உடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் நோக்கமும் குறிக்கோளும்

விக்கிமூலம் இலிருந்து



5. உடற்கல்வியின் நோக்கமும் குறிக்கோளும்(Aims and Objectives)

நோக்கம் என்றால் என்ன?

‘கற்கும் மாணவர்களுக்குப் புதுப்புது அனுபவங்களைப் பொழிந்து, அவர்களிடையே நல்ல மாற்றத்தையும், நடத்தையில் ஒழுக்கத்தையும், அடுத்தவர்களுடன் அனுசரித்துப் போகின்ற பக்குவத்தையும் கல்வி அளிக்கிறது என்று அறிஞர்கள் கல்வியைப் பற்றி விளக்குகின்றார்கள்.

இத்தகைய அனுபவங்கள் தாம் வாழ்க்கைக்கேற்ற சிறந்த நோக்கத்தைப் படைத்துத் தருகின்றன. அந்த நோக்கத்தின் நுண்மையே, வாழ்வின் இலக்காகி விடுகின்றன.

உருவாகிய அப்படிப்பட்ட இலக்கினை அடைவதற்கு ஒரு சில அறிவார்ந்த வழி முறைகளும் நடை முறைகளும் உதவுகின்றன. அந்த வழி முறைகளே இலக்கினை எய்திடும் இனிய உற்சாகத்தை வழங்குகின்றன.

வாழ்வில் சிறந்ததை எய்திட வேண்டும் என்று எண்ணி முடிவு செய்த இலக்கு (Goal)தான் ஒருவரின் உன்னதமான நோக்கமாக (Aim) அமைந்து விடுகிறது.

இலட்சியம் நிறைந்த இலக்கினை அமைத்து அதனை அடைய முயற்சிப்பது தான் கல்வியின் நோக்கமாகும். உடற்கல்வியின் நோக்கமானது உடல் மூலமாகக் கற்றுத் தருவதுதான்.

சில நோக்கங்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளலாம். ஒரு சில இலக்குகளை அடைவது கடினமானதாக இருக்கும்.

இதிலிருந்து ஒரு குறிப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.


நோக்கம் (Aim) என்பது ஒரு குறிப்பிட்ட காரியத்தை அடைவதற்காக மேற்கொள்கிற முயற்சியின் முற்றுகை அல்ல. அது ஒரு இலட்சியத்தின் பிரதிபலிப்பாகும்.

நோக்கத்திற்கு ஒரு விளக்கம்:

நாம் முயன்று அடைய வேண்டிய ஒரு உயர்ந்த முடிவினை நோக்கி, முனைப்புடன் நடக்கத் துண்டும் ஊக்குவிப்பின் மறு வடிவம் தான் நோக்கம் என்பதாகும்.

அந்த நோக்கம், என்றும் நீங்கிப்போகாத நிழலைப் போன்றதாகும். நேரம் வரும்போது விரைந்து வந்து முன்னால் நின்று, முனைப்பைக் காட்ட வற்புறுத்தி வழிகாட்டும் வல்லமை வாய்ந்ததாகும். வெற்றிகரமாக செயல்புரியும் விவேகமான யுக்திகளை உருவாக்கித் தரும் உயர்ந்த அடிப்படைத் தன்மைகளுடனும் அது விளங்குவதாகும்.

அதனால்தான், ‘நோக்கத்தை’ ஒரு வடிவாகப் பெறுவதிலே சிக்கல்கள் உள்ளன. சிரமங்களும் ஏற்படுகின்றன.

அந்த நோக்கத்தை (Aim) வெற்றிகரமாக அடையும் போது, அதற்குக் குறிக்கோள் (Objectives) என்ற பெயர் வந்துவிடுகிறது.

குறிக்காேள் (Objective)

குறிக்கோள் என்றால் நோக்கம் (Aim) என்றும், காரியம் (Purpose) என்றும், விளைவுகள் (Outcomes) என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றார்கள்.

ஆனால், நாம் இங்கே ஒரு தெளிவான விளக்கத்தைக் காண்போம். நோக்கம் என்பது பொதுவானது.

குறிக்கோள் என்பது குறிப்பிடுகின்ற அளவில் தனித்தன்மை கொண்டது. நோக்கம் என்பது ஒன்றாகத் தான் இருக்க முடியும். குறிக்கோள் என்பது பலவாக இருக்கிறது.

ஒரு நோக்கத்தை அடைய பலவாறான வழிகளை மேற்கொள்ளும் முயற்சிகளே குறிக்கோள்களாகின்றன.

அதாவது, சில குறிப்பிட்ட தெளிவான வழிகளை உடைய குறிக்கோள்கள் தாம், ஒரு நோக்கத்தை அடைந்திட முழுமையாக உதவுகின்றன.

முக்கிய வழிகள் மட்டுமின்றி, சில துணை வழிகளையும் முறைகளையும் மேற்கொள்கின்ற தன்மைகளை குறிக்கோள் பெற்று, உயர்ந்த நோக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உதவுகின்றன. 

ஆகவே, குறிக்கோளினைப் பற்றி நாம் விளங்கிக் கொள்வோம். ஒரு நோக்கம் என்பது எட்ட வேண்டிய இலக்காகும். ஒரு குறிக்கோள் என்பது விரைவாக பெற்றுக் கொள்ளக் கூடிய இலக்கின் சில பகுதியாகக் கருதப்பட்டு, பின்னர் அதிலிருந்து முடிவான இலக்குக்குத் தொடர்ந்து வழிநடத்திப் போகின்ற சந்தர்ப்பங்களை அளிப்பதாகும்.

உடற் கல்வியின் நோக்கம்

உடற்கல்வியின் நோக்கமானது, மனிதர்களது ஆளுமையில் (Personality) முழுவளர்ச்சியைக் கொடுப்பதாகும். அல்லது, ஒர் சிறந்த வாழ்வு வாழ சந்தர்ப்பங்களை வழங்குவதாகும்.

