உடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியும் உலகமும்

விக்கிமூலம் இலிருந்து

1. உடற்கல்வியும் உலகமும்

இன்றைய உலகம்

இன்றைய உலகம் எந்திர உலகமாக இருக்கிறது. ‘மந்திரத்தில் மாங்காய் விழுகிறது’ என்பார்களே, அது போன்ற மாயாஜாலம் போன்று மயங்குகிற விதத்திலே மாபெரும் காரியங்கள் நடைபெறுகின்ற களமாக, நாகரிக உலகம் இன்று நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

உடல் உழைப்பை ஒரமாக ஒதுக்கிவிட்டு, விரலசைத்து விடுகிறபோதே விரும்புகிற பல செயல்களைச் செய்து கொண்டு, உல்லாசமாக ஒய்வெடுத்துக் கொண்டு, மக்கள் வாழ்கின்றார்கள், காலத்தைக் கழிக்கின்றார்கள்.

நேரம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மக்களும் சுறுசுறுப்பு என்கிற போர்வையிலே மதமதர்ப்புடன் வாழ்கின்றார்கள். ‘சோம்பல்’ அவர்களை சொகுசு காட்டிக் கூட்டிச் சென்று, சோர்ந்து போக வைத்துக் கொண்டிருக்கிறது.

அன்று சேர்ந்து வாழக் கற்றுக் கொண்ட மக்கள், இன்று தேர்ந்த கைகாரர்களாக வாழ்வதில் வல்லவர் களாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர். அதாவது, மற்றவர்களை உழைக்கச் செய்துவிட்டு, அதில் வரும் பயனை மட்டும் அடித்து வளைத்துப் போட்டுக் கொள்வதில், அறிவு படைத்தவர்களாக ஆற்றலில் திளைத்தவர்களாக நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

“உழைப்பதற்காகவே உடல் உண்டு. உழைத்தால் தான் உடல் சிறக்கும், செழிக்கும், சுகமளிக்கும். சொர்க்க வாழ்வைக் கொடுக்கும்” என்ற தத்துவத்தில் தற்கால மக்களுக்கு நம்பிக்கையேயில்லை.

“அப்படிப்பட்ட நாகரகக் காலம் இது.நமக்கெதற்கு உழைப்பு. உழைப்பது கேவலம். உடலை இயக்கிப் பணியாற்றுவது கீழ் மக்களின் பிழைப்பு , என்று உழைப்பைக் கேவலப்படுத்தும் வாழ்வாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

உலகத்திலே சிறந்த எந்திரம் மனித உடல்தான். அறிவாளிகள் உருவாக்கிய உழைக்கும் எந்திரங்கள், உடல் உறுப்புக்களின் உன்னத வடிவினைப் பார்த்து மறுபதிப்பாக உருவாக்கப்பட்டவை என்பதை மக்கள் மறந்து விட்டனர். ஏனென்றால் உழைக்கும் உடல் மீது அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு.

துருவும் நோயும்

உருளாத எந்திரங்கள் துருப்பிடித்துப் போகின்றன என்பதை மட்டும் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

எந்திரங்கள் என்பது எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அதற்காக வேலைகள் தருகின்றனர். வேண்டிய யாவையும் வழங்குகின்றனர்,வேலை வாங்குவதில் மட்டும் விழிப்போடு விளங்குகின்றனர்.

உழைப்பில் ஈடுபடாத உடல், இயக்கமற்று, எல்லாவித நோய்களுக்கும் எழிலான தொட்டிலாகப் போய், அப்படி விழுந்த மக்களைக் கட்டிலிலே படுக்க வைத்து, கலங்க விட்டு கடைசியில், நடமாடும் சவமாக்கி விடுகிறது என்பதை அனுபவப்பட்ட பிறகும் மறந்து போய் விடுகிறார்கள் மக்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

இதை மறதி என்பதா? அறிவற்ற மதமதர்ப்பு என்பதா? இதுதான் நாகரீகம் என்பதா? இப்படி வாழ்ந்தால்தான் பிறர் நம்மைப் போற்றுவார்கள் என்று எண்ணுவதா?

