய்க் கனலுங் கயலனைய கண்ணாள் - மினலால் 218

இருளுடைய மேனின் றெறிசுடிகைப் பாப்புச் சுருளுடைய வீங்கிய தோளாள் - அருளொடும் 219

தம்புறஞ் சூழ்போதத் தாயரே வீக்கிய வம்பற வீங்கும் வனமுலையாள் - பைம்பொனின் 220

பண்ணிறக் காஞ்சியுங் கட்டிய பட்டிகையும் கண்ணிறப் போய கடி தடத்தாள் - தண்ணுறந்தார் 221

மின்மணி மோலியான் வீதி வரவேற்றுத் தன்மணி மாளிகைத் தாழ்வரையிற் -பொன்னுருவில் 222

தைத்துத் துகிரு மரகதமுந் தாறாக வைத்துக் கமுக வளஞ்செய்து - முத்தின் 223

பொலன்றோ ரணநிரைத்துப் பொன்னடுத்த மேக தலந்தோய் விசால தலத்து - மலர்ந்தபூங் 224

கற்ப தருநிரைக் கற்ப லதைபடர்ந்து பொற்ப மிசையடுத்த பூம்பந்தர் - நிற்பப் 225

புகரற்ற ரத்ன விதானமேற் போக்கி நகைவச்ர மாலையே நாற்றி - பகல்விளங்கா 226

மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே எல்விளக்கு மாசு வெதிரெடுத்து - நொல்விய 227

பூநறுஞ் கண்ணப் பொடியடங்க வீசிய நான நறுநீர்த் தளிநளிய - மேனிலையிற் 228

கங்கையி னீர்முகந்தோ காவிரியி னீர்கொணர்ந்தோ கொங்கை யினைநீர்க் குடநிரைத்து - எங்கும் 229

அசும்பு பொலன்கொடியா லவ்வெல்லை யுள்ள விசும்பு தவிர வலிக்கிப் - பசும்பொன்யாழ் 230

முட்ட முயன்ற விறலியர் முன்னிருப்ப இட்ட தவிசின் மிசையிருந்து -பட்டினஞ்சூழ் 231

பொன்னிக்குங் கோதா விரிக்கும் பொருநைக்கும் கன்னிக்குங் கங்கைக்குங் காவலனைச் - சென்னியை 232

தானைப் பெருமானை நல்ல சகோடங்கொண் டியானைப் பெருமானை யேந்தெடுப்பாள் - மேனாள் 233

யானையின் பெருமை[தொகு]

உகந்த பிடியுடனே யோரெண் பிடியும் திகந்த களிறெட்டுஞ் சென்று - முகந்து 234

துறக்குங் கடன்முத லேழுஞ் சொரியச் சிறக்கு மபிடேகஞ் செய்து - விறக்கும் 235

உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும் அயிரா பதமத யானை - உயரும் 236

கடநாக மெட்டுங் கடநாக மெட்டும் படநாக மெட்டும் பரந்தீர்த் - துடனாகத் 237

தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும் கன்னாவ தங்கிசமாக் கைக்கொண்டு - பின்னவர் 238

வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டுக் கோளகையா கக்கொண்ட கோக்களிறு - மாளிகை 239

தாங்குண்ட வாயில்க டோறுந் தனிதூங்கித் தூக்குண்ட கண்டை தொடருடனே - வீக்குண்டங் 240

காராத நாளைக்குப் போதக் கிடந்தார்ப்பத் தாராகக் கொண்ட மதாசலநீர் - வாரா 241

நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும் குதிக்கு மதர்சுவடு கோத்து - மதிக்கும் 242

பிடிவிடாக் காதற் பெருங்களிறுங் கன்றும் அடிவிடா தவ்வா றடையப் - படிவிடா 243

தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்னக் கூட்டும் பெருங்கடவுட் கொல்யானை - நாட்டில் 244

பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்றப் பணிகொண்ட பொவம் பரக்க - பணிகொண்ட 245

கார்முற்றும் பேரிடி வீழ்ப்பக் கௌரியர் ஊர்முற்றுஞ் செற்ற தொருகூற்றம் - சேரர் 246

கனக்கு மனீகக் களந்தொறுங் கைக்கொண் டினக்கு மரசுவா வெல்லாம் - தனக்குத் 247

துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்கப் பணிக்குங் கடவுட் பசுடு - தணிப்பரிய 248

பூகங்கை தாடோயச் செங்கை புயல்வானின் மாசுங்கை தோயப்போய் மாமேரு - நாகங்கைக் 249

கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்பக் கண்டு களிக்குங் களியானை - வண்டலம்ப 250

நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெக் குன்று மொளித்துக் குளிப்பமுன் - சென்றழுத்திப் 251

பண்டு வௌியின் மகதத்தைப் பாவடியால் செண்டு வௌிகண்ட செங்கைமாக் - கண்ட 252

மதிலே யகழாக வாங்கி யகழே மதிலா வெழாநிற்க வைத்துப் - புதுமலர்செய் 253

வாவியைச் செய்குன்ற மாக்கியச் செய்குன்றை வாவிய தாக வெனவகுத்துத் - தாவுமான் 254

வெள்ளிடை கோநக ராக்கியச் கோநகர் வெள்ளிடை யாக வுடன்விதித்துத் - தெள்ளிப் 255

புரப்பா ரிரப்பாராய்ப் போத விரப்பார்ப் புரப்பாரே யாக்கும் புகர்மாத் - திருக்குலத்துக் 256

கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக் கொண்ட தொருசுவடு மேல்கொண்டு - வண்டு 257

கடியுங் களிறுங் களிறாமே காதற் பிடியும் பிடியாமே பின்னர்க் - கடிமதில் 258

மாற்று மருமணம் வங்காள பாகத்து வேற்று மதமா ம்ருகமத்தைப் - போற்றார் 259

வயிரா கரமெறிந்த மானதன் கண்டன் அயிரா பதமதமே யாக்கிச் - செயிர்தீர்ந்த 260

காதற் பிடிதேற்றற் தேறாக் கடாக்களிறென் றேதப் பெயரு மொருபொருப்புப் - பாதையிற் 261

கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற் கொச்சியிற் கோதா விரிக்குளத்தில் - விச்சியில் 262

வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில் நெல்லூரிற் புத்தூரி னெட்டூரிற் - செல்லூரிற் 263

கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில் வாட்டாற்றிற் காம்பிலியின் மண்ணையில் - வேட்டுத் 264

தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும் பரணி புனைந்த பகடு - சரணென்று 265

வாடா மதுரயாழ் வாங்கி மடவரல் பாடா விருந்த பருவத்து - நீடாப் 266

பரிசி லுடனே பணிப்பதுபோல் யானை குரிசி லுடன்வந்து கூடத் - தெருவில் 267

வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன் பொரவந்தான் கைவாங்கிப் போனான் - விரல்கவரும் 268

வீணைச் சுகப்பட வேழ மிடற்றுக்கும் ஆணைப் பெருமா ளகப்பட - வாணுதல் 269

ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலை தந்து தொழவெழுந்து சாத்தினாள் - மைந்தனும் 270

பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும் கண்ணுக்குந் தோலானே கைக்கொண்டான் - வண்ணமும் 271

வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையுந் தோள்வளையும் கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போற் - பண்டை 272

முடியுஞ்சிங் காதனமு முத்தக் குடையும் படியு மரசும் பணித்தான் - பிடியும் 273

சிவிகையு நிற்பவச் சேயிழை வீதி கவிகையுந் தானுங் கடந்தான் - குவிமுலை 274

அரிவை[தொகு]

ஏனை யரிவை யொருத்தி யிகன்மாரன் சேனை திரண்டனைய செவ்வியாள் - வானில் 275

விடுசுடர்க் செக்கர் வியாழமுந் தோற்கும் படுசுடர்க் செம்பொற் படியான் - வடிவு 276

நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரே படிதோற்கும் முத்தின் படியாள் - முடிவில் 277

குலபதும ராக பதிகுதி கொள்ளும் பலபதும ராகப் படியாள் - அலைகடலில் 278

முற்றா மரையாண் முகத்தா மரையாளப் பொற்றா மரையாளப் போதுவாள் - அற்றைநாள் 279

நீர் விளையாட்டு

தண்ணென் கழுநீர்த் தடம்பொய்கை நாமெலாம் அண்ணல் வருமளவும் மாடுதுமென் - றெண்ணிப் 280

புணைக்கும் மொருதன் புறங்காவ லாயத் துணைக்குந் தடஞ்சுருங்கத் தோயப் - பணைத்துப் 281

புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும் நடைக்கு முதற்பகை நாமென் - றுடைப்புண்டு 282

பின்னர்ப் பெருஞ்சக்ர வாகப் பெருங்குலமும் அன்னக் குழை மலம்வரப் -பின்னரும் 283

காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகுத் தேற்குந் தரமேநா மென்றுபோய்த் - தோற்கின்ற 284

வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும் தாவி விழுந்து தடுமாறத் - தீவிய 285

பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும் அம்மென் கழுத்துக்கு மாற்றாது - மம்மர்ப்பட் 286

டெங்குத் தரியா திரியல் போ யாமையும் சங்குந் தடத்தை விடத்தவழ - நங்கைதன் 287

செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கி எவ்வாயுங் காணா தெதிரேநின் - றவ்வாய 288

கொள்ளைக் குமுத மலருங் குழையிள வள்ளைக் கொடியு முடன்மயங்க - வெள்ளம்போல் 289

பெய்யு மதயானைக் கோடும் பெருநெருங் கையும் புடைப்பக் கலுழ்ந்தனபோல் - தொய்யில்சூழ் 290

தாம முலையாலுந் தோளாலுந் தாக்குண்டு காமர் தடமுங் கரைகடப்பக் - கோமகன் 291

உள்ளம் பெருகப் பெருக வுலாக்கொண்டு கள்ளம் பெருகுங் கருநெடுங்கண் -வெள்ளம் 292

படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன் வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப - நெடிது 293

திளைக்குந் திருமகளை வாவியிற் சேவித் திளைக்குங் கொடியிடையா ரேத்தித் - திளைத்துமிழ்த் 294

தம்மைக் கமல மலர்க்களித்துத் தாமவற்றின் செம்மை கவர்ந்த திருக்கண்ணும் - மெய்ம்மையே 295

மெய்போய வைய மருங்குலு மேகலைபோய்க் கைபோ யகன்ற கடிதடமும் - பைபோய் 296

நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள் எறிக்கும் பெரும்பே ரெழிலும் - நெறிப்படக் 297

கொண்டுபோந் தேறிய கோமகள் பேரழகு பண்டுபோ னோக்கப் பயப்படுவார் - கண்டு 298

கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற் பொலன்கலன் கொண்டு பொதிந்தார் - இலங்கிழை 299

யானைப் பெருமா ளயிரா பதத்திருந்த தானைப் பெருமாளைச் சந்தித்தாள் - மேனி 300

பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதாத் திருவிற்கே குற்றேவல் செய்வான் - பொருவிற்கை 301

வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதே வேனிற்கோ னேபரவ மேற்செல்வான் - வானத் 302

தெடுக்குங் கொடிமகர ராசித் தொடையிற் றொடுக்கு மகரம்போற் றோற்ற - வடுத்தெய்யும் 303

மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண் தென்றறேர் தானனங்கன் செற்றதென - மென்றோளி 304

பாங்கி யெடுத்த படாகைப் பசும்பொற்பூ வாங்கி யெதிர்தூய் உணங்கினாள் - தாங்கி 305

ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலை கொடுப்ப விறையவனுங் கொண்டான் - கொடுத்தவற்றுட் 306

பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன்குவளை நன்மாலை சாத்தினா னாயகனும் - தன்மார்பில் 307

ஆர்மாலை கோமா னருளினா னம்மாலை கார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் - பார்மாலே 308

அரிவையின் முறையீடு[தொகு]

மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள் கோதண்டத் தீஞ்சாறு கொள்ளாதோ - மாதண்ட 309

முற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னம் கொற்றத் தனிவிற் குனியாதோ - நற்றடத்துள் 310

ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர வேறு முறிய வெறியாதோ- மாறாது 311

காந்து முழுமதியை யோரோர் கலையாக ஏந்து சுடர்வடியா ளீராதோ - பாந்தண்மேல் 312

வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய் உய்ய வொருகுரல்வந் தூதாதோ - வையம் 313

தணியுந் தகைத்தோ தமியன்மா லென்று பணியு மடக்கொடியைப் பாரா - வணிய 314

உருத்தந்த தோற்றங்க ளொன்றினுந் தப்பா வருத்தந் திருமனத்து வைத்தே - திருந்தடந் 315

தோளுந் திருமார்பு நீங்காத் துணைவியரில் நாளும் பிரியாமை நல்கினான் - மீள 316

ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம் திருமகன் போலத் திளைப்பான் - இருநிலம் 317

தாளா வளந்து தரும்பெரியோன் றாதகித் தோளா லளந்த துணைமுலையா - ணாளும் 318

திரையர மாதருஞ் சேவிப்பாண் மேரு வரையர மாதரின் வாய்ப்பாள் -கரையில் 319

விருப்பவனி கூர வருகின்ற மீளி திருப்பவனி முன்விரைந்து செல்வா - ளுருப்ப 320

அணந்த பணிவலைய வண்ணன் முதனாண் மணந்த மணச்செவ்வி வாய்ப்பக் - கொணர்ந்தணிந்த 321

சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும் கோட மணிமகர குண்டலமும் - ஆடிய 322