சிறந்த உடற்கல்வியாளராக விளங்கியது குவில்லியம்ஸ் என்ற மேனாட்டறிஞர். கீழ்க்கண்டவாறு தனது கருத்தைத் தெரிவிக்கிறார்.

“உடற் கல்வியின் நோக்கமானது:- மனிதர்களுக்குத் திறமை வாய்ந்த தலைவர்களையும், தேவையான வசதி மிக்க வாய்ப்புக்களையும், தனிப்பட்டவர்களுக்கும் கூடிவரும் பொதுமக்களுக்கும் உடலால் முழு வளர்ச்சியும், மனதால் உற்சாகமும் முனைப்பும், சமூகத்தில் சிறந்த வர்களாகவும் விளங்கிட வேண்டியவற்றை வழங்கிடும் சந்தர்ப்பங்களை அளித்து, அற்புதமாக வாழச்செய்கிறது.”

உடற்கல்வியின், இத்தகைய உன்னத நோக்கமானது, உலகில் தங்கு தடையின்றி நடந்தேறிடவேண்டுமென்றால் அதற்கு.

1. நன்கு கற்றுத் தேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கள், சிறப்புப் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி வரவேண்டும். அவர்கள் தான்  வளர்ந்து வரும் உடற்கல்வியின் ஒப்பற்ற சேவைக் குணத்திற்கு ஈடுகொடுத்து, பெரும் பணியாற்றிட முடியும்.

2. மேற்கூறிய தலைமையாளர்கள் வளர்ந்தால் மட்டும் போதாது. உடற்கல்வியின் நோக்கத்தை நிறைவேற்றிவைக்கும் களங்களான ஆடுகளங்கள், ஓடுகளங்கள், நீச்சல்குளங்கள், விளையாட்டு உதவி சாதனங்கள், விளையாட்டுப் பொருட்கள், எல்லாம் தரமான நிலையிலும் திறமான தகுதியிலும் இருந்தாக வேண்டும்.

3. பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், பயன்படும் இடங்களும் இருந்தால் மட்டும் போதாது. பங்கு பெறுபவர்கள் உடலாலும் மனதாலும் பயிற்சி பெற, போதிய அவகாசம் கிடைக்குமாறு செய்திட வேண்டும். பயிற்சிகளில் பங்கு பெற போதுமான நேரங்கள்; பங்கு பெறுவோரின் பக்குவமான அணுகு முறைகள், விருப்பத்துடன் கற்றுக கொள்ளும் திருப்பங்கள் எல்லாம் தான் நம்பிய நோக்கத்தை நிறைவேற்றி வைக்க உதவும.

எதிர் பார்க்கும் நோக்கங்கள் எல்லாம் உடனேயே வந்து விடாது. அதற்குக் கொஞ்சகாலம் பிடிக்கும். அதற்குள் அவசரப்பட்டு எந்த வித முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.

4. உடற் கல்வியின் நோக்கங்களில் ஒன்று, ஒருவரை சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக வாழச் செய்வது என்பது. அதனால் பயிற்சிகளில் ஈடுபடும் போதும், விளையாடும்போதும் தனித்தனியாக இயங்கச் செய்யாமல், ஒருவரோடு ஒருவர் கலந்துற வாட, கூடி விளையாடி மகிழும் வாய்ப்புக்களை நிறைய நல்கிட வேண்டும்.

இந்திய உடற்கல்விச் சிந்தனை :

“இந்திய அரசியல் சமூக அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கேற்ப, சமுதாயத்தில் சிறந்த மக்களை உருவாக்கிட வேண்டும் என்பதுதான், இந்திய அரசின் உயர்ந்த உடற்கல்வி சிந்தனையாக இருக்கிறது.”

இதையே இந்திய அரசின் உடற்கல்வி மற்றும் ஒய்வு பற்றிய மைய உயர்மட்டக்குழுவும் சிபாரிசு செய்து வந்திருக்கிறது.

1947ம் ஆண்டுதான் நமது நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. அகில உலக அளவில் இந்தியா ஒரு சிறந்த குடியரசு நாடாகவும் திகழ்ந்து வருகிறது.

இன்றைய இளம் சிறார்கள், உடல், மனம், ஒழுக்கம் இவற்றை ஏற்றமுற வளர்க்கும் முறையில் உடற்கல்வி உதவி, குணமுள்ள குடிமக்களாக உயர்ந்து, குடியரசுப் பண்புகளைக் காத்து, நாடு காக்கும் நாளைய நல்ல பொறுப்புள்ள பெரியவர்களாக மாறிவிடும் அளவில் வளர்ந்திட வேண்டும் என்பதைத்தான் இந்திய நாடு எதிர்பார்க்கிறது.

ஆகவே, உடற்கல்வியின் உன்னத நோக்கமானது, ஒவ்வொரு குழந்தையையும் உடலால், மனதால், உணர்வால் தகுதியும் தன்மையும், திறமையும், தேர்ச்சியும் மிக்கவராக மேலேற்றிட வேண்டும் என்பதுதான். இதையே உடற்கல்வியிடமிருந்து உலகமே எதிர்பார்க்கிறது.

இத்தகைய இனிய நோக்கம் எடுப்பாக செயல் படவேண்டும் என்றால், உடற் கல்வியை ஒரு சீராக,  ஒப்பற்ற முறையில் ஒழுங்காக நடைமுறைப் படுத்திட வேண்டும். விளையாட்டுக்களையும் பண்பான முறையில் கற்பித்திட வேண்டும்.

நல்ல பல ஆட்டக்காரர்கள் சேர்ந்தது ஒரு திறமையான குழு என்பதாகும். அதுபோல சிறந்த பல குடிமக்கள் சேர்ந்ததுதான் ஒரு சிறப்பான சமுதாயம், செம்மையான தேசம் என்பதாக மாறும்.