ஒன்று மட்டும் நமக்கு நன்றாகப் புரிகிறது.

‘வாழ்க்கையின் மகிழ்ச்சிக்குப் பொருள் இருந்தால் போதும்’ என்கிற கருத்திலேதான், மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளார்கள்.

பொருளைத் தேடத்தான் அவர்களுக்குப் புத்தி வேலை செய்கிறதே தவிர, உலகிலே உயர்ந்த பொருளாக நாம் பெற்றிருக்கும் உடலைப் போற்றி வாழவேண்டும் என்ற உண்மையை புரிந்து கொள்ளவே அவர்கள் விரும்புவதில்லை. அப்படிப்புரிந்து கொண்டாலும் நடைமுறைப் படுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை.

எந்திரங்களை தங்கள் வேலைக்காரர்களாக வைத்துக் கொள்ளும் மக்கள் முயற்சியின் முனை, இன்று முறிந்து போய் கிடக்கிறது. ஆள விரும்பிய அவர்கள், எந்திரங்களுக்கு அடிமையாகிவிட்டதுதான்,மனித சரித்திரத்தின் அவலமான அத்தியாயமாகிவிட்டது. 

சரித்திரமும் விசித்திரமும்

சரித்திரம் சொல்லும் உண்மைகள் நமக்கு விசித்திரமாகவே இருக்கின்றன.

ஆதிகால நமது முன்னோர்கள் அன்றாட வாழ்வுக்கே அவதிப்பட்டவர்களாக வாழ்ந்தபோதும் ஆண்மை மிக்க தேகம் கொண்டவர்களாக, ஆற்றல் நிரம்பிய வேகம் உள்ளவர்களாக வாழ்ந்தனர்.

ஆனால், அனைத்து வசதிகளுக்கும், வாழ்க்கை தேவைகளுக்கும் மொத்த சொந்தக்காரர்களாக இன்றைய மக்கள் இருந்தபோதும், வளமை குறைந்தவர்களாக, இளமை தளர்ந்தவர்களாக வாழ்கின்றார்களே! அது ஏன்? இந்த வித்தியாசம் எப்படி ஏற்பட்டது? என்ன தான் காரணம்?

நாகரிகக் கால மக்கள், வேலை செய்கிற உழைக்கும் சூழ்நிலையைக் குறைத்துக் கொண்டார்கள். உடல் உழைப்பை ஒதுக்கிவிட்டு, மன உழைப்பை மட்டும் மிகுதியாக நிறைத்துக் கொண்டார்கள்.அதுதான் உண்மையான காரணமாக அமைந்து விட்டது.

பொலிவும், வலிவும் தேகத்திலிருந்து விடைபெற்றுப் புறப்பட்டுவிட்டன. சிறப்பற்றுப் போய், சீரழிவை நோக்கி ஒடுகிற தேகநிலையை, செம்மையாக்கிட ஒரு வழி வேண்டாமா? அத்தகைய சிந்தனைகள் தாம் கல்வி அறிஞர்களிடையே கலக்கத்துடன் அரும்பத் தொடங்கின.

வாழ்க்கைக்கு மிக அவசியமானது பொதுக் கல்வி மட்டுமல்ல. வெறும் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள முயல்வது மட்டுமே முடிவான நோக்கமுமல்ல. என்றும்; 

“அறிவையும் உடல்வலிமையையும் வளர்த்து ஒருவரை முழு வளர்ச்சியுள்ளவராக மாற்றியமைக்கும் கல்வி முறையே வேண்டும்” என்பதைத் தான் சிந்தனையாளர்கள் தெளிவுபடுத்தினர், வற்புறுத்தினர்.

