உடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் உயிரியல் கொள்கைகள்

விக்கிமூலம் இலிருந்து

8. உடற்கல்வியின் உயிரியல் கொள்கைகள் (Biological Principles)

உயிரியல் விளக்கம்

Biology எனும் அறிவியலானது, உயிர்களைப் பற்றியும், உயிர்களின் நடைமுறைகளைப்பற்றியும் விரிவாக விளக்கிக் கூறுவதால், உயிரியல் என்னும் பெயரைப் பெற்றுள்ளது.

மிருகங்களைப் பற்றி விளக்கும் நூலை (Zoology) நூலை (Botany) தாவரவியல் என்பார்கள். சிறு சிறு உயிரினங்களைப் பற்றிக் கூறுகிற நூலை சிற்றுயிரியல்(Micro Biology) என்று கூறுவார்கள்.

மனிதர்களும் மற்ற உயிரினங்களைப் போலவே தோன்றியும்,வளர்ந்தும், மடிந்துபோகின்ற செயல்களைச் செய்து வருவதால், அவர்களைப் பற்றி விரிவாகக் கூறுவதை உயிரியல் என்று நாம் இங்கே ஏற்றுக் கொள்கிறோம். 

டார்வின் தந்த விளக்கம்

உயிரியல் கொள்கை பற்றி, டார்வின் தந்த விளக்கம், மனித உடல்களைப் பற்றி மேலும் மேலும் ஆராய்ந்தறிய, விஞ்ஞானிகளுக்கு அதிக ஊக்கத்தை அளித்தது.

டார்வின் ஆய்ந்த ஆய்வும், கண்டுபிடித்த உண்மைகளும், உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விவரித்தன. அவற்றில் மனித இனம் பெற்றிருக்கின்ற வளர்ச்சி, மிகுந்த மேன்மையுடையது ‘என்பதாக அவரது ஆராய்ச்சி’ தெளிவுபடுத்தியது.

பரிணாம வளர்ச்சித் தத்துவம் பற்றி டார்வின் கொண்டிருந்த கருத்துக்களும், கருதுகோள்களும் (Hypotheses) மனித இனத்தின் மாண்புமிகு வளர்ச்சித் தத்துவத்தை வெகுவாக விளக்கிக்காட்டின.

பரிணாம வளர்ச்சித் தத்துவம் பற்றி டார்வின் கொண்டிருந்த கருத்துக்களும், கருதுகோள்களும் (Hypotheses) மனித இனத்தின் மாண்புமிகு வளர்ச்சித் தத்துவத்தை வெகுவாக விளக்கிக் காட்டின.

பரிணாம வளர்ச்சியில், உயிரினங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாற்றம் பெற்றுக் கொண்டே வந்தன. அவ்வாறு மாற்றம் பெறுகிறபோது, தங்களுடைய குணாதிசயங்களில் சிலவற்றை இழந்து, புதிய உருவம் பெறும்போது, அதற்குண்டான குண நலன்களைப் பெற்றுக் கொண்டன என்பது டார்வின் கூறிய குறிப்புக்களாகும்.

அவ்வாறு மாறியவைகளில் ஒரு சில முக்கியமான உறுப்புக்களும் இருந்தன. தேகத்தில் முளைத்திருந்த முடி, நுகரும் ஆற்றலில் இருந்த திறமை கூரான பற்கள், தடித்த தோல் கைகளில் இருந்த அமைப்பு முதலியவை மிருக இனத்தில் இருந்து மனித உடல் அமைப்பு உருவானபோது, மாறிக்கொண்டன. மாறாமல் இருந்த, உறுப்புக்கள் யாவும் மென்மை பெற்றன, மெருகேறின.

மனித உடலில் உணர்வுகள் மிகுந்து, சூழ்ந்து கொண்டன, முற்கால நமது முன்னோர்கள் உணவுக்காக அதிக நேரம் அலைந்து, பின்னர் பெற்று மகிழ்ந்தனர்? அவர்கள் காலம் அப்படி நீடித்தது.

மனித உருவம் பெறுவதற்கு முன்னர், மனிதக் குரங்காக(Ape) இருந்ததை டார்வின் தனது கொள்கைக்குச் சான்றாகக் காட்டினார். குரங்கிலிருந்து வளர்ந்த மனிதனுக்குக் கைகளைப் பயன்படுத்துகிற திறமையும், மூளை வளமும் மிகுதியாக வந்தது. நிமிர்ந்து நிற்கிற தோரணை, மனவளர்ச்சி, கற்றுக் கொள்ளும் ஆர்வம், அவர்களுக்குப் புதிய புதிய ஆயுதங்களையும், கருவிகளையும் கண்டுபிடித்துப் பயன்படுத்த உதவின.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை டார்வின் நமக்கு தெளிவு படுத்துகிறார் இப்படி இயற்கைச் சூழ்நிலைகள்; காரியமாற்றமேற்கொண்ட உறுப்புக்களின் உபயோகங்கள், சூழ்நிலைகளை சந்திக்க மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் தந்த அறிவுகள், அனுபவங்கள், இன விருத்தி முறை, பரம்பரை வளர்ச்சி, உடல் மாற்றங்கள் எல்லாமே மனிதக் குரங்குகளிலிருந்து மனிதனை வேறு படுத்திக் காட்டின.மனிதனை உயர்ந்தவனாக உலகத்திலே நிலை நாட்டின.

அதாவது, எல்லா உயிர்களுக்கும் இயல்பாக இருந்த நடை, ஒட்டம், மரம் ஏறுதல், தாக்குதல், தாண்டுதல் துள்ளிக்குதித்தல் போன்ற செயல்கள் மனிதர்களிடத்தில் நுண்மையாக வளர்ந்தன.அத்துடன் இயற்கையை அறிந்து கொள்கிற ஆற்றல்மிக்க அறிவு, வளர்ச்சி பெற்றது. நினைவாற்றல் எழுச்சிபெற்றது.

உடலும் உயிரும்

மனிதன் உடலாலும் உயிராலும் உலா வருகிறான். அவனுடைய நினைவுகள் தூண்ட உடலுறுப்புக்களால் செயல்படுகிறான். உடலானது மனிதனுக்குக் கிடைத்துள்ள அரிய புதையலாகும். அந்த உடலை பலஹீனப்படுத்த மனிதனும் விரும்ப மாட்டான். வலிந்து முயற்சிகளும் செய்ய மாட்டான்.

உடலை உன்னதமாகக் காப்பாற்ற உடற்கல்வி உறுதுணையாக வருகிறது. அதன் அடிப்படை நோக்கம் உடலை (Physical) வலிமைப்படுத்துவதாகும். அதற்குரிய பயிற்சிகளைச் செய்தால் தானே உடல் வலிமை பெறும்? சூழ்நிலைகளால் மனித உடலில் மாற்றங்கள் நிகழ்வதால், அதற்கேற்ற தன்மையில் உடற்கல்வி கருத்துடன் செயல்படுகின்றது.

நாகரீகமும் நலிவும்

நாகரிகக் காலம் எந்திர மயமாகிப் போனதால், மனிதர்களின் உழைக்கும் நிலை மாறிப் போய்விட்டது. உழைப்பில்லாத உடல் ஓடாகத் தேய்ந்து நலியும் நிலையும் ஏற்பட்டு விட்டது. இதைத் தான் உயிரியல் அறிந்து, பயன்படுத்தப்படாத உறுப்புக்கள் பாழாகிப்போகின்றன பின்பதை தெளிவுபடுத்தி, உழைக்கச் சொல்கிறது.

இந்தக் கருத்தைத் தான் இயற்கைத் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்த தத்துவஞானி ரூசோ, பின் விருமாறு போதிக்கிறார்.

“உடலுக்கு அதிகமான உழைப்பு வேண்டும். உடல் உள்ளத்தின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். நல்ல வேலைக்காரன் என்பவன் பலமானவனாக இருப்பது போல, நல்ல உடலானது மனதிற்குக் கட்டுப்பாடுள்ளதாக இருக்க வேண்டும். அறிவை வளர்த்து விடுகிறபோதே, அதை அடக்கி ஆளவும் கற்றுத்தரவேண்டும். எல்லாவித நிலையிலும், உடல் வலிமையுடனும் வீரத்துடனும் திகழ வேண்டும்.

தேகமும் செயல்களும்

உலகில் உள்ள உயிரினங்கள் யாவும் சுறு சுறுப்பாகவே வாழ்கின்றன. உலகில் சில உயிரினங்கள் தங்களது சக்தியின் காரணமாக இயக்கம் கொள்கின்றன. சில இருந்த இடத்திலேயே இருந்து, வளர்ந்து கொள்கின்றன. சில தாவரங்கள் இடம் விட்டு இடம் சென்று வளர்ச்சி அடைகின்றன.

இயக்கங்களே எல்லா உயிர்களுக்கும் ஆதார சக்தியாக அமைந்திருக்கின்றன. உயிர்கள் இயங்கும் சக்தியை இழந்து விடுகிறபோது, இறந்துபோகின்றன. அதனால் தான் “இயக்கமே வாழ்க்கை, வாழ்க்கையே இயக்கம்” என்று அறிஞர்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள்.

இப்படி இனிதாக நடைபெறும் இயக்கங்களை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. உயிர்வாழும் இயக்கங்கள் : (Survival Activities)

2. வளர்த்துவிடும் இயக்கங்கள் : (Developmental Activities) 

1. உயிர் வாழும் இயக்கங்கள்

உடலில் உள்ளே உறுப்புக்கள் இயங்காமற் போனால், உயிர்வாழ முடியாது என்பதுதான் இதன் முக்கியக் குறிப்பாகும். அதாவது இதயம் துடித்தல், சுவாசம் இழுத்தல், இரத்த ஒட்டம், போன்ற செயல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இதயம் பிழிந்து இரத்தத்தை இறைக்காமற் போனால், நுரையீரல்கள் காற்றை ஏற்றுக்கொள்ள இயலாமற் போனால், அந்த உறுப்புக்கள் இறந்துபோயின என்பது தானே அர்த்தம்!

இப்படிப்பட்ட இயக்கங்கள், செயல்கள் யாவும் தானே நடப்பவை. இயற்கையானவை, அவைகளுக்கென்று வெளிப்புற உந்துதல்கள் எதுவும் தேவையில்லை.

இத்தகைய உயிரான இயக்கங்களை நமது விருப்பத்திற்கு உட்படுத்தமுடியாது. வேண்டியபோது இயக்கலாம், வேண்டாதபோது நிறுத்தலாம் என்பது முடியாத காரியமாகும். இந்த இயக்கத்தையே அறிவியல் மொழியில் கூறுவது என்றால், உயிரியல் செயல் வெளிப்பாடு (Biological Reflex) என்று கூறலாம்.

உடல் நலம், உன்னத உடல் வளம் என்பதெல்லாம் இப்படிப்பட்ட உறுப்புக்களின் இதமான இயக்கங்களினால் ஏற்படுவதாகும். இந்த இயக்கங்கள் என்றும் எடுப்போடு நடைபெற வேண்டுமென்றால், அவைகள் வளர்த்துவிடும் இயக்கங்களின் வழிக்கு வந்தாகவேண்டும்.

2. வளர்த்துவிடும் இயக்கங்கள்

உறுப்புக்களை வளர்த்துவிடும் இயக்கங்கள், உயிர் வாழும் இயக்கங்களுக்கு நேர்மாறானது.இவ்வியக்கங்கள்  விருப்பத்திற்கு உட்பட்டவை வெளிப்புற உந்துதல்களுக்கு ஏற்ப நடைபெறுபவை, நினைத்தால் நிறுத்திவிட முடிந்தவை.

உயிர்வாழும் இயக்கங்களில் ஈடுபட்டிருக்கிற முக்கியமான உறுப்புக்கள் யாவும், வளர்த்துவிடும் பயிற்சிகளினால் பெரிதாக வளர்ந்துவிடுவதில்லை, ஒட்டம், தாண்டல், எறிதல் போன்ற பயிற்சிகளைச் செய்யும்போது, உள்ளுறுப்புக்கள் தங்கள் வடிவில் பெரிதாக மாறாமல், வலிமையில் வளர்ந்து கொள்கின்றன.

இதனால், உடல் உறுதியாக இருப்பதுடன், உன்னதமான வலிமையுடன் விளங்கி, ஒப்பற்ற வாழ்வு வாழ வைக்கின்றது.

எப்படிஎன்றால்,இயக்கங்களுக்கு செயலில் வலிமையும் செழிப்பும்கொடுத்து, உறுப்புக்களை வளர்த்து செழுமைபெறக்கூடிய முழுமையான உதவிகளையும் வளர்த்துவிடும் இயக்கங்கள் வழங்குகின்றன.

உடற்பயிற்சியும் உடல் வளர்ச்சியும்

உடல் வளர்ச்சி என்றதும் என்ன என்று ஒரு வினா எழும்புவது இயற்கையே.

வளர்ச்சி என்றால் பெரிதான வளர்ச்சி (Bigger) என்றும், நுண்மையான வளர்ச்சி (Advancement) என்றும் நாம் பிரிக்கலாம்.

உருவில் பெரிதாகவும், எடையில் கனமானதாகவும் உறுப்புக்கள் வளர்வதை வளர்ச்சி என்று நாம் கூறலாம். தசைகள் பெரிதாக வளர்வது, எலும்புகள் கனமாக வளர்வது என்பது இதற்குச் சான்றாகும். இதை எடை போட்டும் சுற்றளவை அளந்தும் கண்டறியலாம். உடல் உயரமாக வளர்வது, எடை அதிகரிப்பது,விரிவடைவது உதாரணமாகும்.

நுண்மையான வளர்ச்சி என்பது உறுப்புக்கள் தங்கள் அளவில் அப்படியே அமைந்திருந்து, ஆற்றலில் வளர்ந்து, செயல்முறைகளில் தேர்ந்து செய்யும் பணியில் ஓர் செப்பமான நிலையை உறுப்புக்கள் பெறுவதாகும்.

எலும்புகள் வளர்கின்றன. பெரிதாக வளர்கின்றன. அப்படி வளரும்பொழுதே, எலும்புகளின் உள்ளே ஏற்படும் முக்கிய இரசாயன மாற்றங்களிலும் இன்னும் நுண்மையான செயல்கள் ஏற்படுகின்றன. அதுதான் நுண்மையான வளர்ச்சியாகும.

உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும்:

உடல் உறுப்புக்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒரு காலக்கட்டத்தில் வளர்ச்சி போதுமென்று, உறுப்புக்கள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. அதனை உடல் வளர்ச்சி என்கிறோம். அதையே பூரண வளர்ச்சி (Maturity) என்றும் கூறுகிறோம்.

ஆனால், உடலும் உறுப்புக்களும், இதுநாள் வரை கற்றுக்கொண்டு வந்த திறன்களையும் (skills), பழக்க வழக்கங்களையும் (Habits) உடனே நிறுத்திவிடுவதில்லை. அவை ஆரவாரத்துடன் தொடர்ந்தும் மேலும் வளர்ந்தும் வருகின்றன.

