உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/ஏமாந்த ஆடுகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆட்டு மந்தை ஒன்றிடம்
அருமை நண்பன் போலவே
காட்டு ஓநாய் வந்தது;
கனிந்த வார்த்தை உரைத்தது.

‘அன்பு மிக்க தோழரே,
அடியேன் கூறப் போகிறேன்,
நண்பராக நாமெலாம்
நன்கு வாழும் வழிதனை.

என்றும் உங்கள் நண்பனாய்
இருக்க விரும்பி வந்திடும்
என்னை உங்கள் காவல்நாய்
எதிர்த்துத் துரத்தி விரட்டுதே!

காவல் நாயை விலக்கினால்,
கஷ்டம் யாவும் விலகிடும்.
ஆவ லோடு நாமெலாம்
அருமை நண்பர் ஆகலாம்’.

உண்மை என்றே ஆடுகள்
ஓநாய் சொல்லை நம்பின.
கண்ணைப் போலக் காத்திடும்
காவல் நாயை விலக்கின.


காவல் இல்லா மந்தையில்
களித்து ஓநாய் புகுந்ததே;
ஆவ லோடு ஒவ்வொரு
ஆடாய் தின்று தீர்த்ததே!