உச்சிமாகாளி கதை

விக்கிமூலம் இலிருந்து

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம். நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏராளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன் விஷ்ணுவை அணுகி தாள் பணிந்து காப்பாற்றும்படிக் கோரினர். அப்போது விஷ்ணு சொன்னார். பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது


இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். அசுரர்கள் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள். மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலை கடையவும் ஆரம்பித்தார்கள். அப்போது கடலிலிருந்து பலவகையான பொருட்கள் வெளிவந்தன. காமதேனு, வச்சிராயுதம், கற்பக விருட்சம் என்று பல தூய பொருட்கள். கடைசியில் ஆலகால விஷம் வந்தது. அவ்விஷம் மூவுலகையும் எரிக்கும் தன்மை கொண்டது. ஆகவே விஷத்தைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள். அது நிலத்தில் விழக்கூடாதுஎ ந்று தேவர்கள் பயந்தனர். அப்போது சிவன் உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் கையிலே எடுத்து வாயிலே போட்டு விழுங்கிவிட்டார். அதைக் கண்ட பார்வதி சிவனைத் தடுத்தாள். சிவன் பார்வதியின் செய்கையைப் பொருள்படுத்தவில்லை. பார்வதியோ கோபப்பட்டு சிவனின் உச்சியில் அடித்தாள். உடனே சிவன் தலையிலிருந்து உச்சினிமாகாளி பிறந்தாள்.


சிவன் தலையில் பிறந்த காளியை உச்சினி மாகாளி என அழைத்தனர். பார்வதி அவளைத் தன் மகளாகப் பாவித்தாள். அவளுக்கு வாந்திபேதி, பெரியம்மை, சின்னம்மை, வலிப்பு ஆகிய வியாதிகளை உண்டாக்கும் சக்தியைக் கொடுத்தாள். அவளுக்கு நிறைய வரமும் கொடுத்தாள். உன்னை வணங்குபவர்களுக்கு இந்தமாதிரி வெப்ப நோய்கள் வராது. உன்னை நினைத்தால் நோய் குணமாகும் என வரங் கொடுத்தாள். உச்சினிக்குத் துணையாக பச்சைவேதாளம், கறுப்பன், மோகினி ஆகிய பிசாசுக்கூட்டங்களையும் படைத்தாள்.


உச்சினிமாகாளி பார்வதியிடம் வேறு சில வரங்களும் வாங்கினாள். பின் கயிலையை விட்டுப் புறப்பட்டு விக்கிரமாதித்தனின் நாட்டுக்கு வந்தாள். அங்குள்ள ஒரு பெரிய மலையின் உச்சியில் தங்கினாள். இப்படி இருக்கும்போது ஒருநாள் அந்த மலைக்கு விக்கிரமாதித்தனும் பட்டியும் வேட்டையாட வந்தார்கள். அவர்கள் அங்கு விலங்குகளை வேட்டையாடினர். விக்கிரமாதித்தியன் களைத்துப் போனான். ஒரு மரத்தடியில் அமர்ந்தான். மந்திரி பட்டியிடம் தம்பி தாகமாயிருக்கிறது தண்ணீர் வேண்டும் எப்படியாவது கொண்டு வா என்றான். பட்டி காட்டுக்குள் சென்றான் பல இடங்களில் அலைந்தான். கடைசியில் ஒரு சுனையைக் கண்டான்.


பட்டி சுனையில் தண்ணீர் கோரியபோது அந்தப் பகுதியில் தெய்வீக மணம் கமழுவதைக் கண்டான். ஆனால் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அந்தச் சுனையின் கரையில் உச்சினிமாகாளி வீற்றிருந்தது அவனுக்குத் தெரியவில்லை. பட்டி சுனையிலிருந்து தண்ணீரைக் கோரினான். விக்கிரமாதித்தனிடம் கொடுத்தான். அந்த நீரைக் குடித்ததும் விக்கிரமாதித்தியன் மயங்கினான். உடம்பு புத்துணர்ச்சி அடைந்தது அவனுக்கே தெரிந்தது. உலகத்தையே மறந்து உறஙகினான் அவன். அப்போது ஒரு கனவு கண்டான். கனவில் உச்சினிமாகாளி வந்தாள். அந்தச் சுனையின் அருகே தான் இருப்பதை உணர்த்தினாள். எனக்கு இங்கு ஒரு கோவில் கட்டுவாய் என்றாள்.