உடற்பயிற்சியால் உடல் வளர்ச்சியில் திறமைகள் பெருகுவதை நாம் நன்கு அறிவோம்.

அதேபோல் மூளை வளர்ச்சியாலும் அறிவும் ஆழ்ந்த ஞானமும் வளர்ந்து கொண்டே வருகிறது.  ஆர்வமுள்ள படிப்பின் காரணமாக அறிவும் விருத்தியடைந்து கொண்டே போகிறது.

பல்வேறு வயது அளவில், பல்வேறு உறுப்புக்களின் செயல்களில் அறிவும் ஞானமும் விருத்தியடைந்து வருவதை, நாம் நன்கு உணர்கிறோம். ஆக, உடல் தரத்திலும் திறத்திலும் விளைந்து வெளிவரும் வளர்ச்சி மாற்றங்கள், வயதான போதும் தொடர்கிறது. இந்த இனிய மூளை வளர்ச்சியை இனிய பூரண வளர்ச்சி என்றும் நாம் குறிப்பிடலாம்.

வளர்ச்சியின் எதிரிகள்

உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் ஊறு விளைவித்து முட்டுக் கட்டையாக நின்று மோதும் எதிரிகள் பலவுள்ளன. நோய்கள்; உணவு பற்றாக்குறை; சத்தில்லாத உணவு; என்டோகிரைன் சுரப்பிகளின் நலிவு; சுரக்க இயலாத நலிந்த தன்மை; வாழ்கின்ற இடத்தின் தட்ப வெப்ப சூழ்நிலைகள், அத்துடன் உடற்பயிற்சி செய்யாத தன்மை இவைகள் எல்லாம் உடலை நலியச் செய்து, மூளை வளத்தையும் குறையச் செய்து கோளாறுகளை விளைவித்து விடுகின்றன.

இந்தக் கோளாறுகளை விரட்டி, நல்ல வளர்ச்சிக்கு நடத்திக் கொண்டு செல்லும் ஆற்றல் உடற்கல்விக்கு உண்டு. அதன் ஒப்பற்ற அங்கமாக விளங்கும் உடற்பயிற்சிகளுக்கும் உண்டு.

அப்படிப்பட்ட வளர்ச்சியை சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பெறுகின்ற பேரானந்த நிலையினை உடற்பயிற்சிகள் அளிக்கின்றன என்பதால், நாம் வளர்ச்சி பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.பிறகு வளர்ச்சிக்கான வழிகளையும் காண்போம்.

வளர்ச்சிக்கு விளக்கம்

1. வளர்ச்சி என்பது வளர்கின்ற ஆற்றல் உள்ளது. அதுவே உடலுக்கான நடத்தையில் (Behaviour) பல்வேறு விதங்களை அமைத்து விடுகிறது.

வளரும் குழந்தைகளிடம் நாம் பல்வேறு விதமான மாற்றங்களைக் காண்கிறோம். அவர்களின் நடத்தைகளில் உள்ள மாற்றங்கள், அவர்களின் உள்ளுணர்வுகளாலும், வெளிப்புற கட்டுப்பாடுகளாலும் ஏற்படுகின்றன.ஆகவே, தன்னடக்கமும், சமுதாயக் கட்டுப்பாடும் ஒருவரது வளர்ச்சியையும் நடத்தையும் கட்டுப்படுத்துவதுடன், கண்காணித்தும் நெறிப்படுத்துகின்றன.

2. வேண்டாத வளர்ச்சி என்பது சில சமயங்களில் ஏற்பட்டு விடுவதுண்டு.

உறுப்புக்கள் சில, தவறான வளர்ச்சியைப் பெற்று விடுகின்றன. காரணம் உணவு பற்றாக்குறை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலைகள். உதாரணம். உறுப்புக்கள் வீங்கிப் போவது. அந்தப் பெருக்கத்தை நாம் வளர்ச்சி என்று கூற முடியாதல்லவா!

3. மன வளர்ச்சி என்பது அனுபவங்களாலும், மாறி வரும் உடல் அமைப்பு, மூளை செழிப்பு இவற்றால் ஏற்படுவதாகும். சிறு குழந்தைகள் நிற்க இயலாமல் சமநிலை இழக்கின்றார்கள். அப்போது அவர்களால் குட்டிக் கரணம் போட முடியாதல்லவா!

பல திறமைகள் சேர்ந்த ஒரு செயலைக் குழந்தைகள் செய்ய முடியாது போவது, மூளையில் வளர்ச்சி வருவதில் தாமதம் ஏற்படுவதால்தான்.

சுற்றுப்புற சூழ்நிலைகளும், ஆர்வமும், கற்றுக்கொள்ள வேண்டும் என்று உள்ளுணர்வும், வெளிப்புற ஊக்கமும் தான் ஒருவருக்கு மன வளர்ச்சியை விரைவில் பெருக்கி விடுகின்றன.

4. குழந்தைகள் தங்கள் நினைவாகவே வாழும் இயல்பினர்கள். வயது வந்தவர்களோ சமுதாய நினைவாகவே வாழ்பவர்கள் - தங்கள் நினைவுபடியே இருக்க வேண்டும், விளையாட வேண்டும், வாழ வேண்டும் என்று விரும்புகிற குழந்தைகள், வளர்ந்தவர்கள் ஆனதும் சமுதாயக் கடமைகள், மரபுகள், பழக்க வழக்கங்கள் இவற்றிற்குக் கட்டுப்பட்டுப் போகிறார்கள். தங்கள் கற்பனைகளை, கனவுகளை இழந்தும போகிறார்கள். ஆகவே, எது சரி, எது தவறு என்கிற சமுதாய நெறிகளினால், குழந்தைகள் மற்றும் மனிதர்கள் வளர்ச்சியில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டு விடுகின்றது.
5. சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப, உள் அவயங்கள் ஒன்றுசேர்ந்து செயல்படும்போது, குறிப்பிட்ட மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டு விடுகின்றன. ஒருவரைப் பார்த்ததும், அவர் எந்த சூழ்நிலையில் வளர்ந்திருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!
6. வளர்ச்சிக்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் பலகாரணங்கள் தேவை என்று கூறுவார்கள். ஆனால் பரம்பரையானது (Heredity) ஒருவரது வளர்ச்சிக்கு அடிப்படையானது என்பதையும் நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

பரம்பரையின் பண்பானது, உடல் உறுப்புக்களுடன் ஒன்றிப்போய் கிடக்கிறது. அந்தப் பரம்பரைப் பண்பு ஊக்கப்படியே உடல் வளரும். என்ன தான் உணவை மலையாகக்குவித்து ஊட்டினாலும், எலி யானை அளவுக்கு வளர முடியாதல்லவா!

ஒவ்வொரு உயிரினமும் அந்தந்த அளவாக அமைந்திருப்பது, பரம்பரைக் குணத்தின் பாங்கல்லவா! அதை புரிந்து கொண்டுதான், உடற்கல்விப் பாடத் திட்டங்களை உருவாக்கிடவேண்டும்.

7. நேரத்தில் வளர்ந்து காலத்தில் முடிவடைந்து கொள்கிறது உடலில் ஏற்படும் வளர்ச்சி, குழந்தைகள் வளருகின்ற வேகம், இளைஞர்கள் ஆனதும் குறைந்து போகிறது. அப்படி குழந்தைகள் வளரும் வேகத்தில், மனிதர்கள் வளர்ந்து கொண்டே போனால் ஒவ்வொருவரும் பனைமரம் போலவும், பூதாகரமாகவும் அல்லவா வளர்ந்திருப்பார்கள். ஆகவே, இயற்கையானது வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது, சமநிலைப்படுத்துகிறது.
8. வயதுக்கேற்ற வளர்ச்சி, வளர்ச்சிக்கேற்ற செயல் திறன், செயல்களுக்கேற்ற உடலமைப்பு, சூழ்நிலைக்கேற்றப் பயிற்சிகள் இப்படியெல்லாம் ஆய்ந்து தருகிற பயிற்சிகளே, உடலுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கின்றன.
9. வளர்ச்சியில் நாம் ஒன்றைக் குறிப்பாக உணர வேண்டும். செய்கின்ற காரியங்களில், திறமைகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக, ஒழுங்காக வருவதில்லை. வளர்வதில்லை. மாறி மாறி வரும். அப்படி வந்தாலும், திறமைகள் வளர்வதில் குறைவுபடுவதில்லை. உதாரணத்திற்கு ஒன்று குழந்தைகள் எழுதிப்பழகும்போது, முதலில் வட்டம் போட வருகிறது. சதுரம் போடத் தெரியவில்லை. குழந்தைகளுக்கு முதலில் நிற்க வர வேண்டும். ஆனால் முதலில் உட்காரத்தான் தெரிகிறது. அதனால், திறமைகள் வளர்ச்சியில், வருவதை முதலில் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
10. ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி ஏற்படுவது இயல்பாக இருப்பதில்லை. ஒரு சிலர் விரைவாக விஷயங்களைப் புரிந்து கொள்கிறார்கள். 18 வயதுக்காரருக்குப் புரியாதது 10 வயது பையன் களுக்குப் புரிகிறது.

அதனால், வளர்ச்சியின் அளவு ஆளுக்கு ஆள், வயதுக்கு வயது வித்தியாசப்படுகிறது, அவரவர் திறமையை அறிந்த பிறகு, கற்பித்தால், எதிர்பார்க்கும் பயன்களைப் பெற முடியும்.

11. வளர்ச்சி கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே வரும் இயல்புள்ளதாகும். தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே வரும் வளர்ச்சிக்கு இடையில் தளர்ச்சி இல்லை.

சில நேரங்களில் விரைவாகவும், சில நேரங்களில் மெதுவாகவும் வளர்ச்சி நடைபெறும், ஒவ்வொருவரின் வளர்ச்சி ஆற்றலை அறிந்து கொண்டு, அவர்கள் மேலும் மேலும் வளர ஊக்கம் அளித்துக் கொண்டு வரவேண்டும்.

ஒருசில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எல்லா வளர்ச்சியையும் விரைவாகப் பெற்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்கின்றார்கள். அரண்மனைக் கட்டிடம் ஒரு நாளில் கட்டப்படுவதில்லை என்ற உலக உண்மையை அவர்கள் புரிந்துகொண்டு, பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டும்.

12. வளர்ச்சியானது குழந்தைப் பருவத்தில் விரைவாக உள்ளது. இளமைப் பருவம் கழிந்து மெதுவாகிறது. பிறகு நின்று விடுகிறது. இளமைக்குப் பின்னர் ஏற்ற வளர்ச்சி எப்படி ஏற்படும் என்றால், சத்துள்ள உணவு, சந்தோஷம், நல்ல சுற்றுப்புற சூழல், தன் முயற்சி எல்லாம் தேவை என்று
காரணம் கூறுவார்கள். அது தான் உண்மை. அறிவோடு கடைபிடித்திடல் வேண்டும்.
13. கல்வியும், கற்றலும் ஒருவருக்கு அதிக வளர்ச்சியை அளிக்கிறது. அதிகமாகக் கற்றுக் கொள்ளும் அறிவும், திறமைகளும் ஒருவரை சிறந்த வளர்ச்சிக்குரியவராக மாற்றுகின்றன.

குழந்தைப் பருவத்தில் விளையாட்டுக்கள் குதுாகலமான வளர்ச்சிக்கு வழியமைத்து விடுகின்றன. சத்தில்லாத உணவுடன், சமத் காரமான உடற்பயிற்சிகள் இருந்தால், வளர்ச்சியில் சரிவும் தேக்கமும் ஏற்பட ஏதுவாகின்றன.

ஆகவே, உணவும் உடற்பயிற்சியும் மட்டும் ஒருவருக்கு ஆற்றலை அளித்திட முடியாது.உடல், அமைப்பும் நன்றாக இருந்திட வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

உடல் அமைப்பு பற்றியும் அதன் உயர்ந்த செயலாற்றும் திறமைபற்றியும் தொடர்ந்து காண்போம்.

உடல் அமைப்பும் செயலாற்றலும்

மனிதர்களுக்குரிய மெருகேறியதேகம் ஒரே நாளில் கிடைத்தவை அல்ல. அது பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த பரிணாம வளர்ச்சியினால் பிறந்ததாகும்.

நான்கு கால்களால் நடக்கும் மிருகங்களுக்கு மாறாக, இரண்டு கால்களால் மனிதன் நடக்கிறான். அவனது தோற்றம் சிறந்த அமைப்பு பெறுவதற்கு, அவன் நிமிர்ந்து நிற்கும் தோரணை தான் காரணம்.

நிமிர்ந்து நிற்கும் மனித தேகத்தின் எடையை இரண்டு கால்களும் தாங்கிக் கொண்டிருப்பதால்,  கால்களுக்கு நல்ல வலிமை வேண்டியிருக்கிறது. அது போலவே கைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தால், நிறைய வேலைகள் செய்யும் கைகளும், வேண்டிய வலிமை கொண்டனவாக விளங்க வேண்டியிருக்கிறது.

ஆகவே மிருகங்கள் உடலமைப்புக்கு ஏற்றபடி நடக்கின்றன. வேலைகளைச் செய்கின்றன. மனிதனும் அப்படியே தன்உடல் அமைப்புக்கு ஏற்ற பணிகளை செய்கிறான்.

ஒவ்வொரு மனிதனின் உடலமைப்பும் அவனது பெற்றோர்களின் உடலமைப்புக்கு ஏற்றாற்போல் அமைவது இயற்கையானதாகும். சில சமயத்தில் பரம்பரைத் தோற்ற அமைப்புகளும் இடையில் புகுந்து விடுவதுண்டு. அதனால் மனிதர்கள் இடையில் பலதரப்பட்ட தேக அமைப்புக்கள் உண்டாகிவிடுகின்றன.

பெருத்த உடல் அமைப்பு, கனஎடை உள்ள மனிதர்களும், ஒல்லியான, சுமாரான உடல் எடை கொண்ட மனிதர்களும் இருக்கின்றார்கள். பெருத்த உடல் கொண்ட மனிதர்கள் இயக்கத்திற்கும், ஒல்லியான மனிதர்களின் இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிந்ததே.

ஆகவே, உடல் எடைக்கும், பருமனுக்கும் ஏற்றவாறு சீரான சிறப்பு இயக்கங்கள் (Motor Development) மாறுபடுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உடல் எடை உள்ளவர்களின் இயக்கத்தில் உள்ள வேற்றுமைகள் போலவே, ஆண்கள் பெண்கள் இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன.

அதனால்தான் உடலமைப்பானது செயல்முறைகள் பற்றி தீர்மானிக்கிறது. ‘முடிவெடுக்கிறது’ (Structure Decides Function) என்கிறார்கள். அப்படி எடுக்கப்படும் முடிவுகளில் தான் ஒழுங்கமைப்பும், உண்மையான வளர்ச்சிகளும் உண்டாகின்றன.

ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் ஈடுபடுகிற செயல்களின் மூலமாகவே தங்கள் உடல் அமைப்பைப் பெற்றுக்கொள்கின்றன.இதற்கு ஒரு சான்றை இங்கே நாம் காண்போம்.

அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றுகிற ஒருவர், நாள் முழுதும் முன்புறமாகக் குனிந்து, தங்கள் கடமைகளை செய்து வருகின்ற காரணத்தால், முன்புறமாக குனிந்து கூன்போட்டு நடக்கும் உடலமைப்பைப் பெற்று விடுகிறார். அது அவரது செயல் முறைகளால் ஏற்பட்டது.

வயல் வெளிகளில், தொழிற் சாலைகளில் உழைக்கின்றவர்கள் நிமிர்ந்த தோற்றமும், வலிமையான உடலமைப்பும் கொண்டவர்களாகத் திகழ்கின்றார்கள். ஆகவே, செய்கின்ற தொழிலுக்கேற்ப தேகம் உருவாகிறது என்ற உண்மைதான் நமது உடற்கல்விக்கு உகந்த குறிப்பாகும்.

குழந்தைகளுக்கு வளைகின்ற கனமற்ற எலும்புகள், அதிகம் வளர்ச்சிபெறாத தசைகள் இருக்கின்றன.நன்றாக விளையாடும் போது, உரிய உடற்பயிற்சிகளைச் செய்யும்போது, குழந்தைகளின் உடலமைப்பு சிறப்பாக அமைகிறது.

அதனால் தான், உடற்பயிற்சிகள் உடலாமைப்பில் உண்டாகியிருக்கும் குறைபாடுகளைத் திருத்தி அமைக்கின்றன என்று வல்லுநர்கள் விளக்கம் கூறுகின்றார்கள். அத்துடன், வாழ்வில் சந்திக்க இருக்கின்ற பிரச்சினை களைத் தீர்க்கவேண்டியிருக்கிற உடல், மனசக்தியினையும் வளர்த்து விடுகின்றன.

ஆகவே, உடலுக்கு உறுதியையும், வலிமையையும் கொடுக்கிற தசைகளைப் பற்றியும், அவற்றின் விசைகளைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

தசைகள் நல்ல விசைகள்

உயிரியல் வளர்ச்சியில், உயிரினங்களுக்குரிய பரிணாம வளர்ச்சி; தசைகளிலிருந்தே தொடங்குகிறது.

அமீபா, புரோட்டாசா என்ற மிருக இனங்களின் தசைப்பகுதியின் தெளிவான வளர்ச்சிதான், மனித உடலமைப்புக்குரிய வழியமைத்துத் தந்திருக்கிறது.அந்தப் பெருந்தசைகளின் இயக்கச் செயல்கள்தாம், பெரிய பெரிய மாற்றங்களை அளித்தன.

மிருகங்களுக்கு முதன் முதலாகத் தோன்றுகிற தசைகள் இடுப்புத் தசைகள் (Trunk) தாம். இடுப்புக்கும் மேலுள்ள தசைகளும், இடுப்புக்கும் கீழுள்ள தசைகளும், அதன் பிறகே வளர்ச்சி பெற தொடங்குகின்றன.

ஆகவே, இடுப்புத் தசைகள் தான் பழமையான தசைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு இனமும் முதலில் இடுப்புத் தசைகளையே வளர்த்துக் கொள்கிறது. பிறகு, அனைத்துத் தசைகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இணைந்து, ஒற்றுமையுடன் திறமையாக செயல்புரிந்து கொள்கின்றன.

ஆனால், இதயம், ஈரல் போன்றவைகள் நமது கட்டுப்பாட்டுக்குள் அடங்கி விடாமல், தன்னிச்சையாக மூளையின் கட்டுப்பாட்டினால் செயல்படுவதை இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நமது கட்டுப்பாட்டுக்குள்ளும், விருப்பத்திற்கும் ஏற்றவாறும் எலும்புத் தசைகள் செயல்படுகின்றன.

ஆகவே, தசைமண்டலம் முழுவதும், நமது இயக்கத்திற்குப் பெருந்துணையாகவும், உரிய ஆதாரமாகவும் விளங்குகிறது. அதனை சரியாகப் பராமரித்து வந்தால், திறமையுடன் இயங்க நாம் உதவியவர்களாகின்றோம். அப்படி நடைபெற, உடற்பயிற்சிகளும், பெருந்தசை இயக்கச் செயல்களுமே உதவுகின்றன.

விசை பெறும் தசைகள்

தசைகள் எல்லாம் மூன்று வித செல்களினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

1. வரியுள்ள தசைச் செல்கள்.
2. வழவழப்பான தசைச் செல்கள்.
3. இதயச் செல்கள்.

இவை மூன்றும் வெவ்வேறு விதமான செல்லமைப்புடன் உருவாகியிருக்கின்றன. அது போல; இயங்கும் முறைகளிலும் குறிப்பிட்ட வித்தியாசங்களும் உள்ளன.

தசைகள் இயங்கும்போது, நீண்டு சுருங்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. ஆனால், எலும்புத் தசைகளாக இருப்பவையே அதிகமான இயக்கங்களைப் பெறுகின்றன. ஏனென்றால், தசைகளின் இருபுற நுனிகளும் ஏதாவது ஒரு எலும்புடன் இணைக்கப்பட்டிருப்பது தான் முக்கியமான காரணமாகும்.

ஒவ்வொரு தசையிலும் நரம்பு மண்டலத்திலிருந்து வந்து முடிகிற உணர்வு நரம்புகள் இணைந்துள்ளன. அதனால் தான் தசையின் இயக்கத்தில், பிரதி செயல் வினை (Reflex) மிகவும் துரிதமாகவும் துல்லியமாகவும் ஏற்படுகிறது.

தசைகள் உறுதியாக இருக்கிற போது தான், நரம்புகளும் நல்ல வலிமையுடன் உறைகின்றன. அதனால் தான் தசைகளுக்கு விரைவாக இயங்கும் விசைச் சக்தியும் வெளிப்பட்டு வருகிறது.

நன்கு எதிர்பார்ப்புக்கு மேலாக சிறப்பாக இயங்கும் தசைகளை உருவாக்குவது தான், மனித சக்தியை மேம்படுத்த உதவும். அதையும் ஒரளவு அறிவு பூர்வமான வகைகளிலே உருவாக்கிட முயல வேண்டும்.பரபரப்புடன் பயிற்சி செய்தால் வீணான பதைபதைப்பும், தசைகளுக்குத் துன்பமும் ஏற்பட ஏதுவாகிவிடும்.

பயிற்சியளிக்கும்போது, ஒரு சில குறிப்புக்களை உணர்ந்து, எச்சரிக்கையுடன் கடைபிடித்தாக வேண்டும்.

1. தசைகள் சுருங்கி விரியும் தன்மையை நாம் பயிற்சியின் போது ஏற்படுத்துகிறோம். அப்படி சுருங்கும் தசைகள், எந்த அளவுக்கு நீண்டு செல்கிறது என்பது முக்கியமல்ல. எவ்வளவு சீக்கிரம் அவை தமது பழைய நிலைக்கு வந்து சேர்க்கின்றன என்பதை நாம் கருத்தில் கொண்டு கவனமாகச் செய்திட வேண்டும்.
2. ஒவ்வொரு தசைக்கும் சுருங்கி விரியும் அளவும், ஓய்வு பெறுகிற அளவும் உண்டு என்பதை உணர்ந்து, அதன்படி பயிற்சி அளிக்க வேண்டும்.
3. தசைகளை நன்றாக நீட்டிச் சுருக்கி விடும் போது அதனுள்ளே இரத்தம் ஆழமாகப் பாய்ந்து செழிக்க வைக்கிறது. அதனால் தசைகளில் எதிர் பார்க்கும் விசைச் சக்தி தாராளமாகப் பெருகிவிடுகிறது.

அதற்காக நாம் தசைகளை அதிகமாக இயக்க ஆரம்பித்தால், தசைகளில் உண்டாகும் வளர்ச்சிக்குப் பதிலாக, வளர்ச்சித் தேக்கநிலை ஏற்பட்டு விடுகிறது. திறமையுடன் இயங்கும் நிலையிலும் ஆற்றல் குறைந்து போகிறது.

ஆக, தசைகளின் விசைச் சக்தியைப் பெறுவதற்குரிய உபாய வழிகளைக் கண்டு கொள்வோம். பெருமையையும் புரிந்து கொள்வோம்.

1. தசைகளில் விசைச் சக்தி அதிகமாக இருக்கும் பொழுது தான், உடலின் தோரணை (Posture) நிறைவாக இருக்கிறது. நிமிர்ந்து நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. தசைகளின் சக்தி குறையும்போது, தோரணை தொய்ந்து போகிறது. கூன் முதுகாகக் கோலம் கொள்கிறது. ஆகவே, தசைகளை திறமையுள்ளதாகப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் மனித இனத்திற்கு அவசியமாகிறது.
2. தசைகளில் விசைச் சக்தி அதிகமாக இருக்கும் பொழுதுதான், எதிர்வினை செயல்களை (Reaction Time) விரைவாகச் செய்திடும் வல்லமை நிறைந்திருக்கிறது. சக்தியுள்ள தசைகளில் தான், விரைவான, மிக சீக்கிரமான எதிர் செயல்கள் நடந்து, காரிய மாற்றும் நுணுக்கமும் வல்லமையடைகிறது.
3. எப்பொழுதுமே சுறு சுறுப்பாக இயங்க, தசைச் செயல்களை உடற்பயிற்சிகள் தயார் செய்து விடுவதால்தான், உடலில் அப்படிப்பட்ட விரைவான இயக்கம் விளைகிறது.

ஆகவே, உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தசையின் வளர்ச்சிக்கும் உதவி, உர மேற்றுகிறது என்பதை உணர்ந்து, அப்படிப்பட்டப் பயிற்சித் திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.

தசைகளே உடல் சம நிலையையும், உடல் அமைப்பையும், உடல் தோரணையையும், செம்மைப் படுத்திச் சிறப்பிப்பதால், தசையின் விசைச் சக்தியைப் பெருக்கிக் கொள்ள, நாம் முயல வேண்டும்.

பாரம்பரியமும் சுற்றுப்புற சூழ்நிலையும் (Heredity And Environment)

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைப் போல் அல்லது தாத்தா பாட்டிகளை அல்லது அவர்களுக்கும், முந்திய பரம்பரையினரை ஒத்தாற் போல பிறக்கின்றனர். அதாவது அவர்களுடைய தோல் நிறம், உடல் அமைப்பு, உயரம், அறிவு மற்றும் ஆயிரமாயிரம் குணாதிசயங்களைக் கொண்டு பிறக்கின்றனர்.

முன்னோர்களைப் போலவே இல்லாவிட்டாலும் அவர்களை ஒத்தார்போல, பலவிதமான சாயல்களுடன் பிறந்து, பல்வேறு விதங்களில் தங்கள் குணாதிசயங்களையும் வளர்த்துக் கொள்கின்றனர். இதை உயிரியல் பாரம்பரியம் என்பார்கள். அத்தகைய தனிப்பட்ட குணங்கள் எப்படி அமைகின்றன என்று காண்போம்.

மனிதன் ஒற்றை செல் அமைப்பிலிருந்து உருவாகிறான். ஒரு செல் முட்டையாகி, கருவாகிற அமைப்பை சைகோட் (Zygote) என்பார்கள். முந்தைய பரம்பரையின் மன, உடல், அறிவு மற்றும் சமூகப் பண்புகள் இவற்றை ஒருவன் தன் வாழ்க்கையில் வெளிப்படுத்தும் விதமாக, சைகோட்டின் கூறுகள் கைக்கொண்டிருக்கும் வல்லமை பெற்றிருக்கின்றன.

ஆணின் செல்லை (Cell) ஸ்பெர்ம் அல்லது ஸ்பெர்மெட்டோஸுன் (Spermatozoon) என்பார்கள்.இது ஆண் செல், பெண் செல் என்று இரு கூறு கொண்ட தாகும். ஒரு ஸ்பெர்ம் என்பது 23 ஜோடி குரோமோ சோம்களையும், ஒவம் (Ovum) என்பது அதே போல 23 குரோமோசோம்களையும் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு குரோமோசோமும் நிறைந்த எண்ணிக்கையில் ஜீன்ஸ் (Genes) எனும் முக்கிய பொருளைக் கொண்டிருக்கிறது. இந்த ஜீன்களே பரம்பரைக் குணங்களை ஏந்திக் கொண்டு வருகிற வல்லமையைக் கொண்டிருக்கின்றன. இந்த கூட்டுறவாடலில் ஏற்படுகின்ற சிறப்பான கூட்டு அமைப்பைப் பொறுத்தே, தனிப்பட்ட ஒருவரின் பரம்பரைக்குணங்கள் உருவாகின்றன.

உதாரணத்திற்கு ஒரு கருத்தை இங்கே ஆராய்ந்து பார்ப்போம்.

ஒரு விளையாட்டு வீரன் இயற்கையாகப் பிறக்கிறான் (Born) என்பார்கள் சில வல்லுநர்கள். ஒரு விளையாட்டு வீரன் உருவாக்கப்படுகிறான். (Made) என்பார்கள் சில வல்லுநர்கள்.

விளையாட்டு வீரன் ஒருவன் பிறக்கிறான் என்கிற போது, அவன் முன்னோர்களின் பாரம்பரியப் பண்புகள் இவனிடம் முகிழ்த்துக் கிடக்கின்றன. அந்தப் பாரம்பரிய குணங்களும் திறமைகளும் (Talents) அவனை தேர்ச்சி பெற்றவனாக ஆக்கிவிடுகின்றன என்கிற குறிப்பையே வல்லுநர்கள் நிலை நாட்டுகின்றார்கள்.

ஆகவே, அறிஞர்கள் பல இனங்கள் (Races) பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். நீக்ரோ இனத்தில் தோன்றிய வீரர்களை வெல்ல மற்ற இனத்தவர்களால் முடியவில்லை என்ற சரித்திரச் சான்றுகளைக் காண்கிற போது,அந்த இனத்தின் பாரம்பரிய குணாதிசயங்கள்தாம். அளப்பறிய ஆற்றலை அளித்து, அகில உலகிலேயே தலைசிறந்த வீரர்களாக மாற்றி விடுகின்றன என்பது ஒரு சிலர் வாதம்.

ஒரு சில குடும்பத்தினரே, உயர்ந்த ஆற்றல் மிக்க வீரர்களாக வருகின்றார்கள், வெற்றி பெறுகின்றார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். நமது நாட்டில் சிறந்த டென்னிஸ் வீரர்கள் ராமனாதன்; அவர் மகன் கிருஷ்ணன், அவரது மகன் ரமேஷ், இவர்களின் எழுச்சி மிக்கத் திறமையை பாரம்பரிய பண்பாட்டின் முதிர்ச்சி என்றும் சான்றாகக் கூறுகின்றனர்.

