உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/அடிமை வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

கூட்டுக் குள்ளே அடைக்கப் பட்ட
பெண்பு றாவுமே
குஞ்சு நான்கு பிறந்த தென்று
மகிழ்ச்சி கொண்டதே!
வாட்டம் நீங்கி ‘ஆஹா! எனது
குடும்பம் பெருகுதே!
மகிழ்ச்சி ! மகிழ்ச்சி!’ என்றே எண்ணிப்
பெருமை சொன்னதே.

பறந்து சென்ற காகம் ஒன்று
இதனைக் கேட்டதே.
பைய வந்து புறாவி டத்தில்
கூற லானதே:
‘பிறந்தி ருக்கும் குஞ்சு தன்னை
எண்ணி எண்ணியே
பெருமை கொள்வ தேன்உ னக்கும்
புத்தி இல்லையா?


கூட்டில் அடிமை போல இங்கே
வாழு கின்றநீ
குடும்பம் பெருகு தென்று கூறி
மகிழ்ச்சி கொள்வதேன்?
வாட்டம் நீங்க வழியில் லாத
இந்தக் கூட்டிலே
வளரும் குடும்பம் அடிமை வாழ்வை
வளர்க்கும் குடும்பமே!’