அப்படி அமைகின்ற நாடு தான், எல்லா எதிர்ப்புகளையும் தகர்த்து, எதிர் நீச்சல் போட்டு, எதிர் பார்க்கும் இனிய லட்சிய வாழ்வினைப் பெற முடியும். அந்த அரிய முயற்சியில் தோற்றுப் போனாலும், மீண்டும் முயற்சியுடன் எழுந்து, போராடி, செயல் மேற்கொண்டு, செழுமையான வெற்றியையும் எய்திட முடியும்.

உறுதியும், உழைப்பும், சோர்ந்து போகாத உழைக்கும் ஆற்றலும் வெற்றியையே நல்கும். அப்படிப்பட்ட அருமையான ஆற்றல் நிறைந்த குடிமக்களை உருவாக்குவது தான் உடற்கல்வியின் உன்னத நோக்கமாக அமைந்திருக்கிறது.

உடற்கல்வியின் குறிக்கோள் :

நோக்கம் என்பது ஒரு நீண்டகாலத் திட்டம் போன்றது.அனைவருக்கும் பொதுவானது இதமானது.

ஆனால், குறிக்கோள் என்பது குறிப்பிடத்தக்க வழிகளைப் பின்பற்றி, உடனடியாக வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்வதாகும்.

உடற்கல்வியின் மூலம் உடனடியாக அடையத்தக்கப் பயன்கள் என்ன என்பதை உடற்கல்வி ஆசிரியர்கள் புரிந்து கொள்வது, சிறந்த பயன்களை நல்கும். இதனால் என்னென்ன பயன்கள், நன்மைகள் கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.

1. குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதால், இலக்கினை நோக்கி சரியாக முன்னேறிப் போக முடியும். பிரச்சினைகளும் இடைமறிக்கும் இன்னல்களும் எதிர் வருகிறபோது, சமாளித்து தொடர்ந்து முன்னேறும் மனச் செறிவையும் வளர்த்துவிடும்.

2. உடற்கல்வியாளர்கள் தங்கள் திட்டங்களுடன் அன்றாட கடமைகளை எதிர்பார்ப்புடன் ஆற்றுகிறபோது. மாணவர்களின் பெற்றோர்கள், பொதுநிர்வாக அலுவலர்கள் பிற விளையாட்டுச் சங்கங்கள், வணிகமுறையில் இயங்கும் விளையாட்டுப் மேலாளர்கள் இவர்களுடன் மோதுகிற சூழ்நிலைகள் ஏற்படும். ஏனென்றால், அவர்கள் உடற்கல்வியின் குறிக்கோள்களின் உண்மை நிலையை உணராமல், தாங்கள் விரும்புகிறபடியே செயல்பட வேண்டும் என்று விரும்பி வற்புறுத்துகிறபோது, அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படத்தான் நேரும்.

அப்பொழுது, நிதானமாகவும் நிலை குலைந்து போகாமலும் நேராக இலக்கு நோக்கிப் பணியாற்ற இந்த அறிவு உதவும்.

3. உடற் கல்வி குறிக்கோள்களை உண்மையாகப் புரிந்து வைத்திருக்கும்போது, குழப்ப வருகின்ற கல்வியாளர்களுக்கும், ஒன்றும்புரியாத தற்குறிகளுக்கும் புரியவைக்க ஏதுவாக இருக்கும்.

4. உடற்கல்வியின் குறிக்கோள்களைப்பற்றி, உலகத்தாருக்குத் தெளிவாக விளக்கிக் கூறாத நிலைமையே இன்னும் இருப்பதால்தான், இதன் சிறப்பு இன்னும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படாமலேயே இருந்து வருகின்றன.

ஆகவே உடற்கல்வியின் குறிக்கோள்களை உடற் கல்வியாளர்கள் உண்மையாக உணர்ந்துகொண்டிருக்கிற பொழுது, குழப்பவாதிகளின் விதண்டாவாதங்களைத் தீர்த்து தெளிவாக்குவதற்கும், குறிக்கோளை அடைகிற திட்டங்களை செம்மையாக செயல்படுத்தவும் வேண்டும் என்பதால் இனி குறிக்கோள்கள் எவை எவை என்பதைத் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

1. குறிக்கோள்கள்

1. உடல் உறுப்புக்களின் திறநிலை
2.தசைநரம்புகளின் ஒருங்கிணைந்த சிறப்பு இயக்கம்
3. பயன்மிகு ஒய்வு இயக்கம்
4.சிறப்பான ஆளுமையும் சமூகப்பண்பாடும்
5. சுகாதாரப் பழக்கங்கள்

இவற்றைவிளக்கமாகக் காணலாம்.

l.உடல் உறுப்புகளின் திறநிலை (Fitness organic vigour) உடல் உறுப்புக்கள் சீராகவும் சிறப்பாகவும், செயல்பட உதவுகிறது.

அதாவது சுவாச மண்டலம், இரத்த ஒட்ட மண்டலம்,கழிவு மண்டலம் போன்ற பல பகுதிகள் சீராக செயல்பட உதவுகிறது.

உடல் இயக்க செயல்களில் உன்னிப்பாக ஈடுபடுவதன் மூலம், உடலுக்கு வலிமை ஏற்படவும், உடல் உறுப்புகளுக்கு மிகுந்த வலிமை உண்டாகவும் ஏதுவாகிறது. இதன் முலம் உடற்பயிற்சி செயல்களில் ஈடுபடுபவ ருக்கு நீடித்துழைக்கும் ஆற்றல், கடினமாக உழைக்கும் போதும் அதற்கு ஈடுகொடுத்து உழைக்கின்ற திறமையும். செயல்களில் நுணுக்கமும் மிகுதியாகிட உதவுகிறது.

2. தசை நரம்புகளின் ஒருங்கிணைந்த சிறப்பியக்கம் (Neuro-Muscular Co-ordination)

மனிதருடைய செயல்களை நரம்பு மண்டலமே கட்டுப்படுத்துகிறது. நரம்பு வலிமை பெறுவது மெதுவாகவும், தசைகள் வலிமை பெறுவது சற்று விரைவாகவும் ஏற்படும். ஆக, தொடர்ந்து செய்து வருகிற ஒழுங்கான பயிற்சிகள் மூலமாகவே நரம்புகளும் தசைகளும் சேர்ந்து சிறப்பாக வலிமையுடன் இயங்குகின்றன.