சுற்றுப்புறச் சூழ்நிலைகள்

சிறந்த விளையாட்டுவீரர்களாக உருவாக,அவரவர் வாழும் சுற்றுப்புறச் சூழ்நிலையே சுகமான காரணமாக அமைகிறது என்று வேறு சில வல்லுநர்கள் விவாதிக்கின்றார்கள்.

சுற்றுப்புறச் சூழ்நிலை என்பது தனிப்பட்ட மனிதர் ஒருவரின் குடும்ப அமைப்பு, உடல் அமைப்பு; சமூக அமைப்பு; பொருளாதார வளம் ஆகும். இவையே ஒருவரின் வளார்ச்சியைக் காக்கின்றன. கட்டுப்படுத்துகின்றன. இப்படி எல்லா சூழ்நிலையும் நடத்தையைக் (Behaviour) கட்டுப்படுத்துவதுடன், திசை மாற்றியும் உருவேற்றியும் விடுகின்றன.

ஒருவர் எவ்வளவு தான் பிறவியிலேயே பெரும் திறமைகளையும் ஆற்றல்களையும் பெற்றுக்கொண்டு பிறந்தாலும், அவர் வளர்ந்து வாழுகின்ற சமுதாயச் சூழ்நிலையும், சுற்றுப்புற அமைப்பும் அவரது இயற்கையான நடத்தைகளைக் கட்டுப்படுத்தி, ஒரு புதிய நடத்தையையே கற்றுக் கொள்ளும்படி செய்துவிடுகின்றன.

சுற்றுப்புற சூழ்நிலை ஒருவரது நடத்தையை முழுதுமாக மாற்றிவிடமுடியாது என்றாலும்,அவரது நடத்தையை மாற்றி அமைத்திட முடியும் என்பது இரண்டாவது வாதமாகும்.

ரூசோ, பிரான்சிஸ், கால்டன் போன்ற சுற்றுப்புற சூழ்நிலைதான். ஒருவரை, நன்கு உருவாக்குகிறது என்கிறார்கள்.

இந்த இரண்டு தத்துவக் கொள்கைகளுக்கு இடையில், பல நாடுகள் பெரிதும் குழம்பி, எதை ஏற்பது, எது சிறந்தது என்பதாக ஆய்வுக்குள்ளே ஆழ்ந்து, முடிவெடுக்க முடியாமல் திகைத்துக் கிடக்கின்றன.

இரண்டு மூன்றாகிறது

இந்த இரண்டு கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கு உதவுவது போல, மூன்றாவது ஒரு கருத்தையும் புகுத்திப்பார்த்தார்கள்.உட்ஒர்த், மார்க்யூஸ் போன்றவர்கள். அவர்கள் ஒரு புது சூத்திரத்தையே படைத்துக் காட்டினர்.

அது H + E = 0
H என்பது Heredity- பாரம்பரியம்
E என்பது Environment-சுற்றுப்புற சூழ்நிலை
O என்பது Organism- அவயவங்கள்.

பாரம்பரியப் பண்புகளுடன். சுற்றுப்புறச் சூழ்நிலையும் சுமுகமாக சேர்ந்திருக்க, உடல் அவயவங்கள் பெற்றுள்ள உறுதியாலும் வலிமையாலுமே ஒரு விளையாட்டு வீரன் உருவாகிறான் என்று ஒரு பொது உண்மையைக் கூறுகின்றார்கள்.

அது எப்படி நடக்கும்?

ஒரு விவசாயி சிறந்த வேளாண்மை செய்கிறான் என்றால், அதற்காக, அவன் சிறந்த விதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.நிலத்தை நேரத்தில் பண்படுத்துகிறான் காலம் பார்த்து விதைக்கிறான். வேண்டிய உரங்களைப் போடுகிறான். பயிருக்குப் போதிய நீரைப் பாய்ச்சுகிறான். பூச்சிகள், நோய்களிலிருந்து மருந்திட்டுப் பயிர்களைக் காப்பாற்றுகிறான். அதனால் தானே அவன் எதிர்பார்த்தப் பலன்களை அறுவடை செய்கிறான்.

வேளாண்மையும் விளையாட்டு வீரர்கள் விளைச்சலும் ஒன்றாகத் தானே தோன்றுகிறது.

மாணவர்கள் அல்லது குழந்தைகளில் இயற்கையான திறமைகளை முதலில் அறிந்து கொள்வது, அவர்களில் சுற்றுப்புறச் சூழலை நன்கு புரிந்து கொள்வது. அவர்களது விருப்பம், வேட்கை, இலட்சியம், திறமை, செயல்படும் யூகம், முன்னேறும் வேகம் இவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது. இப்படித் திட்டமிட்ட ஆய்வுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்படும்பொழுது தான், நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்கிட முடியும்.

குழந்தைகள் என்பவர்கள் ஆட்டு மந்தைகள் போலல்ல. ஒரே சத்தத்தில், ஒரே குச்சியை வைத்துக் கொண்டு மேய்த்து விடுவது அல்ல.

குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள் ஆவார்கள். பற்பல பாரம்பரிய குணங்களைக் கொண்டு ஒன்று சேர்ந்திருப்பவர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள தனித்தன்மை போலவே, விருப்பும் வெறுப்பும்,செயல்படும் வேகமும் யூகமும்; விரைவாகவும் குறைவாகவும் இருக்கும்.

ஆக, உடற்கல்வி ஆசிரியர்களின் பணியானது, மிகவும் இக்கட்டானது. குழப்பமானது. குதர்க்கமானது கூட

ஒற்றுமை வேற்றுமைகளை குழந்தைகளிடம் கண்டு கொண்டு, அதற்கேற்பப் பயிற்றுவிக்க வேண்டும். பாரம்பரிய சிறந்த குணங்கள், எழுச்சியூட்டும் சூழல், வளர்ச்சி மிக்க தேகம் மூன்றும் சேர்ந்து அமைவது எப்பொழுதும் சாதாரணமாக அமையாததாகும். ஆகவே தனிப்பட்ட ஒருவரின் உண்மை நிலையை அறிந்து உதவுவது தான் உண்மையான உடற்கல்வி ஆசிரியர்களின் சிறந்த கடமை ஆகும்.

உடற்கயிற்சிக்கு முன், உகந்த இலட்சியத்தை அமைப்பதற்கு முன், குழந்தைகளிடம் உள்ள உடல் வேற்றுமையையும் நன்கு கண்டாகவேண்டும்.

ஆண் பெண் வேறுபாடு

1. உடலமைப்பு வேறுபாடு : (Anatomical Difference)

உடல் அளவில் வேறுபாடு பெண்களைவிட ஆண்களின் அளவு உயரத்திலும், எடையிலும் அதிகமாக உள்ளன. இந்த வித்தியாசம் பிறப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. பிறக்கும் பெண் குழந்தையின் உயரமும் எடையும் பிறக்கும் ஆண் குழந்திையின் அளவை விட குறைந்தே பிறக்கிறது.

பெண் பெரியவளாகும் (Puberty) வரை, ஆணின் வளர்ச்சியுடன் இணையாகவே இருந்து கொண்டு வரு கிறது. பெண் பெரியவள் ஆனவுடன், பையன்களை விட பெண்ணின் உயரமும் எடையும் வேகமாகக் கூடி விடுகிறது.16 வயது ஆனதற்குப் பிறகு, பெண் வளரும் வேகமும் குறைந்துபோகிறது.ஆனால் ஆணுக்கு வளர்ச்சி 23 வயது வரை தொடர்ந்து கொண்டே செல்கிறது.

2. உடலமைப்பில் வேறுபாடு: பெண்ணின் உடல் உறுப்புக்கள் யாவும் மென்மையாகவும், மிக நுண்மையாகவும் ஆக்கப்பட்டுள்ளன. அதற்குக் காரணம் பெண் உடலில் உள்ள வலிமையற்ற எலும்புகளும் தசைகளும் தான்.

பெண்ணின் உடலில் உள்ள எலும்புகள் ஆண்கள் உடலில் இருப்பதைவிட குட்டையானவை. ஆனால் கனமானவையும்கூட

பெண்களின் இடுப்பெலும்பு அமைப்பு (PelvicGirdle) ஆண்களைவிட சற்று அகலமானது. இந்த அமைப்பும் பெண்களுக்கு 20 வயதாகும் போதுதான் விரிவடைந்து கொள்கிறது.

தோள்பட்டை அமைப்பில் ஆண்களைவிட பெண்களுக்கு வலிமை குறைவு. அதனால்தான் தோள் வலிமை குறைவாக இருக்கிறது.

பெண்களின் தொடை எலும்புகள் இடுப்பெலும்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கிற விதத்தில் ஒரு சிறிது கோண அமைப்பில் வேற்றுமை இருப்பதால்,பெண்களின் புவிஈர்ப்புத்தானம் சற்று தாழ்வாகவே விழுகிறது.

எப்பொழுதும் ஆண்களின் உடல் தசைகள் எடையை விட பெண்களின் தசை எடை குறைவாகவே உள்ளது. சாதாரண பயிற்சியின்போது, பெண்ணின் உடல் உஷ்ணமடைகிற சமயத்தில் 2 லிருந்து 3 டிகிரி உஷ்ணம் சீக்கிரமாக அதிகமாகி விடுகிறது. அதுபோலவே விரைவாகக் குளிர்ந்து விடுகிறது என்பதாக பரிசோதனையில் கண்டறிந்திருக்கின்றார்கள். இதைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும்.

பெண்களுக்கு முழங்கால் மூட்டு நிலையானதாக அமைந்திருக்கிறது. (Stable) ஆண்களுக்குரிய உடல் எலும்புகளானது பெண்களை விட நீளமுள்ளதாக இருக்கிறது.

பெண்களின் உடல் அமைப்பை புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளை முறைப்படுத்திடவேண்டும்.

2. உடல் இயக்க வேறுபாடு (Physiological Difference)

1. தசைச் சக்தி: பெண்களுக்குரிய தசைச் சக்தி, ஆண்களுக்குரியதை விட பலஹீனமானதுதான். எவ்வளவுதான் பயிற்சிகள் கொடுத்தாலும், ஆண்களுக்கு மேலாகத் தசைச் சக்தியை உண்டு பண்ணிவிட முடியாது.

ஒரு சாதாரண மனிதன் ஒரு சாதாரண பெண்ணைவிட, கை பிடிக்கும் சக்தியில் (Grip), தள்ளுகிற மற்றும் இழுக்கும் ஆற்றலில் அதிக பலம் கொண்டவனாக விளங்குகிறான். பெண்களால் கடுமையான வேலைகள் செய்ய முடியாது. அப்படித்தான் அவர்களின் உடல் அமைப்பு உள்ளது.

2. இரத்த ஓட்டம்: பெண்களுக்கு இதயத்தின் அளவு கொஞ்சம் சிறிய அமைப்புள்ளதால், உறுப்புக்களுக்கு இரத்தத்தை இறைத்து அனுப்பும் ஆற்றலில் குறைந்துதான் இருக்கிறது. அதனால், அடிக்கடி இரத்தம் இரைத்திட இதயம் முயல்வதால், பெண்களுக்கு ஆண்களை விட இதயத்துடிப்பு அதிகமாகவே இருக்கின்றது.

3. சுவாசநிலை: பெண்களின் நுரையீரல் மற்றும சுவாச வழிகள் ஆண்களைவிட சிறிய அளவினதாக இருப்பதால், சுவாசமானது, கடுமையான பயிற்சிகளை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். தேவையான காற்றுக்குரிய திறமையான சுவாசநிலை போதிய அளவு கிடைக்காததால், கடுமையான பயிற்சி முறைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

4. மாதவிடாய்: இந்த மாதவிடாய் காலம், ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 5 நாட்கள் வரை வந்து நீடிக்கும். இந்த மாதவிடாய் காலத்தில், ஓரிடத்தில் ஓய்வாக இருக்க வேண்டும் என்பது சமுதாய மரபு. மருத்துவர்களின் ஆலோசனையும் அப்படித்தான்.

ஆனால், மாதவிடாய் இருந்த வீராங்கனைகள் ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு கொண்டதுடன், பல சாதனைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்று சரித்திரம் சான்று பகிர்கிறது.

என்றாலும், இந்த நேரத்தில் கடுமையான பயிற்சிகளை செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், என்றாலும் பெண்களுக்கான போட்டிகளை அவர்கள் மாதவிடாய் காலம் பார்த்து வைக்க முடியாதே பந்தயங்களில் பங்கு பெறுகிற பெண்களில் 7 ல் ஒருவர் மாதவிடாய் பிரச்சினைக்கு உள்ளாகிறார் என்ற ஒர் ஆய்வுக் குறிப்பு உரைக்கிறது.ஆக, அவரவர் விருப்பப்படியே தான் இந்தப் பிரச்சினையை விட வேண்டியிருக்கிறது.

5. தாய்மைக் காலம்: தாய்மைப் பேறு ஏற்பட்டவுடனேயே, கடுமையான பயிற்சிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தவிர்த்து விட வேண்டும் என்பது சரியான அறிவுரைதான்.


சோதனைகளும் சாதனைகளும்

பெண்களுக்குக் கடுமையான பயிற்சிகள் செய்திட, காலம் முழுவதும் ஏதாவது கஷ்டங்களும் காரணங்களும் இருந்து கொண்டே இருக்கின்றன என்பது உண்மைதான்.

இவ்வளவு சோதனைகள் இருந்தாலும், அவர்கள் செய்திருக்கிற சாதனைகள் பெரிது. பெரிதோ பெரிது.

ஒடுகளப் போட்டி நிகழ்ச்சிகளில் 3 நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருக்கின்றனர்.

கோலூன்றித் தாண்டும் நிகழ்ச்சி, மும்முறைத் தாண்டும் நிகழ்ச்சி. சங்கிலிக் குண்டு வீசி எறிதல்.

தோள் வலிமை குறைவு; இடுப்புப் பகுதியில் தாண்டும்போது ஏற்படுகிற அதிர்ச்சி அதிகம்; இரும்புக் குண்டை வீசி எறியும் வேகத்தின்போது உண்டாகும் நிலை; இவற்றை எண்ணித்தான் அவர்களுக்குப் போட்டியிட அதிகாரம் வழங்கப்படவில்லை.

இருந்தாலும், எறியும் போட்டிகளில், தாண்டும் போட்டிகளில் ஒட்டப் போட்டிகளில் அவர்கள் செய்திருக்கும் சாதனைகள், ஆண்களை நெருங்கிக் கொண்டு மட்டும் இல்லை, வென்று விடுவோம் என்று நெருக்கிக் கொண்டும் இருக்கிறது. 