இலட்சியமும் அலட்சியமும்

ஒரு மனிதர் உடலால் வலிமையும் திறமையும் உள்ளவராக உள்ளத்தால் வலிமையும் நுண்மையும் நிறைந்தவராக உணர்வுகளில் நிதானமும், நிறைவான பண்பாற்றலும் மிக்கவராக, சமூக வாழ்வில் அயலாரோடு அனுசரித்துப் போகின்ற பக்குவம் மிகுந்தவராக விளங்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் இலட்சிய நோக்காக அமைந்திருந்தது.

ஆகவே, மக்களுக்கு உடற்கல்வியின் பெருமை பற்றியும். விளக்கமாகக் கூற வேண்டும். அந்த உடற்கல்வித் திட்டங்கள் வழியே, அவர்கள் வாழ்க்கை நடைபோட வேண்டும் என்ற விழிப்புணர்வுடனும் செயல்படலாயினர்.

அந்த முறை தான் உலக மக்களை உன்னத நிலைக்கு ஏற்றுவிக்கும் என்று நம்பினர். ஆகவே, பொதுக்கல்வி முறையுடன் உடற்கல்வியையும் ஒன்றாக இணைத்து, ஒன்றாக இயக்கிடவேண்டும் என்றும் முயன்றனர்.

அதற்காக அறிஞர்கள் பலர், உலக நாடுகளுக்கு முற்காலத்தில் உடற்கல்வி உதவியநிலையினை உதாரணம் காட்டினர். உடற்கல்வியே உண்மையான வாழ்க்கைகல்வி என்பதையும் சான்றுடன் நிரூபித்தனர்.

முற்காலத்தில் மிகவும் மேன்மையுடன் வாழ்ந்த சில முக்கியமான நாடுகளின் வாழ்க்கைத் தத்துவத்தை நாம் ஆராய்கிற பொழுதுதான். உடற்கல்வியின் ஒப்பற்ற பெருமை நமக்குப்புரிகிறது.

குறிப்பாக பாரசீகம், கிரேக்கம், ஸ்பார்ட்டா, ஏதென்ஸ், ரோம் போன்ற நாடுகள் எந்த அளவில் உன்னதமாக வாழ்ந்தன! உயிரோட்டமான நாகரீக வாழ்க்கையுடன் கவின்மிகு கலைகளை வளர்த்து களிப்புடன் திகழ்ந்தன, உலகுக்கே வழிகாட்டி உயர்ந்தன என்பனவற்றை நாம் உணரும்போது, உடற்கல்வியின் பெருமையை அறிந்து பெருமிதம் கொள்கிறோம்.

வரலாற்றின் விளக்கம்

உடலை நன்றாக இயக்கிக் களிக்கும்போது, உள்ளமும் உவப்புடன் செழுமையும் சிந்தனைத் திறமும் பெறுகிறது, என்பதுதான், அந்நாடுகளின் தலையாய கொள்கையாக, தரமாக தத்துவமாகத் திகழ்ந்திருந்தது.

இதனால், எகிப்தியர்கள்,பாபிலோனியர்கள், ஹீப்ரு மக்கள் யாவரும் விளையாட்டில் ஈடுபட தங்கள் குடிமக்களை உற்சாகப்படுத்தினர். விளையாட்டுகளுக்கும், உடற்கல்வித் திட்டங்களுக்கும் உகந்த இடத்தைக் கொடுத்து வளர்த்தனர்.

சைப்ரஸ் எனும் புரட்சித் தலைவன், தன் பாரசிக நாட்டு மக்களை பேரெழுச்சி மிக்கவர்களாக வளர்க்க, உடற்கல்வியையே பயன்படுத்தினான்.அவர்களை கடுமை நிறைந்த வீரம் உள்ளவர்களாக கிளர்ந்தெழச் செய்தான்.