ஒரு காரியத்தை நுண்மையாகவும், நேர்த்தியாகவும் செய்ய தசை நரம்புகளின் ஒருங்கிணைந்த இயக்கம் அவசியமாகிறது. இந்தக் கூட்டு இயக்கம் மேன்மையாக அமைந்திருப்பவர், அன்றாட வேலைகளை ஆற்றலுடன் செய்து முடிக்கும் திறமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரது உடலும் அழகுற அமைந்திருப்பதுடன், அவரது உடல் இயக்கமும் காண்பதற்குக் கவர்ச்சியும், அசைவில் நளினமும் கொண்டிருக்க, அவர் எளிதாக இயங்குகிறார். இனிமையாகத் தன் பணிகளை முடித்து மகிழ்கிறார்.

3. பயன்மிகு ஓய்வு இயக்கம்: (Attitude towards Leisure)

ஒய்வு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கத் தெரியாதவர்களுக்கு, வாழ்க்கையில் ஒயாத பிரச்சினைகள் உருவாகின்றன. சில சமயங்களில் சமூக விரோதமான செயல்களில் ஈடுபடவும் உத்வேகம் அளிக்கிறது.

விஞ்ஞான நாகரீகக் காலம், மக்களுக்கு அதிகமான ஒய்வு நேரத்தை ஒதுக்கித் தந்துள்ளது. அதை அறிவார்ந்த முறையில் பயன்மிகு ஒய்வு இயக்கமாகப் பயன்படுத்திக் கொள்பவர்களே, களிப்புடன் வாழ்கின்றனர்.

இதை இளமையிலே கற்றுக் கொண்டால், முதுமை வரை தொடரும் ஒய்வை உல்லாசமாகக் கழிக்க உதவும். உடலை வலிமையாகக் காத்திருக்கவும் வழிகாட்டும்.

ஆக, உடல் இயக்கச் செயல்களில் தாங்கள் உடல் அமைப்புக்கும் வலிமைக்கும், விருப்பத்திற்கும் ஏற்றவாறு ஈடுபட்டு, பயன்மிகு காரியங்களை ஒய்வு காலத்தில் செய்து சீராக வாழ உடற்கல்வி உதவுகிறது. அதற்காக நிறைய பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், அம்சங்கள் உள்ளன.

4. சிறப்பான ஆளுமையும் சமூகப் பண்பாடும் (Personality & Social Behaviour)

தனிப்பட்ட மனிதர்களை சிறந்த குடிமகனாக உருவாக்க, விளையாட்டு உற்சாகப்படுத்துகிறது.

மனிதன் என்பவன் கூடிவாழும் மிருகம் என்பார்கள். அவனது மனிதக் கூட்டத்திற்கு சமுதாயம் என்பது பெயர். சமுதாயத்தில் சேர்ந்து வாழவும், சிறந்தவராகத் திகழவும், ஒவ்வொருவருக்கும் கட்டாயமான கடமைகளும், கட்டுக்கோப்பான குணநலன்களும் வேண்டும்.

தன்னடக்கம், சுயநலமற்ற பொதுநலம், பொறுமை, ஒற்றுமை, கீழ்ப்படிதல், தலைமைக்கு விசுவாசமாக இருத்தல், கோப தாபங்களை அடக்குதல், பெருந்தன்மையுடன் பழகுதல் போன்ற குணங்களும், சிறப்பான ஆளுமையும், சமுதாயத்தை செழுமையாக்குபவை. இவை  களை விளையாட்டில் பங்கு பெறுவதன் மூலம், பாங்காக வளர்த்துக் கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட வாய்ப்புக்களை வழங்கி, வளமாக மாற்றிட விளையாட்டில் உண்டாகும் சந்தர்ப்பங்களே உதவுகின்றன. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பெற்ற ‘அறிவுகள்’ தாம், ஒரு கட்டுப்பாடான சமுதாயத்தை உருவாக்க உதவுகின்றன. இப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்கும் நல்ல சோதனைக்களமாக, விளையாடும் களங்கள் விளங்குகின்றன. இவையே தூய்மையான தேசப்பற்றையும் வளர்த்து உதவுகின்றன.

5. சுகாதாரப் பழக்க வழக்கங்கள் (Health Habits)

உடற்கல்வியும் உடல் நலக் கல்வியும் ஒன்றுக் கொன்று உறுதுணையானவை. மனிதரை மேம்பாட்டையச் செய்பவை.

உடலால், மனதால், உணர்வால் மக்களை மேம்படுத்தி, வாழ்வாங்கு வாழவைக்க, உடல்நலம் தரும் சுகாதாரப் பழக்க வழக்கங்கள் இன்றியமையாதவை.

இளமையில் கற்றுக் கொள்கிற இந்த இனிய பழக்கங்கள் தாம், முதுமையிலும் தொடர்ந்து, மிடுக்காக வாழ வைக்கின்றன.

நேரத்தில் உடற்பயிற்சிகள், நேரத்திற்கு ஒழுங்கான உணவு, அழுக்கு நீங்கிய தூய்மையான தேகம் காத்தல், தூய ஆடையணிதல், எல்லாம் நல்ல பழக்கங்களாகும்.

இவையெல்லாம் உடற்கல்வி தருகிற செயல்களினால் ஏற்பட்டு பழக்கமாகி, வாழ்வின் அத்யாவசியமானவைகளாகி விடுகின்றன. இதுவே என்றும் தொடருகிற உடல்நலத்தையும், மன சந்தோஷத்தையும் கொடுத்து, மக்கள் இனத்தைக் காப்பாற்றி வருகின்றன. 