நிகழ்ச்சி ஆண்கள் சாதனை பெண்கள் சாதனை
உயரம் தாண்டல் 2.43 மீட்டர் 2.9 மீட்டர்
நீளம் தாண்டல் 8.90 மீட்டர் 6.34 மீட்டர்
வேலெறிதல் 104.80 மீட்டர் 78.90 மீட்டர்
தட்டெறிதல் 74.08 மீட்டர் 74.56 மீட்டர்
100 மீட்டர் ஓட்டம் 9.83 நொடி 10.76 நொடி

ஆண் பெண் உடலமைப்பில் உள்ள ஆற்றல் விகிதம் பற்றி அறிந்து கொள்ளும் நேரத்தில், அவர்களின் உடல் அமைப்பைப் பற்றியும் விதம் (Type) பற்றியும் தெரிந்து கொள்வது நலம் பயப்பதாகும்.

உடல் பிரிவுகள் (Body Types)

மனித உடலின் நுண்மையை ஆராய்ந்த அறிஞர்கள் அவை மூன்று வகைப்படும் என்று அறிவித்தார்கள்.

உடலியலில் அறிஞர்களும், தத்துவஞானிகளும் கூட இந்த மேன்மைமிகு முயற்சியில் ஈடுபட்டு, உடலைப் பிரித்து வைத்து, அத்தகையோர்களின் குணநலன்கள், மன வளங்கள் முதலியவற்றையும் விளக்கமாக விவரித்து வைத்தார்கள்.

சில சமயங்களில் அவர்கள் கூறிய முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக இருந்தது. ஆனால், அவற்றை விஞ்ஞானபூர்வமாகவே விளக்க வேண்டியும் இருந்தது.

இந்த அறிவியல் முறைப்படி ஆய்வு செய்த திசை நோக்கி முதலில் நடந்தவர் கிரெஸ்ட்ச்மெர் (Krestchmer) என்பவர். அவரைப் பின்பற்றி உடல் பிரிவுகளின் வகைகளைக் கூறியவர் ஷெல்டன் (Sheldon).

அவர்கள் இருவரும் பிரித்த விதம் ஒன்று போல இருந்தாலும், பெயர்களில் தான் வித்தியாசம் இருக் கிறது. இவர்களுடன், உளவியல் அறிஞர்கள் பிரித்த பிரிவுகளும் ஒன்று போல் இருக்கிற உண்மையையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

கிரெஸ்ட்ச்மெர் ஷெல்டன் உளவியலாரின்
பிரிவுகள் பிரிவுகள் பிரிவுகள்
1. பிக்னிக் என்டோமார்ப் என்ஸ்ட்ராவெர்ட்ஸ்
(Pyknic) (Endomorph) (Extroverts)
2. அத்லெடிக் மெசோமார்ப் ஆம்பிவெர்ட்ஸ்
(Athletic) (Mesomorph) (Ambiverts)
3. ஏஸ்தெனிக் எக்டோமார்ப் இன்ட்ராவெர்ட்ஸ்
(Astenic) (Ectomorph) (Introverts)

வில்லியம் ஷெல்டன் என்பவர் உடல் அமைப்பை மட்டுமே ஆய்வு செய்து பார்த்திருக்கிறார். உடல் அளவை (Size) அல்ல. உடல் அமைப்பு (Shape) ஆய்ந்த அவர், அதற்குள் அமையப்பெற்ற தனிப்பட்டவரின் உடல் அமைப்புக்காக ஒரு அளவுகோலை அமைத்து 1 முதல் 7 எண்ணிக்கை வரை அமைப்பு நிலையை விரித்துக் காட்டினார்.

எப்படியிருந்தாலும், உடல் பிரிவுகள் அமைப்பாலும் அளவாலும், அவற்றிற்கேற்ப குணாதிசயங்களாலும் அமைந்துள்ளன என்பதைப் பற்றி இனி விளக்கமாகக் காண்போம்.

1. பெரு உடல் அமைப்பு (Pyknic, Endomorph)

பெரிய உடல் அமைப்பு என்று பெயர் பெற்றிருக்கும் இவ்வுடல் பிரிவானது, உயரத்திலும், அகலத்திலும் பெரிதாகவே அமையப்பெற்றிருக்கிறது.

உறுப்புக்கள் நீளமாகவும், கனமானதாகவும் இருக்கும். தசைகளும் பெரிதாகவும், அதன் நார்களின் அளவுகள் பெரிதாகவும் இருக்கும்.

பெரிய தடித்த கழுத்தும், பானை போன்ற பெருவயிறும், நீண்ட குடற்பகுதிகள், நீண்ட கைவிரல்கள், அகலமான கைப்பகுதிகளும் கொண்டவர்களாக இப்பிரிவினர் இருப்பார்கள்.

தடித்த தோலும் அடர்த்தியற்ற தலை முடியும், உடல் முழுவதும் கொழுப்பும் தசைகளும் சேர்ந்த தசைத் திரள்களும், அதே சமயத்தில் அவைகள் உறுதியுள்ளதாகவும், இருக்கும். உருண்டையான தலை அமைப்பும், அகலமான முக விசாலமும் சதுர வடிவான தாடையும், சிறியதாக உட்புறம் அமைந்த குவிந்த கண்களுமாக இப்பிரிவினர் காட்சியளிப்பார்கள்.

சிறந்த ஜீரண சக்தி இவர்களுக்குண்டு, எந்தவிதமான கடினமான உணவு வகைகளையும் போதுமான அளவுக்கு ஜீரணம் செய்கின்ற வல்லமை படைத்த ஜீரண மண்டல அமைப்பு இருப்பதால், தேவைக்கு மேலே உடல் சக்தி கொண்டவர்களாகவும் விளங்குகிறார்கள்.

சமூக அமைப்பில், மற்றவர்களுடன் கலந்துறவாடுவதில் மகிழ்ச்சியும், அவர்களிடையே சொற்பொழிவாற்றுவதில் சுகமான இன்பமும் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இவர்கள் செயல்திறன் வேடிக்கையானது. முதலில் ஒரு காரியத்தை செய்துவிட்டு, பிறகு அதைப் பற்றி சிந்திக்கும் இயல்புள்ளவர்கள் இவர்கள். தங்கள் திறமைகளில் அதிகமான நம்பிக்கை வைத்திருந்தாலும் வாழ்க்கை யில் தங்கள் இலட்சியம் பற்றிய நினைவுகளில் அவ்வளவாக எழுச்சியற்ற மனதுடனேயே வாழ்வைக் கழிப்பார்கள்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் காணப்படுகின்ற இப்பிரிவு மக்கள், எப்பொழுதும் ஒரு வேலையில் நிலைத்து இருக்க மாட்டார்கள். பட்டாம் பூச்சி பறப்பது போல இவர்கள் அன்றாட செயல்களின் தன்மைகள் நிறைந்து இருக்கும்.

குண்டாகவும் குள்ளமாகவும் கூட இவர்கள் விளங்குவார்கள். இவர்களை வெளி உலக சிந்தனையாளர்கள் (Extrovert) என்றும் அழைப்பார்கள். அதாவது இவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் உள்ளாற்றல்கள் பற்றியும் சிந்திக்காமல், தங்களைச் சுற்றியுள்ள வெளியுலகைப் பற்றியே சிந்திக்கும் இயல்புள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

விளையாட்டுக்களில் இவர்கள் ஈடுபடும் பொழுது, வலிமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளிலேயே பங்கு பெறும் இயல்புள்ளவர்கள். எறியாளர்களாக (Throwers) பலர் இருப்பார்கள். சில சமயங்களில் விரைவோட்டக் காரர்களாகவும் இப்பிரிவினர் அமைந்து விடுவதும் உண்டு.

2. குறு உடல் அமைப்பு (Asthenics or Ectomorph)

குறு என்றால் குள்ளமான அல்லது குறுகிய என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த உடல் பிரிவைச் சார்ந்தவர்கள் குள்ளமாக, அதே நேரத்தில் ஒல்லியானவர்களாகவும் அல்லது உயரமாகவும் ஒல்லியானவர்களுமான தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்கள் உயரத்திலும் அமைப்பிலும் வித்தியாசம் இருந்தாலும், பொதுவாக, அவர்கள் மெலிந்த தோற்றத்தினர் போல் விளங்குவார்கள்.

அவர்கள் உடல் தசைகள் குட்டையானதாகும் (Small), கவிழ்ந்து தொங்கும் தோள்களும், அவரது கைவிரல்களும், பாதங்களும் நீண்டும் நீளமாகவும் அமைந்திருக்கும்.

கைகள் குட்டையானதாக அதாவது நீளமற்றதாக இருக்கும். ஆனால் கால்களோ நீண்டும், குறுகிய அமைப்புடனும், காலின் வளைவும் (Arch) உயர்ந்த வளைவாக இருக்கும்.

இவ்வாறு நீண்டு நெடிதுயர்ந்த தோற்றத்துடன இருப்பவர்கள். அதிக ஆற்றலும் சக்தியும் (Vital Capacity) குறைந்தவர்களாக விளங்குவார்கள். அவர்களின் தோல் மெலிதாகவும், மென்மையாகவும் அமைந்திருக்கும்.அதில் அதிகமான மயிர்த்திரள் முளைத்திருக்கும்.

தலையின் அமைப்பு பெரிது. ஆனால் முகமும் தாடைகளும் குறுகிய வடிவினதாக இருக்கும். வாயின் உட்புற வளைவுகூட உயரமானதாக இருக்கும்.

இப்பிரிவினரின் முதுகெலும்பு அதிக வலிமையும் கனமும் குறைந்ததாக அமைந்திருக்கும். நுரையீரலும் இதயமும் அளவில் சிறியதாக இருந்தாலும், வயிறு நீண்டதாகவும் குழாய் வடிவு போலவும் அமைந்திருக்கும். அதனால் ஜீரண காரியங்கள் வேகமாக இராமல், தாமதமாக நடைபெறும். அதனால், தேகத்தில் அதிக சக்தியின்மை இருக்கும்.

அவர்களின் மெலிந்ததேகம், வலிமை குறைந்த சக்தி, மென்மையான அமைப்பு இவற்றால், அவர்கள் செய்யும் செயல்களில் மெதுவாக இயங்கும் தன்மையே மிகுந்து இருக்கும். பிரதிசெயலில் (Reaction) வேகம் இருக்காது.

ஒரு காரியம் செய்ய பெரு முயற்சி எடுத்துக் கொண்டு விட்டால், அந்தக் காரியம் முடிந்த பிறகு, அந்தக் களைப்பிலிருந்து அவர்கள் விடுபட்டு, புது சக்தியுடன் வெளிவர, அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதன் காரணமாக, அவர்கள் மூளைக்கு அதிகமாக வேலை கொடுத்து, வருகிற பிரச்சினைகளை முடித்துக் கொள்வதில், முனைப்பு காட்டுவார்கள். தங்களுடைய தேகசக்தியை அநாவசியமாக செலவு செய்வதில் சிரத்தை காட்டமாட்டார்கள்.

இப்பிரிவினர் எதற்கெடுத்தாலும், விரைவில் உணர்ச்சி வசப்படுகின்றவர்களாகவும், அதிசீக்கிரம் குழந்தைகள் போல ஆத்திரமடையும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை உளநூல் அறிஞர்கள் தன்னுலக சிந்தனையாளர்கள் (Introverts) என்று அழைப்பார்கள்.

இவர்கள் தங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டும் தங்களது எண்ணங்களையும், உணர்வுகளையும் தாங்களே எடைபோட்டுக்கொண்டு சிந்திப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நிறைய ஆசைக் கனவுகளும் இலட்சியங்களும் உண்டு என்றாலும் அவற்றை அடைந்திட தங்களுக்குப் போதிய தகுதியில்லை என்கிற தாழ்வு மனப்பான்மையையும் வளர்த்துக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உடலில் சதைப்பற்று அதிகமில்லாதிருக்கும் தங்களுக்கேற்ற தொழிலைத் தேர்ந்தெடுத்து,அதன் வழி செல்லும் ஆற்றல் உள்ளவர்கள், கூடைப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் அதிக ஆர்வத்துடன் பங்கு பெறுவார்கள். ஒட்டக்காரர்களில் பலர் இப்பிரிவினராக இருப்பது ஆச்சரியம் அளிக்கக் கூடிய ஒன்றாகும்.

3. சீருடல் அமைப்பு: (Athletic, Mesomorph)

சீர் என்றால் அளவானது, ஒழுங்கானது, சிறப்பானது என்ற நாம் பொருள் கொள்ளலாம்.

இந்த சீருடல் அமைப்பு முன்னர் நாம் விளக்கியுள்ள இரண்டு உடலமைப்புகளுக்கும் இடைப்பட்ட பிரிவாக அமைந்திருக்கிறது.

பரந்து விரிந்த தோள்கள்; குறுகிய இடை அமைப்பு; இடுப்புக்கு மேற்புறமான மார்புப்பகுதி முதல் தலைவரை நல்ல அகலமும் திண்மையும் கொண்ட சிறப்பு சீரான வளர்ச்சி பெற்ற தசைகளின் பொலிவு, இவர்களை ஹெர்குலிஸ் பரம்பரை என்று பிறர் போற்றும் வண்ணம் உடலமைப்பு இருக்கும்.

இவரது தொண்டைப் பகுதி வட்ட வடிவம் கொண்டதாக, வயிற்றின் மேற்புறமும் உருண்டை வடிவானதாக, அழகான அமைப்பினைக் கொண்டிருக்கும். வலிமையான கழுத்தும், அதன் மேல் தோரணையுடன் வீற்றிருக்கும் தசையோ செம்மாந்தும் அடர்ந்திருக்கும்.

நல்ல வடிவமைப்புடன், அழகுக் கவர்ச்சியுடன் முக அமைப்பு இருக்கும். அதாவது ஒவல் (Oval) வடிவத்தில் உறுதியான தாடையுடன் அமைந்திருக்கும்.

உறுதியான முதுகுத்தண்டு, அதன் லம்பார் பகுதியில் மெலிதான வளைவு, மிக நேர்த்தியாக அமைந்திருக்கும்.அவர்களின் தோல் அமைப்பானது நேர்த்தியாக  இல்லாமல் சற்று மென்மையற்ற பசையற்ற தன்மையுடன் அமைந்திருக்கிறது.

இந்த உடல் பிரிவினர்கள் வேறுபட்ட குணநலம் கொண்டவர்களாக இருப்பதற்குக் காரணம், இவர்கள் முன்னர் கூறிய இரண்டு பிரிவுகளிலும் இணைந்த கலப்புள்ளவர்களாக இருப்பதேயாகும்.

குறிப்பு : பொதுவாக, எல்லா மக்களும் இப்படிப்பட்ட மூன்று பிரிவுகளுக்குள்ளே அடங்கியிருப்பதாகக் கூறிவிட முடியாது. மூன்று பிரிவுகளில் உள்ள குணாதிசயங்களில் தொட்டும் விட்டும் என்பது போல, தொடர்பு கொண்டவர்களாகவே விளங்குகின்றார்கள். இந்த மூன்றும் கூறுகிற குறிப்புகள் யாவும் ஒன்றுக் கொன்று சுதந்திரமாக இருக்கிறதென்றும் கூறிவிட இயலாதவாறு அமைந்திருக்கிறது என்று கருத்தும் நிலவி வருகிறது.