தன்நாட்டில் உள்ள ஆறு வயது சிறுவர்களைக் கூட உடற்கல்வியில் உற்சாகத்துடன் ஈடுபடவைத்து, பயிற்சியளித்தான். உடற்கல்வி முறை என்பது ஒட்டம், தாண்டுதல், வேலெறிதல், மலையேற்றம் ஏறுதல், குதிரை சவாரி செய்தல் மற்றும் வேறுபல திறமிக்கச் செயல்களாகும். அவற்றில் சிறார்களை மகிழ்ச்சியுடன் பயிற்சிபெற வைத்து, சண்டையிடுவதில் மகா சமர்த்தர்களாக மாற்றினான். அதுவே அவனது வெற்றியின் அருமையான ரகசியமாக அமைந்திருந்தது.

சைப்ரஸ் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, அவன் பாரசீகத்தில் பின்பற்றிய உடற்கல்வி முறைகளைப் போலவே, ஸ்பார்ட்டா நாட்டினரும் பின்பற்றினர், பெரிதும் பயன் பெற்றனர்.

இளம் சிறார்களை பொதுத் தங்குமிடத்திற்கு (Barracks) அழைத்துச்சென்று, தங்க வைத்து, தாண்டல், ஒடுதல், மல்யுத்தம் செய்தல், கனமான எடைகளைத் துக்கியெறிதல், போன்ற பயிற்சிக் கலைகளில் தேர்ச்சிப் பெறச்செய்து, போரிடும் ஆற்றல் மிக்க வீரர்களாக மாற்றிடும் வகையில் உடற்கல்வியை உபயோகப்படுத்தி னர்.

கிரேக்க நாட்டில் மற்றொரு கீர்த்திமிக்கக் குறு நாடான ஏதென்சும், பாரசீகமும் ஸ்பார்ட்டாவும் பின் பற்றிய உடற்கல்வி முறையிலிருந்து, சற்று விலகி, மக்களை ஆட்படுத்தினர். ஏதென்சு நாட்டின் தத்துவம் ஏற்றமுள்ளதாகவே அமைந்திருந்தது.

ஏதென்சு நாட்டினரின் உடற்கல்வி முறை வழியாக அமைந்த இலட்சிய வாழ்வு, அழகும் நளினமும், வாழ்வின் தெளிவான மனப்பாங்கையும் வளர்ப்பதிலே தான் முனைப்பாக இருந்தது.

ஏதென்சினர் வாழ்க்கை, வீரம் நிறைந்ததாக இருந்ததோடு, சுதந்திர வாழ்வும சுகந்தரும் வழியுமாகவே விளங்கி வந்தது என்று வரலாறு கூறுகிறது. ஆனால், பெண்களுக்கு உடற்கல்வி அவ்வளவு கட்டாயமாக இருக்கவில்லை.

வலிவும் நலிவும்

கிரேக்க நாட்டை வென்று கீழ்ப்படுத்திய ரோம் சாம்ராஜ்யம், உலக அளவில் உயர்ந்த வெற்றி நாடாகவே விளங்கியது. ரோம் மக்கள் உடற்கல்வியை உண்மையாக ஏற்றுப் போற்றிய காலம் வரைதான், அவர்கள் அற்புதமான புகழேணியில் ஏறிச் சென்றனர். ஆண்மைமிகு வெற்றிகளைப் பெற்று, அவனி புகழ வாழ்ந்தனர்.

இரத்தம் சிந்தும் போட்டிகளைப் பார்த்துப்பார்த்து சந்தோஷப்பட ஆரம்பித்த ரோம் நாட்டினர், சுகத்தால் உடல் சோர்ந்து சோம்பேறிகளாக மாறியபோது, உடலை வெறுத்து, உடற்பயிற்சியை மறுத்து,நலியத் தொடங்கிய போது, அவர்கள் காட்டுமிராண்டிக் கூட்டமான டியூடானிக் மரபினரிடையே தோற்று அடிமையாயினர்.

ரோம் சாம்ராஜ்யத்தின் பீடும் பெருமையும் சரிந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து போனது.