உடற்கல்வியின் கொள்கைகள் இவை என்றாலும், இன்னும் பல உடற்கல்வி அறிஞர்கள் கூறியிருப்பவைகளையும் அறிந்து கொள்வோம்.

1. புக் வால்டர் (Book Walter) என்பவர். உடற்கல்விக் கொள்கைகளை மூன்றாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்.

1. உடல்நலம் (Health)

2. ஓய்வை பயனுடன் கழித்தல் (Worthy use of Leisure Time)

3.நன்னெறிக்குணங்கள் (Ethical Character)

2. ஹாரிசன் கிளார்க் (Harrison Clarke) என்பவர் உடற்கல்விக் கொள்கைகளை 3 வகையாகப் பிரித்துக் கூறுகிறார்.

1.உடல் திறநிலை (Physical Fitness)

2. சமூகத் திறமையாற்றல் (Social Efficiency)

3. கலாச்சாரம் (Culture)

3. கவல்-ஸ்குவீன் (Cowell and Schwehn) என்பவர்கள் குறிக்கோள்களை 5 வகையாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

1. உடல் உறுப்புக்களின் சிறப்பாக செயல்படும் ஆற்றல், அத்துடன் செயல் திறமைகளை குறையாமல் வளர்த்துக் கொள்ளுதல்.

2. தசை நரம்புகளின் சிறப்பான ஒருங்கிணைந்த இயக்கம்

3. தனிப்பட்டவர்களுடனும், சமுதாய மக்களுடனும் ஒத்துப்போகும், அனுசரித்துப் போகும் பண்புகளை வளர்த்து விடுதல்.

4. அறிவுத் திறமையையும் ஆய்வுத் திறமையையும் வளர்த்தல்.

5. உணர்வு எழுச்சிகளைக் கட்டுப்படுத்தி, பெருந்தன்மையான பண்புகளை வளர்த்தல்.

வேறுபல அறிஞர்களும், உடற்கல்விக் குறிக்கோள்கள் என்னென்ன வென்று விளக்கிக் கூறினாலும், அவையெல்லாவற்றையும் தொகுத்துப் பகுத்துப்பார்த்தால், அவை 4 பிரிவுகளிலே அடங்கிவிடுகின்றன. இந்த நான்கு பிரிவுகளையும் நாம் விளக்கமாக அறிந்து கொண்டாலே, உண்மையான உடற்கல்விக் குறிக்கோள்களின் பெருமைகளை நாம் புரிந்து கொண்டவர்களாகின்றோம்.

1. உடல் வளர்ச்சிக் குறிக்காேள் (Physical Development Objectives)
2. சீரான செயல் வளர்ச்சிக் குறிக்கோள் (Motor Development Objectives)
3. மனநல வளர்ச்சிக் குறிக்கோள் (Mental Development Objectives).
4. சமூக நல வளர்ச்சிக் குறிக்கோள் (Social Development Objectives)

தனிப்பட்ட ஒருவரை எந்த அளவுக்கு உடற்கல்வி உயர்த்துகிறது. உன்னதப்படுத்துகிறது உயர்ந்த வாழ்வு வாழச் செய்கிறது என்பதை இனி நாம் இங்கே விரிவாகக் காண்போம்.

தனிப்பட்ட ஒருவரை, தானே தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், தனது திறமையின் அளவினைப் புரிந்து கொள்ளவும், அவற்றை வளர்த்துக் கொள்ளவும் உடற்கல்வி எவ்வாறு உதவுகிறது என்பதையும், வாய்ப்பளிக்கிறது என்பதையும் விளக்கமாகக் காண்போம்.
II. தன்னை அறிந்து கொள்ள உதவுகிறது (Self Realisation)

1. அறிந்து கொள்ளும் மனம்:

ஒருவன் தனது சுற்றுப்புற சூழ்நிலையை இயம் தெளிவுறக் கண்டு அறிந்து கொள்ளவும்; அதற்கேற்ப தன்னை அனுசரித்துப் போகின்ற தன்மையில் நடத்திக் கொள்ளவும், தனக்குள்ள திறமையின் அளவினைத் தெரிந்து கொண்டு அதனை வைத்து சுற்றுப்புறத்தால் எழும்பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும். மேலும் தன்னை உயர்த்தி மேம்பாட்டடைவதற்கும் உடற்கல்வி உதவுகிறது.

2. உடல் நல அறிவு

மகிழ்ச்சியானது நோயற்ற நலவாழ்வினால் தான் கிடைக்கிறது. உடல் நலம் பற்றிய அறிவு இல்லாமல், ஒருவனால் நலமான உடலைக் காத்துக் கொள்ள முடியாது. உடற்கல்வியானது உடல் நலம் பற்றியே அதிகம் கற்பிக்கிறது.புத்துணர்ச்சி (Refleshment): ஒய்வெடுத்தல்(Relaxation) உல்லாசமாக பொழுது போக்குதல் (Recreation) என்னும் 3 வழிகளிலும் உடற்கல்வி உன்னதமான உடல்நல அறிவை வளர்த்து விடுகிறது.

3. வீட்டு நலம், சமூக நலம் வளர்த்தல்

நன்கு படித்தவர்கள் தங்களது உடல் நலத்தைப் பேணிக் காப்பதுடன், தங்களது இல்லம், சமுதாயத்தின் நலத்தைக் காக்கவும் சிறந்த துணையாக நிற்கிறார்கள் சமுதாய நலம் இல்லாமற் போனால், தனிப்பட்டவர்களின் நலம், எந்த விதப் பயனும் இல்லாமல் போய்விடும். பள்ளியில் நலம் பயிற்று விக்கவும், அதிலிருந்து தொடங்கி சமுதாய நலத்தை எல்லாவகையிலும் வளர்த்துக் காக்கவும், உடற்கல்வியானது அதிகமான அறிவை அளித்து ஆனந்தமாக, வாழ உதவுகிறது.