இதில் விடுபட்டுப்போன குறிப்பொன்றையும் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.மக்களை உடல் வகையாகப் பிரிக்கும்போது, அவர்களின் வயதுப்படி, உடல் தகுதி திறன்படி, ஆர்வம், ஆசை இவற்றையும் கணக்கில் கொண்டு பிரிக்கவில்லை என்பதுதான் அந்தக் குறையாகும்.இருந்தாலும் இதனை ஒரு மேன்மையான முயற்சியின் தொடக்கம் என்றே நாம் கூறலாம்.

இவ்வளவு ஆர்வத்துடன், உடலைப் பற்றி ஆய்ந்து, பகுத்துப் பிரித்துப் பார்த்த பண்பாளர்கள், உடலின் அரிய ஆற்றலையும் அருமையையும் போற்றிப் புகழ்ந்துள்ளார்கள். அதன்படி, உடலின் நலம் காண எப்படிப் பயன்படுத்தவேண்டும் எப்படிப் பயன்படுத்தக்கூடாது  என்று போதித்திருக்கின்றார்கள்.அத்தகைய ஆலோசனை முறைகளையும் நாம் அறிவது நல்லது.

பயன்படுத்தலும் பயன்படுத்தாதிருத்தலும் (Use & Disuse)

உடல் என்பது அபூர்வமான, அதிசயம் நிறைந்த ஒர் ஒப்பற்ற எந்திரமாகும். அது பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலும் ஓயாது உழைத்து, தானே வளர்ந்து, தானே நிறுத்தி, தேவையைப் பெற்றுக் கொண்டும், முடிந்தால் தானே தீர்த்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த, சகல சித்திகளும் நிறைந்த உன்னதமான உயிர் வாழும் எந்திரமாகும்.

என்றும் பழுதாகாமல் பத்திரமாக இந்த எந்திரத்தைக் காக்கும் தந்திரம் ஒன்று உண்டு. அந்தத் தாரக மந்திரத்தின் பெயர் தான் உழைப்பு என்பது.

நமது உடலாகிய வளரும் எந்திரத்தை, நல்ல முறையில் காத்துக் கொள்ள உழைப்பே உதவுகிறது. உழைக்கும் நேரத்தில் உடலில் உண்டாகும் தேய்வுகளை உடல் தானே புதுப்பித்துக் கொள்கிறது. பழைய திசுக்களை போக்கி, புதிய திசுக்களை உண்டாக்கியும் கொள்கிறது.

இவ்வாறு சக்தி வாய்ந்த ஒர் உயர்ந்த எந்திரத்தை, உழைப்புதான், உயிரோட்டமாகக் காத்து வளர்க்கிறது. உழைப்பு தான் உடலுக்கு வேண்டும்; உடலை நாம் உழைப்புடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால், எப்படி பயன்படுத்துவது என்ற வினாதான், நம் முன்னே வந்து முகம் காட்டி நிற்கும்.

பக்குவமாக பயன்படுத்துவது நாம் செய்யக் கூடிய வேலை. பயன்படுத்தாமல் விட்டுவிடுவது நாம் செய்யக்கூடாத வேலை.

உடலை அதிகமாக பயன்படுத்துவது நாம் செய்தே அழிகிற வேலை.

இவற்றை எப்படி செய்வது என்று இனி காண்போம்.

பயன்படுத்தும் பக்குவம்

உடலை இயற்கையாகவும் இதமாகவும் பயன்படுத்திட வேண்டும். ஏனெனில் அது வளரும் சக்தியுள்ள எந்திரமாகும். இப்படி மிக நுண்மையான உறுப்புக்களுடன் உருவாகியுள்ள உடலை, தேர்ந்த உடற் பயிற்சிகளாலும், செயல்களாலுமே பயன்படுத்திட வேண்டும்.

நமக்குத் தெரியும் உயிர்களுக்கும் உடல்களுக்கும் அடிப்படைத் தேவைசெயல்களும் இயக்கங்களும், என்று அந்த இயக்கங்களும் செயல்களும்தான் உடலை வளர்க்கின்றன. வாழ்விக்கின்றன. வளமாக்குகின்றன. சுகப்படுத்துகின்றன.

நாம் வாழும் நவீன காலமோ, உழைப்பை உதாசினப் படுத்திவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் வாழ்க்கையை வளமாக்கியதுடன் வசதிகளை நிறைத்து அசதிகளைக் கொடுத்து விட்டன.

இதனால், மனிதர்கள் வேலை செய்யக் கூடிய வாய்ப்புக்களை இழந்தனர். கட்டாயமாகத் துறந்தனர். வேலைகள் செய்யக் கூடிய சூழ்நிலைகள் வந்தாலும் வெறுத்தனர்.உழைக்கவும் மறுத்தனர்.

சோம்பல் மக்களை சூழ்ந்துகொண்டது.தேசத்தின் உழைக்கும் ஆற்றலும் தாழ்ந்தது. மனித உடலின் வலிமையும் வீழ்ந்தது.மனித உடலுக்கு உழைப்பே முதன்மையான தேவை என்பதை மக்கள் மறந்து போனதால், அதை உணர்த்தும் நேரம் இப்பொழுது வந்துவிட்டது.

காரணம் - நோய்கள் கூட்டம் மனித இனத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டதுதான். அவைகளிடமிருந்து விடுதலைபெற, கெடுதலைத் தடுத்திட உயிரியல் மக்களிடம் உரக்கப்பேசத் தொடங்கியது.

பயன்படுத்தாமல் உடலை விட்டுவிடுவது என்பது வேலை செய்யாமல் இருத்தல் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருத்தல் என்று உயிரியல் உரைத்தது, உண்மையை வழிநெடுக நிறைத்தது.

உடலைப் பயன்படுத்தாமல் போனால், உடலில் நலிவுகளும் மெலிவுகளும் மட்டுமா ஏற்படுகின்றன? இயற்கையாக உடலில் உள்ள திறமைகள் தளர்ச்சியடைகின்றன. மேலும் வளர்கிற வளர்ச்சியை இழக்கின்றன. உறுப்புக்களின் வளர்ச்சிகள் குன்றிப் போகின்றன. திறன் நுணுக்கங்களின் முன்னேற்றமோ நின்று போகின்றன.

ஆகவே, சரியாக உடலைப் பயன்படுத்துதல், உறுப்புக்களின் சிறந்த வளர்ச்சிக்கும், உடலின் மேன்மையான எழுச்சிக்கும், திறமைகளின் தேர்ச்சிக்கும் உதவுகிறது. பயன்படுத்தப்படாத உடலோ பாழாகிப் போகின்றது. நோயோடு நோகின்றது என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகளாகும்.

மிகுதியாக உடலைப் பயன்படுத்துதல் (Over Use) என்பது மிகவும் மோசமான காரியமாகும். உடலின் சக்திக்கு மேலாக உடலைப் பயன்படுத்துதல், உடல் உறுப்புக்களைப் பாதிக்கும், வளர்ச்சியையும் சேதப்படுத்தும்.

உடலை அதிகமாகப் பயன்படுத்தும் செயலால், வளர்ச்சியின் வேகம் தடைப்பட்டுப் போகும். உயிர்க் காற்றின் அளவு குறைந்து மூச்சடைப்பு நிலை ஏற்படும், உடல் சமநிலை இழந்து போகும். சரியான உடல் வளர்ச்சிக்குன்றி, சரிவு நிலை உண்டாகும்.உடலமைப்பும், உளவியல் செழிப்பும் சேதமடைந்துபோகின்றன.

ஆகவே, பக்குவமாக, பதமாக, உடலின் நிலை பார்த்து, நிதானமாக, நெறியோடு பயன்படுத்தும் பணியை, திட்டமிட்ட அறிவியல் கலந்த உடற்பயிற்சி முறைகள் செய்கின்றன. ஆகவே, உடற்பயிற்சிகளை உண்மையோடு பயன்படுத்தி,நல்ல பயன்களைப் பெற நாம் முயல வேண்டும்.

உறுப்புக்களின் சீரும் செயற்கூறும்

உடலின் சீரான இயக்கம் அதன் தசைகளில் தான் இருக்கின்றன. இரண்டு இரண்டாக இணைந்துள்ள தசைகள், ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருந்து விட்டுக்கொடுத்து, சிறப்பாக செயல்படுகின்றன. இதை (Reciprocal Innervation) என்று கூறுவார்கள்.

இப்படி செயல்படும்போது உறுப்பின் ஒரு பிரிவுத் தசைகள் சுருங்க, மற்ற பிரிவுத் தசைகள் அதனுடன் எதிர்த்து செயல்பட இப்படித்தான் தசைகள் இயங்குகின்றன. இந்த அமைப்புதான் எளிதான, இனிதான இயக்கத்தை ஏற்படுத்தித் தருகின்றது.

இழுக்கும் தசைகளை (Agonists) என்றும், எதிர்க்கும் தசைகளை (Antagonists) என்றும் கூறுவார்கள்.

இப்படிப்பட்டதசைகள் எலும்புகளுடன் இணையப் பெற்று, எலும்புத் தசைகள் (Skeletal Muscles) என்று பெயர்  பெற்றிருக்கின்றன. இவை எப்படி செயல்படுகின்றன என்பதை ஒர் உதாரணம் மூலமாகக் காண்போம்.

நமது கையின் மேற்புறத் தசையை (புஜம்) யும் என்பார்கள் (upperhand). அது இருதலைத் தசை (Biceps) முத்தலைத்தசை (Triceps) என்று இருவகையாகப் பிரித்து செயல்படுகிறது. இதன் இணக்கமான பணி என்பது இருதலைத் தசை சுருங்கும்போது, முத்தலைத் தசை விரிந்து, அந்த இயக்கத்திற்கு ஒத்துழைப்புத் தருகிறது. இப்படியாக மாறி மாறி சுருங்கியும் விரியும்போதுதான், புஜத்தின் சீரான இயக்கம் சிறப்பானதாக அமைகிறது.

இப்படி ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து இயங்காவிடில், உடல் இயக்கம் ஒரு தன்மையில் அமை யாது. சீரான செயல்பாடுகளும் நடவாது. எப்படியோ இயங்கினாலும் அந்தந்தத்தசைகள் தங்களுக்குரிய பழைய இடத்திற்கும் வந்து சேராது. உடலியக்கமே உதவாத இயக்கமாக மாறிப் போய்விடும்.

ஆரம்ப காலத்தில் குழந்தைகளின் இயக்கங்களில் குழப்பமும் தடுமாற்றமும் இருப்பதை நீங்கள் கவனித் திருப்பீர்கள். அவர்கள் நடையின், ஒட்டத்தில், தாண்ட லில், குதித்தலில் ஒழுங்கின்மைநிறைய இருக்கும்.காரணம், அவர்களது தசைகளுக்கிடையே சரியான கூட்டுறவு செயல்பாடுகள் இல்லாததுதான்.

செயல்படும் தசைகளும், எதிர் செயல்படும் தசை களும் ஒன்றுக்கொன்ற சேராது, சேர்ந்து செயல்படும் முறைகளைக் கற்றுக் கொள்ளாது இருப்பதால் தான், அவர்கள் செயல்கள் அவ்வாறு இருக்கின்றன. திரும்பத் திரும்ப அந்தத் திறமைகளைச் செய்து கொண்டே வரும்போது, திறமைகளில் ஈடுபடும் தசைகள் கற்றுக் கொண்டு, கணக்காகக் காரியமாற்றுகின்றன. அந்த இணக்கமான இயக்கங்கள் பிறகு எளிதாக வந்து விடுகின்றன.

எவ்வளவு இயக்கலாம்?

தசைத் திரள்களை நாம் முன்னே விளக்கியவாறு இணக்கம் பெறத்தக்க அளவிலும் இயக்கிக்கொள்ளலாம். செயல்படலாம். ஆனால், தசைகளை நீட்டிப்பதற்கும், சுருக்கவும், விரிவாக்குவதற்கும் ஒர் அளவு உண்டு. எல்லையும் உண்டு.

எல்லைக்கும் மேலாக விரிவாக்கினால், செயலே துன்பமாகி விடும். தசைகளுக்கு காயம் அல்லது சுளுக்கு அல்லது பிடிப்பு ஏற்பட்டு விடும்.

தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி ஆணையிடுகின்ற காரியத்தை மூளை மேற்கொண்டிருக்கிறது. மூளை கொடுக்கிற கட்டளையானது மத்திய நரம்பு மண்டலத்தின் மூலமாகத் தசைகளுக்குச் சென்று மீள்கிறது. கட்டளையை தசைகள் ஏற்றுக் கொண்டு செயல்படுகிற வேகத்தை, தசைகள் நல்ல நிலையில் இருப்பதைக் கொண்டே நிர்ணயிக்க முடியும்.

மூளையின் கட்டளை வேகமானதாக இருந்தால், தசைகளும் வேகமாக செயல்படவேண்டியிருக்கும். சக்திக்கு மீறிய செயல்களைத் தசைகள் செய்யும் போது, அப்படி செய்ய வேண்டும் என்பதால், மூளையும் அதிகப்படுத்தப்பட்டுப் போகிறது. ஆகவே, தசைகளை இயக்கும்போது, குறிப்பிட்ட எல்லையை மீறாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும். 

மாணவர்களுக்கு உடற்பயிற்சிகள் கொடுக்கும் போது, தசைகளை அதிக அளவு நீட்டித்து, துன்பம் அளிக்காத வகையில், திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிகளின் அவசியம்

தசைகளை வலிமைப்படுத்த, உறுப்புக்களை வளப்படுத்த உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

ஆகவே, உடற்பயிற்சிகளை தினந்தோறும்செய்தாக வேண்டும், என்ற அவசியநிலை ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கிறது.

உடற்பயிற்சியும் உடலுக்குத் தேவையான ஒருவகை உணவாகிறது. அந்தப் புதுவகை உணவுதான், உடலுறுப்புக்களுக்கு வளர்ச்சியையும், பெருக்கத்தையும் அளிக்கிறது.

விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சி அளித்த முடிவுகளின்படி, உடற்பயிற்சியானது, தசைகளுக்கு வலிமை, அழகான அமைப்பு, இரத்த ஒட்டத்தில் வேகம், சுவாசத்தில் ஆழ்ந்த பயிற்சி, கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதில் விரைவு, உடல் செல்களில் ஏற்படும் மாற்றங்களில் நுண்மை, உடல் ஆற்றலில் தேர்ச்சி, என்று எல்லா நலன்களையும் உடலுக்கு அளிக்கிறது.

மேற்கூறிய மனோன்னதமான பயன்களை அனுபவிக்க நாம் அன்றாடம் உடற்பயிற்சிகளைக் கட்டாயம் செய்தாக வேண்டும். எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது பற்றி எந்த விஞ்ஞானமும் எடுத்துக் கூறவில்லை. 