சச்சையு மாலையு மாரமுந் தாமமுங் கச்சையு மேகலையுங் காஞ்சியும் - பச்சென்ற 323

பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும் கட்டுங் கனவயிரக் காறையும் - இட்ட 324

திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா உலகமுந் தோற்கு முருவும் - கலகமும் 325

மாரனுந் தானும் வருவாளை மன்னரில் வீரனுங் காணா வெருவராப் - பாரனைத்தும் 326

தேறுந் திருவைத் திருவவ தாரங்கள் தோறும் பிரியாத் தொடர்பாலும் - ஏறுங்கண் 327

வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமைத் தோளாலு மீளத் துவக்குண்டு - நீளிய 328

மைவிடா நோக்கி திருக்கைம் மலரணை கைவிடா வார்வங் கடைப்பிடித்துத் - தெய்வப் 329

புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம் அவனி முழுது மளித்தான்போற் - கவினிய 330

அற்புத மாலை யணியப் பணிசெய்யுங் கற்பக மொன்று கடைக்கணித்தான் - பொற்படிக்குப் 331

பாதங்க ளாதி முடியளவும் பாரிப்ப மாதங்க ராசிதிரு வாய்மலர்ந்தான் - ஓதி 332

முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின் படிக்குச சலாபம் பணித்தான் - வடிப்பலகை 333

அச்சிரா பரண மனைத்திற்குந் தன்வட வச்சிரா கரமே வழங்கினான் - பச்சை 334

மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப் பணிக்கு த்ரிகூடம் பணித்தான் - தணிப்பில் 335

பெரும்பே ருவகைய ளாகிப் பெருமாள் விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் - பெரும்போர் 336

வெருவரும் பார்வேந்தர் வேந்தனைப் போற்றும் பொருநரும் பாணரும் புக்கார் - தெரிவைக்குப் 337

பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும் ஆடிக் குடக்கூத்து மாடினார் - பாடியில் 338

ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற் கோநிரையு மீளக் குழாங்கொண்டு - மீளிரையின் 339

மீதும் புடையு மிடைய விழவெழவேய் ஊதுந் திருப்பவள முட்கொண்டு - சீதக் 340

கடந்தூர வந்தக ககன தளமும் இடந்தூர வந்து மிணையக் - குடங்கள் 341

எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள் விழவிழ மேன்மேல் விழுந்தும் - பழகிய 342

தோளிரண்டுந் தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும் தோளிரண்டு மென்றென்று சொல்லியும் - கோளொளிய 343

நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற் பொன்வேய்ங் குழலொன்று போக்கினான் - முன்னே 344

தசும்பிற்கு மாறாகத் தங்கோமா னாவற் பசும்பொற் றசும்பு பணித்தாள் - ஒசிந்துபோய் 345

நாடகப் பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்த ஆடகப் பாம்பொன் றருளினாள் -பாடுநர்மேல் 346

வற்றாத மானத வாவியல் வாடாத பொற்றா மரையே புனைகென்றாள் - கொற்றவன் 347

கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு மந்தார மாலை வருகென்றாள் - நந்தாத 348

பேறுந் திருவருளு மெய்தி யவர்பெயர ஏறுந் தவிசுதர வேறினாள் - வேறொருத்தி 349

பேரிளம் பெண்[தொகு]

கச்சை முனியுங் கனதனமுங் குங்குமச் சச்சை கமழுந் தடந்தோளு -நிச்சமுரு 350

ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும் போந்த திருமகள் போலிருப்பாள் - வேந்தர் 351

பணியுந் தடமகுடம் பன்னூறு கோடி அணியுந் திருத்தா ளபயன் - பணிவலய 352

வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகரத் தாக்கிலே சாய்ந்த தடமுலையாள்-பூக்கமழும் 353

ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம் பேரேற்ற தெய்வப் பெருமானைக் - காரேற் 354

றடல்போ லடுதிகிரி யண்ணலைத் தன்பாற் கடல்போல லகப்படுத்துங் கண்ணாள் - மடல்விரி 355

தெங்கினு மேற்குந் தசும்பினுந் தேர்ந்தளி பொங்கு நுரையினும் போய்ப்புகா - தங்கு 356

நறவு குவளை நறுமலர்தோய்த் துண்ணும் இறவு கடைக்கணித் தெய்தச் - சுறவுக் 357

கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கை நெடியோனை நேமிப் பிரானைப்-படியோனைக் 358

கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக் கொண்டனை யென்று குறுகுவாள் - கண்டு 359

மலர்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத் திலகங் குறுவியராற் றேம்பப் - பலகுதலை 360

மாற்றந் தடுமாற்ற மெய்த மனத்துள்ள தேற்றம்பித் தேற்றஞ் சிதைவிப்ப- ஏற்று 361

துகிலசைந்து நாணுந் தொலைய வளக முகிலசைந்து நோவிடைக்கு முற்ற - அகிலமும் 362

சேனையு மன்னருந் தெய்வப் பெருமாளும் யானையு நிற்க வெதிர்நின்று - கோனே 363

சதயுக மேனுந் தரணிபர் மக்கள் பதயுக மல்லது பாரார் - உதயாதி 364

காந்தநின் கைத்தலத்தைப் பார்மடந்தை கற்பாந்தத் தேந்து மரவர சென்றிகவாள் -பூந்தொடி 365

நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய வெற்போ ரிரண்டென்று வீற்றிருக்கும் - பொற்பிற் 366

கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென் பொலந்தா மரையென்று போகாள் - நிலந்தாரா 367

அந்தா மரையா ளருட்கண்ணைத் தண்ணிரண்டு செந்தா மரையென்று செம்மாக்கும் - முந்துற்ற 368

மல்லா புரேச சிலகால மற்றிவை எல்லாந் தனித்துடையோம் யாமன்றே - அல்லாது 369

மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறை ஏகோ தகம்பொழிந்தா லென்செய்யும் - மாகத்துக் 370

காலை வெயில்கொண்டுந் தாமரைக்குக் கற்பாந்த வேலை வெயிலெறிக்க வேண்டுமோ - மாலைச் 371

சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால் நிலாவட்ட நின்றெறிக்க நேரோ - குலாவலைஞர் 372

சேற்றாக்கான் மீளுந் திருநாடா நீதருமால் ஆற்றாக்கான் மேன்மே லளிப்பரே - கோற்றொடியார் 373

நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால் தாங்கரிய வேட்கை தவிப்பாரே - யாங்களே 374

தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும் உண்மை யறியா வுணர்வினேம் - வெண்மையினிற் 375

செல்லாத கங்குலேந் தீராத வாதரவேம் பொல்லாத வெம்பசலைப் போர்வையேம் - நில்லாத 376

வாமே கலையே முலைவீக்கா வம்பினேம் யாமேயோ விப்போ தௌிவந்தேம் - யாமுடைய 377

நன்மை யொருகாலத் துள்ள தொருகாலாத் தின்மை யுணராயோ வெங்கோவே - மன்னவநீ 378

முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே - மின்போல் 379

இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போ தமைக்குந் துகிலினை யன்றே - அமைத்ததோர் 380

பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது கார்க்கடற் சென்று கவர்சங்கே-சீர்க்கின்ற 381

தண்ணந் துழாய்பண்டு சாத்துந் திருத்தாமம் கண்ணியின் றாரின் கவட்டிலையே - தண்ணென்ற 382

பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர் பள்ளி யறையின்று பாசறையே - வெள்ளிய 383

முத்தக் குடைகவித்து முன்கவித்த மாணிக்கக் கொத்துக் குடையொக்கக் கூடுமே - இததிறத்தால் 384

எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும் அண்ணற் கிகழ வடுக்குமே - விண்ணப்பம் 385

கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற் றண்டரளக் கொற்றத் தனிக்குடையோன் -பண்டறியா 386

ஆரமு மாலையும் நாணு மருங்கலா பாரமு மேகலையும் பல்வளையு - மூவரும் 387

பிடியுஞ் சிவிகையுந் தேரும் பிறவும் படியுங் கடாரம் பலவும் - நெடியோன் 388

கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள் அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் - எடுத்துரைத்த 389

பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக மாதர் மனங்கொள்ளா மால்கொள்ளச் -சோதி 390

இலகுடையான் கொற்றக் குடைநிழற்று மீரேழ் உலகுடையான் போந்த னுலா. 391

வெண்பா[தொகு]

அன்று தொழுத வரியை துளவணிவ தென்று துயில்பெறுவ தெக்காலம் - தென்றிசையில் நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த வீரதரா வீரோ தயா.


'இராசராச சோழனுலா முற்றிற்று