4.நல்ல விளையாட்டாளர்களாக, பார்வையாளர்களாக:

உடற்கல்வியானது பொதுமக்களுக்கு விளையாட்டுக்களில் பங்கு பெறச் செய்யும் வாய்ப்புக்களை வழங்குவதுடன், அவர்களுக்குள்ளே மறைந்து கிடக்கும் திறமைகளையும் சக்தியையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது.

அத்துடன் நில்லாது, விளையாட்டைப்பற்றிய விளக்கமான அறிவினை அளிப்பதுடன், அவர்களை நல்ல பார்வையாளர்களாகவும் மாற்றி அமைத்துப் பார்த்து மகிழவும் வைக்கிறது.

5. ஓய்வு நேரமும் மன அமைதியும்:

நன்கு படித்தவர்கள் தங்கள் ஒய்வு நேரத்தை ஒழுங்காகப் போக்கிப் பயன்பெற்றுக் கொள்கின்றார்கள். உடற்கல்வியானது மக்களுக்கு நிறைய பொழுதுபோக்கும் காரியங்களைப் படைத்துத் தருகின்றன. தேவையானவர்களுக்கு வேண்டிய காரியங்களைப் பெற வழி வகுத்தும் தருகின்றன.

அதனால் ஒய்வு நேரத்தில் உல்லாசம் பெறவும், அதன் மூலம் அருமையான மனஅமைதி பெறவும் அவர்களுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன.

6. அழகை ரசித்தல்:

உலகமே அழகு மயம். அறிவுள்ளவர்கள் இயற்கையின் அழகை ரசிக்கிறார்கள். வியக்கிறார்கள்.மகிழ்கிறார் கள், இந்த அற்புதமான அறிவை வளர்க்கும வாய்ப்புக்களை யெல்லாம் உடற்கல்வி கற்பிக்கிறது.

உடலையே அழகாக வைத்துக் காக்கின்ற உபாயத்தை அளிக்கிற உடற்கல்வி, உலகை அனுபவிக்கும் உண்மையான ஞானத்தையும் வளர்த்து உறுதுணையாக இருக்கிறது.

7. இலட்சிய வாழ்வை நோக்கி

ஒரு கப்பலின் மாலுமி, தனது கப்பலையும் தன்னை நம்பியிருக்கும் பயணிகளையும் குறிப்பிட்ட இடம் நோக்கி, சரியான திசையில் பாதுகாப்புடன் கொண்டு போவது போன்ற பணியை உடற்கல்வி ஆற்றுகிறது.

சிறந்த திட்டங்களை வடிவமைத்துத் தந்து சரியான வழிகளைக் கற்பித்து, அறிவுள்ளவர்களாக நடந்து பயனுள்ள ஆனந்த வாழ்வு என்னும் இலக்கினை அடைய உடற்கல்வி உதவுகிறது. அதாவது, தனிப்பட்ட ஒரு மனிதரை, தன்னை அறிந்து கொள்ளச் செய்து, தகுதி யுடையவராக்கி, சிறந்த வாழ்வு வாழும் செம்மையான குணங்களை வளர்த்து விடுகிறது.

II. கூடி வாழும் குணம் வளர்க்கிறது (Human Relationship)

ஒருவருக்கொருவர் உறவாடி உள்ளம் மகிழ்வது என்பது மனிதர்களுக்குரிய மகிமையான குணமாகும்.நன்கு படித்தவர்கள், நடமாடும் அன்பு உருவங்களாக விளங்கி, நட்பும் நல்ல உறவும் கொண்டு பழகி, பெருமை சேர்க்கின்றார்கள். அதற்கு, உடற்கல்வி உதவும் முறைகளைக் காண்போம். 

1. பிறர் நலம் காத்தல் :

உடற்கல்வியின் திட்டங்கள், செயல்முறைகள் எல்லாமே மற்றவர்களுடன் எவ்வாறு ஒற்றுமையாக உள்ள நேசத்துடன் பழகுவது, பயன்பெறுவது என்பதை உறுதிப்படுத்தும் முறைகளிலேதான் அமைந்திருக்கின்றன. ஒருவரது திறமையை வளர்க்கும் போதும் சரி, உண்மையான விளையாட்டு நுணுக்கத்தை மிகுதிப்படுத்தும் போதும் சரி, மற்றவர்களை பாதிக்காமல், அபாயம் ஏதும் விளைவிக்காமல், லாவகமாக நடந்து கொண்டு, தங்கள் வெற்றியை பெற்றுக் கொள்ளும் பண்பான நலம் காக்கும் பயிற்சிகளையே உடற்கல்வி அளிக்கிறது.

2. அறிவார்ந்த அனுபவங்கள் :

உடற்கல்வி வழங்குகிற விளையாட்டுக்கள் யாவும் நிறைந்த அனுபவங்களை நல்கிக் காக்கின்றன. சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பன போன்ற நடைமுறைகளையெல்லாம் விளையாட்டில் விளையும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, அனுபவ அறிவை வளர்த்துவிடுகின்றன.

அதனால், சமூகத்தில் நலம் வாழ்ந்த வாழ்வு பெறுவதற்கான அறிவார்ந்த அனுபவங்களையெல்லாம், உடற்கல்வி சுகமாகத் தந்து விடுகிறது.

3. சேர்ந்து செயல்படுதல் :

ஒற்றுமையே வலிமை, சேர்ந்து செயல்படுவதே வெற்றி விளையாட்டில் அனைவரும் சேர்ந்து விளையாடுவது, ஒற்றுமையாக இயங்குவது, ஒரு லட்சியத்திற்காக ‘நான்’ என்பதை மறந்து, ‘நாம் என்று நினைந்து போராடுவது போன்ற வாய்ப்புக்களை உடற்கல்வி இனிதே வழங்குகிறது. தனிப்பட்டவர்களின் ஒற்றுமையை வளர்த்து, அதன் முலம் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்துவது உடற்கல்வியின் உவப்பான குறிக்கோளாகும்.