உடற்பயிற்சியானது மனிதனுக்கு மனிதன், வயதுக்கு வயது, செய்கிற தொழிலுக்கு ஏற்ப வித்தியாசப்படுகிறது.

சிறு குழந்தைகளுக்கு அந்த வயதில், வேறு எந்த வாழ்க்கைப் பிரச்சினைகளும் இல்லையென்பதாலும், அவர்களுக்கு விளையாட்டுதான் மகிழ்ச்சி, அதுவே வாழ்க்கை என்பதாலும், குழந்தைகளை வேண்டிய அளவு விளையாடச் செய்வோம். அவர்களுக்கு நல்ல அனுபவங்களையும், உறுப்புக்களின் ஒருங்கிணைந்த தேர்ச்சிமிக்க செயல்களையும், விளையாட்டு அளிக்கும் என்பதால், அவர்களை நிறைய விளையாடச் செய்யலாம்.

இளைஞர்களுக்கு உடற்பயிற்சி என்கிறபோது, வயது, உணவு வசதி, சூழ்நிலை, செய்யும் வேலை இப்படிப் பார்த்துப் பயிற்சிகளை ஆளுக்கேற்ற பயிற்சிகளை அளிக்க, திட்டமிட்டுத் தர வேண்டும்.

முதியவர்களுக்கு உடற்பயிற்சி என்கிறபோது வலிமை குறைந்த வேகமில்லாத சாதாரண பயிற்சிகளைத் தரலாம். யோகாசனம், எளிமையாக இயக்கும் பயிற்சிகள், தொடர்ந்து உதவி வருகிற சுவாசப் பயிற்சி முறைகள் போன்றவற்றை வயதானவர்களுக்குக் கொடுக்கலாம்.

இப்படிப்பட்ட பயிற்சிமுறைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்ச்சியையும் முதியவர்களுக்கு வழங்கும். அதுவே அவர்களை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழச் செய்துவிடும்.

உடற்பயிற்சிகள் உண்டாக்கும் நன்மைகள்

கடுமையான உடற்பயிற்சிகள் என்பது உடலின் வலிமையை வளர்க்கவும், அதனுள்ளே மறைந்து கிடக்கும்  அளப்பறிய ஆற்றல்களை வெளிக் கொணரவும் மேற்கொள்கின்ற முயற்சிகளாகும். வாழ்கின்ற காலம் வரை வளமாக நலமாக வாழ்விக்கும் இலட்சியப் பணிகளாகும்.

அந்த இன்பகரமான இலட்சிய வாழ்வை உடற்பயிற்சிகள் எப்படி உண்டாக்கி உதவுகின்றன என்று காண்போம்.

1. உடலின் அடிப்படை ஆதார சக்தியாய் விளங்குவன செல்கள் அந்த செல்கள் வளர்ச்சி பெற, வளர்ந்து வளர, (Metobolism) இளமையைக் காத்து வலிமை பெற, உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

2. இதயத்தின் அளவில் பெருக்கவும், வலிமையில் மிகுதிபெறவும் செய்கிறது. அதன் மூலம், உடலுக்கு அதிகமான இரத்தத்தை இறைத்து விடுகின்ற ஆற்றலை வளர்த்து விடுகிறது. இதனை விஞ்ஞானிகள் சிறப்பாக வெளிப்படுத்திக் காட்டுகின்றனர்.

இதயம் ஒரு முறை துடித்து இரத்தத்தை இறைக்கும் பொழுது 2 அவுன்சு இரத்தம் வெளியாகிறது. இப்படியாக, ஒரு மணிநேரத்திற்குள், இதயம் இறைக்கும் இரத்தத்தின் அளவு 341 லிட்டராகும். அதாவது 75 கேலன்கள் ஆகும்.

இதே இதயம், உடற்பயிற்சி செய்கிற போது, ஓட்டத்தின்போது, ஒரு மணி நேரத்திற்குள்ளாக 2273 லிட்டர் இரத்தத்தை இறைக்கிறது. அதாவது 500 கேலன்கள் என்பது, உடற்பயிற்சி தருகிற உத்வேகத்தை அல்லவா காட்டுகிறது.

3. உடற்பயிற்சி செய்யாதவர்களை விட, செய்பவர்களுக்கு நாடித்துடிப்பு சீராகவும் இருக் கிறது. விரைவாக இயற்கையான நிலைக்கு வந்து விடும் வல்லமையை இதயத்திற்கும் மற்ற முக்கியமான உறுப்புகளுக்கும் வளர்த்து விடுகிறது.

4. உடலில் தோன்றுகிற லேக்டிக் ஆசிட் (Lactic Acid) என்னும் கழிவுப் பொருள் உண்டாகிற வேகத்தைக் கட்டுப்படுத்தி விடுவதன் மூலம், சீக்கிரம் களைப்படைகின்ற நிலையைத் தடுத்து விடுகிறது உடற்பயிற்சி, அதாவது, அதிக நேரம் உழைத்தாலும், அதி சீக்கிரம் களைத்துப் போகா வண்ணம் காத்து நிற்கிறது.

5. உடற்பயிற்சியானது இரத்த நாளங்களை வலிவுப் படுத்துவதுடன், விரிவுப்படுத்திக் கொண்டும் இருப்பதால், இரத்த அழுத்தம் (Blood pressure) ஏற்படாத வண்ணம் செய்து விடுகிறது.

6. எலும்புகள் வலிமையடைகின்றன. எலும்புகளின் மூட்டு பகுதியில் உள்ள எலும்புச் சோறு (Marrow) செழுமை அடைகிறது. அங்கிருந்து தோன்றுகிற லட்சக்கணக்கான சிவப்பு இரத்த அணுக்களின் தோற்றமோ வலிமையுடன் இருக் கின்றன. எண்ணிக்கையில் மிகுந்து, வலிமைக்குள் வாழும் அவைகள், இரத்தத்தை மேன்மைப்படுத்துகின்றன.

7. உடலைக் காத்துக் கிடக்கும் வெள்ளை இரத்த அணுக்கள், தசைகளின் விசைச் சக்தி வளர்ச்சியால், அதிக எண்ணிக்கையைப் பெறுகின்றன.

8. சுவாசத்தின் தன்மை சுமுகமடைகின்றது. பெறுகிற பிராண வாயுவின் அளவு பெருகி நிற்கின்றது.

ஒரு நாளைக்கு நாம் இழுக்கிற காற்றின் அளவு 3000 கேலன்கள் ஆகும். ஒரு வாரத்திற்கு அதன் அளவு 21,000 கேலன்கள் ஆகும். அதையே ஓராண்டுக்கு என்பதாக்க் கணக்கிட்டால், 1.15 மில்லியன் கேலன்கள் ஆகின்றன. உடற்பயிற்சி செய்பவர்களின் நுரையீரல்கள் இன்னும் வலிமை பெற்று, நிறைய காற்றைப் பெற்றுக் கொள்கின்றன.

9. அடிக்கடி சுவாசமிழுத்து உறுப்புக்களை நோகடிக்காமல், ஆழ்ந்த மூச்சிழுத்தலைச் செய்யத் தூண்டி, சுவாச எண்ணிக்கையைக் குறைத்து, வலிமைப்படுத்துகிறது. சுவாசத்தில் சிக்கனமான முயற்சி, அதிகமான கொள்ளளவு கூடுகிறது.

10. உடல் முழுவதற்கும் இரத்தம் பாய்ந்தோடி எல்லா செல்களும் செழித்தோங்க உடற் பயிற்சி உந்துதலை அளிக்கிறது.

11. உடலின் தசைகள், தசைநார்கள், இணைக்கும் திசுக்கள், எல்லாம் வலிமையடைகின்றன. கனமான வடிவமும் பெறுகின்றன. தசைகளும் பெருக்கம் கொள்கின்றன. தோலும் சுருக்கம் நீங்கி, பளபளப்பான நிறத்தைப் பெறுகிறது.

12. தசைகளுக்குள்ளே ஏற்படுகிற இரசாயண மாற்றங்கள், பாஸ்பரஸ் சக்திகளைப் பெருக்கி, கிளைகோஜனை அதிகப்படுத்தி, நைட்ரஜனல்லாத பொருட்களைக் கொண்டு, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தன்மையை வலிமைப்படுத்துகிறது. அதனால், தசைகள் இயக்கத்தில் தடைபடா செயல் வேகமும், திறமைகளும் பெருகி விடுகின்றன.

13. தசைகளில் இணைந்து கிடக்கும் உணர்வு நரம்புகள் பரபரப்புடன் பயணங்களை மேற்கொண்டு தருகின்ற கட்டளைகள் காரணமாக, தசைகளின் இயக்கத்தில் விரைவும் நிறைவும் மிகுதிப்பட, உடல்  பிரதி செயல் வினைகளில் மேலாண்மை பெற்றுக் கொள்கிறது.

14. செல்களுக்கு உணவும் காற்றும்தான் முக்கியமாகும். அவற்றை செல்கள் உடற்பயிற்சியின் போது; தங்கு தடையில்லாமல் பெற்றுக் கொள்கின்றன. அதனால், தேகமும் தன்னிகரில்லா தயார் நிலையில் பணியாற்றும் தகுதியை மிகுதியாகப் பெற்று மிளிர்கிறது. ஒளிர்கிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். செல்வத்துள் செல்வம் நலச் செல்வம் என்பார்கள். அந்த நலத்திற்காகத்தான் உடல் ஏங்கிக் கொண்டிருகயீகறது. அந்த ஏக்கத்தைத் தீர்க்காத தேகத்திற்குரியவர்கள் தாம் நலம் குறைந்து நலிந்து மெலிந்து, நாலாவிதமான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகிறார்கள்.

அப்படி வாழாமல், ஆனந்தமாக வாழ வழிகள் என்ன? அவற்றை அமைத்துத் தருபவை எவை? அத்தகைய வினாக்குரிய விடையைக் காண்போம்.

1. பாரம்பரியம்

2. சுற்றுப்புறச் சூழ்நிலை

3. உடற்பயிற்சி

4. ஓய்வும் உள அமைதியும்

இந்த நான்கு பிரிவுகளைப் பற்றியும், நாம் ஏற்கெனவே நிறைய தெரிந்து வைத்திருக்றோம், மீண்டும் விளக்கமாக எழுத வேண்டியது அவசியமில்லை.

தனிப்பட்டோரின் தேக நலம், அவருக்கே ஆனந்தமான வாழ்வை அளிக்கிறது. அவரது இல்லத்தின் மேன்மையை மிகுதிப்படுத்துகிறது. அவர் வாழும் நாட்டிற்கும் அளவிலா பெருமையை அளிக்கிறது.

ஆகவே, உடல்நலம் காத்தல் எனும் கொள்கையில் அறிவுடைய மாந்தர் யாவரும் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். அதுவே அனைவரின் உரிமையும் கடமையும் ஆகும்.

1. சமநிலை உணவு, சத்துணவு

2. தூய சுற்றுப்புற சூழ்நிலை

3. வீட்டில் தூய்மை; வெளியிலும் தூய்மை

4. தனிப்பட்டவர்களின் புறத் தூய்மை, அகத் தூய்மை

5. அசுத்தமற்ற காற்று - சுத்தமான குடி நீர்

6. சுகாதாரப் பழக்க வழக்கங்கள், நல்ல நடத்தைப் பண்புகள், நயமான மரபுகளைப் பின்பற்றுதல்

7. நோயறியும் நுண்ணறிவு நோய்களிலிருந்து காத்துக் கொள்ளும் முன்னறிவு

8. சீரான, தொடர்ந்து செய்யும் உடற் பயிற்சி

9. நேரத்தில் தேவையான ஓய்வு - உடல் ஓய்வு - மன ஓய்வு

10. திட்டமிட்ட வேலைகள், சமமாக பரவலாக அதனைத் தொடர்கிற கடமைகள், எல்லாமே நல்ல தேகத்தை; வல்லமை மிகுந்த யூகத்தை; வீணாக்காத சக்தி வேகத்தை வழங்கும். அதுவே பரிபூரண வாழ்க்கையைப் பரிசாகத் தரும்.

மூன்று வகை வயது

தனிப்பட்ட மனிதர் ஒருவரின் வயது என்ன? என்று கேட்கப்படுகிற கேள்விக்குப் பிறந்த தேதியைப் பிரலா பித்து, வாழ்கின்ற வருடத்தின் எண்ணைக் கூறி கழித்துக் காட்டுவார்கள். அது மட்டுமா வயதுக்கு வரம்பு? வேறு பலவும் உண்டே? அப்படிப் பிரிக்கும் போது, பிறந்த வயதுகள் தாம் மூன்றாக இருக்கின்றது.

1. காலண்டர் வயது. (Calender Age)
2. உடலுக்கான வயது (Anatomical Age)
3. மனதுக்கான வயது (Mental Age)

1. காலண்டர் வயது

பிறந்த குழந்தை ஒன்று வளர்கிறது. சிறுவர் என்று மாறி, இளைஞராக உருவாகி, முதியவர் என்று மாறி காலத்திற்கேற்ற பெயர்களைப் பெற்று, உலகை விட்டு மறைந்துபோகிறது.

வயது தான் இப்படி வடிவத்தையும் உருவத்தையும் மாற்றிக் கொண்டு போகிறது. ஒருவரது வயதை வைத்துதான், அவரது பண்புகளையும், குணாதிசயங்களையும், வரம்புகளையும் நிர்ணயித்துக் கூறுவது உலக வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால், காலண்டர் வயதை வைத்துக் கொண்டு, மக்களைப் பிரித்துவிடமுடியாது. ஒரே வயதுள்ளவர்கள் கூட, வெவ்வேறு வித்தியாசமான வகையில் வளர்ந்திருப்பார்கள், சிலர் வளர்ச்சி குன்றியிருப்பார்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சி கூறுவதுபோல, மக்கள் வளர்ச்சி வித்தியாசமான தன்மையிலே அமைந்திருக்கிறது. உடலின் உறுப்புக்கள் கூட, வேறுபட்ட அளவில் வளர்ச்சியைப் பெறுகின்றன. ஆகவே, பிறந்த தேதியை வைத்துக் கொண்டு, மக்களைப் பிரிக்க முயல்வது, அனைவராலும் அங்கீகரித்திட முடியாத சான்றாக  அமைகின்றது. எனவே, உடலுக்கான வயதைப் பற்றி பரிசீலித்துப் பார்க்கலாம்.

2. உடலுக்கான வயது

உடலுக்கான வயது என்பது உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சியையும், அதனால் ஏற்படும் மாற்றங்களையும் ஆராய்ந்து முடிவு செய்கிற வயதாகும்.எக்ஸ்ரே மூலமாகவும், எலும்புகளைப் பரிசோதித்து அறியலாம்.

சில சமயங்களில், குழந்தைகளுக்கு முளைத்திருக்கிற பற்களின் எண்ணிக்கையை வைத்து, வயதைக் குறிப்பிடுவதும் உண்டு.