விக்ரமாதித்ய மன்னன் விழித்தான். கனவு கலைந்தது. தான் கண்ட அற்புதக் கனவைப் பற்றி பட்டியிடம் கூறினான். பட்டி அரசே அந்தச் சுனையில்தான் தெய்வீக மணம் கமழுகிறது. அங்கேயே கோவில் கட்டுவோம் என்றான். மன்னனின் ஆசைப்படியே அந்த இடத்தில் பெரிய கோவிலைக் கட்டினான் பட்டி. உச்சினிமாகாளியை அங்கு பிரதிஷ்டை செய்தான். கோவிலுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்தான். தங்கக் கட்டிகளையும் ஆபரணங்களையும் அளித்தான். அவையெல்லாம் அக்கோவிலிலேயே பல இடங்களில் புதைத்து பாதுகாத்து வைக்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சிகள் நடந்து ஏராளமான வருஷங்கள் கழிந்தபோது உச்சினி மாகாளி கோவில் பாழடைந்து சிதைந்து கிடந்தது. அங்கு பூசை செய்ய ஆளில்லை. அப்போது ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அயோத்திப் பட்டிணத்திலிருந்து ஒரு பிராமணன் வந்தான். அவன் அயோத்திக் கோவிலில் பூசை செய்து வந்தவன். அயோத்தியில் பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து குடிபெயர விரும்பினான். அப்போது அவன் கனவில் உச்சினிமாகாளி வந்தாள். 'என் கோவிலுக்கு வா' என அழைத்தாள். அதனால் அவனும் இங்கு வந்தான்.


உச்சினி கோவிலின் தர்மகர்த்தாக்கள் அயோத்தி பிராமணனை அக்கோவிலின் பூசாரியாக நியமித்தனர். கோவிலையும் சரிசெய்தார்கள். அவனும் மூன்றுவேளைப் பூசையைப் பக்தியோடு செய்ய ஒப்புக்கொண்டான். அப்படியே அவன் பூசை செய்துவந்தான்.


அயோத்தி நம்பியானுக்கு ஏழு பெண் மக்கள் இருந்தனர். ஏழு பேருமே திருமணத்திற்குரிய வயதை எட்டியிருந்தனர். ஆனால் அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க வசதியில்லை. அவனுடைய ஏழ்மை அவனை வதைத்தது. அவன் தினமும் பூசையின்போது உச்சினி தேவியிடம் அம்மா என் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய உதவி செய் என உருகி வேண்டிக்கொள்ளுவான். ஒருநாள் காளி அவன் கனவில் தோன்றினாள். கோவிலின் ஒரு இடத்தில் தங்கக் கட்டி இருக்கிறது. எடுத்துக்கொள். உன் புதல்விகளுக்குத் திருமணம் செய்துகொள் என்றாள்.


நம்பியான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்றான். அந்த இடத்தில் மண்ணைத் தோண்டினான். தங்கக்கட்டி கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு பக்கத்து நகரத்துக்குச் சென்றான். தங்கத்தை விற்று பணத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லவேண்டும். பின் மகளுக்கு திருமணம் நடத்தவேண்டும் என்பது நம்பியானின் ஆசை.

ஆனால் அவனுக்கு அவ்வளவு பொன்னை எங்கு எப்படி விற்பதென்று தெரியவில்லை. ஆகவே அவன் அந்த நகரத்து வீதியில் தங்கக் கட்டியை விற்பதற்கு அலைந்தான். அவ்வளவு பெரிய கட்டியை விலைகொடுத்து வாங்க அங்கே யாருமில்லை. அப்போது பிராமணன் நின்ற வீதிவழி வெள்ளைக்கார அதிகாரி ஒருவன் குதிரையில் வந்தான். அவன் பிராமணனைப் பார்த்து உன் பையைக் காட்டு என்றான். நம்பியானைச் சோதனை செய்தான். பிராமணனின் கையில் இருந்த பையில் நிறைய தங்கக் கட்டிகள் இருப்பதைப் பார்த்தான். அவன் திருடனோ என்ற ஐயம் அதிகாரிக்கு ஏற்பட்டது.


வெள்ளைக்கார அதிகாரி பிராமணனைத் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். பிராமணனை அடித்துத் துன்புறுத்தி தங்கம் அவனுக்கு வந்த வரலாற்றைக் கேட்டான். நம்பியான் அழுதபடி நடந்ததைக் கூறினான் . வெள்ளைக்காரன் அதை சோதனை செய்ய நம்பியானை கோவிலுக்கு அழைத்துச் சென்றான் . அங்கே தோண்டத் தோண்ட ஏராளமான தங்கம் வந்தது


அங்கே இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்துக்கொள்ள வெள்ளைக்காரன் ஆசைப்பட்டான். தன் கீழே உள்ள வீரர்களைக் கோவிலைத் தோண்டி சோதனை செய்யுமாறு ஆணை இட்டான். வீரர்கள் கோவிலை வளைத்தனர். அப்போது காளி பேய்ப்படைகளை வெள்ளைக்காரர்களின் மேல் ஏவினாள். பேய்ப்படைகள் பயங்கரத் தோற்றத்துடன் கூச்சலிட்டபடி வெள்ளை வீரர்களை வளைத்தன. அவை மாயமாய் நின்றுகொண்டு அவர்கள் மீது கற்களை வீசி எறிந்தன. வெள்ளை அதிகாரியும் படைகளும் அஞ்சி அலறி கோவிலை விட்டு ஓடினார்கள்.


நம்பியான் காளியை வணங்கினான். அவன் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது. கோவிலை புதுப்பித்து பூசை செய்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உச்சிமாகாளி_கதை&oldid=1425568" இலிருந்து மீள்விக்கப்பட்டது