4. பண்பான பழக்க வழக்கங்கள் :

மரியாதையுடன் பழகுதல், நேர்மையான விளையாட்டு, நீதி காக்கும் விளையாட்டுப் பண்புகள் (Sportsman ship) போன்ற பண்புகளை வளர்ப்பதில் உடற்கல்வி எப்பொழுதும் முனைப்பாக செயல்படுகின்றது. விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், நாளாக நாளாக நல்ல பழக்க வழக்கங்களில் தேர்ந்து, மேன்மை பெறுவது நிச்சயமாக நடக்கும்.

அத்துடன், தனிப்பட்டவர்களின் உடல் நலத்தை வளர்ப்பதும், குடும்ப நலத்தை உறுதிப்படுத்துவதும், ‘சிறந்த குடும்பம், சிறந்த வாழ்க்கை’ என்று செழிப்பாக்குவதும் உடற்கல்வியின் உன்னதமான சேவை யாகும்.

III. பொருளாதார மேன்மையளிக்கிறது (Economic Efficiency)

கீழ்க்காணும் குறிக்கோள்களை அடைய, உடற்கல்வி உதவுகிறது.

1. வேலைத் திறனில் விருத்தி செய்கிறது:

வாழ்வில் வருமானம் பெற வேலை வேண்டும், வருமானம் பெருக, வேலையில் திறமை மிகுதியாகிட வேண்டும். வாழ்வின் வெற்றிக்கு செய்கிறவேலையில் நுணுக்கம் பெருகிட வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்பது பழமொழி அல்லவா! உடற்கல்வி உடலை வலிமையாக்கி, மூளை வளத்தை மிகுதிப் படுத்துவதால் செய்கிற தொழிலில் ஏற்றம் பெருகுகிறது.அந்த ஏற்றமே தொழிலில் நிறைந்த புகழைக் கொடுத்து விடுகிறது. ஆக, வேலைத் திறமைக்கு நல்ல உடலையும் மனத்தையும் வளர்த்து, உடற்கல்வி உதவுகிறது.

2. விடுமுறையிலும் வேலை வாய்ப்பு:

வேலை செய்யும் காலங்கள் கழித்து, விடுமுறை கிடைக்கின்ற சமயங்களிலும், வேறு பல விருப்பமான வேலைகளில் ஈடுபட்டு, பொருள் சம்பாதிக்கவும், பொழுதைப் பயனுள்ளதாகப் போக்கவும் உடற்கல்வி உதவுகிறது.

சரியான பொழுதுபோக்கு அம்சங்கள், வருமானம் வரக்கூடிய வாய்ப்புக்கள் இவற்றை சரியானதாகத் தேர்ந்தெடுக்கக் கூடிய சாகசமான யுக்திகளை, உடற் கல்வியே வழங்குகிறது.

3. வேலையில் வெற்றி பெறுதல் :

எல்லாரும் தொழிலாளர்தான். ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு வாழ்பவர்கள் தாம் என்றாலும் எல்லோரும் தாங்கள் செய்கிற வேலையிலே வெற்றிகரமாக ஈடுபடுவது இல்லை. வெற்றியாளர்களாக விளங்குவதும் இல்லை.

வலிமையுடனும், விவரமாகவும் வேலை செய்ய விரும்புகிறவர்கள், தாம் செய்யும் வேலையில் சிறப்பான வெற்றியை அடைய முடியும். அப்படி அரிய காரியம் ஆற்ற வேண்டுமானால், அவருக்கு நல்ல உடல் நலம் இருந்தாக வேண்டும். 

உடற்கல்வியின் முக்கிய குறிக்கோளே உடல் நலத்தைப் பெருக்குவது தான். உடல் நலத்தைக் குறைக்கும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, தீர்க்கும் வழிகளைத் தீர்க்கமாகக் கற்றுத் தருவது உடற்கல்வி, அதனால்தான், வளமான வேலைக்கு வளமான உடல் வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறி வழிகாட்டுகிறது உடற்கல்வி.

4. வேலை வளர்ச்சிக்கு :

உடற்கல்வி வேலை வாய்ப்புக்கு மட்டும் அறிவினை வழங்காமல், பெற்ற வேலையை பெரிதும் விரும்பவும், நிறைவாக வளர்க்கவும் கூடிய அரிய யோசனைகளையும் அள்ளிக் கொடுக்கிறது.

சரியான அணுகு முறை. சரியான சிந்தனை, பொருட்கள் மீது அகலாத கவனம், பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், பராமரித்தல், பக்குவமாகக் கையாளுதல் போன்ற பண்பாற்றல்களை வளர்த்து, ஒருவர் செய்யும் வேலையின் வளர்ச்சிக்கு உயர்வாக உதவுகிறது.

அத்துடன், பயன்படுத்துகின்ற பொருட்களின் மேல் போதிய கவனம் செலுத்தவும், பல்வேறு விதமான பொருட்களைக் கையாளும் புத்திக் கூர்மையை வளர்த்துக் கொள்ளவும், பொருட்களைத் தேர்ந்தெடுப்பது, பத்திரப் படுத்துவது, பழுதுபட்டுப் போகாமல் கையாளுவது போன்ற உத்திகளையும் உடற்கல்வி கொடுத்து, வேலையில் திறமை பெருகி, வருமானம் நிறைந்து வாழ்வை உயர்த்திடும் வண்ணம் வாய்ப்புக்களை உருவாக்கித் தருகிறது.
IV. சிறந்த குடிமகனாக உருவாக்குகிறது (Civil Responsiblity)


1. தன்னைப்போல் பிறரையும் நேசிக்க:

தனக்குள்ள உரிமைகள், உணர்வுகள், ஆசைகள், பந்த பாசங்கள் எல்லாம் மற்றவர்களுக்கும் உண்டு என்கிற மனிதாபிமான எண்ணங்களை உருவாக்கி, தன்னைப் போல் பிறரையும் நேசிக்க முயல்கின்ற தன்மையான குணங்களை வளர்த்துத் தகுதி வாய்ந்த குடிமகனாக மாற்ற உடற்கல்வி கற்பித்துத் தருகிறது.