இவ்வாறு உறுப்புக்களை ஆய்ந்து வயதை உறுதி செய்வது அனுபவபூர்வமாக நடைபெறுவதுண்டு. இதன் வழி சரியான வயதைக் குறிப்பிட்டுக் கூறிவிட முடியாது. ஆனால், உடற்கல்வித்துறைக்கு இந்தப்பாகுபாடு நிறைய உதவும். எலும்புகள் அதிக வளர்ச்சி பெறாத நிலையில் உள்ளவர்களுக்கு, அதிகக் கடுமையான பயிற்சிகளை அளித்துவிடாதபடி எச்சரிக்கையுடன் பயிற்சிகள் அளிக்க இம்முறை உதவும்.

3. மனதுக்கான வயது

உடல் வளர்ச்சிக்கான வயதை (Physiological) பெண்கள் என்றால், பூப்பெய்திய காலத்திலிருந்து குறிப்பிடுவார்கள். பையன்கள் என்றால், அவர்களுக்கு மீசை, தாடி போன்ற முடி முளைக்கும் பருவத்தை அறிந்து குறிப்பிடுவார்கள். எப்படியிருந்தாலும், ஒவ்வொரு உடலிலும் உள்ள ஹார்மோன்கள் உற்பத்தி அளவிலும், அதற்கேற்ற அளவில் உறுப்புகள் வளர்ச்சியும் அமை  வதால், இதையும் சான்றாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

மனதுக்கேற்ற வயது என்பது ஒருவரின் மன வளர்ச்சியைக் குறிப்பது. அதாவது அவரது மனதின் குணநலன்களின் வளர்ச்சியையும் பக்குவத்தையும் கண்டு தெளிந்து கூறும் வயதாகும்.

வயது வந்த பையன்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வது; நிறைய வயதான முதியவர்கள் கூட சிறியவர்கள் போல பேசி, நடந்து கொள்ளும்போது, அவர்கள் இன்னும் பக்குவம் (Maturity) அடையவில்லை என்று இகழப்படுவார்கள்.

இவ்வாறு குறிக்கப்படுகிற மனவயதை, உளவியல் பூர்வமான சோதனைகளை வைத்துத்தான் கண்டறிந்தாக வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சில குறிப்புக்கள்

1. பள்ளிக் குழந்தைகளை பல பிரிவுகளாகப் பிரித்து, பக்குவமான பயிற்சிகளை அளிக்க, மேற்கூறிய 4 வயது முறைகளும் நிறைவாக உதவுகின்றன.

வயதில் ஒரே நிலையில் உள்ள குழந்தைகள், ஒன்று சேர்ந்து விளையாடாமல், உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்ற தங்களை ஒத்தக் குழந்தைகளுடன் விளையாட விரும்புவார்கள். இந்த விருப்பத்தை ஆசிரியர்கள் தடைசெய்திட முடியாது. தடைசெய்யவும் கூடாது.

அவரவர் சேர்கின்ற குழுவின் ஆற்றலையும் செயல் திறமைகளையும் கண்டுகொண்டு, வழிநடத்திச் செல்வது ஆசிரியர் கடமையாகும்.

2.ஒவ்வொரு குழந்தைக்கும் செயல்படுகின்ற ஆற்றல் அந்த செயலை செய்திட அவர்கள் உடல் தாங்கும் சுமை (Load) என்னவென்பதையும் அறிந்துவைத்துக்கொள்வது நல்லது.

இவ்வாறு சுமைதாங்கும் தேக சக்தியை அவர்கள் மூன்று வகையாகப் பிரித்துக் கொண்டு செயல்படுவது சிறப்பானதாகும்.

(அ) இயல்பான தேகநிலை (Normal Load) இந்த தேகநிலையில், செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப, உயிர்க் காற்றை (Oxygen) உள்ளிழுத்துப் பெற்றுக் கொண்டு, சக்தி பெற்று சமாளிக்கும் இயல்பான தேகநிலையாகும்.

உடற்பயிற்சிகள் செய்யும் போது, எல்லா உறுப்புக்களும் இயங்க, வேண்டிய அளவுக்கு உயிர்காற்றைப் பெற்றுத்தந்து, காரியத்தை நிறைவேற்ற உதவும் முறை இது.

(ஆ) சிறப்பானதேகநிலை (CrestLoad) ஒரு காரியத்தை அல்லது உடற்பயிற்சியை செய்கிற போது, தேவையான உயிர்க்காற்றைத் திரட்டித் தருகிற உள் உறுப்புக்கள், பணி சிறப்புற அமைய உதவுகின்றன.

அதன் பிறகும் தொடர்ந்து உறுப்புக்கள் இயங்கி எதையும் எதிர்பார்க்காமல் உயிர்க்காற்றை அதே அளவு பெற்றுக் கொள்ள உழைக்கிற சக்தியுடன் திகழ்கிற தேக நிலையாகும்.

(இ) திறம் போதாத தேக நிலை (Over Load) ஒரு செயலைச் செய்கிறபோது,தேவையான உயிர்க்காற்றைத் திரட்டித் தர இயலாத தேக நிலை இது. அதன் காரணமாக, உயிர்க்காற்றுப் பற்றா நிலை உருவாகிவிடுகிறது. அதாவது, அதிகமாக உள்ளுறுப்புக்கள் இயங்கினாலும், தேவையான காற்றைப் பெற்றுத்தர முடியாத பலமற்ற நிலை என்றும் கூறலாம்.

இப்படி ஏற்படுகிறநிலை,இரத்த ஓட்டத்தில் உயிர்க் காற்று கலக்கிற கூட்டு நிலையைப் பொறுத்தும், பயிற்சியின் போது தசைகள் பெறும் இயக்கத்தைப்பொறுத்தும் இது அமையும்.

ஆகவே, சிறப்பான தேகநிலை பெற, அன்றாடம் உடற்பயிற்சிகளை ஆர்வமுடன், தேவையான அளவு, திறமை மிளிர செய்வதை, தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்.அப்படி செய்யும் பொழுது தசைகள் வளர்ச்சி பெறுவது போலவே, உயிர்க் காற்றை நிறைய பெறும் வழியில் உள்ளுறுப்புக்களும் உறுதி பெற்று, ஏற்கும் திறனைப் பெறும். இவ்வாறு உடலும் மனமும் பக்குவ நிலையையும் பரிபூரண ஆற்றலையும் பெற்றுத் திகழும்

இதுவரை உயிரியல் கருத்துக்கள் பற்றியும்; உடற் கல்வியுடன் எவ்வாறு உயிரியல் கொள்கைகள் ஒருங்கிணைந்து நடைபொடுகின்றன என்பது பற்றியும் இதுவரை அறிந்து கொண்டோம். அவற்றில் முக்கியமான சில கருத்துக்களை நினைவு படுத்துவதற்காக, இங்கே மீண்டும் தொகுத்துத் தருகின்றோம். அவை உடற்கல்வி ஆசிரியர்கள் உளமார ஈடுபட்டு சிறப்பாகச் செயலாற்ற துணை நிற்கும்.

உயிரியல் கொள்கைகளும் நடைமுறைகளும்

உயிரியல் விளக்கத்திற்கேற்ப, உடற்பயிற்சிகள் விளையாட்டுக்களை மாணவ மாணவியரிடம் அறிமுகப்படுத்தும் ஆசிரியர்கள், நன்கு கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய குறிப்புக்களை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

1. வாழ்க்கை என்பது இயக்கமே உடற்பயிற்சி என்பது இயக்கத்திற்கு இனிமையான, இதமான உணவு போன்றது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 6 மணி நேரமாவது விளையாட்டுக்களிலும் பயிற்சிகளிலும் பங்கு பெறுதல் சிறந்த உடல் வளர்ச்சியையும், திறன் நுணுக்கங்களையும் வளர்த்துவிடும்.

தொடர்ந்து உடலியக்கச் செயல்களில் ஈடுபடுவதே மனித வாழ்க்கையை மகிமைப் படுத்தும் புனித காரியமாகப் போற்றப்படுகிறது.

2. நல்ல பாரம்பரியம், சுகமான சுற்றுப்புற சூழ்நிலை, சத்துள்ள சம நிலை உணவு, எல்லாம் உடலியக்கத்தில் உற்சாகமாக ஈடுபடத் தூண்டி, பாடுபட வைத்து, பெரும் பயன்களை பொழிகின்றன. நீண்ட ஆயுளையும், நிறைவான உடல் நலத்தையும் நல்கும் பயிற்சிகளுக்கு மேலே கூறியவை முனைந்து உதவுகின்றன.

3. உடல் அமைப்பும் உடற் பயிற்சிகளும் ஒன்றுக்கொன்று உறுதுணையானவை. ஒன்று ஒன்றால் பெருமைப்படுகிறது. அதனால் உடல் அமைப்புகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட பயிற்சிகளை அளித்து, ஓங்கிய எதிர்பார்ப்புகளைப் பெற்றிட வேண்டும்.

4. விளையாட்டுக்களையும் உடற்பயிற்சிகளையும் எல்லோருக்கும் எல்லாம் என்று ஏகபோக மாக்கிவிடக் கூடாது. ஆண்பெண் பாகுபாடு, வயது, வலிமை, திறமை, செயல்களைத் தாங்கும் தேகத்தின் ஆற்றல், செயல்படும் செயல்களைத் தாங்கும் தேகத்தின் ஆற்றல், செயல்படும் வல்லமை, ஆர்வம், விருப்பு, வெறுப்பு இவற்றை எல்லாம் பங்கு பெறுபவர்களிடமிருந்து அறிந்து, அவரவருக்குத் தேவையான பயிற்சிகளை அளித்திட வேண்டும்.

5. உடல் இயக்கத்திற்கும், திறமையினை மிகுதியாக வளர்த்துக் கொள்வதற்கும் தசைகளே முக்கியமான காரணமாகவும், முதன்மையான ஆதாரமாகவும் விளங்குகின்றன. ஒட்டம், தாண்டல், எறிதல், உயரம் ஏறுதல், போன்ற செயல்கள் தசைகளை வலிமைப்படுத்துகின்றன. அழகுப்படுத்துகின்றன. ஆகவே, தசைகளைத் தகுதிப்படுத்துவதில் அக்கறை காட்டி, அதற்கேற்ற பயிற்சித் திட்டங்களை வகுத்திட வேண்டும்.

6. குழந்தைகளுக்கான உடற்கல்வித் திட்டம் என்றால் அவர்கள் வயது, படிக்கும் பள்ளி போன்றவற்றைப் பார்க்க வேண்டும். ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி இவற்றில் பயில்கின்ற குழந்தைகள், இளைஞர்களுக்கு ஏற்ப, ஏற்றப் பயிற்சிகளை முறைப்படுத்தி அளிக்க வேண்டும்.

7. சீரான சிறப்பியக்கத்தின் (Motor Activities) வளர்ச்சியும், வாகான செயல் எழுச்சியும்தான், வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளமாகும். அதன் வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளை வழங்கவும், சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி அவற்றில் வெற்றி பெறும் யூகங்களை வளர்க்கவும் உதவ வேண்டும்.

8. ‘இளமையில் கல்’ என்பது பழமொழி. இளமையில் குழந்தைகளைத் தேர்ந்தெடு. அவர்க்கேற்ற திறன்களை வளர்த்து விடு, என்று உடற் கல்வித் திட்டங்கள் வகுத்து பயிற்றுவிக்கின்றன. இந்தப் பெருமை பெருகிட ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். 

9. உடல் தோரணையுடன் விளங்க, வயிற்றுத் தசைகள் நல்ல வலிமையுடன் விளங்க வேண்டும். அதற்கான பயிற்சிகளை அளித்து, உடற்கல்வி உதவ வேண்டும்.

10. இளமை பருவத்தில் மட்டும் விளையாட்டுக்களில் ஈடுபட ஊக்குவித்தால் அது மட்டும் போதாது. வயதாகும் காலத்திலும் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளிலும் விளையாட்டுக்களிலும் ஆர்வமுடன் பங்கு பெறக் கூடிய அறிவார்ந்த ஆர்வத்தை ஊட்டிவிட வேண்டும்.

சில முக்கியமான விதிகள்

உடற்கல்வித் துறையானது உற்சாகம் ஊட்டி, உடலை வளர்க்கும் உயர்ந்த பணியில் திளைக்கிறது என்றாலும், அதற்கும் பல இடையூறுகள் உண்டு. தடைக் கற்கள் எதிர்நின்று வழி மறிப்பதும் உண்டு. கொஞ்சம் கவனப்பிசகினால் கஷ்டங்கள் வருவதும் உண்டு. ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வராது, முன்கூட்டியே தடுத்துக் கொள்வதும் புத்திசாலித்தனமாகும்.

1. விளையாட்டுக்களில் சிறப்பான பயிற்சிகள் அளிப்பதற்கு முன்பாக, மாணவர்களையும் பங்கு பெறுவோர்களையும் மருத்துவப் பரிசோதனை செய்து, அவர்கள் உடல்நிலைப் பற்றித் தெரிந்து, தெளிந்து கொள்வது நல்லது.

2. இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட பயிற்சிகள் தந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். எழுச்சியுடன் செய்திட முனைப்பும் காட்டுவார்கள். ஆனால் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் தருவதைத் தவிர்க்கவும்.

3. திறமை குறைந்தவர்களை, திறமை சாலிகளுடன் போட்டி போடுகிற சூழ்நிலையை  உண்டு பண்ணக் கூடாது. அந்தந்தக் குழுவினர் அந்தந்த நிலையினருடன் போட்டி போடுவது அதிக உற்சாகத்தை அளிக்கும். அல்லது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணி, விளையாட்டையே வெறுக்கின்ற நிலைக்கு ஆளாக்கிவிடும்.

4. எந்தப் பயிற்சிகளையும் கொஞ்சங் கொஞ்சமாகக் கற்பிக்க வேண்டும். திடீரென்று அதிகமாக்கி விட்டால் அதனால் பல பிரச்சினைகள் பிறந்துவிடும்.

5. எந்தப் பயிற்சிக்கும் உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகளை முன்னதாகக் கொடுத்து, உடலை சூடாக்கி, அதன் பிறகே அடுத்த பயிற்சி முறைகளுக்குள்ளே செல்ல வேண்டும்.

6. விளையாட்டு என்றால் வேகம் உண்டு. வெறியும் உண்டு. அதனால் விபத்துக்களும் உண்டு. வெற்றிக்காக விளையாடுவது புத்திசாலித்தனமாகும். விபத்தில்லாமல் விளையாடி வெளியே வருவது மேதைத்தனமாகும்.

ஆகவே, உயிரியல் கருத்துக்களை உணர்ந்து கொண்டு, அவற்றின் வழி ஆண்மையும் ஆரோக்கியம் மிகுந்த தேகத்தையும் உருவாக்கிக்கொண்டு, ஆனந்தமான வாழ்வு வாழ்ந்திட முயல்வோம். அதுவே அறிவின் ஆராதனையாகும்.

~