கலைகள் காவியங்களில் ரசனையற்ற டியூடானிக் காட்டுமிராண்டிகள் ஆண்ட காலத்தையே இருண்ட காலம் என்று வரலாறு விவரித்துச் செல்கிறது.

இருண்டகாலத்திலும் அதற்குப் பின் சில காலமும், உடலை வெறுத்து துறவுக்கலை நாட்டில் நிறைய வளர ஆரம்பித்ததன் காரணமாக, உடற்கல்வி முழுமையாக மக்களால் வெறுக்கப்பட்டது.

ஆங்காங்கே ஆர்வமுள்ள மக்கள் சிலர், உடலை மதிக்கும் மாண்பினைப் பெற்றிருந்தனர். சில நாடுகளில் மரம் வெட்டுதல், விளைந்த கதிர் அறுத்தல் முதலியவற்றில் போட்டிகள் நடைபெற்று, உடலை வளர்க்கும் முயற்சிகளும் நடைபெற்றன.

இந்தியாவிலும் உடற்கல்வி இருந்தாலும், அது மனித இனத்திற்கு உதவுகிற நிலையில் இல்லாமல் ஒரம் போய் நின்றது. கண்ணுக்கும் கற்பனைக்கும் எட்டாத வேறொரு விண்ணுலக வாழ்க்கையை எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்த கூட்டம், ‘பக்தி மதம்’ என்ற போர்வையில் உடல் வளர்ச்சியை வெறுத்து ஒதுக்கிய ஊமை நாடகத்தால் நாட்டில் தீமைகள் பல தோன்றி, நிறைந்தன.

ஆமாம். இந்திய மக்களின் எழுச்சிக்கு இந்த வாழ்க்கை முறை இடைவிடாமல் தடைபோட்டுக் கொண்டு வந்ததுதான் இன்றைய நமது தளர்ச்சிக்கான காரணங்களில் தலையானதாகும்.

பழங்காலத்தில் மக்களைப் போருக்கு ஆயத்தப் படுத்துகிற பூரணமான பணியிலே உடற்கல்வி, சேவை செய்தது.

இடைக் காலத்தில் இருண்டகாலத்தில், இடம்பெற முடியாமல் போய் இடருற்ற உடற்கல்வி, மறைந்து விடவில்லை.

குளத்தில் நீர் இல்லாது வறண்டு போகின்ற காலத்தில் அங்கு வந்து வாழ்வு வெறும் பறவைகள், குளத்தை மறந்து பறந்து மறைந்துபோகும். ஆனால் அங்கே வாழும் ஆம்பல் மலர்கள் போன்ற பூ புல்லினங்கள் நீர் வறண்ட போது காய்ந்து, நீர் வந்தபோது வளர்ந்து செழித்துக் கொள்ளும்.

அது போலவே, மனித இனம் மறந்தாலும், அவர்களுடனேயே அரூபமாகத் தங்கியிருந்து, அவர்கள் உள்ளம் விரும்புகிற அபூர்வமான காரியங்களை நிறைவேற்றி வைக்கின்ற, நீடித்துழைக்கும் ஆற்றலை அளிக்கின்ற வல்லமை பெற்றதாக உடற்கல்வி உலா வந்தது. இன்றும் வருகிறது.

இன்றோ.நாகரக வாழ்க்கையில் நலிவுற்றுக்கிடக்கும் மக்களை நிலையான நலம் பெற்ற மக்களாக மாற்றி அமைக்கும் நிவாரணப் பணியிலே உடற்கல்வி உதவுகிறது.

செல்வங்கள் கோடி இருந்தாலும் அதில் சுகமில்லை. செம்மை பெற்ற தேகத்தால், கோடி சுகம் பெறலாம் என்ற கொள்கையுடன் மக்களை விழிப்புணர்வுள்ளவர்களாக ஆக்கும் பணியிலே உடற்கல்வி செழிப்புடன் செயல்பட்டு வருகிறது. அத்தகைய உரிய உடற் கல்வியைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வோம்.


~