2. பொறுமையை போதிக்கிறது

மனிதர்களுக்குப் பொறுமையே வேண்டும், பொறாமை கூடவே கூடாது. பொறுத்துக்கொள்ளும் பண்பு பகைவர்களையும் ஈர்த்துப் பணிய வைக்கிறது. அதிக நண்பர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறது.

உடற்கல்வி தனது உயர்ந்த செயல்பாடுகளினால் வந்து பங்குபெறும் அனைவருக்கும் பொறுமையின் பெருமையைப் போதித்து, பொறுமை காக்கும் பண்பினைப் பேரளவில் வளர்த்துவிடுகின்றது. பொறுமை கடலினும் பெரிது. அத்துடன் உயர்ந்த பண்புகளில் தலை சிறந்ததாகும். அது உடற்கல்வி தரும் உன்னதப் பரிசாக மானிட இனத்திற்கு கிடைத்திருக்கிறது.

3. விதிகளுக்குப் பணிதல்

நாட்டிற்கு சட்டங்கள் தாம் பாதுகாப்பு, விளையாட்டுக்களிலும் விதிமுறைகள் தாம் பாதுகாப்பாக விளங்குகிறது. 

விளையாட்டுக்களில் உள்ள விதிகளை மதிக்காமல் புறம்பாக நடப்பவர்கள் முதலில் தண்டிக்கப்படுகிறார்கள். இன்னும் தொடர்ந்து தவறிழைப்பவர்கள் விளையாட்டை விட்டே வெளியேற்றப்படுகின்றார்கள்.

நாட்டிலும் அப்படித்தான். சட்டத்தை மீறுபவர்களுக்குத் தண்டனை.இன்னும் வேறுபல தண்டனைகளும் கிடைக்கின்றன.

விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் விதியை மதிக்க, நேசிக்க, முறையாகப் பின்பற்ற, சிறந்த விளையாட்டாளர்களாக விளங்க கற்பிக்கப்படுகின்றார்கள்.

அப்படியே அவர்களை விதிக்குட்பட்டு வாழக் கற்றுத் தந்து, நாட்டு சட்டங்களையும் மதித்து நடக்கும் நல்ல குடிமகன்களாக மாற்றவும் உடற்கல்வி உதவுகிறது. ஆகநாட்டில் நல்ல மக்களை உருவாக்கும் பெரும்பணியில் உடற்கல்வியின் பங்கு பெரிதாக விளங்குகிறது.

4. பொறுப்புணர்ந்து நடத்தல்

நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மனிதருக்கும் உரிமைகள் உண்டு. கடமைகள் உண்டு. பொறுப்புகளும் உண்டு.

அவற்றை விளையாட்டுக்களில் பங்குபெறும்போது உணரலாம். ஒவ்வொரு ஆட்டக்காரரும் தான் நிற்கும் இடத்திற்கேற்ப ஆடுதல்; தன் குழு தோற்றுப்போகாமல் வரும் தடைகளை உடைத்து முன்னேற முயலுதல் தனது கடமையை உணர்தல்; அதற்கேற்ப தொடர்ந்து பணி யாற்றுதல்; சேவை புரிதல்; துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுதல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பொறுப்பான பணிகளில் ஈடுபடுவதை நாம் காணலாம். 

அத்தகையப் பொறுப்புணர்வுப் பண்புகள், வீட்டில் இருக்கும்போதும், நாட்டில் வாழும் போதும் முன்வந்து நிற்கின்றன. முனைந்து செயல்படத் துண்டுகின்றன.

விளையாட்டுக்களில் ஜனநாயகம் ஒரு முக்கியமான நிலையாகும். எல்லோருக்கும் சமவாய்ப்பு. சம அந்தஸ்து சம உரிமைகள் இருப்பது யாவரும் அறிந்ததே.

நல்ல விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக்களில் பங்கு பெறும்போதே, மேற்காணும் ஜனநாயகக் குணங்களை குறைவறக் கற்றுக் கொள்கின்றனர்.

ஜனநாயகத்தைக் காக்கும் கற்ற குடிமகன்களாக வாழ வைக்கும் மேன்மையை அடைய உடற்கல்வி தனது குறிக்கோள்களாகக் கொண்டிருக்கிறது என்பதை இதுகாறும் அறிந்தோம்.

இவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் உடற்கல்வியின் குறிக்கோள்கள் என்ன என்பதைத் தொகுத்துக் காண்பாேம்.

தனிப்பட்ட மனிதர்களை உடலால், உடல் உறுப்புக்களின் வலிமையான இயக்கத்தால், மூளை வளத்தால், உணர்வுகளைக் காத்துக் கட்டுப்படுத்தும் பண்பால் வளர்த்திட உடற்கல்வியின் குறிக்கோள் இருக்கிறது.

உடலால், மனதால் சமநிலையான வளர்ச்சிபெற; சமூகத்தில் அண்டை அயலாருடன் அனுசரித்துப்போக, ஒத்து உறவாட உடற்கல்வியின் குறிக்கோள் குறிவைக்கிறது.

தனிப்பட்ட மனிதர்களின் ஆளுமையை (Personality) வளர்த்து வீட்டில் நல்ல மகனாக சமுதாயத்தில் உயர்ந்த திருமகனாக, நாட்டில் நல்ல குடிமகனாக உயர்த்தும் குறிக்கோளையே உடற்கல்வி உறுதியாகக் கொண்டு செயல்படுகிறது.

உடற்கல்வியில் பங்குபெறுகிற ஒருவரை பயனுள்ள குடிமகனாகவே உயர்த்துகிறது. கூடுகிற கூட்டத்தில் ஒருவராக ஒருவரை நிறுத்தாமல் “கோடியில் மனிதர் என்பதுபோல, கொள்கைக்குணமகனாக வளர்த்துக் காட்டும் குறிக்கோளுடன் உடற்கல்வி இன்று உலகில் உலா வருகிறது.